Kathambari Novels
உயிர் வந்து… உயிர் போக!
மழை நேரம்!
அதாவது… வானம் பொத்துக் கொண்டு சோவென மழைக் கொட்டித் தீர்க்கும் இரவுப் பொழுது! மழைஇரவு என்பதற்காக இருள் சூழ்ந்து இல்லை. ஒரு சீரான இடைவெளியில் இருந்த விளக்கு கம்பங்களின் ஒளியால் மழையில் நனைந்த சாலைகள் பளிச்சென்று தெரியும் அளவிற்கு வெளிச்சம் இருந்தது!
வாகனப் போக்குவரத்துக்கு ஒலிகள் இல்லை! காற்றோ, இடியோ, மின்னலோ கிடையாது! சாலையில் தண்ணீர் தேங்கும் அளவிற்கு பேய்மழை மட்டுமே!!
சடசடவென சத்தம் போட்டு பெய்யும் மழைச் சூழலின் இடையே சாலைகள் மற்றும் சாலை ஓரங்களில் ஒரு மயான அமைதி இருந்தது! இது போன்ற சாலை ஒன்றில் அமைந்திருந்த பேருந்து நிழற்குடையின் கீழே ஒரு இளம்பெண் நின்று கொண்டிருந்தாள்!
இவள் ஷாலினி!!
அகால நேரமென்பதால் பேருந்து சேவை இருக்காதென்று தெரிந்து, ஆட்டோ கிடைக்குமா? என்று காத்திருப்பது போல் சாலையை எட்டி எட்டி பார்த்தபடி இருந்தாள்.
நிழற்குடை கீழ் மட்டுமல்ல, மழைநீர் ஓடும் அந்தத் தார் சாலையிலும் ஆட்கள் நடமாட்டம் இல்லை! யாருமில்லா சூழலில் தனியாக நிற்பதால் உள்ளுக்குள் ஒருவித பயம் இருப்பதை அவள் முகம் காட்டியது!
‘இன்னும் எவ்ளோ நேரம் வெயிட் பண்ணனுமோ?’ என்று முணுமுணுத்த சிறிது நேரத்தில், ஒற்றை முகப்பு ஒளி காட்டிடும் வெளிச்சத்தின் உதவியுடன் மழை நேரத்துச் சாலையைக் கணித்து ஆட்டோ ஒன்று வருவது தெரிந்தது.
ஷாலினி நிறுத்தச் சொல்லி கைகாட்டியதும், அவள் அருகில் வந்து நின்றது.
மழை பெய்கின்ற வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் சுமாரான வேகத்தில் வேலை செய்யும் வைப்பர்! ஆட்டோ முன்பக்கம் நனைந்து தொங்கும் சிவப்பு நிற குஞ்சலங்கள்! ஆட்டோ ஓரங்களில் எரியும் நீலநிற எல்இடி விளக்குகள்!
இந்த அடையாளங்களைப் பார்க்கவே பயமுறுத்தும் வகையில் இருந்தது!
ஏறவா? வேண்டாமா? என்று முன்ஜாக்கிரதையாக இருப்பது போல் அவளிடம் ஒரு தயக்கம் தெரிந்தது. ஆனால் மழை நேரமென்பதால் ஆட்டோ கிடைப்பது கடினம் என்று யோசித்தவள் போல… அதில் ஏறிக் கொண்டாள்.
ஆட்டோ கிளம்பி ஓரிரு நிமிடங்கள் கழித்து, “அண்ணா எங்க போகணும்னு கேட்கலையே?” என்று ஷாலினி கேள்வி கேட்க, “அதான் ஏற்கனவே உன்கூட வர்ற பொண்ணு சொல்லிட்டே” என்றார் அவர்.
ஆட்டோக்காரர் சொன்ன பதிலில் அதிர்ச்சியடைந்தாள் ஷாலினி!
‘கூட வர்ற பொண்ணா… என்ன இது?’ என்று உள்ளுக்குள் உதற, சாலையைக் கவனித்தாள். அவள் குடியிருப்புக்குப் போகும் வழிதான்!
‘அதெப்படி?’ என்ற மிரட்சியில், “நான் மட்டும்தான இருக்கேன். நீங்க யாரைச் சொல்றீங்க?” என்று ஷாலினி கேட்க, “ரெண்டு பேரும் கைகாட்டி ஏறிட்டு, இப்ப இப்படிக் கேட்கிற?! எதும் சண்டையா உன் பிரண்ட் கூட?” என்று கேட்டார்.
