Kathambari Novels

Kathambari Novels


அத்தியாயம் – 18


இரு தினங்கள் கடந்திருந்தன!

நகரத்தின் முக்கிய நுழைவாயிலான சான் மார்கோ சதுக்கம்! இரவு நேரம்! அந்த திறந்தவெளியின் ஒருபகுதி காதல் முன்மொழிவிற்கான அமைப்புடன் காட்சியளித்தது! உணவகம் ஒன்றின் முன் பதினொரு மேசை, நாற்காலிகள் போடப்பட்டு, மென்பூம்பட்டுத் துணியால் அலங்கரிக்கப்பட்டிருந்தன!

ஒவ்வொரு மேசையிலும் ஒருவர் ஒற்றை ரோஜாவுடன் இருந்தனர்! காதலைச் சொல்ல வேண்டியவன் ‘கோட் சூட்’ உடையில் பன்னிரெண்டாவது மேசையில் பூங்கொத்துடனும், சிறு பதற்றத்துடனும் அமர்ந்திருந்தான்!

காதலைச் சொன்னதும் இசை இசைக்க குழு ஒன்று, இதவ வடிவ பலூன்களை பறக்க விட சிலர், காதல் கணங்களை நிழற்படம் எடுக்க புகைப்பட கலைஞர் மற்றும் பொதுவிடம் என்பதால் மக்கள் சிலர் என்று அந்தச் சூழல் இருந்தது!!

சற்றுநேரத்தில் அடர்நீல ஆடையில் காதலை ஏற்க வேண்டியவள் வந்தாள். ஒவ்வொரு மேசையைக் கடக்கும் போதும், ஒற்றை ரோஜா நீட்டப்பட்டது. என்னவென்று புரியாமலும் புரிந்தும் வாங்கிக் கொண்டே வந்தாள்.

கடைசியில் காதல் கூற நினைத்தவன் மண்டியிட்டு பூங்கொத்தை நீட்டி, ‘வில் யூ மேரி மீ?’ என்று கேட்கவும், அதிர்ந்து நின்றாள். பின் வாய்மூடி சிரித்தாள். ஆனந்த கண்ணீர் விட்டாள். ‘ஆம்’ என்று வேகமாக தலையாட்டினாள்.

உடனே இசை இசைக்கப்பட, பலூன்கள் பறக்க, சூழ நின்றவர்கள் கரகோஷம் எழுப்ப… சிறு பேச்சு, மோதிரம் மற்றும் இதழ்முத்தம் பரிமாறல், சிறு நடன அசைவுகள் என்று காதலாக காட்சியளித்தது அந்தப் பகுதி!

சூழ நின்றவர்களில் ஒருத்தியாக கீர்த்தியும் நின்று கொண்டிருந்தாள். கடந்த இரு தினங்களையும்… டேவிட்டை ஏதாவது ஒரு இடத்தில் சந்தித்து சற்றுநேரம் பேசுவது, பின் கேஃபே சென்று காஃபி பருகுவது என்றுதான் கடந்திருந்தாள்.

இன்று இவ்வழியே வர… காதல் முன்மொழிவு நடக்க போகிறதென தெரியவும் வேடிக்கை பார்க்க இவள் நின்றுவிட, டேவிட் ஜெலாடோவ் (Gelato – Ice Cream) வாங்க அருகிலிருக்கும் கடைக்குச் சென்றிருக்கிறான்.

இந்த இரண்டு நாட்களில் அவர்களது பேச்சில் சில மாற்றங்கள் வந்திருந்தது. சற்று அதிகமாகவே உரிமை எடுத்துப் பேசினார்கள்! சில நேரங்களில், ‘நீ வா போ’ என்றும் பேசிக் கொண்டார்கள்!

மனங்களின் நெருக்கங்கள் கூடும் போது மரியாதை விகுதி நெருடல்தானே!?

