Kathambari Novels
ஒரு காஃபி சொல்லிக்கட்டுமா?!
காஃபி ஷாப்பில் இருந்தபடி அலைபேசியில் சமூக வலைதளத்தைச் சுற்றிக் கொண்டிருந்த மீரா, இடையிடையே நேரத்தைப் பார்த்து, ‘ச்சே, எவ்ளோ நேரம் வெய்ட் பண்றது?’ என்று எரிச்சல் படவும் செய்தாள்.
ஆகாஷ் என்பவனைச் சந்திக்க இருபது நிமிடமாக மீரா காத்திருக்கிறாள். ஆகாஷ் இவளுக்காக வீட்டில் பார்த்திருக்கும் வரன். இருவர் வீட்டிலும் அனைவருக்கும் திருப்தி. இவர்கள் பார்த்து, பேசி முடிவெடுக்கவே இந்தச் சந்திப்பு.
இருபத்தேழாவது நிமிடத்தில், “ஹே ஹாய், சாரி சாரி லேட்டாயிடுச்சி” என்று ஆகாஷ் வந்து மீரா எதிரே அமர்ந்தான்.
“ரொம்ப வெயிட் பண்ண வச்சிட்டேனோ? சாரி! பட் லேட்டானதுக்கு காரணம் இருக்கு. டிராஃபிக் ஜாம்னு நினைக்காத. ஆக்சுவலா வீட்ல எல்லாருக்கும் ஓகேங்கிறத தாண்டி, எனக்கு உன்னய ரொம்ப பிடிச்சிருக்கு.
உன்கூடத்தான் லைஃப்னு நிறைய கனவுகளோட இருக்கேன். ஃபர்ஸ்ட் டைம் நீ என்னை நேர்ல பார்க்கிறப்ப நல்லா தெரியனும்னு எஃபர்ட் எடுத்து டிரஸ் பண்ணேன். ஸோ லேட்” என்றான் வெளிப்படையாக.
அவள் ஏதும் சொல்லாமல் பார்க்க, “என்னைப் பத்தி நானே சொல்லக் கூடாது. இருந்தாலும் சொல்றேன். ரொம்ப நல்ல பையன். நல்லாவும் படிப்பேன். ஸ்கூல் டாப்பர். இன்ஜினீயரிங் படிச்சிருக்கேன். காலேஜ்லயும் கோல்டு மெடலிஸ்ட்.
எதையும் ஈஸியா புரிஞ்சிப்பேன்… கற்பூர புத்தி… இன்டெலிஜென்ட்னு டீச்சர்ஸ் எல்லாம் சொல்லுவாங்க. கேம்பஸ் இன்டெர்வியூலயே செலக்ட் ஆகி பிளேஸ் ஆகியிருந்தேன். அதோட இப்ப ஒரு ஆறு மாசமா வீகென்ட்ல மட்டும் ஆர்.ஜே வேலை பார்க்கிறேன். பிடிச்சிருக்கு… அதனால” என்று பேசித் தள்ளினான்.
அவள் அமைதியாக இருக்க, “ரொம்ப பேசற மாதிரி இருக்கா? பொதுவாவே நான் நிறைய பேசுவேன். பேசறதும் ஒரு வேலைங்கிறதால இன்னும் அதிகமா பேசறேன். இல்ல… இல்ல, நிறைய பேசறதால அதையே ஒரு வேலையாவும் எடுத்துக்கிட்டேன்” என்று சிரித்தான்.
இன்னும் அவள் பேசாமல் இருக்கவும், “என்ன… எதுவும் பேச மாட்டிக்கிற? எதையோ யோசிக்கிற மாதிரி இருக்கே?!” என்றான்.
“என்ன யோசிக்கிறேனு சொல்லட்டுமா” என்று வாய்திறந்தாள்.
“சொல்லு சொல்லு” என்றான் ஆவலாக.
“எப்ப இங்கருந்து கிளம்பலாம்னு யோசிக்கிறேன், அத உன்கிட்ட எப்படிச் சொல்றதுனும் யோசிக்கிறேன்” என்றாள் நிதானமாக.
