Kathambari Novels
அத்தியாயம் – 15
ரீசோல் யுவர் லைஃப், சான் மார்க்கோ!
குடும்பத்துடன் சென்ற சிறு பயணம் முடிந்து அதிகாலைப் பொழுதில் திலீப் வெனிஸ் திரும்பியிருந்தான். சிறு தூக்கம் மட்டும் எடுத்துவிட்டு, இப்பொழுது கீர்த்தியைப் பார்க்க வந்திருக்கிறான். அவனிடம் சென்டரில் செய்திருக்கும் சிற்சில மாற்றங்களைக் காண்பித்துக் கொண்டிருந்தாள்.
“இந்த வால் பேப்பர் மாத்திருக்கேன். இங்க இருந்த மூனு போட்டோ ஃப்ரேமும் மாத்தியாச்சு. இதுக்கு முன்ன இருந்த சோஃபா செகன்ட்ஹேன்ட்தான, அத டிஸ்போஸ் பண்ணிட்டு, புது சோஃபாவும் வாங்கி போட்டாச்சு.
ம், அப்புறம் இங்க வா” என்று மர பகிர்வைத் தாண்டி அவனை அழைத்துச் சென்று, “இந்த கார்னர்ல இதுக்கு முன்ன எதும் இல்லைல, இப்ப ஸ்டாண்டிங் லேம்ப் வச்சாச்சு” என்றவள்… சன்னல் திரைச்சீலையைப் பார்த்து, “கர்டெய்ன் மாத்த நினைச்சேன்.
அதுக்கு இப்ப பட்ஜெட் இல்ல, ஏன்னா வீடு வேற மாத்த வேண்டி இருக்குது. நெக்ஸ்ட் டைம் பார்க்கணும்” என்றாள்.
முகத்தில் அத்தனை அசதியுடன் அனைத்தையும் பார்த்தான். முகமெங்கும் ஆனந்தத்துடன் அவள் சொன்னதைக் கேட்டிருந்தவன், “வின்டோ கர்டெய்ன் ஈவினிங் போய் வாங்கலாம்” என்றான்.
“பரவாயில்ல, நெக்ஸ்ட் டைம் பார்த்துக்கிறேன்” என்றாள். “அதுமட்டும் பழசா இருக்கு. அதான் சொல்றேன்” என்று சொல்ல, “சரி திலீப், ஆனா இன்னைக்கே எதுக்கு? உன் முகமே சொல்லுது நீ எவ்ளவு டயர்டா இருக்கன்னு. ரெஸ்ட் எடு. இத இந்த வீக் எண்டு பார்த்துக்கலாம்” என்றான்.
“வீக் என்டுல முடியுமானு தெரியல, வேற கமிட்மென்ட்ஸ் இருக்கு. ஈவினிங்கே போலாம்”
“என்ன கமிட்மென்ட்ஸ்”
“என் பிஸ்னஸ் ரிலேட்டடுதான்! டீடெய்லா அப்புறம் சொல்றேன். அதுக்கான ப்ராசஸ் நடந்துக்கிட்டு இருக்கு. எல்லாம் சரியா வரணும்னு டென்சன் வேற! அதையே நான் யோசிச்சிக்கிட்டு இருக்கேன்” என்றான் அசதியின் காரணம் அதுவும்தான் என்பது போல!
‘சொல்கிறேன்’ என்றதால், ‘என்ன’ என்று கேட்கவில்லை. ஆனால், “டென்சன் இல்லாம பண்ணு. எல்லாம் சரியா நடக்கும்” என்றாள் நம்பிக்கையாக.
“ம்ம், லுக் வைஸ் சென்டர் முன்னவிட இப்போ ரொம்ப நல்லா இருக்கு. ஆனா நான் இங்க இருக்கிறப்ப பண்ணிருக்கலாம், இல்லயா நான் வந்தப்புறம் பண்ணிருக்கலாம். ஏன் தனியா பண்ண… கஷ்டமில்லயா” என்றான்
“அப்பதான் செஷன் இல்லாம இருந்தது திலீப். ஆனா நான் தனியா பண்ணல. டேவிட் கொஞ்சம் ஹெல்ப் பண்ணாங்க”
“டேவிட்?”
