Kathambari Novels
அத்தியாயம் – 27
தோர்ஸோதுரோ செஸ்டேரி, திலீப் வீடு!
தீலிப்… அவன் அறையில் படுத்திருந்தான். அன்றைய நிகழ்விற்குப் பின், அறைக்குள் வந்தவன்தான், அறையைவிட்டு வெளியே போகாமல் அங்கேயே முடங்கிக் கிடக்கின்றான். மேலும் வீட்டிலுள்ளவர்கள் முகத்தைப் பார்த்துப் பேசுவதற்கு கடினமாக இருந்தது அவனுக்கு!
திலீப்பின் நண்பர்கள் மூலம் விடயம் தெரிந்த ராதிகா, கண்டபடி அவனைத் திட்டித் தீர்த்து, கேள்விகளால் வாட்டி எடுத்துவிட்டார். அனைத்து வசை சொற்களையும் வாங்கிக் கொண்டான். எதுவும் எதிர்த்துப் பேசவில்லை.
கூடவே தன்னிடமே இப்படி நடந்து கொள்ளும் ராதிகா, கீர்த்தியிடம் எவ்வளவு கடுமையாக, மோசமாக நடந்துகொள்வார் என்பது வேறு அவனுக்குப் பெரிய கவலையாக இருந்தது.
டேவிட் பற்றி முழுவிவரம் தெரியாவிட்டாலும், கீர்த்தியிடம் ஆலோசனைக்கு வந்தவன் என்றளவு தெரிந்தது. கீர்த்தி அவனை விரும்புவதை ஏன் தன்னிடம் சொல்லவில்லை? அவள் சொல்ல வந்த முக்கியமான விடயம் இதுதானோ? அவளைப் பேச விட்டிருந்தாலே இத்தனை களேபிரம் நடந்திருக்காதோ!
தன்னால்தான் அவர்களுக்குள் பிரச்சனை என்று எண்ணி எண்ணி வருந்திக் கொண்டிருக்கின்றான்! பலநேரம் கண்களில் கண்ணீர் கட்டிக் கொள்கிறது. சிலநேரங்களில் அது கன்னங்களில் இறங்கிவிடுகிறது!!
ஒருபக்கம்… எப்படி இதைச் சரி செய்ய என்று யோசித்தப்படி இருக்கின்றான்! மற்றொரு பக்கம் கீர்த்தியிடம் பேச நினைக்கிறான்! ஆனால் நேரில் சென்று அவளைப் பார்க்கவோ, அலைபேசியில் அழைக்கவோ அவனுக்குத் துளியும் தைரியமில்லை!
திலீப் இந்த நிலையில் இருக்க… அவன் வீட்டின் முன்புற தாழ்வாரத்தில் பாலு, இஷா, ராதிகா நின்று கொண்டிருந்தனர். அங்கிருந்த பிரம்பு நாற்காலியில் சுரேஷ் அமர்ந்திருந்தார். அவர் பக்கமிருந்த மற்றொரு இருக்கையில், ராதிகா கூப்பிட்டதால் வந்திருந்த கீர்த்தி இருந்தாள்.
அங்கிருந்தவர்கள் மனதில், ‘என்ன பேசப் போகிறார் இவர்?’ என்ற கேள்வி சத்தமிட்டுக் கொண்டிருந்தது. சுரேஷ் அத்தனை அமைதியாக இருந்தார்.
பாலு, “ப்பா… என்ன பேசனுமோ பேசி, இவளைச் சீக்கிரம் அனுப்புங்க. திலீப் பார்த்தா நம்ம மேலதான் கோபப்படுவான்” என்றான். அதன்பின்னும் அவர் பேச்சை ஆரம்பிப்பது போல் தெரியவேயில்லை. அதனால் கீர்த்தி, “என்கிட்ட என்ன பேசனும்” என்று மந்தமான குரலில் கேட்டாள்.