மேலும் அவர், “கொஞ்சம் உள்ள தள்ளி உட்காருமா. அந்தப் பொண்ணு மேல சாரல் அடிக்கு பாரு” என்றார் மழை கொட்டும் சாலையில் கவனத்தை வைத்து!
ஆட்டோ சீரான வேகத்தில் போய்க் கொண்டிருந்தது. ஷாலினிக்கு ஏதோ ஒரு சிக்கலுக்குள் மாட்டிக் கொண்டது போல் மூச்சோட்டம் சரிவர இல்லாமல் போனது. மழை நேரத்து குளிர் இரவிலும் முகமெங்கும் வேர்வைத் துளிகள் அரும்பின!
ஆட்டோக்காரர் பேச்சு ஏற்படுத்திய பயத்தில், ‘தன்னருகே அவர் சொல்வது போல் பெண் இருக்கிறாளா?’ என்று மெதுவாக திரும்பிப் பார்த்தாள்.
நீலநிற விளக்கொளி நிரம்பியிருக்கும் ஆட்டோவிற்குள் அவளுடைய கண்களுக்கு யாரும் தெரியவில்லை! இவர் பொய் சொல்கிறாரோ? என்று சிறு சந்தேகம் வந்தது! ஆனால் தான் சொல்லாமலே சரியான பாதையில் செல்கிறாரே என்ற பெரிய குழப்பமும் இருந்தது!
உடனே, “நீ… நீங்க சொல்ற பொண்ணு எ… என்ன கலர் டிரஸ் போட்டிருக்கு?” என்று லேசான நடுக்கத்துடன் கேட்டதற்கு, திரும்பி அவளை ஒருமாதிரி பார்த்தார். பின் அவள் பக்கத்தில் பார்த்துவிட்டு, “பச்ச கலர் சுடிதார்” என்று சாலையை பார்த்து ஓட்ட ஆரம்பித்தார்.
முகத்தின் வேர்வைத் துளிகள் கழுத்தில் வழிந்தோட… மீண்டும் அவளருகில் பார்த்தாள். இப்போதும் யாருமில்லை! இருந்தாலும் பயத்தில் உள்ளே தள்ளி அமர்ந்து கொண்டாள்!!
‘இது என்னவா இருக்கும்?’ என்று யோசிக்கையில், ‘ராத்திரி நேரத்தில் ராக்ஷச பேய்களின்…’ என்ற ரிங்டோனில் ஓட்டுநர் அலைபேசி அதிர்ந்தது.
திக்கென்று இருந்தது ஷாலினிக்கு!
இப்போது பார்வையை பக்கவாட்டில் திருப்பவே பயந்தாள். ஆனால் அவர் சாதாரணமாக அழைப்பை ஏற்று, “சவாரி போய்க்கிட்டு இருக்கேன். அப்புறம் பேசறேன்” என்று வைத்திருந்தார்.
ஒருவித பயம் உருவாக… அலைபேசியில் தோழியை அழைத்துப் பார்த்தாள். புலன செய்தி அனுப்பினாள். எதற்கும் பதிலில்லை!
‘பேசாமல் இறங்கிடலாமா?’ என்றுகூட நினைத்தாள். ஆனால் ‘இங்க இறங்கி என்ன செய்ய? எவ்வளவு தூரம் மழையில் நடக்க?!’ என்ற கேள்வி வரவும், ‘ப்ச், இந்த ஆட்டோதான் பிரச்சனை’ என்று தனக்குள் சொல்லி, கண்களை இறுக மூடிக் கொண்டாள்!
முக்கிய சாலை வழியே முப்பது நிமிடங்கள் பயணம் முடித்து கிளைச்சாலை ஒன்றில் வந்து ஆட்டோவை நிறுத்தி, “இதுக்கு மேல போக முடியாது. தண்ணீ ரொம்ப இருக்குது. ரெண்டு பேரும் சேர்ந்து நடந்து போய்க்கோங்க” என்றார்.
ஷாலினி ஒன்றும் சொல்லவில்லை!
‘ஆட்டோவில் இருந்தால்தானே பிரச்சனை?! இறங்கிவிட்டால் இதுபோல் இருக்காதல்லவா?’ என்ற எண்ணம் வர, வேகமாக இறங்கி பர்சில் கவனத்தை வைத்துக் கொண்டு, “எவ்வளவு ண்ணா?” என்று கேட்டாள்.
