Kathambari Novels
அத்தியாயம் – 26
நகராமல் அங்கேயே நின்ற கீர்த்தியைப் பார்த்தபடி ரவி சென்றுவிட்டான். அதன்பின், “கீர்த்தி” என்று ஏதோ பேச வந்தான் திலீப்.
அவள்… அவனைத் திட்டவோ, கேள்வி கேட்கவோ, கோபப்படவோ இல்லை. அமைதியாகவே அங்கிருந்து சென்றுவிட்டாள். வீட்டிற்கு வந்தவள் மெதுவாக கண்ணாடி முன்சென்று நின்றாள். ஆடை, ஒப்பனைகளைப் பார்த்தபடியே சற்றுநேரம் நின்றாள். பின் விளக்கினை அணைத்துவிட்டு உடை மாற்றாமல் அப்படியே படுத்துவிட்டாள்.
ஆனால் உறக்கம் வராமல் விழித்தே கிடந்தாள்.
********************
சான் போலோ, டேவிட் வீடு!
அடுத்த நாள் காலை!
அறையிலிருந்து மதுமிதா எழுந்து வரும்போது பார்த்தது ரவி சோஃபாவில் இருப்பதைத்தான். “எப்ப வந்த?” என்றாள். “அப்பவே எழுந்திட்டியா?” என்றாள். அவன் முகச்சோர்வைப் பார்த்தவள், “தூங்கவே இல்லயா” என்று கேட்டாள்.
எந்தக் கேள்விக்கும் பதிலே இல்லாமல் இருந்தான்!
“ரவி என்னாச்சு… ஏன் இப்படி இருக்க” என்று அவனருகில் சென்று அமர்ந்தாள். இன்னும் பேசாமல் இருந்தான். “ப்ச் இப்போ சொல்றியா, இல்ல…” என்று குரல் உயர்த்தவும், “அது வந்து…” என்று நடந்ததை ஒன்றுவிடாமல் சொன்னான்.
சொன்னதும், “டேவிட் எங்க” என்றுதான் கேட்டாள்.
“மேல இருக்கான்”
“ஏன் தனியா விட்ட” என்றபடி டேவிட்டைப் பார்க்கக் கிளம்ப, “அவன் தனியா இருக்கனும்னு சொல்லிட்டுத்தான் போனான்” என்ற பின்னேயே போனான்.
கடகடவென மேலே வந்திருந்தாள் மது. அங்கே கேஃபேக்கு கிளம்பி, வெளியே வந்து நின்று கொண்டிருந்தான் டேவிட். எதுவும் நடக்காதது போல் இருந்தான். அவன் கஷ்டப்படுவானே, கவலைப்படுவானே வந்தவளுக்கு, அது பெரிய அதிர்ச்சியைத் தந்தது!!
அதிர்ச்சியை விட்டு… அவன்முன்னே சென்று, “டேவிட், இவன் ஒரு பக்கம்தான் சொல்லிருக்கான். இன்னொரு பக்கமும் இருக்குது. இவனுமே கீர்த்தியைப் பேசிருக்கான். செஷன் ஸ்டார்ட் பண்றதுக்கு முன்ன…” என்று படபடவென்று ஆரம்பிக்க, “ரவி எல்லாம் சொல்லிட்டான்” என்றான் டேவிட்.
“ப்ச் நான் முதலயே சொல்லிருக்கனுமோ, பொறுமையா சொல்லிக்கலாம்னு நினைச்சேன். சொல்லிருந்தா இந்த ப்ரோப்ளேம் வந்திருக்காதோ” – மது.
“நேத்து நடந்ததுக்கு இதுமட்டும் ரீசன் கிடையாது” என்ற டேவிட், “கேஃபே போகனும்” என்றதும், “இப்பவேவா?” என்று மது கேட்க, சிலநொடிகள் எதுவும் சொல்லாமல் டேவிட் நின்றான். பின், “ம்ம்” என்று மட்டும் சொல்லிவிட்டு கிளம்பிப் போனதும், மெல்ல படியிறங்கி கீழே வந்தாள் மது. அவளுடனே ரவியும் வந்திருந்தான்.
வீட்டிற்குள் வந்ததுமே ரவியைப் பார்த்து, “பாரு… டேவிட் எப்படி இருக்கானு, நீதான் ரவி, எல்லாம் உன்னாலதான்” என்று கோபத்தில் கத்தினாள்.