குரலைச் செருமி சற்று சரிசெய்தவர், “திலீப் உன்கிட்ட என்ன கேட்டான்னு தெரியும். உனக்கு அதுமாதிரி எண்ணம்…” என்று கேட்டு முடிக்கும் முன், “ப்ச் இதுக்கு ஏற்கனவே பதில் சொல்லிட்டேன்” என்றாள் பட்டென்று.
நின்றிருந்த ராதிகா, “ஏன் திரும்ப சொன்னா என்ன…” என்று கோபமாக வர… சுரேஷ், “நான் என்ன சொன்னேன். நீ பேசக் கூடாதுனு சொன்னேன்ல. பேசாம இரு” என்று அவரை அதட்டலிட்டு, “நான் பேசிக்குவேன்” என்று கீர்த்தியைப் பார்த்தார்.
என்ன தோன்றியதோ கீர்த்திக்கு… உடனே, “நேத்தும் வீட்டுக்கு வந்து இவங்க இப்படித்தான் பேசினாங்க, அடிக்க வேற வர்றாங்க சார்” என்று சுரேஷிடம் முறையிடுவது போல் சொன்னாள்.
அவளை ஆழ்ந்து பார்த்தவர், “நீ லவ் பண்ற பையன் திலீப்ப அடிச்சிருக்கான்!! ஒரு அம்மாவா எப்படி அத பொறுத்துப்பா, கோபம் வரும்ல… அதை அவ உன்கிட்ட வந்து காட்டிருப்பா! அதுல எதும் தப்பில்ல! பாலு, இஷாக்கு கூட உன்மேல கோபம் இருக்கு! இருக்கனும், ஏன்னா அதான் குடும்பம், இதலாம் உனக்குப் புரிய வாய்ப்பேயில்ல” என்றார் அமர்த்தலான குரலில்.
ஒருமுறை கண்மூடித் திறந்தவள், ஒன்றும் பேசாமல் அவரைப் பார்த்தாள்.
சுரேஷ், “சரி அத விடு, பேச நினைச்சத பேசிடறேன். திலீப்க்கு இதுமாதிரி எண்ணம் இருக்குனு உனக்குத் தெரியாதா” என்றார்.
“தெரியாது” என்றாள் ஒற்றை வார்த்தையாக.
“அதெப்படி தெரியாம இருக்கும். வேற யாரும்னா பரவாயில்ல. சைக்காலஜி படிச்ச உனக்குத் தெரியாம போகுமா?!”
“அ… அது மனசிலருந்து பேசினா” என்று சொல்லும் போதே, “அப்படினா திலீப் உன்கிட்ட இத்தனை நாளும் பொய்யாதான் பேசிருக்கான்னு சொல்றியா” என்று கேட்டார்.
ஆமாம் என்று சொல்ல அவளால் முடியவில்லை. இல்லை என்று சொன்னால் அவள் பதிலே முரண்பட்டுத் தெரியும். பதிலளிக்க ஒருகணம் தடுமாறினாள்! பின் தெளிவாக, “என்கிட்ட பேசறதுல அவன் எந்த வித்தியாசமும் காட்டல, ஆனா மனசுக்குள்ள இப்படி நினைச்சிருப்பானு தெரியாது” என்றாள்.
“நம்புற மாதிரி இல்ல, சரி இதையும் விட்டுடலாம்” என்றவர், “திலீப் உனக்கு ஃப்ரண்டுதான?” என்று கேட்டார்.
இப்போது எதற்கிந்த கேள்வி என்று தோன்றினாலும், “ம்ம்” என்றாள்.
“திலீப் உனக்கு எவ்ளோ ஹெல்ப் பண்ணிருக்கான், எவ்ளோ சப்போர்ட்டா இருந்திருக்கான். அவன் இல்லனா உன் லைஃப் எப்படி இருந்திருக்குமோ? அவன் உன்னய பார்த்துக்கிட்ட மாதிரி உன் அம்மாகூட பார்த்துக்கிட்…” என்று சொல்லு போதே, தன் அம்மாவைப் பற்றி அவர் பேசுவது பிடிக்காமல், “நீங்க நேரடியா விஷயத்துக்கு வந்திடுங்க” என்றாள்.