“உன் ஃபிரன்ட் கொடுத்திருச்சி” என்று கையிலிருந்த நூற்றைம்பது ரூபாயைக் காட்டிவிட்டு, விருட்டென ஆட்டோவை எடுத்துக் கொண்டு கிளம்பினார்.
பக்கென்று இருந்தது ஷாலினிக்கு!
‘பணம் கொடுத்தாச்சா? அப்ப ஆட்டோகாரர் சொல்ற மாதிரி பக்கத்தில ஒரு பொண்ணு நிக்கிறாளோ?’ என்று ஓரவிழியால் ஷாலினி பார்க்க முயற்சித்தாள். ஆனால் முழுதாய் பார்க்கும் முன்… பயம் அதிகமாகி உடல் நடுங்கியது!
அதன்பின் பார்க்க முயற்சிக்கவில்லை!!
சாலையின் ஒரு முனையிலிருந்து மறுமுனை வரையும் யாருமே இல்லை. எந்தச் சத்தமும் இல்லை. கொட்டும் மழையும்… குடையில்லாமல் சொட்ட சொட்ட நனையும் ஷாலினி மட்டும்தான்!
அங்கேயே நிற்கவும் பயம்… நடந்து போகவும் பயம் என்பது போல் கைகளைப் பிசைந்து கொண்டு நிற்கையில் ஆக்டிவா ஒன்று வந்து அவளருகில் நின்றது!
அதிலிருந்த ரெய்ன் கோட் அணிந்த பெண், “மழை ரொம்ப பெய்யுது சிஸ்டர். லிஃப்ட் வேணுமா?” என்று கேட்டாள்.
‘ஒத்துக்கவா, மறுக்கவா?’ என்ற குழப்பம் போல் ஷாலினி விழிகள் இருந்தன!
பின் தனியா போக வேண்டாமென தோன்ற, “தேங்க்ஸ்” என்று வண்டியில் ஏறிக் கொண்டு, “நேரா போய் செகன்ட் லெஃப்ட் கட்…” என்று வழி சொல்லும் போதே, “கொஞ்சம் முன்னாடி தள்ளி உட்காருங்க. அவங்களும் ஏறணும்ல?!” என்றாள் அந்த ஆக்டிவா பெண்.
“எவங்க?” என்று கண்கள் சுருக்கி கேட்டாள் ஷாலினி!
“இதோ இங்க நிக்கிறாங்களே, ஹைட்டா இருக்காங்கள அதான் உங்களைத் தள்ளி உட்கார சொன்னேன்” என்று ஷாலினி நின்ற இடத்தின் பக்கம் கைகாட்டினாள்.
அந்தப் பெண் பேச்சால் திடுக்கிட்டாள் ஷாலினி!
இந்தப்பக்கம் அந்தப்பக்கம் என்று திரும்பிப் பாராமல் சட்டென இறங்கி, “நா, நான்… ந… நடந்தே போய்க்கிறேன்” என்று படபடத்துப் பேசினாள்!!
“ஏன் சிஸ்டர்?” என்று கேட்டதற்கு பதில் எதுவும் சொல்லாமல் ஷாலினி நடக்க ஆரம்பிக்க, “உங்க இஷ்டம்” என்று அந்த ஆக்டிவா பெண் சென்றுவிட்டாள்.
குண்டும் குழியுமாக இருந்த கிளைச்சாலையில்… நனைந்ததில் நடுங்கியபடி நடந்தாள். கண்ணின் கருமணி மட்டும் வலப்பக்கம் ஒருமுறை… இடப்பக்கம் ஒருமுறை போய்விட்டு வந்தன!
அவ்வளவுதான்! என்னாயிற்றோ… அடுத்த நொடி ஓட்டம் பிடித்தாள்!
சாலை ஓரங்களிலும், குழிகளிலும் தேங்கியிருந்த மழைநீரில் கால்கள் அழுந்த பதிந்து சத்தங்கள் கேட்கும்படி கண்முன் தெரியாமல் ஓடினாள்.
அவள் வசிக்கும் குடியிருப்புக்குள் வந்த பின்தான் வேகத்தைப் படிப்படியாக குறைத்து மூச்சு வாங்க நின்றாள்!