நெற்றி முடிச்சுகளுடன், “நீ சொல்றத வச்சிப் பார்த்தா உனக்கு இதுல விருப்பம் இல்லயோ?” என்று கேட்டான்.
“சூப்பர்! சட்டுன்னு புரிஞ்சிக்கிட்ட, உன் டீச்சர்ஸ் சொன்ன மாதிரி, உனக்கு கற்பூர புத்திதான் போல”
முகம் சுருங்க, “கிண்டலா, ஏன் விருப்பமில்ல?” என்றான்.
“ஏன்னு தெரியல, இப்ப மேரேஜ் வேண்டாம்னு தோனுது”
“ஓ, அப்போ ரிஜெக்ஷன் மேரேஜ்குதான். எனக்கில்ல”
“ப்ச் ரெண்டும் ஒன்னுதான?”
“இல்ல… வேற வேற? ஓகே! இனி என்ன பேச இருக்கு” என்று ஏமாற்றத்துடன் சொல்லி எழுந்தான்.
“ஒரு நிமிஷம் உட்காரேன். கொஞ்சம் பேசனும்”
“என்ன பேசனும்?” என்று அமர்ந்தான்.
“ஒரு ஹெல்ப் வேனும்”
“என்ன ஹெல்ப்?”
“பேசிப் பார்த்ததுல இந்த பொண்ண பிடிக்கல. ஸோ இந்த ப்ரோபோஷல் வேண்டாம்னு உங்க வீட்ல சொல்ல முடியுமா?”
“உனக்கு வேண்டாம்னா நீதான் சொல்லனும்”
“எங்கப்பாகிட்ட சொல்லிப் பார்த்திட்டேன். சும்மா கல்யாணம் வேண்டாம்னு சொல்லி எல்லாரையும் ரிஜெக்ட் பண்ணாதனு திட்டத்தான் செய்றாங்க”
“திட்டு வாங்கிறது ஒன்னும் புதுசில்ல போல. என்னையும் ரிஜெக்ட் பண்ணி திட்டு வாங்கிக்க வேண்டியதுதான”
“புரியாம பேசாத. நீ பேசனும்னு சொன்னதாலதான் இந்த மீட்டிங்கே. இல்ல அப்பா நேர என்கேஜ்மென்ட்டே வச்சிருப்பாங்க. இந்த தடவை நான் என்ன சொன்னாலும் கேட்கவே மாட்டேன்னு சொல்லிட்டாங்க”
‘ச்சே பார்த்துப் பேச நினைச்சிருக்க கூடாது’ என்ற எண்ணம் வர, “காரணம் இல்லாம கல்யாணம் வேண்டாம்னு சொன்னா அப்படித்தான் சொல்லுவாங்க” என்று முனுமுனுத்தான்.
“ப்ளீஸ், உனக்குத்தான் என்னய பிடிச்சிருக்குல. பிடிச்சவங்களுக்காக இதுகூட செய்ய மாட்டியா?”
“என்ன லாஜிக் இது” என்று கேட்டுவிட்டு அமைதியானான். அவளும் அதன்பின் ஏதும் பேசவில்லை.
சற்றுநேரம் ஆகாஷ் யோசித்து, “ஒரு காஃபி சொல்லிக்கட்டுமா?” என்றான்.
“காஃபியா, எதுக்கு?” என்றாள் புரியாமல்.
“உனக்கு ஹெல்ப் பண்ண போறவனுக்காக… ஒரு காஃபி கூட வாங்கித் தர மாட்டியா?”
அவனையே யோசனையுடன் பார்த்தவளிடம் “சொல்லு மீரா… ஒரு காஃபி சொல்லிக்கட்டுமா?” என்று புன்னகையுடன் கேட்டான்.
அவன் உதவப் போகிறான் என்று புரிந்தது. இருந்தும் ஒருவித எரிச்சலுடன், “ம் சொல்லிக்கோ” என்றாள்.