“ரவி ஃப்ரண்ட்”
“உன் கிளயன்ட்”
“ம்ம்”
“அவன் வந்து ஏன் ஹெல்ப் பண்ணனும்?”
“இதுகாகனு வரலை. பீஸ் கொடுக்க வந்தாங்க, ஆனா நான் எல்லா எடுத்துப் போட்டிருக்கிறதைப் பார்த்திட்டு ஹெல்ப் பண்ணாங்க”
“ஓ… அவன் அந்த ரவி மாதிரி கிடையாதோ?”
“ம்கூம், ஒரு பர்ஸன்ட் கூட இல்ல. நைஸ் பெர்ஸன்”
“அந்த ரவி அதுக்கப்புறம் எதும் பேசினானா?”
“பார்க்கவே இல்ல அவனை”
“சரி, டயர்டா இருக்கு, கிளம்பறேன். ஈவினிங் மார்க்கெட் வந்திடு, கர்டெய்ன் வாங்கிடலாம். அப்படியே டின்னர் போலாம். ரொம்ப நாளாச்சு” என்றான் கண் இமைகளைத் தேய்த்துவிட்டபடி.
“ஒன்னும் அவசரமில்லை. நீ போய் முதல நல்லா ரெஸ்ட் எடு திலீப். அப்புறம் பிசினஸ்காக பாரு” என்றதும், “அதெல்லாம் நான் பார்த்துப்பேன். நீ வந்திடு. பை” என்று கிளம்பிப் போனான்.
**************************
அடுத்தநாள்!
சென்டர் முடிந்ததும், கீர்த்தி ரியால்டோ சந்தைக்கு வந்து சில காய்கறிகள் வாங்கிவிட்டு பாலம் வழியாக வீடு திரும்பிக் கொண்டிருந்தாள். அக்கணம், அவளெதிரே ரவி வந்து நின்றான். ‘இப்ப எதுக்கு வழில வந்து நிக்கிற?’ என்ற பார்வை பார்த்து நின்றாள்.
“இந்தா இத வாங்கிக்கோ” என்று சில யூரோகளை எடுத்து நீட்டினான்.
“என்னது?” என்றாள் வாங்காமல்.
“பீஸ்… தெரபிக்காக” என்றான்.
டேவிட்டிடம், ‘பீஸ் கொடுத்திட்டியா’ என்று ரவி கேட்டிருந்தான். ‘மறந்திடிச்சி’ என்று கீர்த்திக்கு உதவியதைச் சொல்லியிருந்தான். அவனிடம் ரவி எதுவும் கேட்டுக் கொள்ளவில்லை. இப்போது கீர்த்தியைத் தற்செயலாகப் பார்த்ததும், பணத்தைக் கொடுக்க நினைத்தான்.
‘எதற்கு பணம்?’ என்று அவன் காரணம் சொன்னபின்… அவள், “நான் உனக்கு எந்த தெரபியும் கொடுக்கலயே” என்றாள் அலட்சியமாக.
அதே தொனியில், “எனக்கு அப்படி ஏதாவது தேவைனா உன்ன மாதிரி ஒரு தெரபிஸ்ட்கிட்ட வரவே மாட்டேன்” என்று சொல்லி, “இது டேவிட்க்கு தெரபி கொடுத்ததுக்கு… பீஸ் கொடுக்கலைனு சொன்னான்” என்றான்.
“அத நீ ஏன் கொடுக்கிற… டேவிட் கொடுத்துக்கட்டும்” என்றாள் பட்டென்று.
“நான் கொடுத்தா என்ன… டேவிட் கொடுத்தா என்ன” என்றான் வேகமாக.
“யாருக்குத் தெரபி கொடுத்தேனோ அவங்ககிட்ட இருந்துதான் பீஸ் வாங்க முடியும்… மத்தவன்கிட்டருந்து வாங்க முடியாது” என்றாள் கறாராக.
“டேவிட்க்கு நான் மத்தவன் கிடையாது… ஃப்ரண்ட்!” என்றான் எரிச்சலுடன்.
அவளும் எரிச்சலுடன், “இருந்துக்கோ, அதுக்கென்ன?” என்றாள்.
