Kathambari Novels
அத்தியாயம் – 9
திலீப் அப்படிச் சொன்னதும்… கீர்த்தி நிமிர்ந்து அவனைப் பார்க்க, “அந்த அனிவெர்சரி பார்ட்டிக்கு போக வேண்டாம்” என்றான் மீண்டும்.
“கிளைன்ட் அவங்க செலிப்ரேஷனுக்கு என்னய இன்வைட் பண்ணறது… நான் அத அட்டென் பண்றது… இதுக்கு முன்னாடியும் நடந்திருக்கே திலீப்”
“ஆனா அது வேற… இது வேற. நான் ஏன் வேண்டாம்னு சொல்றேனு உனக்கும் தெரியும்” என்றான். அவள் பேசாமல் இருக்க, “என்ன யோசிக்க” என்று அவன் கேட்க, “இன்வைட் பண்ணிருக்காங்க, எப்படிப் போகாம இருக்கிறது, அதான் யோசிக்கிறேன்” என்றாள்.
“நீ யோசிக்கவே வேண்டாம். ஏற்கனவே ரெண்டு தடவை உன்னய பார்த்தப்ப அந்த ரவி ஒழுங்கா பேசல. அப்படிப்பட்டவன் அனிவெர்சரிக்கு போகணுமா? அங்க வச்சும் அவன் எதும் சொன்னா? அதான் வேண்டாம்னு சொல்றேன்”
முகம் யோசனையாக மாற… சாப்பிடுவதை நிறுத்திவிட்டு, “மது, டேவிட்காக பார்க்கிறேன் திலீப். அதான் போக நினைக்கிறேன். அவங்கதான் என்னை இன்வைட் பண்ணாங்க” என்றாள்.
“அப்ப அந்த ரவிங்கிறவன் உன்னய இன்வைட் பண்ணல?! பேசாம உனக்கும் அவனுக்கும் இருக்கிற டேர்ம்ஸ் பத்தி… அவங்ககிட்ட சொல்லி வர முடியாதுனு சொல்லிட வேண்டியதுதான”
“டேவிட்க்கு செஷன் போய்க்கிட்டு இருக்கு. இப்ப போய் இத சொல்லிக்கிட்டு இருக்கிறது சரி கிடையாது, அதனால தெரபி டிஸ்டர்ப் ஆகும்”
“சரி, அத புரிஞ்சிக்க முடியுது” என்றவன், “ஆனா ரவி இன்வைட் பண்ணலை. இதுலருந்தே தெரியலயா, அவனுக்கு இதுல விருப்பம் இல்லைனு” என்றான்.
“எனக்கும் புரியுது. ஆனா…”
“என்ன ஆனா… அவன் பேசினது எல்லாம் மறந்திட்டியா?”
“மறக்கல!! சாரி கேட்டப்புறமும் மார்க்கெட்ல அவன் பேசினது… அவன்மேல இருக்க கோபத்தை தெரபில காட்டுவேனானு கேட்டு என் வேலைய இன்சல்ட் பண்ணது… இதலாம் விட ஜட்ஜ்மென்ட்லா அவன் பேசின விதம்…. எதையும் மறக்கலை! இன்னும் அந்த கோபம் இருக்கு!”
“அப்புறமென்ன கீர்த்தி”
“சொல்றேன்ல… மது, டேவிட்காக பார்க்கிறேன்னு”
“யாரு அவங்க உனக்கு? இப்போதான பழக்கம். அவங்களுக்காகப் போய் ரவி எதும் பேசினா, அதான் சொல்றேன் இதெல்லாம் வேண்டாம்”
“விடு திலீப்… இதுபத்தி அப்புறமா யோசிக்கலாம். வாங்கினதை அப்படியே வச்சிருக்க. சாப்பிடு” என்றவள், “இன்னைக்கு இந்த ஸ்குய்ட் இங் [Squid Ink] பாஸ்தா நல்லாருக்கு. டேஸ்ட் பண்ணிப் பாரு” என்றாள்.