**********************************
ஒரு வாரம் கடந்திருந்தது!
மீரா சொன்னபடி ஆகாஷ் சொல்லியதால், அவர்கள் திருமண பேச்சுகள் அந்தளவோடு முடிந்திருந்தது. இன்று… இப்போது, மீரா ஒரு காஃபி ஷாப்பில் அமர்ந்திருக்கிறாள். அன்றிருந்த எரிச்சலை விட அதிகளவு எரிச்சல் முகத்தில் இருந்தது. இமைக்கவும் மறந்து ஒரே இடத்தைப் பார்த்திருந்தாள்.
அக்கணம் அவள் முகம் முன் அசைக்கப்பட்ட கை கண்டு, இமைத்து நிமிர்ந்து பார்த்தாள். ஆகாஷ் நின்றிருந்தான். “என்னய ஞாபகம் இருக்கா?” என்றான்.
“அதலாம் இருக்கு”
“என்ன இங்க?” என்று அவளெதிரே அமர்ந்தான்.
“இன்னொரு காஃபி ஷாப்… இன்னொரு அலைன்ஸ்”
“இன்னும் அந்தப் பையன் வரலயா, என்னய மாதிரியே லேட்டா?”
“ப்ச், அப்பவே வந்துட்டான். மேரேஜ் வேண்டாம்னு சொன்னா புரிஞ்சிக்காம என்னை கன்வின்ஸ் பண்ண பேசறான், பேசறான்… வளவளனு பேசிக்கிட்டே இருக்கான், முடியல” என்றாள் சலிப்புடன்.
“எல்லாரும் என்னய மாதிரியே இருப்பாங்களா, சொல்லு?”
சட்டென அவனைப் பார்த்துவிட்டு இமை தாழ்த்திக் கொண்டாள்.
“இன்னைக்கும் நானே ஹெல்ப் பண்ணட்டுமா?” என்று கேட்டான்.
நிமிர்ந்து அவனைப் பார்த்து, “நீ… எப்படி?” என்றாள்.
“ஹெல்ப் வேணுமா? வேண்டாமா?”
“வேணும்”
“சரி அந்தப் பையன் எங்க?”
“ஃபோன் வந்திருக்குனு போயிருக்கான். வெயிட் பண்ணு, வருவான். பேரு சரண்” என்று சொன்ன சற்று நேரத்தில் சரண் வந்து, “யாரு இவரு?” என்றான் ஆகாஷைப் பார்த்து.
அதேநேரம், ‘இவன்தானா?’ என்று ஆகாஷ் மீராவிடம் கண்களால் கேட்க, ‘ஆம்’ என்று இமை மூடித் திறந்தாள். உடனே இருக்கையிலிருந்து எழுந்த ஆகாஷ், “உட்காருங்க ப்ரோ. கொஞ்சம் பேசனும்” என்று மீரா அருகே வந்தமர்ந்து கொண்டான்.
‘என்ன பேசப் போறான்’ என்று மீரா யோசிக்க, சரண் இவர்களுக்கு எதிரே அமர்ந்து, “என்ன பேசனும்?” என்றான்.
“நான் ஆகாஷ். ஒர்க் பண்றேன். ஆர்ஜேவாவும் இருக்கேன். ஆக்சுவலி நாங்க ரெண்டு பேரும் லவ் பண்றோம். இதுபத்தி உங்ககிட்ட சொல்லத்தான் வந்திருக்கேன்” என்றான் வெகு இலகுவாக.
‘என்ன இது, இப்படிச் சொல்ற!?’ என்று மீரா ஆகாஷைப் பார்த்தபோது, “இவ்ளோ நேரம் பேசினேன். மீரா இந்த மாதிரி எதும் சொல்லலயே” என்றான் சரண்.
“எப்படிச் சொல்றதுனு அவளுக்குத் தயக்கம். இல்லயா பேபி?” என்று இயல்பாக கேட்க, ‘என்னது பேபியா’ என்று மீரா விழி விரித்தாள். அதேநேரம், “இவர் சொல்றது உண்மையா” என்று சரண் கேட்க, மீரா ஒன்றும் சொல்லாமல் குனிந்து கொண்டாள்.