மனம் டேவிட்டை விரும்புகிறது என்று கீர்த்திக்குப் புரிந்தது. அவன் மனமும் தெரிந்ததால், தன் மனதை மறைமுகமாக கோடிட்டு காட்ட நினைக்கிறாள்! ஆனால் வெளிப்படையாக சொல்ல விரும்பவில்லை! காரணம்? அவன்தான் நேசத்தை முதலில் வெளிப்படுத்த வேண்டுமென்ற ஆசை இருப்பதால்!

இதற்கிடையே இடம்மாறும் வழியில் நிற்கும் இவர்களுடைய இதயங்களுக்கு இப்படிக் காத்திருப்பது இம்சையாக இருந்தது! ‘அவன் குணம் தெரியும்தானே நீயாவது சொல்’ என்று கீர்த்தியை நச்சரித்தன. அவளும், ‘பார்க்கிறேன்’ என்று அவற்றைச் சாந்தப்படுத்தி இருக்கிறாள்!

கூட்டத்தோடு நின்று கைதட்டி இருந்தவளிடம், “இஸ் இட் ஓவர் கீர்த்தி?” என்று டேவிட் வந்து கேட்க, “ம் ம்” என்றாள். “பார்த்தாச்சா?” என்றான். “ம் ம்” என்றாள் அதற்கும். “போலாமா” என்றான். “ம் ம்” என்றே கூற, வாங்கிய ஜெலாடோவை (Gelato-Ice Cream) அவளிடம் கொடுத்தான்.

இருவரும் பேசியபடி நடக்க ஆரம்பித்திருந்தார்கள்!

ஜெலாடோவ் சுவைத்தவளிடம், “இதுல என்ன இன்ட்ரெஸ்ட்” என்று கேட்டான். ‘இதுவா’ என்று ஜெலாடோவை காட்ட, இல்லையென தலையசைத்து, “நின்னு ப்ரோபௌஸல் பார்த்தீங்கள, அத கேட்கிறேன்” என்றான்.

“பார்க்க அழகா இருந்தது, அதான்! ஆனா இன்னும் கொஞ்சம் டிராமட்டிக்கா, கிரேயிட்டிவா பண்ணிருக்கலாம்”

“எப்படி”

“நோபடி லைக்ஸ் மன்டே மார்னிங்ஸ். ஸோ மன்டே மார்னிங் ப்ரோபௌஸல் பண்ணலாம். அந்த கேர்ள்க்கு அடுத்து வர்ற எல்லா மன்டேயும் ஸ்பெஷலா இருக்கும், அவங்களோட டு-டூ (to do) லிஸ்ட்ல ப்ரோபௌஸல் டே-னு லிஸ்ட் பண்றது, பாட்டில் மெசேஜ் ப்ரோபௌஸல்… இப்படி நிறைய இருக்கு”

“பட் அதலாம் பப்ளிக் ப்ரோபௌஸல் இல்ல. இது ஓகே… இத பண்ண கரேஜ் வேணும். சரௌன்டிங்ல இத்தனை பேர் நிக்கிறப்ப ஷையா ஃபீல் பண்ணாம பேசி ப்ரோபௌஸ் பண்றது, டான்ஸ் பண்றதெலாம்… கஷ்டம் இல்லயா”

“நீங்க உங்க கேரக்டர வச்சி சொல்றீங்க”

இதுபற்றி இன்னுமே பேசுவான், மனதை வெளிப்படுத்தும் வாய்ப்பாக பேச்சு அமையுமென அவளிருக்க, “ம்” என்று மட்டும் சொன்னான். அதனால் அவளே வாய்ப்பை உருவாக்கும் முயற்சியாய், “இதுல ஷையா பீல் பண்ண எதுவுமே இல்ல டேவிட்” என்று புன்னகையுடன் சொன்னாள்.

அவனும் புன்னகைத்துக் கொண்டான்… அவ்வளவுதான், வேறு பேசவில்லை!

‘சற்று பேசலாமே இவன்’ என தோன்றினாலும்… அடுத்த முயற்சியாய், “எதும் ட்ரீம் இருக்கா, உங்களுக்கு” என்றாள் குரலை மென்மையாக்கிக் கொண்டு!

“இன் டேர்ம்ஸ் ஆஃப் வாட்?”

“லைஃப் பார்ட்னர் எப்படி வரணும்னு” என்றாள் மென்மையான தொனியில்.

