Kathambari Novels
அடுக்களை அமானுஷ்யம்
அழகான விடியல் ஆரம்பமானது!!
காற்றோட்டத்திற்காக சற்றே திறந்திருந்த சன்னல் வழியே சூரிய ஒளி அந்தச் சிறு அறைக்குள் வந்தது. அதில் கண்கள் கூசியதால் பவித்ரா விழித்தாள். மெல்ல எழுந்து அமர்ந்தவள், அருகில் உறங்கும் கணவன் செல்வத்தைப் பார்த்ததும் முகத்தில் சிறு புன்னகை அரும்பியது.
புதுமணப்பெண் என்பதை பறைசாற்றும் புன்னகை அது!
செல்வம், பவித்ரா திருமணம் நடந்து இருபது நாள்களே ஆகின்றது. இவர்கள் கல்யாணம் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டு, நடத்தப்பட்டிருந்தது. திருமணக் கொண்டாட்டங்கள் முடிந்து மூன்று நாட்களுக்கு முன், இங்கே தனிக்குடித்தனம் வந்திருக்கிறார்கள்.
மொத்தம் மூன்று தளங்கள் கொண்ட வீடு இது. முதல் தளத்தில் வீட்டு உரிமையாளர் இருந்துகொண்டு, மற்ற இரண்டு தளங்களையும் வாடகைக்கு விட்டிருக்கிறார். இவர்கள் இருப்பது இரண்டாவது தளத்தில்.
மிகச்சிறிய ஒற்றை படுக்கையறை, பெரிதாக இடவசதியில்லாத வரவேற்பு மற்றும் சமையலறை என்றிருந்தது வீடு. பால்கனி வசதிகூட அமைக்கப்படவில்லை. பழைய வீடுதான்! சுவர்களில் அங்கங்கே சிறு விரிசல்கள் இருந்தன!
இருந்தாலும் இப்பகுதியில் வீடு எடுத்தால்… அவளும் அவனும் வேலைக்குச் சென்று வர வசதி, பயண செலவும் குறைவாகும். அதனால்தான் இங்கு வீடு பார்த்திருந்தான். முக்கியமாக இந்த வீட்டை வாடகைக்கு எடுக்க காரணம், வீட்டின் வாடகை அவனது நிதிநிலைக்கு ஏற்றதாக இருந்தது.
இங்கே வந்ததிலிருந்து மூன்று நாளாக வீட்டை ஒழுங்குபடுத்தி புது பாத்திரங்கள் மற்றும் தவணை முறையில் வாங்கிய சில பொருட்களை எடுத்து வைத்திருந்தனர். முக்கால்வாசி வேலை செல்வம்தான் செய்திருந்தான். அந்த அலுப்பில் உறங்குபவன் கன்னத்தில் சின்னதாய் ஒரு முத்தம் வைத்துவிட்டு பவித்ரா எழுந்தாள்.
எழுந்து, பல் துலக்கியபடி சன்னல் அருகில் வந்து நின்றாள். அங்கிருந்து பார்த்தால் தூரத்தில் சில அடுக்குமாடிக் குடியிருப்புகள், எதிரே ஒரு விளையாட்டு மைதானம் தெரியும். வீட்டை ஒட்டிச் சென்ற சாலையில் ஆட்டோக்கள், பைக்குகள் போவதும் வருவதுமாய் இருந்தன.
சற்றுநேரம் அதையெல்லாம் பார்த்தபடி பல் விலக்கி முடித்தாள். பின் சமையலறை சென்று குடத்திலிருந்து சொம்பில் தண்ணீர் எடுத்துக் குடிக்கையில்… அவள் மேலே பொத்தென்று ஏதோ வந்து விழுந்து… குதித்து குதித்து நின்றது!
சொம்பைக் கீழே போட்டு, ‘ஐயோ’ என்று அலறி கண் மூடினாள்!!
“ஏய் பவி நான்தான்” என்று சிரித்தபடி அவளருகில் வந்து நின்றான் செல்வம்.
மெல்ல கண்திறந்து, “என்னங்க விளையாட்டு இது? என்னமோனு நினைச்சி பயந்தே போயிட்டேன்” என்று முகத்தை உம்மென வைத்துக் கொள்ள, “இதுல என்ன பயப்பட இருக்குது?” என்றான் அவளை நெருங்கி நின்று.