அதன்பின்னும் சாப்பிடாமல், “யோசிச்சி முடிவெடுக்க இதுல ஒன்னுமே இல்ல கீர்த்தி” என்றே சொன்னான். பின் சற்று யோசித்துவிட்டு, “அப்படியே உனக்கு போனும்னா, நானும் உன்கூட வர்றேன்” என்றான்.
அவளுக்காகப் பார்க்கிறான், யோசிக்கிறான் என்று கீர்த்திக்குப் புரிந்தது. அதனால், “ம்ம் சரி, நீ சொல்ற மாதிரியே செய்யலாம். இப்ப சாப்பிடு” என்று கீர்த்தி ஒத்துக் கொண்ட பின்தான்… திலீப் சாப்பிடவே ஆரம்பித்தான்!
***************************************
ரீசோல் யுவர் லைஃப், சான் மார்க்கோ!
நான்கு நாட்கள் கழித்து! ஆலோசனைக்காக டேவிட் வந்திருந்தான். கீர்த்தி இருக்கையில் அமர்ந்திருக்க, மேசை பக்கவாட்டிலிருந்த முக்காலியில் அவன் அமர்ந்திருந்தான். ஆலோசனை நேரம் அப்போதே துவங்கி, கால் மணிநேரம் முடிந்திருந்தது.
டேவிட் ஏதோ பேசிவிட்டு சிறு இடைவெளி விட, “ஓகே, இத சொல்லுங்க. உங்க லைஃப்ல அப்பாவ ஃஹானர் [honor] பண்ற மாதிரி எதுவும் இருக்கா?” என்று கீர்த்தி கேட்டாள்.
அவன் யோசிக்கவும், “ஓகே நீங்க ஒன்னு பண்ணி அதுக்காக உங்க அப்பா சந்தோசப்படற மாதிரி, இப்படி எதும்” என்று அவள் எடுத்துக் கொடுக்க, “நான் எக்ஸ்ப்ரஸ்ஸோ மஷின் முன்ன வேலை பார்க்கிறது அப்பாக்கு பிடிக்கும். அத நிறைய வீடியோ எடுப்பாங்க” என்றான்.
“எக்ஸ்ப்ரஸ்ஸோ மஷின்?”
“காஃபி மேக்கர்”
“இல்ல, அது தெரியும். க்ளாஸ் ஃபேக்டரினு சொன்னீங்கள”
“அது அப்பா பிசினஸ். நான் கேஃபே ரன் பண்ணிக்கிட்டு இருக்கேன். அன்ட் நான்தான் அதுல பெரிஷ்டா [Barista]. ஐ ரியலி லைக் மை ஜாப்”
“லாட்டே ஆர்ட் பண்ணுவீங்களா?”
“ம்ம்”
“ஓஹ் கிரேட்” என்றவள், “அப்பாக்கு சந்தோஷம்னு சொல்றீங்க. உங்களுக்கும் அதான் பிடிக்கும்னு சொல்றீங்க. அப்புறம் ஏன் அந்த வேலையைப் பார்க்காம இருக்கீங்க?” என்றாள்.
அமைதியாக இருந்தான்!
“நீங்க உங்க அப்பாவ நினைச்சி பீல் பண்றீங்கனு புரியுது. அதுக்காக இப்படி இருக்க வேண்டாமே. முதல நீங்க இதுமாதிரி இருக்கிறத உங்க அப்பா விரும்புவாரா சொல்லுங்க?”
“பீல் பண்ண கூடாதுனு சொல்றீங்களா?”
“பீல் பண்ணலாம். ஆனா உங்களுக்காகவும் கொஞ்சம் டைம் ஒதுக்கணும். உங்களைச் சுத்தி உள்ளவங்களைப் பத்தியும் யோசிக்க வேண்டாமா?”