“போதும் பேசினது! முதல பணத்தை வாங்கு!” என்றான் உத்தரவிடும் குரலில்.
“கண்டிப்பா வாங்க மாட்டேன்” என்றாள் அழுத்தமாக.
“ப்ச், ஏன் பீஸ் வேண்டாம்னு சீன் கிரியேட் பண்ற” என்றான் முகக்கடுப்புடன்.
“சீன் கிரியேட் பண்றேனா? உன்கிட்டருந்து வாங்க மாட்டேன்னு சொல்றேன்! ப்ச்… நான் தெரபிஸ்ட்! டேவிட் என் கிளையன்ட்! நீ யாரு இடையில… எதுக்கு வந்து பீஸ் கொடுக்கிற” என்று படபடத்தாள்.
அவன் அமைதியாக அவளைப் பார்க்க, “சொல்றது புரியலையா… எனக்கும் டேவிட்க்கும் இடையில நீ எதுக்கு வர்ற?! வராதனு சொல்றேன்!!” என்றாள்.
கீர்த்தியின் முந்தைய வாக்கியமும் இந்த வாக்கியமும் ஒரே விடயத்தைக் குறித்தாலும், ஒன்றாகவே தெரிந்தாலும்… வித்தியசமாக பொருள்பட்டது. அது ஒரு நெருடலைத் தர, ரவி ஒன்றும் பேசாமல் நின்றிருந்தான்.
உடனே கீர்த்தி… கோபத்தில் ஏதோ முணுமுணுத்தபடி சென்றுவிட்டாள்.
சற்றுநேரம் அப்படியே இருந்தான்! பின் பாலத்தின் ஓரத்தில் ஒதுங்கி நின்று கொண்டான்! கீர்த்தி பேசியதையே யோசித்தான்! இதுவரை டேவிட்டையும் அவனையும் பிரித்துப் பார்த்து… யாருமே பேசியதில்லை! ‘இவ மட்டும் ஏன் இப்படி?’ என்றதில் கீர்த்தி மீதான கோபம் இன்னுமே அவனுக்கு அதிகரித்தது!!
**************************
இரண்டு நாட்கள் கழித்து! சாண்டா லூசியா ரயில் நிலையம், கன்னரிஜியோ சிஸ்டரி (cannaregio sestiere). இது கிராண்ட் கேணல் மேற்கு எல்லையில் அமைந்துள்ளது! வெனிஸை மற்ற இத்தாலிய நகரங்களுடன் இணைக்கும் ஒரு மார்க்கமாகும்!
‘பிரைவேட் வாட்டர் டாக்சி’யில்… திலீப் மற்றும் அவன் குடும்பம் நகரிலிருந்து இங்கு வந்து சேர்ந்திருந்தனர். இதன் விஸ்தாரமான கான்கிரீட் முன்பகுதியில் போடப்பட்டிருந்த நீளமான இரும்பு இருக்கை ஒன்றில் திலீப்பும் சுரேஷும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.
இரயில் நிலைய நுழைவாயிலுக்குச் செல்ல அமைத்திருக்கும் மிக உயரமான படிக்கட்டுகளில் ராதிகா, இஷா மற்றும் பாலு இருந்தனர். அங்கே வந்திருந்த திலீப்பின் நெருங்கிய நண்பர்கள் சிலரிடம் பேசிக் கொண்டிருந்தனர்.
சற்று நேரத்தில் கீர்த்தியும் அங்கே வந்தாள். அப்பாவுடன் திலீப் இருப்பதைப் பார்த்ததும், ஓரமாக நின்றுவிட்டாள். சில நிமிடங்களுக்குப் பின் மகனுடன் பேசிக் கொண்டிருந்த சுரேஷ், அவள் வந்திருப்பதைப் பார்த்ததும், ‘கொஞ்சம் நடந்துக்கிறேன்’ என்று மகனிடம் சொல்லி எழுந்து போனார்.
அதன்பின்னரே திலீப் அருகே வந்து கீர்த்தி அமர்ந்தாள்.