விடாது பெய்யும் மழையால் தொப்பலாக நனைந்திருந்தவளைப் பார்த்த கேட் செக்யூரிட்டி முதியவர், “என்னமா இப்படி நனைஞ்சிருக்க. ஒரு ஆட்டோ பிடிச்சி வந்திருக்கலாமே?” என்று அக்கறையாக கேட்டார்.
“ஆட்டோக்காரர் இந்தப் பக்கம் வரமாட்டேன்னு சொல்லிட்டாரு” என்று ஓடிய ஓட்டத்தினால் மூச்சிரைக்க பதில் சொன்னாள்!
கூடவே அவர் கேள்வியால் அப்பெண் பின்தொடரவில்லை என்ற ஒரு நிம்மதியில் நடக்கப் போனவளிடம், “எப்பவும் யாரையும் கூட்டிட்டு வர மாட்டியே? இன்னைக்கு என்னமா… கூட யாரோ வந்திருக்கு. மழையினாலயா?” என்று கேட்டார்.
நிம்மதி பறிபோனது போல் சட்டென திரும்பினாள் ஷாலினி!
மேலும் அவரே, “அந்தப் பொண்ணு கையிலதான் குடை இருக்கே. அப்புறமும் ஏன் ரெண்டு பேரும் இப்படி நனைஞ்சிட்டு வரணும்?” என்று கேட்க, ‘இன்னும் அந்தப் பொண்ணு வர்றாளா?’ என்று ஷாலினி வெலவெலத்துப் போனாள்.
பதில் சொல்லாமல் விறுவிறுவென நடக்க ஆரம்பித்தாள்.
பின்னே தொடர்கிறாளா? பக்கத்தில் வருகிறாளா? என்ற பெரிய பீதியோடு திரும்பியும், பக்கவாட்டிலும் பார்த்தபடி ஓடி வந்து லிஃப்டில் ஏறினாள்.
மிதமான வெள்ளை நிற வெளிச்சத்திலிருந்த லிஃப்டில், ஆறாவது தளத்திற்கான பட்டனை அழுத்திவிட்டு கண்களை இறுக மூடிக் கொண்டாள்!
ஆனாலும் பெண் உருவம் எதும் தட்டுப்படுமா என்று பார்க்க மெது மெதுவாக வலக் கையை உயர்த்தினாள். இங்கே அங்கே என்று கையை அசைத்துப் பார்த்தாள்.
திடுமென ஒரு சத்தம்!
தடாலென்று கண்திறந்து பார்த்தாள்! லிஃப்ட் நின்று கதவு திறந்த சத்தம்தான்!
வேறொன்றுமில்லை!!
அவள் இறங்கியதுமே… ஏறுவதற்காக காத்திருந்த ஒரு பெண்மணியைப் பார்த்தபடி வெளியே வந்தாள். ‘வாவ்! லாங் கேர், வெரி நைஸ்!’ என்று சொல்லி லிஃப்டில் ஏறி அந்தப் பெண்மணி சென்றுவிட்டார்!
நல்ல வெளிச்சத்தில் இருந்த நடைக்கூடத்தில் தனியே நின்றாள் ஷாலினி!
தோளில் புரண்ட தன் கூந்தலைத் தொட்டுப் பார்த்தவள், ‘அப்ப அந்தப் பொண்ணு இன்னும் கூடவே வருகிறாளா?! யாரிவள்?’ என்ற அச்சத்தில் இதயம் ‘தட்… தட்’ என்று துடித்தது.
உடனே ஓடிச் சென்று… வீட்டைத் திறந்து… உள்ளே போய் பூட்டிக் கொண்டாள்.
இருண்டு கிடந்தன அறைகள். அனைத்து விளக்குகளையும் போட்டாள். இருட்டை கிழித்து வந்த வெளிச்சத்தில் ஏதாவது பெண்ணுருவம் தெரிகிறதா என்று நூற்றியென்பது டிகிரி கோணத்தில் விழிகளை சுழற்றிப் பார்த்தாள்.
மீண்டும் ஒரு சத்தம் கேட்டு உடல் அதிர்ந்தது!
இம்முறை காலிங் பெல் அடிக்கும் சத்தம்!!