அவள் இன்னும் முறைத்து நிற்கவும், “சரி… இனி இப்படிப் பண்ணல போதுமா” என்று அவளைப் பின்னிருந்து கட்டிக்கொண்டு, “வர்றியா பவி, கிரவுண்ட்ல கொஞ்ச நேரம் நடந்திட்டு வரலாம்” என்றான் ஆசையாக.
“போங்க… நான் ஒன்னும் வரல” என்று முறுக்கிக் கொண்டாள்.
“இப்படி முகத்தைத் தூக்கி வச்சிக்காத” என்று அவள் கன்னத்தில் முத்தமிட்டு, “நான் வேணா போயிட்டு வரவா?” என்று அவளை அணைப்பிலிருந்து விடுவித்து கேட்டான்.
அவன் முத்தம் தந்த முறுவலுடன், “ம், சீக்கிரம் வந்திடுங்க. இன்னிக்கு வேலைக்குப் போகணும்” என்று ஞாபகப்படுத்தினாள்.
“ரெண்டே ரவுண்டுதான்… வந்திடுவேன்” என்று கதவைத் திறந்து படிக்கட்டுகளில் இறங்கிச் சென்றான். கதவைப் பூட்டி வந்த பவித்ரா, சமையலறை சென்று கீழே விழுந்த சொம்பை எடுத்து வைத்தாள்.
பின், ‘இவங்க எத தூக்கி எறிஞ்சாங்க’ என்று கீழே தேட, அது பச்சை நிறத்திலிருந்த ரப்பர் பல்லி என்று தெரியவும், சிரித்தபடி அதை எடுத்து சமையல்கட்டு அலமாரியில் வைத்துவிட்டு, குளிர்சாதனப் பெட்டியைத் திறந்து ஏற்கனவே வாங்கி வைத்திருந்த பொருட்களைப் பார்த்தாள்.
சற்று நேரத்திற்குப்பின் அழைப்புமணி அடிக்க, மெட்டல் சோஃபாவில் அமர்த்திருந்த பவித்ரா வேகமாக சென்று கதவைத் திறந்தாள்.
செல்வம்தான்!
அவளைப் பார்த்தபடி உள்ளே வந்தவன், “ஏ பவி, நான்தான ஓடிட்டு வர்றேன். உனக்கு ஏன் இப்படி வேர்த்திருக்கு?” என்க, பதிலளிக்காமல் மீண்டும் மெட்டல் சோஃபாவில் சென்று அமர்ந்து கொண்டாள்.
பதற்றமாகவும், பயத்துடனும் இருந்த மனைவியை, ‘எதுக்கு இப்படி’ என்று புரியாமல் பார்த்து, “என்னாச்சு, ஏன் இப்படி இருக்க” என்று அவளருகில் வந்தமர்ந்தவன், அவள் வியர்வையைத் துடைத்துவிட்டான்.
“நான் இன்னுமே சமைக்கலைங்க” என்றாள் பயத்துடன்.
“ப்ச் அவ்ளோதான?” என்று எழுந்து போக பார்த்தான்.
“என்னது அவ்ளோதான… ஏன் பண்ணலனு கேட்க மாட்டீங்களா?”
“நேரமாகுது, வேலைக்கு போக வேண்டாமா, உட்கார்ந்து கதை பேசிக்கிட்டு இருக்க சொல்றீயா?” என்று குரல் உயர்த்தியதும், அவள் முகம் மாறி இன்னும் வியர்க்க, “சரி, சரி கேட்கிறேன் சொல்லு” என்று அமர்ந்தான்.
“நீங்க வெளியே போனதுமே கதவை பூட்டிட்டு வந்து சமைக்க போனேன். ஆனா இந்த கிட்சன்ல எல்… எல்லாம் ஒரு… ஒருமாதிரி இருக்குங்க” என்றபோது பயத்தில் அவள் உதடுகள் வறண்டு போனது.
“ஒரு மாதிரினா… என்னது? எதுனாலும் தெளிவா சொல்லு” என்று கேட்டதும், சற்று நேரம் முன் சமையலறையில் நடந்ததைக் கணவனுக்குக் கூற ஆரம்பித்தாள்.
கடிகாரத்தின் முட்கள் பின்னோக்கிச் சுழன்றன…
குளிர்சாதனப் பெட்டியில் பொருட்களைப் பார்த்தவள், ‘முதலில் காஃபி குடிக்கலாம்’ என்று நினைத்து, பால் பாக்கெட்டை எடுத்தாள். அதை வெட்டி பாத்திரம் ஒன்றில் பாலை ஊற்றினாள்.