வீசும் குளிர்ந்த மென்காற்றுக்கு பறந்த முடிகளை ஒதுக்கிவிட்டபடி, “ஐ அம் ஸோ ஹாப்பி ஃபார் யூ” என்றுதான் ஆரம்பித்தாள். “ஆனா என்கிட்ட முதலயே சொல்லிருக்கலாம்ல” என்றாள்.
“சொல்ல கூடாதுனு இல்லை. பிளான் இருந்தது”
“அப்போ ஏன் சொல்லலை”
“சொல்றதைக் கேளு… நார்தர்ன் டிஸ்ட்ரிக்ட்ல வீவிங் பேக்டரி ஒன்னு வந்தது. சின்னதுதான், ஆனா வாங்கி… ஒபேரா ஹவுஸ், சர்ச்ல யூஸ் பண்ற மாதிரி கார்பெட்ஸ், கர்டெய்ன்ஸ், குஷன் தயாரிக்க நினைச்சேன். ஷோரூம் ரோம்ல இருந்தா டிரேடிங் பண்ண ஈஸியா இருக்கும்னு தோணிச்சி.
இதுக்கெல்லாம் நிறைய இன்வெஸ்ட்மென்ட் தேவைப்பட்டது. என் சேவிங்ஸ் இருந்தது. அதுமட்டும் போதாது. அதான் யோசிச்சேன். இதுபத்தி இந்த ட்ரிப்ல அப்பாகிட்ட பேசினேன். ‘யோசிக்காத நான் பணம் தர்றேன்’னு சொன்னாரு. ஸோ இமிட்டியேட்டா ஸ்டார்ட் பண்ணிட்டேன்”
ஆம், தொழில் ரீதியாக திலீப் ரோம் நகரம் செல்கிறான். குடும்பத்தினரும் நண்பர்களும் அவனை வழியனுப்பவே வந்துள்ளனர்.
“க்ரேட்! கங்கிராட்ஸ், எவ்ளோ நாள் இந்த பிஸ்னஸ் ட்ரிப்?” என்று கேட்டாள்.
“பதினைஞ்சி நாளுக்கு மேல ஆகலாம்” என்றவன், “அப்புறம் கீர்த்தி, எதும்னா கால் பண்ணி கேளு. பிஸ்னஸ் டென்ஷன்ல இருப்பானேனு கேட்காம இருக்க கூடாது. கரெக்டா சாப்பிடணும். வெளில ரொம்பச் சாப்பிடாத, வீட்ல சமைச்சி சாப்பிடு, வீடு பாரு… டெய்லி ஃபோன் பண்ணிடுவேன்” என்றான்.
சரியென்று அவள் தலையசைத்து, “நீயும்…” என்று ஆரம்பிக்கையில் ராதிகா, “தள்ளி போய் நிக்கிறியா, நான் பேசனும்” என்று வந்து நின்றார். “ம்மா” என்று திலீப் சலிப்படைந்தான். கீர்த்தியோ, ‘அந்தப் பக்கம் போய் நிக்கிறேன்’ என்று அவனிடம் கை ஜாடையில் சொல்லி, ஒதுங்கி நின்று கொண்டாள்.
ராதிகா, “இன்னும் பணம் வேணும்னாலும் கேளு, அம்மா தர்றேன்டா” என்று மகனிடம் பேசத் தொடங்கினார். இஷா, பாலுவும் வந்து நின்று பேசினார்கள்.
அடுத்த சிறிது நேரத்தில் மற்றவர்களிடம் சொல்லிவிட்டு… அப்பா முன் வந்து நின்றான் திலீப். சுரேஷ் முகத்தில், தொழிலில் மகனின் அடுத்தகட்டத்தை நினைத்து சந்தோஷம் ஏராளம் இருந்தது. கூடவே இனி அடிக்கடி அவனைப் பிரிந்து இருக்க வேண்டுமே என்று சற்று சங்கடமும் இருந்தது.
வார்த்தைகள் ஏதுமின்றி சிறு தலையசைப்புடன் அப்பாவிடம் விடைபெற்றுக் கொண்ட திலீப், படிக்கட்டுகள் ஏறி நுழைவாயிலை நோக்கி நடந்து, ரோம் பயணத்தைத் தொடங்கினான்.