“கத்தாத!! கீர்த்தியும், அந்த திலீப்பும் பண்ணதுக்கு… நீ என்னய சொல்லாத!”
“அவன்தான் அறிவில்லாம பண்ணா, உனக்கெங்க போச்சு அறிவு?! உன்கிட்ட சொன்னேன்ல ரவி, பொறுமையா சொல்லிக்கலாம்னு, அவங்களுக்குள்ள ஆர்க்கியூமென்ட் போறப்ப இத சொல்லனுமா சொல்லு”
“அவதான் டேவிட் முன்னாடியே என்கிட்ட ‘டேவிட்க்கும் எனக்கும் இடையில வராதனு’! திரும்பவும் சொன்னா, அப்போ டேவிட் என்கிட்ட கேட்டான்! நான் நடந்ததைச் சொன்னேன்”
“ஓ, டேவிட் மேலதான் தப்புனு சொல்றியா” என்றாள் கோபமாக. “கீர்த்தியை அப்படிச் சொல்ல வச்சிருக்க நீ” என்றாள் எரிச்சலாக. “அவன்தான் தெளிவா சொன்னான்ல… கீர்த்தி பேரன்ட்ஸ் பத்தி கேட்டுக்க வேண்டாம்னு! அப்புறமும் அதுபத்தி பேசனுமா… அத ஏன் அங்க பேசின?” என்று கேட்டாள்.
ரவி பேசாமல் நின்றான்.
“முதலருந்தே உனக்கு கீர்த்திய பிடிக்கல. சான்ஸ் கிடைச்சதும் எப்படியோ அவங்களைக் காயப்படுத்திட்ட! ரெண்டு பேரையும் பிரிச்சிட்ட நீ!!” என்றாள் முகத்தில் அப்படியொரு கோபத்தை வெளிப்படுத்தி!
“மது! தப்பு தப்பா பேசாத!!” என்று கோபமாகக் கத்தினான். “யாரோ செஞ்ச தப்புக்கு என்னய பழி சொல்ற” என்று திலீப்பைச் சொன்னான். “டேவிட் பத்தி கொஞ்சமும் யோசிக்காம முடிவு எடுத்திருக்கா, அப்படிலாம் பேசிருக்கா… நீ அவளை எதுவுமே சொல்ல மாட்டிக்க” என்று கீர்த்தியைச் சொன்னான்.
“இப்பவும் நீ பேசினதும் தப்புனு உனக்குத் தோனவேயில்லைல… உன்கிட்ட பேசறதே வேஸ்ட் ரவி” என்றுவிட்டு, சோஃபாவில் வந்தமர்ந்தாள். ஏன் இப்படி எல்லாம் நடந்தது; டேவிட்டும் கீர்த்தியும் இந்த முடிவெடுக்க, ரவியும்தானே காரணம் என்று யோசிக்க யோசிக்க அவள் கண்கள் கலங்கின.
அவள் கலங்குகிறாள் என்றதும், “மது… என்ன நீ இப்படி” என்று அவளருகில் வந்தமர்ந்தான். ரவியைப் பார்த்தவள், “நீ இப்படிப் பேசிருக்க கூடாது… நீ பேசினது எனக்குச் சுத்தமா பிடிக்கல” என்றாள்.
“ஈவினிங் டேவிட்கிட்ட என்கேஜ்மென்ட் எப்படி இருக்கணும்னு சொல்லிட்டு, அப்படி ட்ரஸ்அப் பண்ணி, பொக்கே வாங்கிட்டு கீர்த்தி நின்னத பார்த்ததும் ஷாக்ல பேசிட்டேன் நான்” என்று விளக்கினான்.
“ஓ அப்படியா! அப்ப அந்த ஷாக் அவங்களுக்கு இருக்காதா” என்றதும், ரவி புரியாமல் அவளைப் பார்க்கவும், “ஃப்ரண்டுனு நினைச்சவன் ப்ரோபௌஸ் பண்றானேனுங்கிற ஷாக் அவங்களுக்கும் இருந்திருக்கும்ல” என்றாள்.