பதில் சொல்லாமல் இருந்தான்.
“உங்க கவனம் மொத்தமும் அப்பாவோட இழப்புங்கிறதலயே இல்லாம, மத்த விஷயத்திலயும் இருக்க மாதிரி பார்த்துக்கோங்க. கேஃபே ஓபன் பண்ண பாருங்க, கொஞ்ச நேரம் கவலையை மறந்து ஃப்ரண்ட்ஸ் கூட பேச ட்ரை பண்ணுங்க. வெளிய போங்க. இதுக்கிடையில அப்பாவ நினைச்சி கஷ்டமா இருந்தா… அழுதுக்கலாம். புரியுதா டேவிட்”
“மூளைக்குப் புரியுது. பட் இது எமோஷன்… மனசுக்குப் புரிய மாட்டிக்குது”
“பிரைன்லதான் எமோஷனும் இருக்கு… லிம்பிக் சிஸ்டம்”
அவன் அமைதியாக இருந்தான்.
“ஓகே டேவிட், இதுபத்தி அடுத்த செஷன்ல பேசலாம். நெக்ஸ்ட் ஆக்ட்டிவிட்டி என்னென்னு சொல்லிடறேன்” என்று அதுபற்றி விவரித்துவிட்டு, “நைட் ஸ்லீப் எப்படி இருக்கு?” என்று கேட்டாள்.
“முன்ன மாதிரி இல்லை… இட்ஸ் கெட்டிங் ஓகே நவ்”
“குட்… வேற எதும் சொல்லனுமா?”
இல்லை என்று அவன் தலையசைக்க, “ஓகே, நெக்ஸ்ட் செஷன்ல பார்க்கலாம் டேவிட்” என்று முடித்து கட்டணத்தைச் சொல்லிவிட்டு, மேசை இழுப்பறையில் ஏதோ பார்க்க ஆரம்பித்தாள்.
எழுந்து நின்ற டேவிட்… சில நொடிகளுக்குப் பின், “கீர்த்தி” என்ற அழைக்க, “ம்ன்?” என்று நிமிர்ந்து அவனைப் பார்த்தாள்.
சிறு பதற்றத்தோடு, “சாரி, வாலெட் எடுத்திட்டு வரல போல… ஃப்ரண்ட்ஸ்க்கு ஃபோன் பண்ணி மனி எடுத்திட்டு வரச் சொல்லவா?” என்று கேட்டான்.
“ஈஸி டேவிட், நெக்ஸ்ட் டைம் பார்த்துக்கலாம்” என்று சொல்லிவிட்டு மீண்டும் இழுப்பறையில் எதையோ தேட, “கீர்த்தி” என்று திரும்பவும் அவன் அழைக்க அழைக்க, ‘என்ன?’ என்பது போல் அவள் நிமிர்ந்து பார்க்கவும், “பார்ட்டிக்கு வர்றீங்கள?” என்று கேட்டான்.
“ம்ம் வர்றேன்” என்று சொல்லிவிட்டு அவள் இருக்க… சில நொடிகள் அவளைப் பார்த்தபடி நின்றவன், “கிளம்பறேன், பை கீர்த்தி” என்று நிதானமாக கூற, ஓரிரு நொடிகள் தாமதித்து… பின், “ம் ம், பை” என்று சொல்ல, அவன் கிளம்பிச் சென்றான்!
சட்டென்று அந்தக் கணத்தில் ‘ம்ம் ஏனிந்த நிதானம் அவனிடம்… எதற்கிந்த தாமதம் அவளிடம்?’ என்ற கேள்வி வெனிஸ் நகரத்திற்கு வந்தது!!
******************************
திலீப் வீடு, தோர்ஸோதுரோ செஸ்டேரி பகுதி!
ஒரு நாள் கழித்து!