அவன் போனதும், கீர்த்தி கிளம்பப் பார்க்க… அவளருகே வந்த ராதிகா, “இங்க பாரு, கால் பண்ணி திலீப்ப டிஸ்டர்ப் பண்ணாத. அவனை ஒழுங்கா பிஸ்னஸ் பார்க்க விடு. இனி அவன் ஸ்டேட்டஸ் இன்னும் கூடும். உன்னலாம் ஃப்ரன்டுனு சொல்லிக்க முடியாது. இது அவனுக்குப் புரியவே புரியாது. நீயாவது புரிஞ்சி ஒதுங்கிக்கோ” என்றார் கடகடவென.
திலீப் முன்னேற்றத்தை நினைத்து சந்தோசமாக இருந்தாள் கீர்த்தி. அதனால் அவர் பேசியது அவளைப் பாதிக்கவில்லை. “சரி” என்று மட்டும் சொன்னாள்.
‘என்னாச்சு உனக்கு, திரும்பப் பேச மாட்டிக்கிற, நான் பேசினது உன்னய கஷ்டப்படுத்தலயா’ என்பது போல் கீர்த்தியைப் பார்த்து நின்றார்.
அவர் பார்வையைப் புரிந்தவள், “நீங்க என்ன பேசினாலும் இன்னைக்கு நான் இப்படித்தான்” என்று சிறு புன்னகையுடன் சொன்னாள்.
சற்றுநேரம் அவள் முகத்தையே பார்த்தவர், “என்ன பேசினாலும்… ம்ம்?” என்று கேட்க, சட்டென சிறு புன்னகைகூட மறைய, இருக்கும் நல்ல மனநிலையைக் கெடுத்துக் கொள்ள விரும்பாமல், அங்கிருந்து விருட்டென்று நகர்ந்து… திலீப் நண்பர்கள் சிலருடன் இயல்பாகப் பேசியபடி கிளம்பிவிட்டாள் கீர்த்தி.
தான் ஏதும் பேசிவிடுவேனோ என்று பயந்து, கீர்த்தி ஓடிப் போன வேகத்தைப் பார்த்த திருப்தியுடன் ‘பிரைவேட் வாட்டர் டேக்ஸி’ நோக்கி நடந்தார் ராதிகா.
இதே கணத்தில் இரயிலில் பயணித்துக் கொண்டிருந்த திலீப் யோசனையில் இருந்தான்! காலம் முழுதும் கீர்த்தியைப் பார்த்துக் கொள்ள வேண்டுமென்ற அவன் எண்ணம் பற்றிய யோசனைதான்!
ஏன் இப்படி ஒரு எண்ணம்? கீர்த்தியின் தனிமை, தனியாக இருக்கின்றாளே, தனியாகவே எல்லாம் சமாளிக்கின்றாளே என்ற கவலை அவனுக்கு என்றும், எப்போதும் அதிகம்தானே… அதனால்தான் இந்த எண்ணம் அவனிடம்!
அந்த எண்ணம் இப்போது வலுப்பெற்றிருந்தது!
காரணம்? தொழில் விஸ்தரிப்பினால் அவனால் முன்னைப் போல் வெனிஸில் மட்டுமே இருக்க முடியாது. பயணங்கள் இருக்கும். அப்போதெல்லாம் யார் இருக்கிறார் இங்கே அவளைப் பார்த்துக் கொள்ள என்ற கேள்வி வந்து வந்து அவனை வெகுவாக வாட்டியது!
காலம் முழுவதும் அவளைக் கவனித்துக் கொள்ள நினைக்கின்றான். ஆனால் இது காதல் இல்லை என்றும் நிச்சயமாகச் சொல்கின்றான். அதேநேரம் அவன் எண்ணத்தினால், கீர்த்தியின் ‘ஃப்ரெண்ட்’, ‘வெல் விஷர்’, ‘சப்போர்ட்டர்’ என்ற இடத்திலிருந்து விலகி, ‘லைஃப் பார்ட்னர்’ என்ற இடத்தில் அவனை வைத்து யோசிக்கின்றான்.
அவளைப் பொறுப்பாகப் பார்த்துக் கொள்ள வேண்டுமென்ற என்ற அவனது மனநிலை, அவனை இப்படித்தான் யோசிக்க வைத்தது.