“அப்புறம் ஏன் அவ பொக்கே வாங்கிட்டு நிக்கணும்”
“நீ என்ன சொல்ல வர்ற, தெரிஞ்சே வந்து நின்னு இருபாங்கனா. அதெப்படி ரவி? கேக், பொக்கே, டேபிள் இதலாம் பார்த்தப்புறமும் வந்து நின்னாங்கனா திலீப் இப்படி பண்ணுவான்னு நினைச்சா வந்திருப்பாங்க, வேற ஏதாவது செலிப்ரேஷனா இருந்திருக்கலாம்ல… அவன் ஏதோ புது பிஸ்னஸ் ஸ்டார்ட் பண்ணதா சொன்னாங்களே, அதுக்காக இருக்கலாம்ல?”
ரவி சிலநொடிகள் பேசாமல் இருந்துவிட்டு, “வேற ஏதோ செலிப்ரேஷனா ஏன் பொக்கே வாங்கிட்டு நிக்கணும் அவ” என்றதும், “எனக்கெப்படித் தெரியும், தெரியல” என்றாள்.
“இததான் என்னென்னு கேட்டப்ப, எதயும் சொல்லாம நின்னா… சொல்ல முடியாதுனும் சொன்னா… ஏன் அவ,” என்று அவன் கேள்வியை முடிக்கும் முன், “சொல்லிருப்பாங்க, டேவிட் மட்டும் கேட்டிருந்தா சொல்லிருப்பாங்க. நீயும் சேர்ந்து கேட்டதால, சொல்ல வேண்டாம்னு நினைச்சிருப்பாங்க” என்றாள்.
“சரி, என்னாலதான் டேவிட் கேட்டப்ப அவ சொல்லலனே வச்சிப்போம், ஆனா டேவிட்கிட்ட பேசறதாவது பார்த்து பேச வேண்டாமா, இஷ்டத்துக்கு பேசறா, நாமலாம் அப்படி அவன்கிட்ட பேசவே மாட்டோம்”
“நாம பேசற மாதிரிதான் அவங்களும் பேசனனும்னு சொல்றதே தப்பு”
“நீ என்ன இப்படிப் பேசற?’ என்றவன், “டேவிட் சொல்ல வந்தத கொஞ்சம்கூட புரிஞ்சிக்காம அவ பேசினது பார்த்தா நீ இப்ப இப்படிப் பேச மாட்ட” என்றான்.
“புரிஞ்சிக்கலயா, இல்ல புரிஞ்சிக்க முடியாத நிலையில இருந்தாங்களா”
“சரி, அப்படி புரிஞ்சிக்க முடியாத நிலையில அவ இருந்தா, டேவிட் வீட்டுக்குப் போய் பேசலாம்னு கூப்பிடறப்ப போயிருக்கலாம்ல? ஏன் போகாம இருந்தா? அது சரியா?”
“இததான அவங்க முதலயே சொல்லிருக்காங்க, ‘இப்ப பேசினா சரிவராது, நீ போ’னு டேவிட்கிட்ட. அவங்களுக்கு அவங்க ஸ்டேட் ஆஃப் மைன்ட் எப்படி இருக்குனு தெரிஞ்சிருக்கும். அதான் அப்படிச் சொல்லிருப்பாங்க”
“நீ கீர்த்திக்கே சப்போர்ட் பண்ணாத, அந்த மாதிரி அவ நிக்கிறத பார்த்திட்டு எப்படி அவனால போக முடியும் சொல்லு”
“இதுவும் சரிதான், போ முடியாது. ஆனா கீர்த்திக்கு சப்போர்ட் பண்ணிலாம் நான் பேசல. டேவிட்டா கீர்த்தியானு வர்றப்போ டேவிட்காகத்தான் என்னால யோசிக்க முடியும், ஏன்னா டேவிட் என் ஃபிரண்ட், ஆனா அதுக்காக கீர்த்தி சைடு என்னனு பார்க்கவே மாட்டேன்னு அர்த்தம் கிடையாது”
“அப்போ கீர்த்தி கோபம் சரினு சொல்றியா”
“டேவிட்மேல கோபம், அதான் அப்படிப் பேசிட்டாங்கனா, சரினு சொல்லலாம். அவங்களுக்கு உன்மேல திலீப்மேல கோபம். அத டேவிட்கிட்ட காட்டினா எப்படிச் சரினு சொல்ல முடியும்”
அதன்பின் அவன் எதுவும் பேசாமல் யோசித்தபடியே இருந்தான். அப்படியே அவனை சற்றுநேரம் இருக்கவிட்டாள். பின், “ரவி நான் சொல்றதை கொஞ்ச நேரம் எதுவும் கேட்காம கேட்கிறயா” என்றாள். அவன் சரியென்றதும், தெளிவான குரலில் பொறுமையாகப் பேசினாள்.