சிலவினாடிகள் பேசாமல் இருந்துவிட்டு, “திலீப்ப ஃப்ரண்டுனு சொல்ற, ஆனா நீ லவ் பண்றதை ஏன் அவன்கிட்ட சொல்லல” என்று கேட்டார்.
மீண்டும் ஒருமுறை பதில் சொல்ல தடுமாறினாள். பின், “பிஸ்னஸ் டென்சன்ல இருப்பான், நேர்ல பார்க்கிறப்ப சொல்லிக்கலாம்னு நினைச்சேன்” என்றவள் ராதிகாவைக் காட்டி, “திலீப் ரோம் கிளம்பறப்ப இவங்ககூட சொன்னாங்க, அவனை டிஸ்டர்ப் பண்ணாதனு” என்றாள்.
“அவ சொல்றத கேட்கிற ஆளா நீ” என்று அசட்டையாக சொல்லி, “திலீப்கூட நீ பேசறதே அவளுக்குப் பிடிக்காது. பேசாம இருந்தியா? அப்படி இருந்திருந்தா என் குடும்பம் நிம்மதியா இருந்திருக்கும். ப்ச்… லவ்னு வந்ததும் ஃப்ரண்ட அப்படியே மறந்திட்ட, அதான் உண்மை” என்று பழி சொன்னனர்.
அவளுக்கே கேட்டிடாத குரலில், “இல்ல… நான் அப்படியில்ல” என்றாள்.
“அப்படித்தான் நீ! திலீப்ப ஃப்ரண்டுனு நினைச்சிருந்தா அவன் அடிவாங்கிறத வேடிக்கைப் பார்த்திட்டு நின்னுருக்க மாட்ட”
எதைச் சொல்கிறார் என்று தெரிந்தது. ஆனால் என்ன பதில் சொல்ல என்று தெரியாமல் இருந்தாள்.
“என்ன ஒன்னும் பேச மாட்டிக்கிற, ஒத்துக்கிறியா நான் சொன்னத”
தான் ஏதோ பலவீனமாக்கப்படுவது உணர்ந்தாள். இப்படி இருக்கக்கூடாது. அதுவும் இவர்களிடம் இருக்கவேகூடாது என்று நிமிர்ந்து அமர்ந்தவள், “என்ன சார் சொல்ல வர்றீங்க? நான் லவ் பண்ணறத சொல்லிருந்தா உங்க பையன் அப்படிக் கேட்டிருக்க மாட்டானா?” என்று அவர் முகத்திற்கு நேரே கேட்டாள்.
அவள் கண்களைப் பார்த்து, “நிச்சயம் மாட்டான். அவ்வளவு மோசமானவன் இல்ல திலீப்” என்று சிறு ஆவேசத்துடன் சொல்லி, “அப்புறம் அவன் ஒன்னும் உன்னய பிடிச்சிப் போய் கேட்டிருக்க மாட்டான்” என்றார்.
‘அப்புறம் எதுக்கு கேட்டான்’ என்று கேள்வியைக் கொதிக்கும் அவள் கண்கள் தாங்கியிருக்க… சுரேஷ், “உன்மேல பரிதாபம், அனுதாபம் அவனுக்கு! அவன் உன்மேல இருந்த கரிசனத்திலதான் அதுமாதிரி கேட்டிருப்பான். காதல்னால கண்டிப்பா இருக்காது” என்று அடித்துச் சொன்னார்.
“என்மேல ஏன்…” என்று அவள் அவசரமாக ஆரம்பிக்கையிலே, “ஏன்னா உன் நிலைமை அப்படித்தான் இருந்திருக்கு. உறவுனு யாருமே இல்லாம…” என்று அவர் பேசும் போதே, “என் அம்மா எனக்காக இருந்தாங்க!” என்று தெள்ளத் தெளிவாக சொன்னாள்.