அவளது வாழ்வை அவள் தேர்ந்தெடுக்க மாட்டாளா என்று கேள்வி எழுந்தால், ஒரே ஒரு ஒருமுறை, ‘உனக்குனு ஒரு ஃபேமிலி, மேரேஜ் இதலாம் யோசிப்பியா’ என்று கீர்த்தியிடம் கேட்டிருக்கின்றான்; அதற்கு அப்போது அவள், ‘அதலாம் நான் யோசிச்சதில்ல’ என்றிருக்கிறாள்.
அப்போதுதானே, இப்போதும் அவள் அப்படித்தான் இருப்பாளா என்று அடுத்த கேள்வி வந்தால், அவள் அம்மாவின் வாழ்வு அவளைப் பாதிக்கலாம், எனவே அவள் இதையெல்லாம் யோசிக்காமல் இருக்கலாம் என்று அவனாகப் பதில் ஒன்று சொல்லிக் கொண்டான்.
கீர்த்தியை… அவன் அம்மா நடத்தும் முறை தெரிந்தும், இது சரிவருமா என்று அவன் யோசிக்கவில்லை. அவள் நிலைமையை மட்டுமே யோசிக்கின்றான்.
ஆனால் இது சரியா என்று யோசித்திருக்கிறான். தன்னை ஒரு நல்ல நண்பன் என்று நினைத்துக் கொண்டிருப்பவளிடம் போய், எப்படி இதைக் கேட்க என்ற பெரிய தயக்கம் இருந்தது. அதையும்கூட அவளுக்காத்தானே என்று புறம் தள்ளியிருந்தான்.
ஆனால் இன்னொரு தயக்கம் இருக்கின்றது. அதுதான் இன்றுவரை அவன் எண்ணத்தை அவளிடம் சொல்லிக் கொள்ளாமல் இருக்க காரணம்.
சற்று நேரத்திற்கு முன்… அப்பா தன்னுடன் பேசுவதைப் பார்த்து, கீர்த்தி தள்ளி நின்றது… அவள் வந்தது பார்த்து அப்பா எழுந்து சென்றது… அவன் கண் முன் காட்சியாக தெரிந்தது. இருவரின் இந்த ஒதுக்கம்தான், அவன் தயங்குவதின் முக்கிய காரணம்.
ஆனால் இப்போது அதையும் ஒதுக்கி வைத்தான்! காரணம் இனி அடிக்கடி அவன் மேற்கொள்ள வேண்டிய தொழில்முறை பயணங்கள்.
தன் எண்ணத்தைச் சொன்ன பின்னர் அப்பா, கீர்த்தி இருவரையும் எப்படிக் கையாளுவது என்ற பெரும் குழப்பம் இருந்தாலும்… கீர்த்திமீது அவனுக்கு இருக்கும் கரிசனத்தை… அவனது எண்ணத்தைக் கூடிய விரைவில் அவளிடம் சொல்லிவிட வேண்டும் என்று முடிவெடுத்தான்!!
**************************
வெனிஸ் மார்க்கோ போலோ ஏர்போர்ட்!
வெனிஸிலிருந்து நீர் வழி போக்குவரத்து மூலம் பியாசாலா ரோமே [piazzale rome] என்ற பெரிய சதுக்கத்திற்கு வந்து, அங்கிருந்து டேக்ஸி அல்லது பொதுப் பேருந்து மூலமாக இந்த விமான நிலையத்தை அடையலாம்.
இந்தியா போவதற்காக ரவி, மது இங்கே வந்திருந்தனர். டேவிட், அவர்களை வழியனுப்ப வந்திருந்தான். ‘தனியா இருந்துப்பேன்’ என்ற அவன் சொன்னது பற்றி ஹென்ரியிடம் ரவி கேட்டிருந்தான். அவர் வேண்டாம் என்றால், தன் அப்பா, அம்மாவை வந்து டேவிட்டுடன் இருக்கச் சொல்ல நினைத்திருந்தான்.