“இதுக்கு முன்னாடியும் நீ கீர்த்திய பேசி இருக்கிற. அப்பவும் அவங்களுக்கு உன்மேல கோபம் இருந்திருக்கும். அப்படி அவங்க கோபப்பட்டபோ நானும் உன் பக்கத்துல இருந்திருக்கேன். அப்பலாம் அவங்க கோபத்தை என்மேல காட்டவே இல்ல. சிரிச்ச முகமாதான் என்கிட்ட சொல்லிட்டுப் போனாங்க.
ஆனா நேத்து நீ பேசினதுல இவ்ளோ கோபப்பட்டு அந்த கோபத்தை உன்கூட நின்ன டேவிட்மேல காட்டிருக்காங்க. அப்படினா என்ன அர்த்தம், நீ பேசினது அவங்கள காயப்படுத்திருக்கு. ஏன்னா நீ பேசினது அவங்க வலியைப் பத்தி.
அப்பானு ஒரு உறவு இல்லங்கிறது கீர்த்திக்கு கஷ்டமா இருந்திருக்கும்ல, அதனால அவங்க என்னென்ன கஷ்டப்பட்டாங்களோ, அது எவ்ளோ பாதிச்சதோ, அத பத்தின பேச்சு அவங்களை எப்படி காயப்படுத்துமோ, இது எதுவுமே நமக்கு தெரியாது இல்லயா?
அப்படி இருக்கிறப்ப, அதபத்திப் பேசலாமா சொல்லு. நீ கீர்த்திய அவங்க அப்பா பேர் சொல்லச் சொல்லி கேட்டததான் சொல்றேன். அவங்க அம்மா சைடு ரிலேட்டிவ்ஸ் இவங்க வேண்டாம்னு இருக்காங்களா? இல்ல இவங்க அவங்கள வேண்டாம்னு சொல்றாங்களா? இதுவும் தெரியாதே ரவி.
அப்படியிருக்கிறப்ப அத பத்திலாம் ஏன் பேசணும் சொல்லு. அதும் அத்தனை பேருக்கு முன்னாடி இப்படியெல்லாம் பேசறது சரியானு நீயே யோசிச்சிப் பாரு” என்று பேசிவிட்டு, அமைதியாக இருந்தாள்.
மதுவின் வார்த்தைகள் ரவியைச் சற்று யோசிக்க வைத்தன! அதுவரையில் அவனுக்கு வந்திராத, தான் அமைதியாக இருந்திருந்தால் இவ்வளவு தூரம் பிரச்சனை வந்திருக்காதோ என்ற கேள்வியும் வர தொடங்கியது.
அவன் யோசிக்கிறான் என்பதால், அதற்குமேல் மது எதுவும் பேசவில்லை. இப்போதுதான் மனஅழுத்தத்திலிருந்து டேவிட் மீண்டிருந்தான். அதற்குள் ஏன் இப்படியெல்லாம் அவனுக்கு நடக்கிறது என்று வருந்தினாள். சற்றுநேரம் அப்படியே இருந்தாள்.
பின் ரவியின் பக்கம் திரும்பினாள். அவன் முகம், சட்டை எல்லாம் பார்த்தவள், “திலீப் ரொம்ப அடிச்சானோ, வலி எதும் இருக்கா ரவி” என்று கேட்டாள். யோசித்திருந்தபடியே தலையசைத்து “இல்ல” என்று உள்ளே போன குரலில் சொன்னான்.
அங்கங்கே அழுக்கேறிய கசங்கி நனைந்திருந்த சட்டை, கேசம் என்று இருந்தவனைப் பார்க்க கஷ்டமாக இருந்தது. “இரு குடிக்க எதும் எடுத்திட்டு வர்றேன்” என்று சொல்லி எழுந்து போனாள்.