சரண் ஆகாஷைப் பார்க்கவும், “கொஞ்சம் ஷையா பீல் பண்றா… எப்படிச் சொல்லனு தயக்கம் வேற. அதான் என்னை வர சொல்லி உங்ககிட்ட சொல்ல சொன்னா” என்றான் ஆகாஷ்.
மீராவிற்குள், ‘எதுக்கு இவன் இவ்ளோ பேசறான்?’ என்ற கேள்வி இருந்தாலும், ஆகாஷ் பேசுவதை மறுக்காமல் இருந்து கொண்டாள்.
“பின்ன, இவங்க அப்பா எதுக்கு அலைன்ஸ் பார்க்கனும்?” – சரண்.
“நாங்க லவ் பண்றது அவருக்குத் தெரியாது” – ஆகாஷ்.
“அவர்கிட்ட சொல்ல வேண்டியதுதான?”
“இவளுக்கு அப்பானா கொஞ்சம் பயம்”
“அப்ப நீங்க சொல்லலாமே?”
“ம்ம், எனக்கும் பயந்தான்”
“என்கிட்ட சொன்ன மாதிரி சொல்லிடலாமே பாஸ்?”
“ம்ம் சொல்லிடலாம்”
“உங்க வீட்ல சொல்லிட்டீங்களா?”
“இன்னும் இல்ல”
“உங்க வீட்ல சொல்லி… மீரா அப்பாகிட்ட பேச சொல்லலாமே?”
இதற்கு ஆகாஷ் பதில் சொல்லும் முன், “அதெல்லாம் இருக்கட்டும். ஒரு ஹெல்ப் சரண். பேசிப் பார்த்ததுல பொண்ண பிடிக்கலை. ஸோ இந்த ப்ரோபோஷல் வேண்டாம்னு உங்க வீட்ல சொல்ல முடியுமா?” என்றாள் மீரா.
“என்கிட்ட சொன்ன அதே டயலாக்” என்று ஆகாஷ் முணுமுணுக்க, “சும்மா இரு” என்று குறைந்த குரலில் அதட்டிவிட்டு, “ப்ளீஸ் சரண்” என்றாள்.
அவர்களுக்குள் பேசிக் கொள்வதைப் பார்த்ததும், “டோன்ட் வொரி. நான் வீட்ல சொல்லிக்கிறேன்” என்று சரண் சிரிப்புடன் கூறி, “பை” என்று இருவருக்கும் பொதுவாக சொல்லிக் கிளம்பினான்.
ஆகாஷ், “நீ சொன்னது சரிதான் பேபி, எவ்ளோ கேள்வி கேட்கிறான்” என்றதும், “போதும் நீ பேபினு சொன்னது, அவன் எப்பவோ போயிட்டான்” என்று குரல் உயர்த்தினாள்.
“சாரி, ஒரு ஃபுளோல வந்திடுச்சு” என்றான் முறுவலுடன்.
“ப்ளோவா… முதல அந்தப் பக்கம் போய் உட்காரு” என்று கடுகடுத்தாள்.
“ஓகே கூல்” என்று எழுந்து சென்று அமர்ந்தவுடனே, “எதுக்கு லவ் பண்றோம்னு சொன்ன? இதெல்லாம் டூ மச்” என்று சிடுசிடுத்தாள்.
“விவரம் நீ, அவன் போனப்புறம் கோபப்படுற பார்த்தியா?”
“ப்ச்… இதனால எதாவது பிரச்சனை வந்திடுச்சினா?”
“அதலாம் வராது. வேறென்ன சொன்னாலும் அவன் உன்னை கன்வின்ஸ் பண்ண பார்ப்பான்னு தோனிச்சி, அதான் மீரா”
“என்னமோ போ, எனிவே தேங்க்ஸ்” என்று எழுந்தாள்.