“சத்தியமா சொல்லு! உன் அம்மா உன்னய பார்த்திச்சினு?! ஒன்னு உட்கார்ந்து அழும்! இல்லயா ஓடி ஓடி வேலை பார்க்கும்!! அந்தம்மா என்னைக்கு உன்னய பார்த்திருக்கு” என்று சத்தமிட்டார்.
சட்டென குறுகிப் போய், “ஏன் இல்லாதவங்களைப் பத்திப் பேசறீங்க?” என்று தெளிவில்லாமல் மாறிப் போன குரலில் கேட்டாள்.
“ஏன்னா அந்த இல்லாதவங்களாலதான், இப்ப இருக்கிறவங்களுக்கு இவ்ளோ பிரச்சனை. உன் அம்மாவால அவங்க குடும்பத்துக்கு அசிங்கம். அவங்களைப் போய் இங்க வேலைக்கு வரவச்சி இப்ப என் குடும்பத்துக்கு அவமானம்”
“என் அம்மா லவ் மேரேஜ் பண்ணிக்கிட்டாங்க, அந்த லைஃப் சரியா இல்ல. இதுல என்ன அசிங்கம் இருக்குனு எனக்குத் தெரியல”
“என்னைக்கோ நடந்தத இப்ப பேசி என்னாகப் போகுது சொல்லு. நான் எத அவமானம்னு சொன்னேன்னு புரியுதா”
“புரியுது, திலீப் என்கிட்ட கேட்டத”
“நீ சொன்னது ரொம்ப சரி” என்றார் அத்தனை ஆதரவான குரலில். பின்னே நின்றவர்களிடம், “கீர்த்தி சொல்றது சரிதான?” என்று கேட்க வேறு செய்தார்.
அவர் பேசிய விதத்தில், கண்கள் சுருக்கி தான் சொன்ன பதிலை மனதிற்குள் இன்னொருமுறை சொல்லிப் பார்த்தாள்.
“யோசிக்காத, கரெக்டாதான் சொல்லிருக்க” என்றவர், “எங்க ஸ்டேட்டஸ்க்கு கொஞ்சம்கூட பொருத்தம் இல்லாத உன்னய போய் மேரேஜ் பண்ண திலீப் கேட்டான்ல, அததான நீ சொல்ற” என்றார்.
ராதிகாவிற்கும் இவருக்கும் ஒரே குணம் என்று தெரியுமென்பதால் கீர்த்தி சாதாரணமாகவே இருந்தாள். மேலும், “நீங்க உங்க வசதிக்கேத்த மாதிரி என்ன வேணாலும் சொல்லிக்கோங்க” என்றாள்.
அவள் பேச்சை அவர் கண்டுகொள்ளாமல், “ராதிகா உன் அம்மா இறந்ததுமே உன்னய இந்தியா போக சொன்னா, நான்தான் ஐயோ பாவம் படிக்கட்டும்னு நினைச்சி இருக்கச் சொன்னேன், அது எவ்ளோ தப்புனு இப்ப புரியுது” என்று அலுத்துக்கொண்டார்.
“நீங்க சொன்னாலும் போயிருக்க மாட்டேன்” என்று அழுத்தமாகச் சொல்லி, “அங்க யார் இருக்கானு போவேன்னு சொல்லுங்க” என்றாள் எரிச்சலாக.
சாந்தமான குரலில், “இங்கமட்டும் உனக்கு யாரு இருக்கானு சொல்லு. எங்க இருந்தாலும் உனக்குனு யாரும் இருக்கப் போறதில்ல. அப்புறம் எங்க இருந்தா என்ன? நீ இந்தியா போயிருந்தா… திலீப்புக்கும் அவன் அம்மாக்கும் இவ்ளோ வாக்குவாதம் வந்திருக்காது. இவ்ளோ சண்டை போட்டிருக்க மாட்டாங்க. என் வீடு அமைதியா இருந்திருக்கும்” என்றார்.
சட்டென்று மனம் சங்கடப்பட்டுப் போனது கீர்த்திக்கு! பேச்சற்று இருந்தாள்!!