பாக்கெட்டில் இருந்த பால்… மலை மேலிருந்து பலத்த இரைச்சலுடன் நுரை பொங்கி வரும் அருவி கீழே விழும் சத்தத்துடன் பாத்திரத்தில் விழுந்தது. ‘என்ன இது?’ என்று பயந்தவளின் செவிப்பறை சவ்வுகளைக் கிழித்துவிடுவது போல் சத்தம் அதிகரித்து கொண்டே போனது!
‘எங்கிருந்து இந்தச் சத்தம் வருகிறது?’ என்று பவித்ரா பார்க்க நினைக்க… அதற்குள் அதிக இரைச்சலால் அவள் காதில் சுளீர் என்று ஒரு வலி!
அவ்வளவுதான்!!
பயத்திலும், வலியிலும் பால் பாக்கெட்டை சமையல் மேடையில் போட்டுவிட்டாள். அடுத்த நொடி மொத்தச் சத்தமும் அடங்கியிருந்தது. காதுகளைத் தேய்த்துவிட்டபடி, ‘என்ன இது? ஏன் இப்படி நடக்கிறது?’ என்று தெரியாமல் பதற்றத்துடன் நின்றாள்.
நடந்ததை நினைத்து நினைத்து கைகள் நடுங்கின. மூச்சளவுகளோ சமநிலையில் இல்லாமல் ஏற்ற இறக்கமாக மாறின. குப்பென்று அவள் நெற்றியெங்கும் வியர்வைத் துளிகள் பரவத் தொடங்கின.
சற்று நேரத்திற்குச் சிலைபோல் சமைந்து நின்றவள், அதன்பின் மெது மெதுவாக தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டே, ‘எங்கிருந்து இந்தச் சத்தம் வந்திருக்கும்?’ என்று சமையலறையைச் சுற்றிப் பார்த்தாள்.
சின்ன சமையலறை! அதில் சிலபல பாத்திரங்கள், கிரைன்டர், குளிர்சாதனப்பெட்டி, சிறு சன்னல்… அவ்வளவே!
‘சன்னல் வழி இந்தச் சத்தம் வந்திருக்குமோ?’ என்ற சந்தேகத்தில் மெல்ல எக்கிக் கொண்டு தெருவைப் பார்த்தாள். மக்கள் சாதாரணமாக அவர்களின் வேலையைச் செய்து கொண்டிருந்தனர்.
‘அப்ப எனக்கு மட்டும்தான் இந்தச் சத்தம் கேட்டிருக்கா’ என்று பவி குழம்பி நின்ற நேரத்தில், எதையும் அவள் எதிர்பார்க்காத நிலையில்… சட்டென முகத்திற்கு முன் ஆவி பறக்க காஃபி கோப்பை ஒன்று நீட்டப்பட்டது.
உடனடியாக இருகைகளாலும் வாயை மூடினாள். பின்னே நகர்ந்து போனாள். அந்தப் பக்கம் இருந்த சமையல் மேடையில் இடித்துக் கொண்டு நின்றாள்!
அச்சத்தின் பிடியில் இருந்தவளுக்கு, வாயைத் திறந்து ‘உதவி’ என்று சத்தமிடக்கூட முடியவில்லை!! சமையலறையிலிருந்து தப்பித்து வெளியே செல்லவும் யோசனை வரவில்லை!!
மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க, விழிகளை விரித்து வைத்து… எந்தப் பிடிமானமும் இல்லாமல் அந்தரத்தில் நிற்கும் காஃபி கோப்பையைப் பார்த்தபடி நின்றாள்.
‘எங்கிருந்து வந்திருக்கும்?’ என்ற கேள்வி வரவும் சமையலறையில் ஒட்டப்பட்டிருந்த சுவர் வண்ணத்தாள்களைப் பார்த்தாள். சற்று எண்ணெய் பிசுக்கேறி போயிருந்த தாளில் கத்திகள், முள்கரண்டிகள், காஃபி கோப்பைகள் அச்சிடப்பட்டிருந்தன!
அச்சிட்டிருந்த காஃபி கோப்பையிலிருந்த ஆவி பறந்து கொண்டிருந்தது!