“ஒரு நிமிஷம் உட்காரேன்” என்றான் கெஞ்சலாக.
“எதுக்கு?” என்று கேட்டாலும்… அமர்ந்தாள்.
மெல்லிய முறுவலுடன், “ஒரு காஃபி சொல்லிக்கட்டுமா?” என்று கேட்டான்.
கண்கள் சுருக்கி, “இன்னைக்கு எதுக்காக?” என்றாள்.
“திரும்பவும் ஹெல்ப் பண்ணிருக்கேன்… ஸோ!” என்றதும், முதல் முறை போல் அல்லாமல் ஒரு மென்னகையுடன், “ம்… சொல்லிக்கோ” என்றாள்.
**************************
அடுத்த நாள், பிரபல வானொலி நிலையம். அலைபரப்பு அறையில் இருந்த ஆகாஷிடம் வந்து ஒருவர், “உன்னைப் பார்க்க மீரானு ஒருத்தங்க ரிசெப்ஷன்ல வெய்ட் பண்றாங்க” என்று சொல்லிவிட்டுச் செல்ல, ‘இவ ஏன் இங்க வரனும்’ என்ற கேள்வியுடன் வரவேற்பறை வந்தான்.
ஆகாஷ் வரவும் சோஃபாவில் அமர்ந்திருந்த மீரா எழுந்து கொள்ள, “என்ன இங்க வந்திருக்க?” என்றான்.
“ஒரு ஹெல்ப் வேணும்”
“டெய்லி ஒரு அலைன்ஸ்னா, என்னால முடியாது. உங்க அப்பாவ கொஞ்சம் கேப் கொடுக்க சொல்லு” என்றான் பொய்யான பதற்றத்துடன்.
“என்னென்னு தெரியாம பேசாத! அந்த சரண் இருக்கான்ல… அவன் போய் அப்பாகிட்ட நீ சொன்னதை அப்படியே சொல்லிட்டான்”
“அச்சச்சோ?!” என்று மெய்யாகவே பதற்றப்பட்டான்.
“ஆமா அச்சச்சோதான்! இதுல அவன்… உங்களுக்கு பயம்ல, அதான் நானே சொல்லிட்டேன். லவ்வர்ஸ்கு என்னால முடிஞ்ச ஹெல்ப்னு வேற சொல்றான்”
“நாம லவ்வர்ஸா?” என்று ஆகாஷ் சிரிக்கவும், “சிரிக்காத! அப்பா உன்னைப் பார்த்துப் பேசனும்னு வெளிய நிக்கிறாங்க. வா போலாம்” என்றாள்.
“வர்றேன். பட் உன்கிட்ட என்ன கேட்டாருனு சொல்லு… ப்ரீபெர் ஆகிக்கிறேன்”
“அது… அது, அப்பா… அப்பா என்கிட்ட இதுபத்தி கேட்டாங்க. அந்தப் பையன் ஏன் அப்படி வந்து பேசினான்னு தெரியலைனு சொல்லிட்டேன்… சாரி” என்று தயங்கித் தயங்கிச் சொன்னாள்.
“இதுல அந்தப் பையங்கிறது நான்தான?” என்றான் கண்கள் சுருக்கி.
“ம்ம், வெரி சாரி”
“ஸோ நீ தப்பிச்சிட்டு, என்னை மாட்டிவிட்ருக்க”
“அதான் சாரி சொல்றேன்ல ஆகாஷ், ப்ளீஸ் வா” என்று அழைத்துச் சென்றாள். இவன் வருவதைப் பார்த்ததும் மர நிழலில் நின்ற மீராவின் அப்பா முன்னே வர, “ஹலோ சார்” என்றான் ஆகாஷ்.
“என்ன ஹலோ? ரெண்டு வீட்லயும் திருப்திங்கிறதாலதான மேற்கொண்டு பேசலாம்னு முடிவெடுத்தோம். அப்போ நீ என்ன சொன்ன, பொண்ணுகிட்ட பேசனும்னு சொன்ன… சொன்னியா?”