டேவிட் நிலை குறித்து அவர் கேட்டறிந்தபின், ‘எதும் முடியாதுனு சொன்னவரு, முடியும்னு சொல்றதே குட் சிம்ப்டம்தான். ரியாலிட்டியை அக்ஸ்ப்ட் பண்ண பார்க்கிறாரு. ஆல்ரெடி சொன்னதுதான், எதையும் ஃபோர்ஸ் பண்ணாதீங்க. வேற எதுவும்னா தெரபிஸ்ட்கிட்ட கேட்டுக்கோங்க’ என்றிருந்தார்!
அவர் சொன்னதே போதுமானதாக இருந்தது. ‘டேவிட் இருந்துப்பான்’ என்ற நம்பிக்கையும் இருந்தது. ஆனாலும் அவனைத் தனியே விட்டுப் போக பயம். அதனால்தான் அலைபேசி அழைப்பு வருவதைக்கூட கண்டு கொள்ளாமல் டேவிட்டிற்கு அறிவுரை கூறிக் கொண்டிருந்தான் ரவி.
ரவி பேசுவதை, டேவிட் பொறுமையாக கேட்டுக் கொண்டிருந்தான்!!
“தனியா இருக்கிற மாதிரி பீல் பண்ணா, அம்மா அப்பாக்கு ஃபோன் பண்ணி அவங்களை வர சொல்லிடுடா”
“ம்ம்ம்”
“கஃபே ஓபன் பண்ண தோனுதுனு சொன்னேல, ரொம்ப நாளானதால டீப் கிளீனிங் பண்ணிடலாம். கிளீனிங் சர்வீஸ் புக் பண்ணிருக்கேன். அங்கருந்து வருவாங்க, பார்த்துக்கோ”
“ம்ம்”
“வீக் எண்டுல கசின்ஸ்கூட டைம் ஸ்பென்ட் பண்ணு, அவங்களோட வெளிய போய்ட்டு வா, வீட்டுக்குள்ளயே இருக்காத”
“ம்ம்”
“ஒழுங்கா சாப்பிடணும். ரெடி டு குக் மாதிரி ஐடெம்ஸ் வாங்கி வச்சிருக்கேன். சமைக்க முடியலனா அத யூஸ் பண்ணிக்கோ. சாப்பிடாம இருக்க கூடாது”
“ம்ம்”
“கரெக்ட்டா டேப்ளெட்ஸ் எடுத்துக்கணும், தூங்கணும். அப்புறம்…” என்று ரவி யோசிக்க, “ஃபோன் ரொம்ப நேரமா அடிச்சிக்கிட்டு இருக்கு. எடுத்து பேசிட்டு வா” என்றாள் மது.
“இருடா” என்று அழைப்பை ஏற்று ரவி சற்றுத் தள்ளிப் போகவும், “அதெப்படி டேவிட்… மூனு நாளா இதயேதான சொல்லிக்கிட்டு இருக்கான். இன்னைக்கு சொல்றப்ப, தெரியாததைச் சொல்ற மாதிரி கேட்டுகிட்டு இருக்க?” என்றாள்.
டேவிட் ஒன்றும் சொல்லாமல் இருக்க, “நெக்ஸ்ட் டைம் நீயும் வரணும்… ” என்று மது சொல்ல, “கண்டிப்பா வர்றேன்… அம்மா அப்பாவ கேட்டதா சொல்லு. உன் கசின்க்கு என்னோட விஷஸ் கன்வே பண்ணிடு” என்றான்.
“ம்ம், நீ…” என்று அவள் ஏதோ கேட்க வருகையில்… ரவி வந்து, “மது அப்புறமா பேசிக்கோ, நான் இப்ப பேசனும்” என்று அவளை விலக்கி நிறுத்தி, “நாங்க வர்றதுக்கு பிஃப்டீன், டுவென்ட்டி டேய்ஸ் ஆகும்டா. நீதான்…” என்று மீண்டும் அறிவுரையை ஆரம்பித்தான்.
தள்ளி நின்றவள், “போதும்! எத்தன தடவ சொல்லுவ, அவன் பாவம்” என்றாள்.
“அவன் சொல்ல நினைக்கிறதை… சொல்லி முடிக்கட்டும்” என்றான் டேவிட்.