‘யாரா இருக்கும்?’ என்று ஒரு பயம்! இருந்தும் லென்ஸில் பார்த்து கதவைத் திறந்தவளிடம், “மேம் யுவர் ஆர்டர்” என்று பிரபல கடை பெயர் ஒன்று பொறிக்கப்பட்ட பிரியாணி டப்பாவை நீட்டினான் டெலிவரி பாய்!
“நா… நான் ஆர்டர் பண்ணலையே” என்று பதற்றத்துடன் மறுத்தாள்!
“இந்த அட்ரஸ்ல இருந்துதான் ஆர்டர் வந்தது மேம்” என்றவன், “ஒருவேளை அவங்க ஆர்டர் பண்ணிருப்பாங்களோ?” என்று சாப்பாட்டு மேசை நோக்கி பார்த்துக் கேட்டான்.
சிறிதளவும் திரும்பிப் பார்க்கவே பயந்து… திருதிருவென விழித்து நின்றவளின் கைகளில் பிரியாணியை கொடுத்துவிட்டு டெலிவரி பாய் சென்றான்.
இப்போது கதவைத் தாழிடவும் பயம்! திறந்து வைத்திருக்கவும் பயம்!
பிரியாணி டப்பாவை கையில் வைத்துக் கொண்டு உயிர் போகும் பயத்தில், கண்களில் கண்ணீர் துளிர்க்க ஒருநொடி நின்றிருப்பாள். அதற்குள், “ஹேய்ய்” என்று கத்தி ஒரு கும்பல் அவள் முன்னே வந்து நின்றது!
அந்த ஆட்டோகாரர், ஆக்டிவா பெண், செக்யூரிட்டி, லிஃப்ட் பெண்மணி, டெலிவரி பாய் என்று அனைவரும் நின்றனர்! கூடவே அவள் தோழியும்! கேமரா சகிதமாக சிலரும் நின்றனர்!!
துளிர்த்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டவளிடம், “சிஸ்டர் இது, ‘ஹாரர் பிராங்க் வித் பிரஜன்’ ஷோகாக பண்ணது. உங்ககூட ஒரு பொண்ணு இருக்க மாதிரி சொல்றதுக்காக, இவங்க எல்லாம் நாங்க செட் பண்ண ஆளுங்க. உங்க ஃபிரண்ட் ஹெல்ப் போட இதைப் பண்ணோம்” என்று விளக்கினான்.
‘இதுதான் நடந்திருக்கிறது’ என்று தெரிந்ததால் பயம் தெளிந்து ஷாலினிக்கு உயிர் வந்தது போலிருந்தது!
இன்னொருவர், “சிஸ்டர் கேமரா பாருங்க” என்று குல்லாவை மாட்டப் போக, “இப்படித்தான் பண்ணுவீங்களா? ச்சே எது விளையாட்டு? எது சீரியஸ்? எது நிஜம்? எது பொய்?னு தெரியாம போயிடாதா?” என்று கத்தினாள்.
தோழியிடம், “உன்கிட்ட அப்புறமா பேசிக்கிறேன்” என்றாள் கோபமாக!
“சாரி சிஸ்டர் சாரி” என்றாலும் அவள் சமாதானம் ஆகவில்லை. அதன் பின்னும் நிறைய பேசினார்கள். திட்டினாள். வாங்கிக் கொண்டார்கள்!
கடைசியில், “அடுத்த வாரம் வேற ஒரு பிராங்க் ஐடியாவோட மீட் பண்றேன். அன்டில் தென், திஸ் இஸ் பிரஜன் ஷைனிங் ஆஃப்!” என்று நிகழ்ச்சி முடிந்தது.
இந்தக் காட்சிகளையெல்லாம் எடிட்டிங் அறையில் எடிட்டருடன் உட்கார்ந்து, நிகழ்ச்சி படைப்புக் குழவைச் சேர்ந்த ரஞ்சனி பார்த்துக் கொண்டிருந்தாள்.
இந்த ‘பிராங்க்’ நிகழ்ச்சியின் எண்ணமும் ஆக்கமும் ரஞ்சனிதான்!
பார்த்து முடித்ததும் ரஞ்சனி, “சூப்பர்! உயிர் போய்… உயிர் வர்ற மொமென்ட்னு டைட்டில் கொடுத்துகோங்க. ப்ரோமோ கட் ரெடி பண்ணிடுங்க” என்றாள்.