“ம்ம்”
“பேசிட்டு என்ன சொன்ன, இவளை பிடிக்கலனு சொல்லிட்ட, சொன்னியா?”
“ம்ம்”
“அப்ப நான் என்ன பண்ணுவேன். அடுத்த வரன் பார்க்க ஆரம்பிப்பேன். அந்த நேரம் வந்து பொண்ண பிடிக்கிது, லவ் பண்றேன்னு சொன்னா என்ன அர்த்தம்? மாத்தி மாத்தி பேசற… லூஸாயா நீ?!” என்றார் கோபமாக.
ஆகாஷ், ‘இதலாம் ரொம்ப ஓவர். நீதான் சொல்ல சொன்னனு சொல்லவா’ என்ற பொருளில் மீராவைப் பார்க்க, ‘சொல்லிடாத’ என்று கண்களால் கெஞ்சி, “ப்பா போதும்… போலாம்” என்று அவரை அழைத்துச் செல்ல பார்த்தாள்.
“மத்தவங்க முன்னாடி இப்படிப் பேசினா, நல்ல இருக்காதுனுதான்… தனியா கூப்பிட்டுப் பேசறேன். இன்னொரு தடவை இதுமாதிரி நடந்துகிட்ட வீட்ல, ஆபிஸ்ல வந்து எல்லார் முன்னாடியும் சத்தம் போடுவேன்” என்று எச்சரித்துக் கிளம்ப, ‘இரு வர்றேன்… போயிடாத’ என்று ஆகாஷுக்கு சைகை செய்துவிட்டு மீரா அவள் அப்பாவுடன் நடந்தாள்.
அப்பாவை ஆட்டோவில் அனுப்பிவிட்டு சில வினாடிகளில் வந்து நின்றவள், “சாரி, அப்பா இப்படிப் பேசுவாருனு நினைக்கல. சாரி” என்றாள்.
“நான் என்ன லூஸா?” என்றான் அடிக்குரலில் கத்தினான்.
“ச்சே ச்சே அப்படியில்ல. மாத்தி மாத்தி பேசறியா, அதான் அப்பாக்கு அப்படித் தெரியுது போல” என்று முறுவலை மறைத்துக் கொண்டு சொன்னாள்.
“என்ன நக்கலா?”
“இல்ல, உன் கோபம் குறையும் நினைச்சி சொன்னேன். வெரி சாரி”
சில நொடிகள் பேசாமல் நின்றவன், “ஒரு காஃபி சொல்லிக்கட்டுமா?” என்றான் அருகிலிருந்த சிறிய காஃபி கடையைப் பார்த்து.
“எதுக்கு, எனக்காக அப்பாகிட்ட திட்டு வாங்கினதுக்கா?”
வேறு பக்கம் பார்த்தபடி, “ப்ச் ஆமா அதுக்குத்தான்” என்று சிடுசிடுப்புடன் சொன்னான். தனக்காக திட்டு வாங்கி நிற்பவனை ஒரு ஈர்ப்புடன் பார்த்து, “ம், சொல்லிக்கோ” என்றாள் மீரா.
***************************
ஒரு வாரம் கடந்திருந்தது!
ஒரு வணிக வளாகத்தின் உணவகங்கள் இருக்கும் தளம்! சாப்பிட்டு முடித்து தண்ணீர் பாட்டில் வாங்கி வந்த மீரா கண்ணில் ஆகாஷ் விழ, விறுவிறுவென நடந்து வந்து, “ஹாய்” என்றாள்.
தொடுதிரையைப் பார்த்திருந்தவன் நிமிர்ந்து பார்க்க, “அன்னைக்கு இருந்த கோபம் போயிடிச்சா” என்று கேட்டதற்கு, “உட்காரு, அதலாம் போயிடுச்சி” என்றதும் அவனெதிரே அமர்ந்தாள்.
சிறு முறுவலுடன், “என்ன இங்க, வீக் எண்ட்ங்கிறதாலயா?” என்றாள்.