வீட்டுத் தோட்டத்தில் ஓய்வு எடுப்பதற்காகவே கட்டப்பட்ட ஒரு கண்ணாடி அறை! அதாவது ‘சன் ரூம்’! அங்கே சூரியக் கதிர்களும், வான் வெளிச்சமும் பரவியிருந்தன! பல்வேறு வகையான தொட்டிச் செடிகள் நிறைந்து இருந்தன! அமர்ந்து இளைப்பாற மூங்கில் நாற்காலிகள் கிடந்தன!
இங்கேதான் ராதிகா, சுரேஷ் இருந்தனர். இஷாவும், பாலுவும் கூட இருந்தனர். இங்கே வசிக்கும் இஷா உறவினர்களுடன் சுற்றுலா செல்ல பாலு ஏற்பாடு செய்திருக்கிறான். அம்மா, அப்பாவையும் தன்னுடன் கூட்டிச் செல்கிறான். எல்லா உறவுகளும் இங்கே கூடி, இங்கிருந்து பயணத்தைத் தொடங்க திட்டமிட்டிருக்கிறான்.
அதனாலே இன்று பாலு, இஷாவின் வருகை இங்கே!
ராதிகா குணத்தைப் போலவே பாலு, இஷா குணம்! அவர்களுக்குள் நன்றாக ஒத்துப்போகும். அதனாலே சுற்றுலா பற்றி பாலு, இஷா சொன்னதும் ராதிகா ஒத்துக்கொண்டார். பாலு அலைபேசியில் பேசிக் கொண்டிருக்க, மாமியாரும் மருமகளும் அவர்களுக்குள் பேசியிருந்தனர்.
பொதுவாகப் பேசியிருந்தவர்கள் பேச்சு, திலீப்பைப் பற்றியதாக மாறியது.
ராதிகா, “பொண்ணு வீட்ல பிடிச்சிருக்குனு சொல்லித் திரும்பக் கேட்கிறாங்க. இவன்தான் வேண்டாங்கிறான்” என்றதும், “திலீப்கிட்ட ஏன்னு கேட்டீங்களா ஆண்ட்டி?” என்றாள் இஷா.
“கேட்டா ஒன்னும் சொல்ல மாட்டிக்கிறான்”
“லவ் எதும் பண்றானா … அதான் இப்படியா” என்று கேட்க, அதுவரை அவர்கள் பேச்சைக் கேட்டபடி பூச்செடிகளைப் பார்த்திருந்த சுரேஷ், “அப்படி எதும்னா என் பையன் என்கிட்ட சொல்லிருப்பான்” என்றார் இஷாவைப் பார்த்து.
அவள், “அப்படியில்ல அங்கிள்… இந்த விஷயத்தை உங்ககிட்ட சொல்றதுக்குத் தயக்கமா இருக்கலாம்ல” என்று சொல்ல, “எந்த விஷயமானாலும், என்கிட்ட சொல்றதுக்கு திலீப் தயங்க மாட்டான்” என்றார் சுரேஷ்.
உடனே இஷா ராதிகாவிடம், “ஆண்ட்டி நீங்க திலீப் ஃப்ரண்ட்கிட்ட கேட்டுப் பார்த்தீங்களா?” என்று கேட்கவும், “அந்த கீர்த்திகிட்ட போய் என்னய கேட்க சொல்றீயா” என்றார் பட்டென்று.
பின், “எப்ப பார்த்தாலும் அவளைக் கவனிக்கனும், அவளைப் பார்த்துக்கனும், இதேதான் நினைச்சிக்கிட்டு இருக்கான். இப்பகூட ட்ரிப் பத்தி சொன்னதுக்கு, கீர்த்திய பார்ட்டிக்கு கூட்டிட்டுப் போறதா சொல்லிருக்கேன், வர முடியாதுனு சொன்னான்.