சற்று யோசித்துவிட்டு, “ம்கூம்” என்றான்.

அவன் மறுமொழிகள், ‘நான் அவசரப்படுகின்றேனோ, அவனுக்கு அவகாசம் தர வேண்டுமோ’ என்று அவளுக்குத் தோன்ற வைத்தது! அதனால் அதன்பின் அமைதியாக சாப்பிட்டபடி நடந்து வந்தாள்.

அக்கணம் அவன், “பட் பாட்டி, என் மாமா அன்ட் இங்க சிலர், பிரைடு (bride), பிரைடு பேமிலி, என் வெட்டிங் பத்தின எக்ஸ்பக்ட்டேஷன அப்பாகிட்ட பேசுவாங்க, நான் கேட்டிருக்கேன்” என்றான்.

“ஓ” என்று சற்றுநேரம் ஒன்றும் பேசாமல் வந்தாள். “உங்க அப்பாக்கு அப்படி எதும் இருந்ததா?” என்று சிறு தயக்கத்தோடே கேட்டாள்.

“தமிழ் வெட்டிங் ஸ்டைல்ல இருக்கணும்னு அப்பா சொல்லுவாங்க, அது என் அம்மாக்காக. அததவிர அப்பா இதுலலாம் இன்டர்ஃபியர் ஆக மாட்டாங்க. என்னோட விஷ்தான் என் அப்பாக்கு முக்கியம்”

“உங்களுக்கும் அப்பாக்குமான பான்ட் பத்தி தெரியும்ல, அதான் கேட்டேன்”

“ம்ம்” என்றான். கொஞ்சம் இடைவெளிவிட்டு, “அந்த பான்ட் ரொம்பவே யூனிக் கீர்த்தி!” என்றான். சில நொடிகள் எடுத்துக் கொண்ட பின், “ஜென்ரலா ஃபாதர் டாட்டர் பான்ட் பத்திதான நிறைய பேசுவாங்க, கோட்ஸ் எல்லாம் இருக்கும். பட் வீ ஆர் எக்ஸ்சப்ஷனல்” என்றான் ஒரு மென்னகையோடு.

அவனுடைய மென்னகை அவளிடம் ஒரு புன்னகையைக் கொடுக்க, கையில் வழியும் நிலையிலிருந்த ஜெலாடோவை கடகடவென சாப்பிட ஆரம்பித்தாள். அக்கணம், “நீங்க சொல்லுங்க” என்றான்.

சாப்பிட்டபடி, “என்ன சொல்லனும்?” என்றாள்.

“நீங்க எப்படி… டாட்ஸ் லிட்டில் பிரின்சஸா?” என்று அவளைப் பார்த்தான்.

கேள்வி முடிந்த அடுத்தநொடியே அடிமனதின் வலிகளையெல்லாம் விழிகளின் அடியில் நிறுத்தி வைத்து அவனைப் பார்த்தாள். “என்னாச்சு கீர்த்தி?” என்று அவன் கேட்க, பதில் சொல்லாமல் நின்றாள்.

‘ஏன் இப்படி?’ என்ற அவன் கேள்விப் பார்வையைச் சந்தித்தவள், முகத்தைச் சாதாரணமாக காட்ட மெனக்கெடல் செய்தாள். அவளால் முடியவேயில்லை. உடனே அருகிலிருந்த கால்வாய் படிக்கட்டில் சென்று அமர்ந்தாள். மஞ்சள் ஒளியால் அசையா நீரின் மேல் விழுந்த தன் நிழலைப் பார்த்தபடி இருந்தாள்.

அவன், ‘என்னாச்சு இவளுக்கு’ என்று யோசித்து நின்றான். பின் அவளருகில் வந்தமர்ந்தான். அவள் மனதின் அழுத்தம் கையிற்கு கடத்தப்பட ஜெலோடோ அமிழ்த்தப்பட்டு உருகி வழிந்தது. அவளிடமிருந்து அதை வாங்கிக் குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு வந்தான்.