“ப்ச் அவன் சொன்னதையே திரும்பத் திரும்ப சொல்லிக்கிட்டு இருக்கான். நீ வேற” என்று சலிப்புடன் சொல்லி, “நீ கிளம்பு டேவிட்” என்றாள்.
அப்போதும் டேவிட் போகாமல் ரவியைப் பார்க்க, “வேற ஒன்னும் இல்லடா. நீ கிளம்பு” என்று ரவி சொன்னபின்தான், “பை… ஹேவ் எ சேஃப் அன்ட் ஹேப்பி ஜர்னி” என்று கூறிவிட்டு, டேவிட் கிளம்பினான்.
விமான நிலையம் நோக்கி நடக்கையில்… ரவி முகத்தை உம்மென்று வைத்து வர, “நான் பேசினதுக்குத்தான இப்படி இருக்க. நிஜமா நீ பேசினதையேதான் பேசிக்கிட்டு இருந்த” என்றாள்.
“அவனைத் தனியா விட்டுப் போறதுக்கு என்னமோ மாதிரி இருக்கு. அதான் அவ்ளோ பேசினேன்” என்றான் சத்தற்ற குரலில்.
“அவனோட சேஞ்சஸ் சொல்லுதே ரவி, ஆல்மோஸ்ட் சரியாகிட்டான்னு. அவன் சமாளிச்சிடுவான். பயப்படாத… அப்படியே எதும்னா… கீர்த்தி இருக்காங்களே, அவங்க பார்த்துப்பாங்க” என்றாள் எதார்த்தமாக.
“அவ ஏன் இவனைப் பார்த்துக்கணும், நீ ஏன் இப்படிச் சொல்ற?! முதல இப்ப எதுக்காக அவளை ஞாபக படுத்துற” என்றவன் குரல் சற்றுமுன் இருந்ததற்கு நேரெதிராக எகிறிக் கொண்டு வந்தது.
“ஏன் கத்தற… அவங்கதான இவன் தெரபிஸ்ட். அதான் சொன்னேன்”
“தெரபிஸ்ட், அவ்ளோதான்” என்றவன், “விடு! நான் ஒன்னும் பயப்படல. டேவிட் முன்ன மாதிரி கிடையாது. அதலாம் சமாளிச்சிடுவான். அவனே அவனைப் பார்த்துப்பான். யாரும் தேவையில்ல” என்றான் படபடவென.
“இததான நானும் சொன்னேன்” என்றவள், “இரு கேன்டிஸ் வாங்கணும்” என்று சொல்ல, “நானும் வரவா” என்று அவன் கேட்க, “நீ ரிலாக்ஸா உட்காரு. நான் பார்த்துப்பேன்” என்று விமான நிலையத்தினுள் இருந்த கடையை நோக்கி மது போகவும், அங்கிருந்த இருக்கையில் அமர்ந்தான்.
அவள், ‘ரிலாக்ஸா உட்காரு’ என்று சொல்லிப் போனாலும், அவனால் அப்படி இருக்க முடியவில்லை. என்னமோ கீர்த்தி சொன்ன, ‘எனக்கும் டேவிட்டுக்கும் இடையில நீ வராத’ என்பதே மூளைக்குள் ஓடிக் கொண்டிருந்தது.
அது ஓட ஓட, கீர்த்தி மீதான கோபம் பன்மடங்கு அதிகரித்தது! அப்படியே அதை, ‘இவ நம்மளை பிரிச்சிப் பேசறா, இவகூடலாம் ரொம்ப பேசாத’ என்று நண்பனிடம் சொல்லவிடத் துடித்தான்! முன்போல் இப்போது டேவிட் இல்லை என்ற ஒன்று, ‘சொன்னால், தெரபி பாதிக்கும்’ என்ற பயத்தை வரவிடவில்லை!
அதனால் இந்தியாவிலிருந்து வந்ததும், டேவிட்டிடம் அனைத்தையும் சொல்ல வேண்டுமென்று முடிவெடுத்தான் ரவி!!
ஒரு பக்கம் கரிசனம்! ஒரு பக்கம் கோபம்! கோபம் பற்றி டேவிட்டிற்குத் தெரியாது, கரிசனம் பற்றி கீர்த்திக்கு தெரியாது, இல்லையா?