உன் அங்கிள் பேசினப்புறம்தான் சரினு சொன்னான். ஏன்தான் இவன் இப்படி இருக்கானோ?! அவ பொறுப்பை நீ எடுக்காதடானு அவ்ளோ அவனை சத்தம் போடறேன். கேட்கத்தான் மாட்டிக்கிறான்” என்று புலம்பினார்.
“ஃப்ரண்ட்ஷிப் ஸ்டார்ட் பண்றப்பவே நீங்க விட்ருக்க கூடாது ஆண்ட்டி, இப்ப சொல்லி என்ன செய்ய முடியும்”
“அப்ப இப்படியாகும்னு தெரியாதே. தெரிஞ்சிருந்தா விட்ருக்கவே மாட்டேன். இப்படி என் பையன் என்கூட சண்டை போடறது எவ்ளோ கஷ்டமா இருக்கு தெரியுமா, அவன் என்கூட நல்லா பேசியே ரொம்ப வருஷமாச்சு” என்று வருந்தினார்.
கீர்த்தியை வைத்து மகனுக்கும், மனைவிக்கும் இடையே வரும் சண்டைகள், வாக்குவாதங்கள், சுரேஷிற்குப் பெரிய சங்கடம் என்றாலும், “நீ அவன்கிட்ட பேசற விஷயம் அவனைக் கோபப்படுத்துது ராதிகா, அதான் அவன் அப்படி நடத்துக்கிறான்” என்று மகனுக்காகவே பேசினார்.
“என்ன பேசறேன்… அவனை அவன் லைஃப பார்க்க சொல்றது தப்பா” என்று ராதிகா கேட்க, சுரேஷ் அமைதியாக நின்றார்.
இஷாதான், “ஆண்ட்டி சொல்றது தப்பில்லயே, மேரேஜ் பத்தி திலீப் யோசிக்க மாட்டிக்கிறான்னு ஆண்டிக்கு கவலை என்றவள், “அட்லீஸ்ட் பிஸினஸாவது ஒழுங்கா பார்க்கிறானா இல்லயா ஆண்ட்டி” என்று கேட்க… உடனே சுரேஷ், “அதலாம் பிசினஸ் நல்லாவே பார்க்கிறான்” என்றார் அழுத்தமாக.
இஷா, “மூனு வருஷமா சின்ன லெவல்லயே ரன் பண்ணிட்டு இருக்கானேனு, அவனுக்காக யோசிச்சிதான் கேட்டேன் அங்கிள்” என்றாள்.
“எக்ஸ்பேன்ட் பண்ண ஏதாவது பிளான் வச்சிருப்பான்” என்று சுரேஷ் சற்று எரிச்சலான குரலில் சொல்ல… “அவ சாதாரணமாதான் கேட்டா, நீங்க ஏன் இப்படிப் பேசறீங்க” என்று ராதிகா பேச, “இப்போ நீ ஏன் திலீப்பை பத்தி கம்பளைண்ட் பண்ணிக்கிட்டு இருக்கிற” என்றார் சுரேஷ் சற்று கோபமாக.
பாலு, “ப்பா… அம்மா புலம்பறாங்க, கம்பளைண்ட் இல்ல” என்று அம்மாவிற்கு ஆதரவாக பேச, “உன் அம்மா புலம்பற அளவுக்கு ஒன்னும் திலீப் இல்ல, முதல அத நீ புரிஞ்சிக்கோ” என்றார் சுரேஷ் கோபம் அதிகரித்த குரலில்.
அவ்வளவுதான் அதன்பின் இஷா, பாலு, ராதிகா எதுவும் பேசவில்லை.
சுரேஷ் முன்னால் திலீப்பைப் பற்றி யாரும் ஒரு வார்த்தை சொல்ல முடியாது. சொன்னால், அவர் கோபத்திற்கு ஆளாக நேரிடும். சுற்றுலா போகும் இந்தத் தருணத்தில், திலீப் பற்றிப் ஏதும் பேசி… அவரைக் கோபப்படுத்தி, தாங்களும் அவரிடம் பேச்சு வாங்கி… எதற்கு என்று விட்டுவிட்டனர்.