****************
சான் மார்கோ
கீர்த்தி சென்டர் கிளம்பிக் கொண்டிருந்தாள். இரவில் வெகுநேரம் தூங்காமல் இருந்ததால், காலையில் தாமதமாக எழுந்திருந்தாள். அதனால் அவசரமாகக் கிளம்பினாள். அக்கணம் கதவு தட்டப்பட்டது. யாராக இருக்குமென யோசித்த நின்றவேளை, கதவு இன்னும் வேமாகத் தட்டப்பட்டது.
யோசிப்பதைவிட்டு… போய் சென்று கதவைத் திறந்தாள். ராதிகா நின்றார். கூடவே திலீப் அண்ணன் பாலுவும் நின்றான். திலீப் நண்பர்கள் மூலம் விடயம் தெரிந்திருக்கும். அதனால் தன்னைத் திட்ட வந்திருக்கிறார் என்று உடனே கணித்துவிட்டாள். இருந்தாலும் வழிவிட்டாள்.
உள்ளே வந்த ராதிகா… வந்த வேகத்தில் அவளை அடிக்க வந்துவிட்டார்!
கண்டபடி பேசுவார் என்று எதிர்பார்த்தாள்! ஆனால் அடிக்க வருவார் என்று எதிர்பார்க்கவில்லை! பாலுதான், “பேச மட்டும் செய்ங்க மா” என்று அவரைத் தடுத்துவிட்டான்.
அதிர்ச்சியுடன் கீர்த்தி அவரைப் பார்க்க, “வெக்கமா இல்லயா உனக்கு” என்று ராதிகா ஆங்காரமாகக் கேட்க, “இத உங்க பையன்கிட்ட கேட்டீங்களா நீங்க?” என்றாள் கீர்த்தி.
“கேட்டேன்… இதையும் கேட்டேன்… இத விட இன்னும் மோசமாவே கேட்டேன். பதில் சொல்ல முடியாம ரூம்ல அடைஞ்சிக்கிட்டான்” என்று கோபத்தில் வீடே அதிரும்படி கத்தினார்.
கூடகூட பேசினால் அவர் கோபம் கூடுமென எதுவும் சொல்லாமல் நின்றாள்.
“எத்தனையோ தடவை நீங்க பேசிக்கிறது பிடிக்காம திட்டிருக்கேன்… ஆனா என்னைக்காவது இந்தமாதிரி யோசிச்சி பேசியிருக்கேனா…” என்று அவ்வளவு காட்டமாக கேட்டார்.
கீர்த்தி எதுவும் பேசாமல் இருந்தாள்!
“என்ன ஒன்னும் பேசாம நிக்கிற? சொல்லு நான் பேசிருக்கேனா, இல்லைல!?! உங்களுக்கு மட்டும் ஏன் இப்படித் தோனிருக்கு?”
“எனக்கு தோனல! உங்க பையனுக்குத்தான் தோனிருக்கு!”
“இத என்னய நம்பச் சொல்றியா”
எரிச்சலில், “நம்புனா நம்புங்க, நம்பலனா போங்க” என்றாள் கீர்த்தி.
பாலு, “ஏய்! என் அம்மாவ எதிர்த்துப் பேசற வேலை வச்சிக்காத…” என்ற என்று அவள் முன்னே கோபமாகப் போக… கீர்த்தி சற்று பின்னே போக, ராதிகா வந்து, “நீ இருடா, நான் பேசிக்கிறேன்” என்று அவனைத் தடுத்து, “திலீப்க்கு நீ ஃப்ரண்டா இருக்கவே நான் ஸ்டேட்டஸ் பார்ப்பேன், இதுல உன்னய போய் கல்யாணம் பண்ண நினைச்சான் பாரு! ச்சே, என்ன சொல்ல அவனை” என்று அவ்வளவு அருவருப்பை முகத்திலும் பேச்சிலும் காட்டினார்.
“உனக்கு அந்த மாதிரி எண்ணம் இருந்தா…” என்கையிலே, கீர்த்தி, “நீங்க அடிக்கணும்னா அடிச்சிக்கோங்க. இப்படி மட்டும் பேசாதீங்க” என்றாள்.
இருந்த கோபத்தில் ராதிகா மீண்டும் கீர்த்தியை அடிக்கப் போக, “ம்மா என்ன பண்ணப் பார்க்கிறீங்க. பிரச்சனை ஆயிடப்போகுது” என்று பாலு மீண்டும் அவரைத் தடுத்து நிறுத்தினான்.