மெல்லிழைத் தாள் கொண்டு அவள் விரல்களைத் துடைத்து விட்டபடி, “என்ன கீர்த்தி… சடனா ஏன் இப்படி?” என்றான்.

அவனைப் பார்த்து, “டேவிட்” என்றாள். “சொல்லு” என்றதும், எப்படிச் சொல்வது என்ற தயக்கத்தில் வேறுபக்கம் திரும்பினாள். அடுத்தநொடி, “டேவிட்” என்று அவன் முகம் பார்த்தாள். ஆயினும் ஏதும் பேசாமல் பெருமூச்சுடன் திரும்பிக் கொண்டாள். பின், “டேவிட் கேஃபே போலாமா?” என்றாள்.

எழுந்து, “வா போலாம்” என்றதும், “வேற எங்கயும் போனும்னு உனக்கு பிளான் இருந்ததா” என்று நிமிர்ந்து அவனைப் பார்க்க, “எஸ், பட் இன்னொரு நாள் போலாம்… வா” என்று அவள் கைப்பிடித்து எழுப்பி அழைத்துச் சென்றான்.

கேஃபே சென்றதும், ஸ்மைலி இமோஜி லாட்டே வரைந்த காஃபி தயாரித்து அவளிடம் தந்தான். அதை வாங்கியவள், அவனைப் பார்த்து மெல்லியதாய் சிரித்தாள். அவனும் சிரித்துக் கொண்டான்.

அப்போது தெரிந்தது போல் அவளது முகத்தில் வலி தெரியவில்லை! ஆனால் அவள் சிரிப்பில் ஏதோ குறைவதை அவனால் உணர முடிந்தது!!

******************************

ரீசோல் யுவர் லைஃப், சான் மார்க்கோ!

அடுத்த நாள்! மாலைப்பொழுது முடியும் நேரம். அடுத்து ஆலோசனை வழங்க வேண்டியதென ஏதும் இல்லை. அதனால் அலைபேசியைக் கையில் வைத்து, சமூக வலைத்தளங்களில் வளம் வந்து கொண்டிருந்தாள். அக்கணம் டேவிட் அழைப்பு வர… உடனே எடுத்து, “சொல்லுங்க” என்றாள்.

“பிசியா”

“இல்ல… என்ன பண்ணனு தெரியாம உட்கார்ந்திருக்கேன்”

“என்ன பண்ணனும்னு நான் சொல்லட்டுமா?”

“ம்ம்”

“கிளம்பி கேம்போ சான் போலோ வர்றீங்களா”

“எதுக்கு”

“சின்ன சர்ப்ரைஸ்… உங்களுக்கு”

“ஏற்கனவே நீங்க தந்த சர்ப்ரைஸ்…” என்று அவள் ஆரம்பிக்கவும், “ப்ச் கீர்த்தி! ஒர்க் இல்லனா ஷார்ப்பா செவனுக்கு வந்திடு” என்று இடைவெளிவிட்டு, “ம்ம், வெயிட் பண்ணிட்டு இருப்பேன்” என்றான்.

இறுதி வரியில் அவன் குரல் ஒலித்த விதத்தில்… அவள் இதழ்வரிகளில் ஒரு குறுநகை வர, “வர்றேன்” என்று சொல்லி அலைபேசியை வைத்தாள்.

உடனே கிளம்பலாம் என்று எழுந்தவளுக்கு… தோற்றம் களைப்பாக, உடையும் சுமாரானதாக இருப்பது போல் தோன்றியது. அதனால் வீட்டிற்குச் சென்று முகம் கழுவி, உடை மாற்றிவிட்டு… தோராயமாக எட்டு மணியளவில் டேவிட் சொன்ன இடத்திற்குச் சென்றாள்.

சொன்னது போல் அவன் காத்துக் கொண்டிருக்க… கீர்த்தி, “சாரி சாரி லேட் ஆயிடுச்சி” என்று சொல்லி அவன் முன் வேகமாக வந்து நிற்க, “பரவாயில்ல, வாங்க போலாம்” என்று நடந்தான்.