சுரேஷும் பேசவில்லை!
அவருக்குத் தெரியும்; திலீப்மீது இவர்களுக்கு அன்பு, அக்கறை இருக்கிறது என்று; அவனுக்காக யோசித்துதான் பேசுகிறார்கள் என்று. ஆனாலும் திலீப் நட்பிற்கு முக்கியத்துவம் கொடுத்து… தன் வாழ்க்கையை, தன் தொழிலை யோசிக்கவில்லை என்று இவர்கள் சொல்வதை அவரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதுதான் கோபம் அவருக்கு!
சில நொடிகள் அமைதியாக இருந்த அந்த இடத்தில், “இவ எதுக்கு இங்க வந்து நிக்கிறா” என்று ராதிகாவின் குரல் எரிச்சலாக ஒலிக்க, அவருடைய பார்வை நிலைத்திருந்த வீட்டின் முன்பக்கத்தை இஷாவும் பாலுவும் பார்த்தனர்.
அங்கே கீர்த்தி நின்றுகொண்டிருந்தாள்!
வந்திருப்பது யாரென்று சுரேஷ் பார்க்க நினைத்த கணத்தில்… இஷா, “கீர்த்தி எதுக்கு வந்திருக்கா ஆண்ட்டி” என்று கேட்கவும், திரும்ப நினைத்த சுரேஷ் திரும்பாமல் தொட்டிச் செடிகளைப் பார்த்திருந்தார்.
இஷாவிடம் ராதிகா, “ப்ச் என்னென்னு பார்க்கிறேன்” என்று சொல்லிவிட்டு, விருட்டென எழுந்து வேகமாக நடந்து வந்து… கீர்த்தி முன் நின்று, “ஏய்! ஏன் இங்க வந்த?” என்றார் விறைப்பாக.
“திலீப் வர சொன்னான் மேம்” என்றாள் மெல்லிய குரலில்.
கீர்த்தி… ஆலோசனை தரும் நேரத்தில் கவனமாக, பொறுமையாக பேசுவாள். மற்ற நேரங்களில் எதிரில் இருப்பவர் எப்படிப் பேசுகிறாரோ… அதற்கேற்றபடி இடம், பொருள் பார்த்துப் பேசிக் கொள்வாள்!
ஆனால் ராதிகாவிடம் இப்படித்தான் பேசுவாள்! உண்மையில் அவருடன் பேச அவளுக்குப் பிடிக்கவே பிடிக்காது! அவர் பேசுவதும் சுத்தமாகப் பிடிக்காது! அவளை அவமானப் படுத்தும்படியே பேசுவார்… அதனால்!!
ஆனால் ராதிகா அவளைக் கோபப்படுத்தி பேச வைப்பார்! அப்போதுதானே அவர் பேசி… அவளை வருந்தச் செய்ய முடியுமென்று!!
இதோ இப்போதுகூட, “நாங்க ஒரு ட்ரிப் போறோம். இப்ப இஷா ரிலேட்டிவ்ஸ் வந்திடுவாங்க. உன்னய யாருனு கேட்டா இங்க வேலை பார்த்த லேடியோட பொண்ணுனு நான் சொல்லிடுவேன். ஆனா திலீப் வந்தா உன்னய ஃப்ரண்ட்னு சொல்லுவான். எங்களுத்தான் அசிங்கம்” என்று ஆரம்பித்தார்.
‘இதிலென்ன அசிங்கப்பட இருக்கு… நானும் மனுஷிதான?’ என்று முணுக்கென கோபம் வந்ததாலும், “திலீப்தான் வர சொன்னான்” என்றாள் மெதுவாக.