“விடுடா! அடிச்சா ஏன்னு கேட்கக்கூட யாருமில்லை… ஆனா பேச்சுல மட்டும் எவ்ளோ திமிர் பாரு இவளுக்கு!” என்று அவர் கையை விடுவிக்கப் பார்க்க, அம்மாவின் கோபத்தைப் பார்த்த பாலு… அவர் கையை விடாமல், “வாங்க போலாம் மா, அப்புறமா பேசிக்கோங்க” என்று அவரை வலுக்கட்டாயமாக இழுத்துக் கொண்டு போய்விட்டான்.
அவர்கள் போனபின் சற்றுநேரம் நகராமல் அங்கேயே நின்றாள் கீர்த்தி. பின் கதவை அடைத்து வந்தும் நிற்கத்தான் செய்தாள். பின் சென்று முகம் கழுவி வந்தாள். மீண்டும் சற்றுநேரம் அப்படியே நின்றாள். பின் கடிகாரம் பார்த்துவிட்டு, ‘ப்ச் செஷன் இருக்கே’ என்று சென்டர் கிளம்பிச் சென்றாள்.
*********************
எஸ்ப்ரேஸோ கேஃபே, சான் போலோ!
இரவு நேரம்! மணி பத்தரையைத் தாண்டிப் போய்க் கொண்டிருந்தது! கேஃபே நேரம் முடிந்திருந்தது! இருந்தும் டேவிட் இங்கேதான் இருக்கின்றான்! ஏனோ இங்கே இருக்கத்தான் தோன்றியது! விளக்குகளை அணைத்துவிட்டு, ஒர்க் ஏரியா விளக்கினை மட்டும் ஒளிரவிட்டுத் தரையில் அமர்ந்திருந்தான்!!
நள்ளிரவைத் தாண்டியும் அப்படியேதான் அமர்ந்திருந்தான்.
********************
ரீசோல் சென்டர், சான் மார்கோ
அடுத்தநாள்!
வழக்கம் போலவே சென்டர் வந்திருந்தாள் கீர்த்தி. இரண்டு நபர்களுக்கு ஆலோசனையை முடித்துவிட்டு இருந்தாள்! அந்தநேரம் அலைபேசி சத்தம் எழுப்பியது. தொடுதிரையில் தெரியும் இலக்கங்களை பார்த்தாள். அழைப்பு இந்தியாவிலிருந்து வருகிறது என்று தெரிந்தது!
அதனால் அழைப்பை ஏற்கவில்லை!!
காலையிலிருந்து இந்த அழைப்பு வந்த வண்ணம் இருக்கிறது. அம்மாவுடன் பிறந்தவர்கள் யாரேனும் இருக்கலாம். ராதிகா அவர்களிடம் எதையாவது சொல்லியிருப்பார். அதனால்தான் அங்கிருந்து அவளுக்கு அழைத்துப் பேச நினைக்கிறார்கள் என்ற யூகம் இருந்தது.
எனினும் அழைப்பை அப்படியே விட்டுவிடுகிறாள்!!
இதற்குமுன் அவர்களுடன் அவளுக்குப் பேச்சுவார்த்தையே இருந்ததில்லை. இப்போதும் பேசப் பிடிக்கவில்லை. இருந்தும் மீண்டும் மீண்டும் அழைப்பு வர, பேசவா? வேண்டாமா? என்ற கேள்வி வந்தது. கடைசியில் பேசிவிடலாம் என்று தோன்ற… அலைபேசி எடுத்து, “ஹலோ” என்றாள்.
“கீர்த்தியா?!” என்று உறுதி செய்து கொள்ள அவள் பெயர் உச்சரிக்கப்பட்டது.
“ம், சொல்லுங்க” என்றபோதே பேசுபவர் அம்மாவின் அண்ணனாக இருக்கும் என்ற கணிப்பு வந்திருந்தது அவளுக்கு.
“என்ன சொல்லுங்க… உன் அம்மாவும், நீயும் எங்கள அசிங்கப்படுத்தனும்னே நினைப்பீங்களா? ரெண்டு பேருக்கும் எங்க நிம்மதிய கெடுக்கிறதே வேலயா போச்சு, அம்மாக்கு பொண்ணு தப்பாம பிறந்திருக்க.