‘நேற்று ஏன் அப்படி?!’ என்று அவன் அவளைக் கேட்கவில்லை! எதுவொன்றாக இருந்தாலும் அவளாகச் சொல்லட்டும் என்று நினைக்கிறான்! அவளோ அவன் கேட்டால் சொல்லலாமென நினைக்கிறாள்! கேட்காவிட்டாலும் ஓரிரு நாட்கள் கழித்துச் சொல்லிட வேண்டும் என்றும் நினைக்கிறாள்!

அதனால் நேற்றின் சுவடுகள் இன்றி இருவரும் இயல்பாக பேசினார்கள்!!

அவனுடன் நடந்தபடி, “எங்க போறோம்… என்ன சர்ப்ரைஸ்?” என்று கேட்டாள்.

“சொன்னாதான் வருவீங்களா, இல்லனா வர மாட்டிங்களா?”

“கூடதான நடந்து வர்றேன்… என்னென்னு சொல்லுங்க” என்றதும், “ஃபைன் டைனிங் ரெஸ்டாரன்ட்ல டின்னர் சாப்பிடலாம்னு நினைச்சேன்” என்றான்.

“இதான் சர்ப்ரைஸா, எனக்கு அப்படித் தெரியல” என்றாள் சிறு கேலியோடு.

புன்னகை குறையாமல், “சடனா டின்னர் பிளான் பண்ணி போறது… எனக்கு சர்ப்ரைஸ்தான்” என்றவன், “என்னால இவ்ளோதான் முடியும். பட் உங்களுக்கு இது சர்ப்ரைஸ் பீல் கொடுக்கலயோ” என்று சந்தேகமாக கேட்டான்.

முறுவல் சிரிப்பாக மலர, ‘ம்கூம்’ என்று தலையசைத்து, அவன் புன்னகையை மறைய வைத்தாள். பின், “ஆனா சந்தோஷமா இருக்கு” என்று கூறி, அவனை மென்னகை புரிய வைத்தாள்.

எளிமையாக, ‘ஏன்?’ ‘எதற்கு?’ என்று ஏதேனும் ஒரு கேள்வி வார்த்தை டேவிட் கேட்டிருந்தால் ‘அவர்கள்’ பற்றி ஓரிரு வார்த்தைகள் வெளிப்படையாக அவள் சொல்லியிருக்க கூடும். ஆனால் அவன் கேட்கவில்லை. அவளும் அதற்குமேல் ஏதும் சொல்லவில்லை.

சேர்ந்து நடக்கையில்… கட்டம் போட்ட சிவப்பு வண்ண ஸ்கர்ட், கருப்பு நிற ஸ்டாகிங், அதே நிற வி-நெக் டாப், கழுத்தைச் சுற்றி வெள்ளை நிற ஸ்கார்ஃப் என்று இருந்தவளைப் பார்த்து, “ப்ரசென்ட்டபிளா இருக்கீங்க” என்றான்.

“தேங்க்ஸ்” என்று சொல்லி, டஃபோடில் மஞ்சள் ஷர்ட், டீல் ப்ளூ ஜீன்ஸ் என்று இருந்தவனிடம், “நீங்களும்தான்” என்றதும், “நான் அன்னைக்கு கேட்டதுக்கு இன்னைக்குச் சொல்றீங்களா?” என்று சொல்ல, அமைதியாக நடந்தாள்.

“ஆன்சர் பண்ணாம வர்றீங்க” என்று அவன் சொல்ல, “கேள்வி மட்டும் சரியா இருந்தா, நல்ல பதில் சொல்லிருப்பேன்” என்றாள். கண்கள் சுருக்கி அவளைப் பார்த்தானே தவிர, சரியான கேள்வி எதுவென்று யோசிக்கவில்லை! அவளும் அந்த நல்ல பதில் எதுவென சொல்லவில்லை!

வார்த்தை வீணாகி விடக்கூடாதென்று வினாடிகளை வீணடித்துக் கொண்டே இருவரும் வெனிஸ் நகர வீதியில் நடந்து உணவகத்திற்கு வந்தனர்!!

பிர்ரியா உணவகம்!