“சொல்றது புரியலயா உனக்கு! எங்க ஸ்டேட்டஸ் என்ன… உன் ஸ்டேட்டஸ் என்ன? திலீப் பேர சொல்லிக்கிட்டு இப்படி வீட்டுக்கு வந்து நிக்க கூடாதுனு உன்கிட்ட சொல்லிருக்கேன்ல” என்றார் கடுமையாக.
படிப்பு இருக்கிறது. நல்ல வேலை இருக்கிறது. சொந்தக் காலில் நிற்கும் திறன் இருக்கிறது. எனினும் பொருளாதாரத்தை வைத்துதான் உன் தகுதியை முடிவு செய்வேன் என்ற ராதிகாவின் எண்ணம், கீர்த்திக்குப் பிடிக்கவே பிடிக்காது. அதனால் அமைதியாக நின்று கொண்டாள்!
“இன்னும் அதே பொந்து மாதிரி வீட்லதான இருக்கியா” என்று இளக்காரமான குரலில் கேட்டு அவளைப் பேச தூண்ட, ‘அதுல உங்களுக்கென்ன பிரச்சனை’ என்று கேட்க கீர்த்திக்கு நாக்கு துடித்தது. இருந்தாலும் பேசாமல் நின்றாள்.
அதன்பின்னும் ராதிகா, “நல்லவேளை உன் அம்மா செத்ததும் இங்கிருந்து போயிட்ட. எங்க… இந்த வீட்லயே ஒட்டிக்கிட்டு இருந்திடுவியோன்னு ரொம்ப பயந்தேன்” என்றார் முகத்தை அருவருப்பாக வைத்தபடி.
அதன்பின் கீர்த்தியால் பேசாமல் இருக்க இயலவில்லை. “சத்தியமா அப்படி இருந்திருக்க மாட்டேன்” என்றவள், “வேலை கிடைச்சதும் இங்கிருந்து என் அம்மாவையும் வெளிய கூட்டிட்டுப் போகத்தான் யோசிச்சிருந்தேன்” என்றாள் அழுத்தமாக.
“அப்படியே அவ வந்திட்டாலும்” என்று குத்தலாகச் சொல்ல, “இல்லாதவங்கள பத்தி ஏன் பேசறீங்க, என் அம்மாவ பத்தி நீங்க எதுவும் பேசக் கூடாது” என்று ஆட்காட்டி விரல் நீட்டி எச்சரிப்பது போல் சொன்னாள்.
அவள் பேச்சால், ‘உன் நிலை என்ன, என் நிலை என்ன? நீ என்னை எதிர்த்து பேசுவியா? அந்தஸ்து, ஆஸ்தி என எதுவும் இல்லாத ஒருத்தி எப்படி என்னைப் பேசலாம்?!’ என்ற கோபம் அவருக்குள் மூண்டது. சொல்லப்போனால், இதற்கு முன்னும் ஒருமுறை அவரை எதிர்த்து அவள் கேள்வி கேட்ட காட்டத்தைத்தான் இன்றளவும் அவளிடம் ராதிகா கொட்டிக் கொண்டிருக்கிறார்.
இதோ இப்போதும், “சரி, தேவி பத்தி பேசல. என்கிட்ட வாங்கின கடனை எப்ப அடைச்சி முடிக்க போற, அத பத்தி பேசலமா” என்றார்.
‘அதென்ன கடனா?’ என்று கேட்கத் தோன்றினாலும், அமைதியாக நின்றாள். “என்ன ஒன்னுமே பேச மாட்டிக்கிற, சும்மா பேசேன்” என்று ராதிகா விடாமல் சொல்ல, “வேண்டாம், அதுபத்தி நான் பேசி, அதுக்குத் திருப்பி நீங்க பேசறத கேட்கிற சக்தி எனக்கில்ல” என்றாள் வேதனை வெளிப்படும் குரலில்.