“நீ ராதிகாகிட்ட எப்படிப் பேசுவனு எனக்குத் தெரியும். அப்பவே உன்னய கண்டிச்சிருக்கனும். திலீப்க்காக பார்த்தேன். அது ரொம்ப தப்பு போல”
“அவங்க பேசினாங்க அதான் நானும்…”
“நீ பேசின, அதான் அவ பேசினா! ஏதோ அவ உன் அம்மாவ ஏமாத்தின மாதிரி பேசற. அந்தம்மா வந்தது சமையல் வேலைக்காக. அதுவா எல்லா வேலையும் இழுத்துப் போட்டுப் பார்த்தது, இதுபத்தி உனக்கு எதுவும் கேட்கனும்னா உன் அம்மாவதான் கேட்கனும், ராதிகாவ இல்ல. இத தேவிகிட்ட கேட்டிருக்கியா”
“ம்ம் கேட்டிருக்கேன்”
“என்ன பதில் வந்தது”
மீண்டும் கீர்த்தி பேச்சற்று இருந்தாள்.
“கேட்டியா, கேட்கலயா” என்று சுரேஷ் எரிச்சல்பட, “அது… சும்மா இருந்தா எல்லாம் ஞாபகத்தில வரும்… அதான் ரெஸ்ட் இல்லாம வேல பார்க்கிறேன்னு சொன்னாங்க” என்றாள் வெளியே வராத குரலில்.
“தப்பான ஒருத்தன கல்யாணம் பண்ணி, அவன்கிட்ட ஏமாந்து கஷ்டப்பட்டு, அந்தக் கவலைய மறக்க இங்க வந்து வேலை செஞ்சதுக்கு, நாங்க சம்பளம் கொடுக்கனுமா?
சொன்னாலும் நம்ம மாட்டா! ஆனா வேலைக்கு ஆள் தேவையில்லனு ராதிகா தேவிகிட்ட சொல்லிருக்கா! அதுக்கப்புறமும் கிளம்பாம இங்கயே இருந்தது உன் அம்மா! ஐயோ பாவம் இருந்திட்டுப் போகட்டும்னு விட்டா… நீ எங்களைக் கேள்வி கேட்கிற!” என்றார்.
“அது ஏன் நீங்க என்கிட்ட சொல்லல”
“உன் அம்மாதான இங்க வேலை பார்த்தது… நீ இல்லயே? ஏன் சொல்லலனு உன் அம்மாவதான் கேட்கனும் நீ… எங்களை இல்ல!”
எந்த விடயமென குறிப்பிடாமல், “என் அம்மா உங்களை நம்பினாங்க” என்று பொதுவாகச் சொன்னாள்.
“எத சொல்றனு தெரியல. உன்னய பார்த்துப்போம்னு நாங்க எதும் சொல்லல”
“இங்க வர்றதுக்கு முன்னாடி, ராதிகா மேம் அம்மா…”
“இங்க பாரு… வேலைக்குச் சேர்றதுக்கு முன்னாடி தைரியம் சொல்ற மாதிரி எதும் சொல்லிருப்பாங்க. இது உன் அம்மாக்கு தெரிய வேண்டாமா. யோசிக்க வேண்டாமா? விடு… அந்தம்மா என்னைக்கு யோசிச்சிருக்கு சொல்லு?!” என்று விட்டேற்றியாக பேசினார்.
கீர்த்தி பேச வரையிலே, “இங்க உன் அம்மா வேலை பார்க்கிற வரை, உன்னய அவங்ககூட வச்சிக்கலாம்னு சொன்னாங்க. அப்படித்தான் நடந்தது. உன்னய நாங்க விரட்டி விடலயே? நீ இந்த வீட்லதான இருந்த?
ஆனா அதுக்காக உன்னய படிக்க வச்சி… கல்யாணம் பண்ணிக் கொடுக்க முடியுமா? அது உன் அம்மாவோட பொறுப்பு. அத நாங்க எப்படி எடுத்துக்க முடியும்? முதல ஏன் எடுத்துக்கனும் சொல்லு?” என்று கேள்வி கேட்டார்.