அந்த காஃபி கோப்பையின் வடிவத்தையும் அந்தரத்தில் தொங்கும் கோப்பை வடிவத்தையும் பார்த்தாள். இரண்டும் ஒன்றுதான் என்று தெரிந்த அந்த நொடியில் காஃபி கோப்பை அவளை நோக்கி வேகமாக வந்தது.
கூடவே பச்சை நிறத்தில் பெரிய பல்லி ஒன்று சமையல் மேடையில் அங்கும் இங்கும் ஊர்ந்து செல்வதைப் பார்த்தாள்! சட்டென்று சமையல்கட்டு அலமாரியில் வைத்த ரப்பர் பல்லியைத் தேடினாள்!
அது அங்கில்லை!!
அவ்வளவுதான்!!!
அதன்பின் அங்கே நிற்கவில்லை. கால்கள் இரண்டும் நடுங்க வெளியே ஓடி வந்து மெட்டல் சோஃபாவில் அமர்ந்துவிட்டாள்!
கடிகாரத்தில் இந்த நிமிடம்…
நடந்ததை பவித்ரா பதற்றத்துடன் சொல்லி முடிக்கவும், “என்ன சொல்ற நீ?” என்று அதிர்ந்து கேட்டவன், சமையலறைச் சென்று பார்த்தான். அங்கே ஊசி விழும் ஓசை கேட்கும் அளவிற்கு அமைதி இருந்தது. சற்றும் அவள் சொன்னது போல் களேபரங்கள் நடந்த சுவடுகள் இல்லை. பால் பாக்கெட் மட்டும் சமையல் மேடையில் கிடந்தது.
அது அவனுக்கு ஒரு பயத்தைத் தந்தது!
அப்படியே மெல்ல திரும்பி அவளைப் பார்க்க, “பயமாருக்குதுங்க” என்றவள் உடல் கிடுகிடுவென நடுங்கியது. ஓடி வந்து அவளை அரவணைத்துக் கொண்டான்.
அவன் தோளில் சாய்ந்தபடி, “ஏ… ஏன் இப்படி நடந்திச்சி?” என்று பயத்தில் திரும்பத் திரும்பப் புலம்பிக் கொண்டு சற்றுநேரம் இருந்தவள்… திடீரென்று, “என்மேல தூக்கி போட்டீங்களே ரப்பர் பல்லி… அது எப்படிங்க வந்தது?” என்று படபடத்தாள்.
“தெரியலை, அங்க கிடந்தது” என்று சன்னல் பக்கமிருந்த மூலையைக் காட்ட, ‘அது எப்படி அங்கே வந்திருக்கும்?’ என்ற கேள்வி அப்போது செல்வத்திற்கு வந்திருந்தது.
இருவரும் சமையலறையை யோசனையுடனும், திகிலுடனும் பார்த்திருந்தனர்!
சட்டென உடல் தூக்கிப் போடும்படி நடுங்கியவள், “என்னங்க… கி… கிட்சன் சுவர்ல ஒட்டிருக்க வால் பேப்பர்லாம் யா… யார்ரு ஒட்னது” என்று பதற்றமாகக் கேட்டாள்.
“இதுக்கு முன்ன வாடகைக்கு இருந்த ஆளுங்க ஒட்னதுனு சொன்னாரு. நல்லாதான் இருக்கு, அதனால அத எடுக்கலைனு சொன்னாரு. நானும் சரினு விட்டுட்டேன்” என்று யோசித்தபடியே சொன்னான்.
சில நொடிகள் பவித்திரா அமைதியாக இருந்தாள். பின், “அவங்களை காலி பண்ண சொல்லிட்டுதான நமக்கு வாடகைக்கு கொடுத்தாருன்னு சொன்னீங்க… அவங்களை எதுக்காக காலி பண்ண சொன்னாராம்?” என்றாள் சந்தேகமாக.
“ஏய்… சும்மா இப்படி கண்டதையும் கனெக்ட் பண்ணி என்னய டென்சன் பண்ணாத, சரியா” என்றான் எரிச்சலுடன்! ஆனால் அந்தக் கேள்வி அவனுள்ளும் இருந்ததால் அடுத்து எதுவும் பேசவில்லை!!
அமைதியாக இருந்தவனிடம், “நான் உங்களை டென்சன் பண்ணனும்னு கேட்கலங்க. பயத்லதான்…” என்று சொல்ல, அவன் யோசனையில் இருந்தான்.