கபிலம், சாம்பல் நிற செங்கற்களால் பின்னிப்பூட்டல் (InterLock) மாதிரியில் கட்டப்பட்டிருந்த கட்டிடம்! உணவகத்தின் வெளியே கூடாரங்கள் அமைத்து மும்முரமாக உணவுச்சேவை நடந்து கொண்டிருந்தது! இருவரும் அதைக் கடந்து உள்ளே சென்றனர்!

நாற்புறமும் பெரிய தூண்கள் எழுப்பப்பட்டு, அதன் நடுவில் முற்றம் போன்ற அமைப்பினில் நாற்காலிகள், மேசைகள் போடப்பட்டிருந்தன! வெண்சாம்பல் நிற தரை! சுடர்மண் நிற தொட்டிகளில் செடிகள் வளர்ந்து இருந்தன!

ஒருசில ஆட்கள் மட்டும்… பேரொலியாக பேச்சுகள் இல்லாத இடம்… செல்லோ இசைக்கருவியின் மெல்லிசை… அந்த இடத்தை மென்மையாக அமைதியாக காட்டியது! சூழல் மஞ்சள் விளக்கொளி மிகுந்தும், குறைந்தும் இருந்தது!!

இதையும் தாண்டி உணவகம் நவீன வசதிகளுடன் நீண்டு போனது! ஆனால் இருவருமே இங்கே இருக்க நினைத்தனர்! சதுர வடிவ மேசையின் ஒவ்வொரு பக்கமும் ஒரு நாற்காலி இருந்தது! ஒருவர் முகத்தைப் பார்த்து மற்றொருவர் பேசும்படி எதிரெதிரே அமர்ந்து கொண்டனர்!

“ஜெனரலா உங்களுக்கு என்ன சாப்பிட பிடிக்கும்?” என்று கேட்க, “கீர்த்திக்கு சாப்பிட பிடிக்கும்” என்றாள்.

ஆச்சரியமாக விழி விரித்து, “ஓ foodie-யா?” என்றான்.

“ம்ம் உணவுப் பிரியை”

“ஓகே இந்த உணவு… பி… ம் ம்” என்று உச்சரிக்க சிரமப்பட்டு கண்கள் சுருக்கி, “ப்ரோநவுன்ஸ் பண்ண முடியல… ஓகே இப்ப என்ன வேணும்” என்றான்.

“இங்க பீட்சா நல்லா இருக்கும்… டாகரெஸா பீட்சா”

“அப்படைஸர்?”

“நீங்களே சொல்லிடுங்க” என்றதும்… சிப்பந்தியை அழைத்து, “சாஃப்ட் எக்ஸ், கிங் பிரௌன் மஷ்ரூம், வால்நட்…” என்று பசியுண்டாக்கும் உணவுகளையும் மற்ற உணவுகளையும் சொல்லி அனுப்பினான். சற்றுநேரத்தில் வரவழைத்த உணவுகளைப் பேசியபடியே சாப்பிட ஆரம்பித்தார்கள்.

பீட்சாவை சாப்பிட்டுக் கொண்டே, “உங்களுக்கு என்ன ஃபுட் பிடிக்கும்” என்று அவள் கேட்க… அவன் பதில் சொல்ல போகையில், “ஒன் கண்டிஷன், இந்தியன் குஷின்ல சொல்லணும்” என்றாள்.

“ரசம்! டெலிசியஸ்… ரைஸ்க்கு அது கொடுக்கிற டேஸ்ட் ரொம்பப் பிடிக்கும். அதுவும் இந்தியால பாட்டி வீட்ல செய்றதுதான் பிடிக்கும். அப்பாகூட ரெசிபி கேட்டு வந்து ட்ரை பண்ணாங்க. அந்த டேஸ்ட் ரீச் பண்ண முடியல. பட் அப்பா எனக்காக ட்ரை பண்ணது பிடிச்சிருந்தது”

சாப்பிட்டபடி நிறைந்த முறுவலோடு கேட்டிருந்தாள்.