சுரேஷ் கேள்வியில் ஏதோ ஒரு நியாயம் இருந்தது! அந்த நியாயத்தால் கீர்த்தி மனம் எக்கச்சக்கமாக காயப்பட்டுப் போனது!!
சுரேஷ், “உன் அம்மாவா ஏதாவது நினைச்சிக்கிட்டா… நாங்க என்ன செய்ய சொல்லு? தெரியாமத்தான் கேட்கிறேன்… உன்னோட பொறுப்பை எடுத்துக்க வேண்டிய உன் அப்பாவே உன்னய விட்டுட்டுப் போயிட்டப்ப… நாங்க எதுக்கு…” என்று சொல்லும் போதே, “சார்” என்று நடுங்கும் குரலில் குறுக்கிட்டு எழுந்துவிட்டாள்.
அதற்குமேல் மனம் தாங்கிக் கொள்ளுமா என்று அவளுக்குத் தெரியவில்லை. அதனால்தான் குறுக்கிட்டு, “நான் ஏதோ பண்ணனும்னு நினைக்கிறீங்க. அத சொல்லத்தான் கூப்பிட்டிருப்பீங்க… என்னனு சொல்லுங்க” என்று கிட்டத்தட்ட வழியில்லாமல் சரணடைவது போல் கேட்டாள்.
நாற்காலியில் சாய்ந்து அமர்ந்து, “இத நீ முதலயே கேட்டிருக்கனும், இவ்ளோ என்கிட்ட பேசிருக்க கூடாது” என்றார் கடுமையான குரலில்.
எதுவும் சொல்லாமல், என்ன சொல்லப் போகிறார் என்று அவரைப் பார்த்தாள்.
அழுத்தமான குரலில், “திலீப்னு ஒருத்தன் உனக்கு ஃப்ரண்டா இருந்தான்கிறத மறந்திடு! அப்படி ஒருத்தன உனக்குத் தெரியாத மாறி இருக்கப் பழகு! அவன் சப்போர்ட் வேணும்னு இனி எதிர்பார்க்காத!!
இவ்ளோ நாள் உனக்கு சப்போர்ட்டா இருந்திருக்கான்; இந்தமாதிரி நீ படிச்சி, வேலைல இருக்கிறனா அதுக்கு காரணம் இந்த வீடு. உனக்கு அந்த நன்றி கொஞ்சமாவது இருந்தா… இனிமே அவனைப் பார்க்கிறது, பேசறதுனு எதுவும் இருக்கக் கூடாது.
ஏன்னா அவனுக்குனு ஒரு லைஃப் இருக்கு. அதையும் அவன் வாழனும். சும்மா உன்னய பார்த்துக்கிறது, கவனிக்கிறது மட்டும் அவன் வேலை இல்ல, அந்தப் பொறுப்பு அவனோடதும் இல்ல” என்றார்.
‘இத சொல்ல இவ்ளோ பேசணுமா?’ என்று தோன்றியது. “இத முதலயே நீங்க சொல்லிருக்கலாம், எதுக்கு இவ்ளோ பேசணும்” என்று அதைக் கேட்டகவும் செய்தாள்.
சுரேஷ், பின்னே நிற்பவர்களைக் காட்டி, “இவங்களே திலீப்ப எதும் சொன்னா எனக்கு கோபம் வரும். அப்படியிருக்கிறப்ப உன்னாலதான் எவன்கிட்டயோ திலீப் அடிவாங்கி இருக்கான்னு தெரிஞ்சா எனக்கு எவ்ளோ கோபம் இருக்கும்! அதலாம் வேற யார்கிட்ட காட்டுவேன், உன்கிட்டதான காட்டணும்! உன்கிட்ட காட்டறதுதான சரி” என்றார்.