“வீட்ல அலைன்ஸ் பார்த்திருக்காங்க. ஸோ அந்தப் பொண்ண பார்த்து, பேச வந்திருக்கேன்”
முறுவல் மறைந்து, “ஓ” என்றவள் குரலில் பொறாமை ஒட்டியிருக்க, “எப்பவும் லேட்டாதான வருவ, இன்னைக்கு சீக்கிரமா வந்து வெயிட் பண்ற, என்ன எஃபர்ட் எடுத்து டிரஸ் பண்ணிக்கலயா?” என்றாள்.
“அப்படி பண்ணிட்டு வந்து எதும் ஒர்க் அவுட் ஆகலயே. அதான் இன்னைக்கு அப்படி எதும் இல்ல” என்று சோம்பேறித்தனமாக சொன்னவன், சட்டென, “ஹே எனக்கு ஒரு ஹெல்ப் பண்றியா?” என்றான் சுறுசுறுப்பான குரலில்.
“எப்பவும் நான்தான கேட்பேன். இன்னைக்கென்ன புதுசா நீ கேட்கிற?”
“ஹெல்ப் பண்ணுவியா… மாட்டியா?”
“என்ன ஹெல்ப்னு சொல்லு”
“ஏற்கனவே என்னைப் பத்தி உன்கிட்ட சொல்லிருக்கேன்ல, அத அப்படியே அந்தப் பொண்ணுகிட்ட சொல்றியா? திருப்பிச் சொல்ல போரடிக்கு” என்று அவள் சிறு பொறாமை உணர்ந்து, அவளை மேலும் வெறுப்பேற்றினான்.
“உனக்கு வேணும்னா நீதான் சொல்லனும்” என்றாள் வெடுக்கென்று.
“இப்படி நான் அன்னைக்கு சொல்லிருந்தா… என்னாயிருக்கும்னு யோசி”
‘என்னாயிருக்கும்? இந்நேரம் என்கேஜ்மென்ட் நடந்திருக்கும்’ என்ற எண்ணம் வந்தாலும், “ஓகே! சொல்லிட்டா போச்சு, அவங்க வரட்டும்” என்று மீரா சொன்ன சற்று நேரத்தில் ஒரு பெண் வர, “உட்காருங்க கல்யாணி” என்றான் ஆகாஷ்.
“இவங்க?” என்று அந்தப் பெண் கல்யாணி மீராவைப் பார்த்துக் கேட்க, “ம், தெரிஞ்சவங்கதான். உட்காருங்க” என்ற பின்னும் சந்தேக பார்வையுடன் கல்யாணி நிற்க, “உட்காருங்க சிஸ்டர்! ஆகாஷ் பத்தி சொல்லத்தான், நான் இங்க இருக்கேன்” என்றாள் மீரா.
“இவரைப் பத்தி நீங்க என்ன சொல்லனும்?” என்றாள் கல்யாணி.
“இவன் ரொம்ப நல்ல பையன். நல்லா படிப்பான். கிளாஸ் டாப்பர். கோல்ட் மெடலிஸ்ட். டீச்சர்ஸோட ஃபேவரைட் ஸ்டுடென்ட்னு சொல்லனும்” என்றவள், “இது எல்லாத்த விட இன்னொன்னு, ஒருத்தங்கள பிடிச்சதுனா எந்த எக்ஸ்ட்ரீம் போயும் ஹெல்ப் பண்ணுவான்.
என்னைப் பிடிக்குமா, அதனால எனக்காக எங்க அப்பாகிட்ட திட்டு வாங்கியிக்கான். எனக்கு மேரேஜ்ல இன்ட்ரெஸ்ட் இல்லயா, ஸோ எனக்கு வந்த அலைன்ஸ நாங்க லவ் பண்றோம்னு சொல்லி…” என்று மீரா சொல்லிக் கொண்டே போனாள்… “போதும்” என்று கல்யாணி சொல்லும் வரை.