“என்ன யோசிக்கிறீங்க?” என்று கேட்க, அவன் நேரத்தைப் பார்த்துவிட்டு, “வேலைக்கு போகணும். முதல கிளம்பலாம் பவி. வேலை முடிஞ்சி வந்தப்புறம் இத என்னென்னு பார்க்கலாம்” என்று பொறுமையாக சொன்னான்.
அவள் அப்படியே இருந்தாள்!
“கல்யாணம், வீடு கிளீனிங்னு இத்தனை நாளா லீவ் சொல்லிக்கிட்டே இருந்திட்டோம். இனியும் சொல்ல முடியுமா? சம்பளம் கட்டாகும். எந்திரி” என்றாலும், ’இப்படி ஏன் நடந்திருக்கு?’ என்ற யோசனையோடு இருந்தான்.
“ம்ம்… ஆனா டிஃபன்?!” என்றாள்.
“போறப்போ பார்த்துக்கலாம்… கிளம்பு”
யோசனையுடன் இருந்தவள், “கிட்சன்ல நீங்களும் வந்து நிக்கிறீங்களா… ஒரு தடவ சமைக்க ட்ரை பண்ணிப் பார்ப்போம்” என்று ஒருவித பயத்துடனே கேட்டாள்.
“நீ சொல்ற மாதிரி பண்ணலாம். இப்ப இல்ல, சாயங்காலம் வந்து பார்க்கலாம்” என்று தற்சமயமாக பிரச்சனைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்து எழுந்து கொண்டான்.
அவளும், “ம்ம்ம்” என்று எழுந்து கிளம்பப் போனாள்.
அடுத்தநாள்!
அமைதியாக இருந்த அதிகாலை பொழுதில் அலைபேசியின் விழிப்பு மணியோசை கேட்டு செல்வம் விழித்தான். நேற்று வேலை முடிந்து தாமதமாக வந்து… நடந்ததைப் பற்றியே நிறைய நேரம் பயந்து பயந்து பேசிக் கொண்டிருந்ததால் பவித்ரா ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள்.
அவள் உறக்கத்தைக் கலைக்காமல் எழுந்தவன், சன்னலருகே சென்று நின்றான்.
முந்தைய நாள் பவித்ரா பார்த்த அதே காட்சிகள்தான்! வாகனங்கள் போகும் சாலை, இளைஞர்கள் உடற்பயிற்சி செய்யும் மைதானம்… தூரத்தில் குடியிருப்புகள்! அந்தப் பெரிய பரப்புகளில் பரவியிருந்த இரைச்சல்… வீட்டிற்குள் வியாபித்திருந்த அமைதி, இரண்டையும் கேட்டான்.
வீட்டுச் சமையலறையின் வினோதத்தை நினைத்துப் பார்த்தவுடனே செல்வத்திற்கு முதுகெலும்பு சில்லிட்டது!
தெளிவில்லாத எண்ணங்களுடனே இருந்தவனுக்கு மனம் குழம்பி… தலை வலித்தது. சூடாக காஃபி குடிக்க நினைத்தான். மனதினில் ஒருவித பயத்துடன்… பதற்றத்துடன் சமையலறை சென்று பால் பாக்கெட் இருக்கிறதா என்று பார்த்தான்.
இன்று இல்லை!
அவள் எழுந்து கொள்ளும் முன் வாங்கி வந்துவிடலாம் என்று நினைத்து கதவைத் திறந்து கிளம்பியவன், வெளிப்புறம் தாழிட்டு மாடிப் படிகளில் இறங்கினான்.
அவன் திரும்பி வந்து கதவைத் திறந்தபோது சோஃபாவில் உட்கார்ந்து கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தாள் பவித்திரா. அவசரமாக வந்தவன், “ஏய் பவி… என்னாச்சு ஏன் இப்போ அழற?” என்று கேட்டு, அவள் முன் மண்டியிட்டு அமர்ந்தான்.
அழுகையின் ஊடே, “எங்க போயிருந்தீங்க?” என்றாள் கோபமாக.
“நேத்து பால் பாக்கெட் வாங்கி வைக்கல. அதான் போய் வாங்கிட்டு வர்றேன்”
“அதுக்கு இவ்ளோ நேரமா?” என்று சத்தமிட்டாள்.
“ஓனர்கிட்ட பேசிக்கிட்டு இருந்தேன்” என்றவன், “இதுக்கு முன்ன இங்க வாடகைக்கு இருந்த ஆளுங்களால ஏதோ பிரச்சனையாம்… அதான் அவங்களை காலி பண்ண சொன்னாராம்” என்றும் சொன்னான்.