இவளால் எவனோ ஒருவன் தன் மகனை அடித்திருக்கின்றான் என்ற கோபம் அவருக்கு இருந்தது. அதை கொட்டிவிட்ட திருப்தியை அந்தநேரம் அவர் முகம் காட்டியது. அங்கே நிற்பவர்கள் முகங்களும் அதுபோன்ற ஒரு திருப்தியை வெளிப்படுத்தின.
யார் முகத்தையும் கீர்த்தி பார்க்கவில்லை. இன்னும் எதற்கு இங்கே நிற்க வேண்டும் என்று கிளம்பப் பார்க்கையில், “ஒரு நிமிஷம் நில்லு” என்றார் சுரேஷ். அவள் திரும்பிப் பார்த்ததும், “இந்த வீட்டுக்கும் உனக்கும் இனி எந்த சம்பந்தமும் கிடையாது” என்றார்.
குனியக் குனியக் கொட்டுவது அதிகமாவது போலிருக்க, “புரியுது, ஒருதடவை சொன்னாலே எனக்குப் புரியும். திலீப்கூட பேசக் கூடாதுனு சொல்றீங்க. அதானா?” என்றாள் துடிப்பான குரலில்.
ஒருமாதிரி சிரித்தவர், “இந்த வீட்டுக்கும் உனக்கும் சம்பந்தம் இருக்கிறது திலீப் வச்சி மட்டும்தானா” என்று கேட்டார்.
சட்டென துடிப்பு வடிந்து, ‘என்ன சொல்ல வருகிறார்?’ என்று பதற்றத்தோடு அவரைப் பார்த்தாள்.
“எத சொல்றேன்னு புரியலயா உனக்கு, ராதிகாகிட்ட நீ வாங்கின கடனைச் சொல்றேன். அதுவும் சம்பந்தம்தான… இந்த வீட்டுக்கும் உனக்கும். அதனால அந்தக் கடனை மொத்தமா சீக்கிரமா கொடுத்திடு… கொடுக்கிற” என்று உத்தரவிடும் குரலில் சொன்னார்.
‘அதெப்படி முடியும்’ என்று அவள் விழித்துக் கொண்டிருக்கையில், “இன்னும் எதுக்கு நிக்கிற, நீ கிளம்பலாம்” என்று சுரேஷ் சொன்னதும், விறுவிறுவென வெளியேறி வீதியில் நடக்க ஆரம்பித்தாள்.
கடன் பற்றிச் சுரேஷ் சொன்னதை யோசித்தாள். சேமிப்பு அனைத்தையும் ‘சென்டர்’ புதுப்பிக்க பயன்படுத்தியாயிற்று. இப்போது மொத்த தொகையும் எப்படி ஏற்பாடு செய்ய என்று யோசித்தாள். ஆனால் எப்படியாவது ஏற்பாடு செய்து கொடுத்துவிட வேண்டும் என்று முடிவெடுத்துவிட்டாள்.
சுரேஷ் பேசிய மற்ற விடயங்களை யோசித்தபடி நடந்தாள். ஆறிக் கொண்டிருந்த காயத்தை, கீறி விட்டது போலிருந்தது. சற்றுதூரம் நடந்தவளுக்கு, சட்டென அடுத்த அடி எடுத்து வைக்கவே சிரமமாக இருந்தது.
உடனே அந்தப் பக்கமிருந்த கால்வாயின் படிக்கட்டில் சென்று அமர்ந்தாள். தேங்கி நிற்கும் தண்ணீரை, அதைத் தாங்கி நிற்கும் பூமியைப் பார்த்தபடி இருந்தாள். தூறல் தூறியது. இருந்தும் எழுந்து போக மனமில்லை. தன்மேல் விழுந்த ஒன்றிரண்டு துளிகளைப் பொருட்படுத்தாது, கண்களை மூடி அமர்ந்திருந்தாள்.
சற்றுநேரத்தில் தூறல் வலுத்த போதும் எழுந்து போகவில்லை. கைப்பையிலிருந்து குடையை எடுத்து பிடித்துக் கொண்டு, வெகுநேரம் அப்படியே அமர்ந்திருந்தாள்!