அவன், “உங்களுக்கு? அப்பா, அம்மா யார் குக்கிங் பிடிக்கும்” என்று கேட்க, சட்டென சாப்பிடுவதை நிறுத்தினாள். அவ்வளவு நேரம் இருந்த சந்தோஷம் முழுவதும் சடுதியில் தொலைந்து சங்கடம் சூழ்ந்த முகமாக மாறியது.

தட்டிலே கவனம் வைத்திருந்தவன், “அவங்க குக்கிங்ல என்ன டிஷ் உங்க ஃபெவரைட்” என்று கேட்டு முடிக்கையில் அவளைப் பார்த்தான்.

அவளது முகம் காட்டும் வேதனையைப் பார்த்து, “என்னாச்சு கீர்த்தி?” என்று பதற, புன்னகை மட்டும் செய்தாள். “எதுக்கு இப்படி இருக்க” என்றான். பதில் சொல்லாமல் கையிலிருந்த பீட்ஸா துண்டை தட்டின் ஓரத்தில் வைத்தாள். குனிந்தும் கொண்டாள்.

“கீர்த்தி” என்று அழைக்கவும், “ம்ன்” என்று நிமிர்ந்தவளின் விழிகளில் ஏதோ ஒரு தவிப்பு… அலைவுதிரிவு. உடனே முள்கரண்டியைப் போட்டுவிட்டு அவளது பக்கம் வந்தமர்ந்து, “இந்த டாக் வந்தாலே ஏன் இப்படி மாறிடற, எங் ஏஜ்லயே பேரன்ட்ஸ் இறந்திட்டாங்களா” என்றான்.

இல்லையென தலையசைத்தாள். “அப்புறம்” என்று ஆறுதலாக கேட்க, ஏதோ சொல்ல வந்தவள், பேசாமல் நிறுத்தி… தயங்கி, “நீ சாப்பிடு” என்று முடித்தாள். அவளை வற்புறுத்த விரும்பாமல் எழுந்தான். அக்கணம், “டேவிட்” என்றாள். “சொல்லு” என்றபின்னும் பேசாமல் இருந்தாள்.

அவன் அருகில் இருப்பது அரவணைப்பு உணர்வைத் தந்தது. அது அப்படியே தொடர வேண்டுமென தோன்றியது. அதை வாய்வார்த்தையாக சொல்லாமல் எதிர்புறம் இருந்த அவன் தட்டை எடுத்து அவள் பக்கம் வைத்தாள். மீண்டும் சாப்பிட ஆரம்பித்தாள்.

ஒன்றும் சொல்லாமல் அங்கேயே அமர்ந்து கொண்டான்.

தன்னை சாதாரணமாக காட்டிக் கொள்ள நினைத்தவள், “போறப்ப கேஃபேல காஃபி குடிச்சிட்டு போகனும்” என்று பேச, “ம்ம்” என்றான்.

“ரொம்ப லேட் ஆயிடுமோ?” என்று இன்னும் பேச, ஏதும் பேசாமல் அவளையே அவன் பார்க்க, “ஐ அம் ஓகே” என்றாள்.

‘யூ ஆர் நாட் ஓகே கீர்த்தி’ என்று அவன் உள்ளம் சொன்னாலும், “எப்பனாலும் போலாம். இப்போ நீ சாப்பிடு” என்றான். சரியென்றாள். இருவரும் அதன்பின் அங்கிருந்து செல்லும்வரை எதுவும் பேசவில்லை.

******************************

ரீசோல் சென்டர், சான் மார்கோ

அடுத்தநாள், இரவு எட்டு மணிக்கு மேல் ஆகியிருந்தது! ஆலோசனை நேரமும் முடிந்திருந்தது! வழக்கமாக இந்நேரம் டேவிட்டைப் பார்க்க கிளம்பிவிடுவாள் கீர்த்தி! ஆனால் இன்று இங்கேயே இன்னும் இருக்கிறாள்! மனதை, மனதின் வலிகளை இனியும் மறைத்துக் கொண்டிருக்க முடியாது என்று தெரிந்தது!

அதனால் அதைப் பற்றிய ஆழ்ந்த யோசனையிலே இருந்தாள்!!

Leave a Comment

error: Content is protected !!
Scroll to Top