“என்னங்க பிரச்சனை?”
“அதெதுக்கு நமக்கு? நீ எதுக்கு அழறனு சொல்லு” என்றவன், “பவி… இன்னிக்கும் எதுவும் நடந்ததா என்ன?” என்று அதிர்ந்து கேட்க, “ம்ம்” என அழுதபடி தலையாட்டி, சமையலறையில் தனக்கு நேர்ந்ததைக் கூற ஆரம்பித்தாள்.
கடிகாரத்தின் முட்கள் பின்னோக்கிச் சுழன்றன…
செல்வம் போனதுமே பவித்ரா வைத்திருந்த விழிப்புமணி அடிக்க விழித்துவிட்டாள். மெதுவாக கட்டிலிலிருந்து எழுந்தவள் செல்வத்தைத் தேட, வீட்டில் நிலவிய அமைதி அவன் இங்கே இல்லை என்று சொல்லியது.
எளிதில் கணிக்க முடிந்த வெளியில் கேட்ட சத்தம், இரைச்சலைவிட எப்போது என்ன நடக்குமென்று கணிக்க முடியாத வீட்டிற்குள்ளே இருந்த அமைதி அவளுக்கு ஒருவித பயத்தைக் கொடுத்தது!
‘சமைக்க ஆரம்பிக்கவா? இல்லை செல்வம் வரும்வரை காத்திருக்கவா? என்று மனம் படபடப்புடன் பட்டிமன்றமே நடத்தியது. ‘இன்று என்னென்ன நடக்குமோ’ என்ற பயம் இருந்தும் சமையலுக்குத் தேவையான பொருட்களை மட்டும் எடுத்து வைப்போமே என்று சமயலறைக்குள் சென்றாள்.
குளிர்சாதனப் பெட்டியிலிருந்து சமையலுக்குத் தேவையான காய்கறிகளை எடுத்து திரும்பிய அடுத்தநொடி, வாணலிகள் அனைத்தும் சமையல் மேடைமீது ஒன்றன் பின் ஒன்றாக வந்து அமர்ந்தன.
மூச்சே நின்றுவிடும் போல பக்கென்று இருந்தது அவளுக்கு!
ஆனாலும் பயத்தை, நடுக்கத்தை, பதற்றத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு, ‘அதுவா, நானா?’ என்று பார்த்துவிடும் ஆவேசத்துடன்… பட்டென்று ஒரு வாணலியை எடுத்து அடுப்பில் வைத்தாள்.
‘அடுத்து, எண்ணெய் என்னவாகப் போகிறதோ’ என்ற பயத்துடன் பாதி கண்கள் மூடி, கைகள் நடுங்க எண்ணெய் பாட்டிலை எடுத்து வாணலியில் ஊற்றினாள்.
நல்லவேளை எண்ணெய் எதுவாகவும் மாறவில்லை!
எண்ணெய் சூடாகும் நேரத்தில் முட்டைகோசை சிறு துண்டுகளாக வெட்டினாள். அது சூடானதும் அஞ்சறைப் பெட்டியிலிருந்து தாழிப்பிற்காக கடுகு எடுக்கப் போகையில், அவைகள் சிறுசிறு கருமணிகளாக மாறித் தரையில் உருண்டோடின.
உடனே பயப்பந்து ஒன்று அவள் தொண்டைக் குழியில் உருண்டது! இதயத்தின் சுவர்கள் ஒவ்வொன்றும் தனித்தனியாக தடதடத்தன! கண்கள் இரண்டும் தடுமாறி தத்தளித்துக் கொண்டு வந்தன!
உள்ளுக்குள்தான் இப்படி! அவள் உடல் உறைந்து நின்றது!!
தாறுமாறாய் துடிக்கும் அவள் இதயத்தைத் தட்டிக் கொடுத்த போது, அஞ்சறை பெட்டியிலிருந்த அனைத்துப் பொருட்களும், எடுத்து வைத்த பொருட்களும் உருமாற தொடங்கின. பீதியில் இரு விழியிலிருந்து நீர் வடிய அதைப் பார்த்தபடி நின்றாள்.