தன் பேச்சு அவளுக்கு வலி தருகிறது என்ற திருப்தியில் ராதிகா, “திருப்பி கொடுக்கிற எண்ணம் இருக்கா, இல்லனா…” என்று வாக்கியத்தை முடிக்காமல், பாதியிலே நிறுத்தி அவளுக்கு இன்னும் வலியைத் தர பார்த்தார்.
என்ன வார்த்தை சொல்ல வந்தார் என்று கீரத்துக்குத் தெரியும்! ஏற்கனவே அவர் அதைச் சொல்லியிருக்கிறார்! அது அவளைக் காயப்படுத்தும்! அவர் மட்டுமல்ல, யார் அதைச் சொன்னாலும்… என்றுமே அது அவளைக் காயப்படுத்தும்! மனதை ரணமாக்கும்!!
இன்று ராதிகா சொல்லாவிட்டாலும்… காயத்தின் சுவடுகளால், “தி… திருப்பிக் கொடுத்திட்டுதான இருக்கேன்” என்றாள் கீர்த்தி சிறு தடுமாற்றத்துடன்.
“நீ கொடுக்கிறியா, இல்ல திலீப் கொடுக்கிறானா?” என்றார் அதற்கும்.
“திலீப் கொடுத்தா மொத்தமா கொடுத்திருக்க மாட்டானா?”
“நம்பிட்டேன்” என்றவர், “சரி சரி வந்தது வந்திட்ட, நிறைய பேர் வர்றாங்க. வா வந்து எல்லாருக்கும் காஃபி போடு” என்றார்.
அப்படியொரு கோபம் கீர்த்திக்கு! அதை முகத்தில் காட்டவும் செய்தாள்!!
“இந்த வேலைதான இங்க உன் அம்மா பார்த்துக்கிட்டு இருந்தா, அத செய்யச் சொன்னா எதுக்கு இப்படிப் பார்க்கிற?” என்றார் நக்கலாக!
“என் அம்மா அந்த வேலைதான் பார்த்தாங்க. இல்லைனு சொல்லல. இப்பவும் அந்த வேலையை நான் மட்டமா நினைக்கல. ஆனா அதுக்காகலாம் நீங்க சொல்றதைச் செய்ய முடியாது. இனி இப்படிப் பேசாதீங்க”
“சரி பேசல. நீ என்கிட்ட பேச்சு கேட்க வேண்டாம். வாங்கின பணத்தையும் கொடுக்க வேண்டாம். பேசாம இந்தியா போயிடு”
“அங்க எனக்கு என்ன தெரியும்… யார் இருக்கா?”
“உன் மாமா இருக்காரு… உன் அம்மாவோட தங்கச்சி இருக்கிறா. எல்லாரும் பெரிய குடும்பமா இருக்காங்களாம். போறியா?”
“மாட்டேன்” என்றாள் ஒற்றை வார்த்தையாக!
“அதான, நீ என்னைக்கு சொந்தத்த மதிச்சிருக்க” என்றவர், “சரி விடு. அதுகூட வேண்டாம். உன் அப்பாவ போய்…” என்று ராதிகா பேசும் போதே, “இத பத்திப் பேசாதீங்க, இந்தப் பேச்சு வேண்டாம்” என்றாள் அழுத்தமாக.
ராதிகா, “அப்ப அத பத்திதான் பேசுவேன். அத பத்தி மட்டும்தான் பேசுவேன். என்ன செய்வ” என்று சவால் விடுவது போல் சொல்ல, “சாரி மேம்… நான் இங்க வந்திருக்கவே கூடாது” என்று அவருடன் பேசிப் போராட முடியாமல் கீர்த்தி கிளம்பிவிட்டாள்.
அந்தநேரம் முன்வாசல் வழியே வந்த திலீப், “கீர்த்தி” என்று அழைக்க… அவள் நிற்காமல் நடந்தாள்! “கீர்த்தி… நில்லு” என்று அவன் மீண்டும் மீண்டும் கத்தி சொல்வதைக் கேட்காமல் நடந்து கொண்டே இருந்தாள்!!