அந்த ராதிகா ஃபோன் போட்டு கண்டபடி பேசுது. உன்னய இங்க கூட்டிக்க வேற சொல்றாங்க… சத்தியமா முடியாது. என்னைக்கும் உன்னய எங்களோட சேர்த்துக்க மாட்டோம், புரியுதா? உன் அம்மா செத்தப்பவே அந்த லேடிகிட்ட இத சொல்லியாச்சு, திரும்பவும் இப்படிப் பேசினா எப்படி.
இப்போ தெளிவா உன்கிட்ட சொல்றேன் கேட்டுக்கோ, உன் அம்மா பண்ணத நாங்க மறக்க மாட்டோம். அதோட அவளுக்கும் எங்களுக்கும் இருக்க உறவு முடிச்சிருச்சி. என்னைக்கும் எங்களுக்கு நீ வேறதான், மண்டைல இத நல்லா ஏத்திக்கோ!
இருந்தும் என்கூட பிறந்தவ மகனு சொல்றேன்… இனிமேலாவது ஒழுங்கா இரு… உதவி செஞ்சவங்க வீட்டு பையனை… “
அதற்குமேல் அவரைப் பேசவிடாமல், “ஒரு நிமிஷம் ஒரு நிமிஷம்… கொஞ்சம் நிறுத்தறீங்களா?!” என்றாள்.
மேலும் அவளே, “இதுக்கு முன்ன உங்களை நான் பார்த்ததில்ல… பேசினதும் இல்ல… இனியும் அப்படித்தான். இந்த ஜென்மத்தில் இது ரெண்டும் நடக்கவே நடக்காது.
எனக்கு அங்க வர்ற எண்ணம் துளியும் இல்லை. அதனால உங்க நிம்மதிக்கு எந்த தொந்தரவும் வராது. அப்புறம்… உறவே இல்ல, நீ வேற நாங்க வேறனு சொல்லிட்டு எதுக்கிந்த அட்வைஸ்லாம் பண்றீங்க… தேவையில்ல.
இன்னொன்னு அவங்க சொன்னாங்க இவங்க சொன்னாங்கனு இனி ஃபோன் பண்ண வேண்டாம். அவங்க ஃபோன் பண்ணா என்கிட்ட பேச சொல்லிடுங்க. நான் சமாளிச்சிக்குவேன்” என்று அழைப்பைத் துண்டித்தாள்.
அலைபேசியை மேசையில் தூக்கிப் போட்டு, ‘ஏன் இப்படியெல்லாம்?’ என்ற பெருமூச்சு விட்டு, இருக்கையில் பின்னோக்கி சாய்ந்த மறுநொடி மீண்டும் அழைப்பு வந்தது. நேராக அமர்ந்தவள், தொடுதிரையில் ராதிகா பெயர் பார்க்கவும், ‘என்ன இது?’ என்று சலிப்பு வந்தது.
எரிச்சலுடன் அலைபேசி எடுத்து, “என்ன வேணும் உங்களுக்கு? திட்டியாச்சு, என் அம்மா வீட்டாளுங்ககிட்டயும் சொல்லி அவங்களையும் பேச வச்சாச்சு! இன்னும் என்னதான் வேணும் உங்களுக்கு?” என்றாள் படபவென.
“பேசனும் உன்கிட்ட” என்று மட்டும் சொன்னார்.
“ப்ச் இப்ப நீங்க என்ன பேசணும்”
“நான் இல்ல… திலீப் அப்பா”
சட்டெனெ குரல் உள்ளே போக, “சுரேஷ் சாரா… என்ன பேசனும்” என்றாள்.
“தெரியல, எங்கிட்ட சொல்ல மாட்டிக்கிறாரு. உன்னயதான் வர சொன்னாரு! ஒழுங்கா வா!” என்றவர், அவள் பேச இடம் கொடுக்காமல் பேச்சை முடித்துக் கொண்டார்.
அவர் பேசிமுடித்த பின்னும் கீர்த்தி அலைபேசியை காதிலே வைத்திருந்தாள்! அவளுடன் சுரேஷ் பேசியே பல வருடங்கள் ஆகிறது! திடீரென்று இப்போது வந்து ஏன்… எதற்காக பேச நினைக்கிறார்? என்ற கேள்வி அவளுக்குப் பெரும் பதற்றத்தைக் கொடுத்தது!!