தேங்காய் நாரைத் திரித்து… நரம்பு போல் மாற்றி, அதில் பெரிய கருமணிகளாக மாறியிருந்த மிளகுகள், குமிழ்மணிகளாக மாறிய மல்லி விதைகள், அரை பாசி மணிகளாக மாறியிருந்த வெந்தயங்களைக் கோர்த்து… ஒரு சிறிய மணிமாலையாக உருவாக்கி… அவள் முன் நீட்டப்பட்டது!
உள்ளுக்குள் உருவான பேரச்சம்… அவளைப் பிடித்து உலுக்கியது!!
‘யார் இதை கோர்த்தார்கள்? யார் கொடுக்கிறார்கள்? ஏன் இப்படி நடக்கிறது?’ என்று எதுவுமே தெரியாமல் பவி ஏங்கி ஏங்கி அழுதாள்!
நீட்டப்பட்ட மணிமாலையை பவித்திரா வாங்கவில்லை என்றதும்… அதை அவள் கழுத்தில் யாரோ மாட்டிவிட முயற்சிக்க… அதை முறியடிக்க அவளும் போராட, கடைசியில் அதைப் பிய்த்து எறிந்தாள்!!
அந்த நேரத்தில்… சமையல் மேடையில் ஒருபக்கம் தாயக்கட்டம் வரையப்பட்டு எடுத்து வைத்திருந்த வெள்ளைப்பூண்டுகள் எல்லாம் வெண்சோவிகளாக மாறி, உருட்டி உருட்டி போடப்பட்டுக் கொண்டிருந்தது!
‘யார் இதை வரைந்தார்கள்? யார் விளையாடுகிறார்கள்?’ என்று புரியாத புதிரில் நின்றவளுக்கு, அந்தச் சமையலறையில் இருக்கின்ற ஏதோ ஒன்று அவளை இப்படிச் சங்கடப்படுத்தி, சந்தோஷம் அடைவது போலிருந்தது!!
சோவிகளைப் பார்த்திருந்தவள் கண்முன்… இஞ்சி மனித இதயமாக மாறி துடித்த நொடி, ‘யார் இதயம் இது? இன்னும் என்ன அபாயம் காத்திருக்கோ?!’ என்ற அச்சத்தில் அலறி அடித்து வெளியே வந்து மெட்டல் சோஃபாவில் அமர்ந்து ஓவென்று அழ ஆரம்பித்தாள்.
கடிகாரத்தில் இந்த நிமிடம்…
செல்வத்திடம் சொன்ன போதும், சொல்லி முடித்த பின்னும் அவள் அழுது கொண்டே இருந்தாள். “அழாத பவி என்னென்னு பார்க்கிறேன்” என்று எழுந்து சென்று தண்ணீர் எடுத்து வந்து அவளைக் குடிக்க வைத்தான்.
‘ஏன் இப்படி நடக்கிறது? இந்த வீட்டுச் சமையலறையில் என்ன இருக்கிறது?’ என்று செல்வம் சமையலறைக்குச் சென்று பார்க்க, பவி எடுத்து வைத்திருந்த காய்கறிகள் சமையல் மேடையில் இருந்தன.
வேறு எதுவும் நடந்ததற்கு அறிகுறியே இல்லை!
ஆனாலும் அவனுக்குள் ஒரு பயம், பீதி வந்திருந்தது!!
அழுதழுது முகம் வீங்கியிருந்த மனைவியைப் பார்த்தான். அவளும் அவனைத்தான் பார்த்திருந்தாள். உடனே வந்து ஆறுதலாக அணைத்துக் கொண்டான்.
சற்று நேரத்திற்குப் பின், “இரு பவி” என்று அவளை விட்டுவிட்டு உள்ளே சென்று பத்து நிமிடங்கள் கழித்து வந்தான்.
அவனிடம், “யார்கிட்ட பேசிட்டு வர்றீங்க” என்று குரல் நடுங்க பவி கேட்க, “இங்க நடக்கிறதை எங்க அம்மாகிட்ட சொல்லிட்டேன்” என்றான்.
“ஏன் இத போய் சொன்னீங்க! அவங்களும் பயப்பட போறாங்க” என்றாள் கோபமாக.
“பெரியவங்களுக்கு தெரிய வேண்டாமா?”
“அத்தை என்ன சொன்னாங்க?”
“பயந்தாங்க. அக்கம் பக்கத்தில இந்த வீடு பத்தி கேட்க சொன்னாங்க”
“பேசாம அத்தை கூட போய் இருந்துக்கலாமா?”