“என்னய பார்த்தா எப்படித் தெரியுது? ரெண்டு பேரும் லவ் பண்றீங்களா? அத இப்படிச் சொல்றீங்களா?” என்று கடகடவென பேசி, “ப்ச் நீங்க லவ் பண்ணா எனக்கென்ன?” என்றவள், “ஆனா இத நீங்க முன்னாடியே சொல்லிருக்கலாம். இப்படிப் பண்றது சரியில்ல” என்று ஆகாஷைப் பார்த்துக் கோபமாகச் சொல்லிச் சென்றுவிட்டாள்.
“ஹலோ நில்லுங்க” என்று இருமுறை ஆகாஷ் சொன்னதைக் கூட கல்யாணி கேட்கவில்லை. விறுவிறுவென போய்விட்டாள். உடனே ஆகாஷ், “ஏன் இப்படிச் சொன்ன?” என்று மீராவிடம் கேட்டான்.
“நீ செஞ்சதைச் சொன்னேன். அதுவும் நீ சொல்லச் சொன்ன, சொன்னேன்”
“இத அந்தப் பொண்ணு எங்க வீட்ல சொல்லும். அவங்க வந்து உன்னை திட்டப் போறாங்க”
“பரவாயில்ல, உனக்காக திட்டு வாங்கிக்கிறேன்”
‘எனக்காக திட்டு வாங்கிக்கிறியா?’ என்ற பார்வை பார்த்துவிட்டு, ஒன்றும் சொல்லாமல் இருந்து கொண்டான். சற்றுநேரத்திற்கு அவனை அப்படியே விட்டுவிட்டு, “ஆகாஷ், நீ எனக்கொரு ஹெல்ப் பண்ணனும்” என்றாள்.
“அதானா என்னடா இன்னும் கேட்கலயேனு நினைச்சேன்” என்றான் கேலியாக.
“சீரியஸா கேட்கிறேன் ஆகாஷ், நமக்காக நம்ம வீட்ல பேசறியா?” என்றாள் படபடவென.
“நமக்காகனா?” என்று தெரியாதது போல் கேட்டான்.
“நமக்காகனா, நமக்காகனா… நம்மளோட மேரேஜ்காக” என்று அமைதியான குரலில் சொன்னாள்.
“அன்னைக்கு மேரேஜ் வேண்டாம்னு சொன்ன?!”
“சொன்னேன். பட் உன்னய வேண்டாம்னு என்னால சொல்ல முடியல” என்று மெல்லிய குரலில் சொல்லி முடித்தாள்
“குழப்பறியே, ரெண்டும் ஒன்னுதான?”
“வேற வேறன்னு அன்னைக்கு நீதான சொன்ன” என்றாள் பட்டென்று.
“சொன்னேன். ஆனா நீ தெளிவே இல்லாம மாத்தி மாத்தி பேசறியே?! உங்க அப்பா மாதிரி கேட்கனும்னா… லூசாமா நீ?”
முகமெங்கும் எரிச்சலுடன், “வேணும்னே பேசற. என்கூடதான் லைஃப்னு கனவோடு இருக்கிறதா சொல்லிட்டு, வேற பொண்ண பார்க்க வந்திருக்க. நீதான் தெளிவில்லாம இருக்க” என்று வேறுபுறம் திரும்பிக் கொண்டாள்.
சற்றுநேரம் அவளுடைய சிறு கோபத்தை ரசித்தவன், “மீரா… ஒரு காஃபி சொல்லிக்கட்டுமா?” என்று கேட்டான்.
“எதுக்கு… உனக்கு வந்த அலைன்ஸ தட்டி விட்டதுக்கா?”
“இல்ல. நமக்காக நம்ம வீட்ல பேசனுமே, அதுக்கு” என்றதும், முகம் மலர்ந்த புன்னகையுடன் அவனைப் பார்த்தாள்.
“சொல்லு மீரா… ஒரு காஃபி சொல்லிக்கட்டுமா?” என்று சிரிப்போடு கேட்க, “ம்ம் சொல்லிக்கோ” என்றாள் அதே போன்ற ஒரு சிரிப்புடன்!