“ஓகே மேம்” என்றவன், “சவுன்ட் எஃபக்ட் வேண்டாமா? லைட்டிங் நிறைய இருக்கு. இருட்டா இருந்தாதான கோஸ்ட் பீல் கொடுக்கும்” என்று கேட்டான்.
“இல்லை வேண்டாம். இருட்டோ, சவுன்ட் எஃபக்ட் இல்லமாலே பயம் வரணும், பார்க்கலாம்” என்றவள் நேரத்தைப் பார்த்துவிட்டு, “அக்கா பசங்களை வெளிய கூட்டிட்டுப் போகணும். நான் கிளம்பறேன்” என்று எழுந்தாள்.
“பை மேம்” என்றதும், வெளியே வந்த ரஞ்சனி ஸ்கூட்டியை எடுத்துக் கொண்டு வீட்டுக்கு வந்தாள்.
மாலை நேரத்து சூரிய கதிர்கள் வெளிச்சத்தைப் பரப்பிக் கொண்டிருந்தன! தனிவீடுதான்! ரஞ்சனியின் அம்மா வீட்டுச் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்தார்!!
காம்பௌன்டுக்குள் வந்தவள் வண்டியிலிருந்து இறங்கிக் கொண்டே, “ம்மா, பசங்க ரெடி ஆகியாச்சா?” என்று கேட்டாள்.
“அப்பவே ரெடியாயிட்டு… உட்கார்ந்து டிவி பார்க்கிறாங்க” என்றவர், “இது யாருடி… புது ஃபிரண்டா?” என்றார்.
“எது?” என்றாள் புரியாத உடல்மொழியுடன்!
“உன்கூட ஸ்கூட்டியில வந்து இறங்கி நிக்கிறது”
‘ஆங் என்கூடவா?” என்று கேட்டவளுக்கு ஒரு சிறு பயம் எழுந்தது. என்னமோ அந்த நேரம் ‘பிராங்க்’ காட்சிகள் கண்முன் வர, “என்ன டிரஸ் போட்டுருக்கா ம்மா?” என்று கேட்டாள்.
“சுடிதார்”
“ம்மா!” என்று அழுத்திச் சொன்னவள், “கலர் சொல்லுங்க” என்றாள்.
பைப்பை நிறுத்திவிட்டு, “பச்சை கலர்டி” என்றார்.
பின்னல் திரும்பவே பயந்து இருந்தவள், “ஹைட்டா இருக்காளா?” என்றாள்.
“உன்கூடதான வந்திருக்கா. என்னமோ தெரியாத மாதிரி கேட்கிற?” என்றார் டியூபை சுருட்டி வைத்தபடி!
“பதில் சொல்லுங்க!!”
“ம்ம்”
“லாங் ஹேரா?”
“ஆமாடி!?” என்றபோது ‘பாட்டி’ என்று உள்ளிருந்து அழைப்பு வந்தது.
“குடை வச்சிருக்காளா?”
“குடையும் வச்சிருக்கா. பிரியாணி டப்பாவும் வச்சிருக்கா ரஞ்சி” என்றவர், மீண்டும் ‘பாட்டி’ என்று குரல் கேட்க, “இதோ வர்றேன்” என்று வீட்டிற்குள் சென்றுவிட்டார்.
‘திக்… திக்’ என்றிருக்க அங்கேயே நின்றாள் ரஞ்சனி!
‘இது என்னவா இருக்கும்?’ என்ற கேள்வி வருகையில், வீட்டிற்குள் இருந்த டிவியில், ‘ராத்திரி நேரத்தில் ராக்ஷச பேய்களின்…’ என்ற பாடல் ஓடும் சத்தம் வெளியே வரை கேட்டது.
‘அப்போ இது அதுவா?’ என்ற கேள்வியில் முகமெங்கும் வியர்வைத் துளிகள் துளிர்க்க ரஞ்சனி திரும்பிப் பார்த்தாள்!!
பச்சை நிற சுடிதாரில், நீள கூந்தலுடன், உயரமான தோற்றத்தில், கையில் குடை மற்றும் பிரியாணி டப்பாவை வைத்தபடி ஒரு பெண் நின்றாள்!
வெளிச்சமான மாலை நேரம்! திகில் ஏற்படுத்தும் சத்தம் ஏதுமில்லைதான்! இருந்தும், ‘இனி என்ன நடக்க போகிறதோ?’ என்ற பயத்தில் ரஞ்சனிக்கு உயிர் போவது போல் இருந்தது!!