“என்ன பேசற நீ… ரெண்டு பேரும் வேலைக்குப் போக இதான ஈஸி”
“அப்படினா… அத்தைய இங்க கூட்டிட்டு வந்திடலாமா?”
“அங்கனா எங்க அம்மாவ கவனிச்சிக்க அண்ணி இருக்காங்க. பக்கத்தில அத்தனை சொந்தமும் இருக்கு. அதலாம் விட்டுட்டு எங்கம்மா வரமாட்டாங்க பவி. அதோட அம்மாக்கு படிக்கட்லலாம் ஏறிக்க முடியாது”
“போங்க, இப்படியே பேசிக்கிட்டு இருங்க” என்று கோபப்பட்டு, “இந்த வீட்டு கிச்சன்ல ஏதோ இருக்கு. அதுக்குள்ள போகவே பயமாருக்கு” என்று தேம்பி தேம்பி அழுதாள்.
அவள் பேச்சில் செல்வத்திற்கு அப்படியொரு பயம் வந்திருந்தது. ஆனால் வெளியே காட்டிக் கொள்ளவில்லை! தான் பயப்படுவது தெரிந்தால், அவள் இன்னுமே பயந்து விடுவாளென்று உள்ளுக்குள்ளே வைத்துக் கொண்டான்!!
அவளது கண்ணீரைத் துடைத்து, “நான் இத சரி பண்ண பார்க்கிறேன் பவி. நீ விட்டுடு இத” என்றவன், “வேலைக்குப் போகணும்ல, கிளம்பு” என்ற பின்னுமே அப்படியே அமர்ந்திருந்தவளை அதட்டியும்… அன்பாய் சொல்லியும் கிளம்பச் செய்தான்.
ஆனால் தன்னிடம் அமைதியாய் இருக்கும் அடுக்களை அறை, அவளிடம் மட்டும் ஆக்ரோஷம் காட்டுகிறது… ஏன்? என்ற கேள்வியில் மனைவிக்கு எதுவும் ஆகிடுமோ என்ற பயம், பீதி அவனுக்குள் வந்திருந்தது!!
ஒரு வாரம் கழித்து!
நேற்று சாயங்காலம்தான் திரும்ப இந்த வீட்டிற்கு பவித்ரா வந்திருந்தாள். அதுவரை அவள் அம்மா வீட்டில் அவளை இருக்கச் சொல்லியிருந்தான் செல்வம்.
‘சமையலறையில் ஏதோ இருக்குது’ என்று சொல்லி அவள் பயந்ததாலும், செல்வம் நடந்ததைச் சொன்னதாலும், அவன் அம்மா கொடுத்த யோசனையின் பேரில், பேய் ஓட்டுபவர் வந்து ஏதேதோ செய்துவிட்டுப் போனார்.
அவர், ‘இனி பயமில்லை. சரியாகிடும்’ என்று சொல்லிவிட்டுப் போயிருக்க, செல்வம் சென்று பவியை நேற்று மாலையே இங்கே அழைத்து வந்திருந்தான்.
காலை நேரம் ஆறு மணி!
செல்வம் அசந்து தூங்கிக் கொண்டிருந்தான். அந்த நேரத்தில், ‘காப்பாத்துங்க’ என்று ஒரு அலறல் சத்தம்! பதறி எழுந்து, ‘மனைவி இருக்கிறாளா?’ என்று அருகில் பார்க்க, அவள் அங்கில்லை. அரக்க பறக்க வரவேற்பறை வர, மூச்சுவாங்க பவித்ரா நின்று கொண்டிருந்தாள்.
பதறியடித்து அவளருகே வந்து, “பவி ஏன் இப்படி நிக்கிற?” என்றான்.
“யாரோ என்னய கொல்ல பார்க்கிறாங்க?”
உள்ளுக்குள் உதறல் எடுத்தாலும், “உளறாத பவி!” என்றவன், “நீ உட்காரு முதல” என்று அவளை அமரவைத்து தண்ணீர் எடுத்து வந்து தந்தான். அவள் குடித்ததும், “என்ன நடந்ததுனு சொல்லு?” என்று கேட்க, பேசமுடியாமல் அழுதாள்.
சற்றுநேரம் இருந்துவிட்டு, “என்னென்னு சொல்லு?” என்றான் மீண்டும்.
“அங்க கி… கிட்சன்ல ஒட்டிருக்க பேப்பர்ல இருக்க கத்தி, கரண்டிலாம் பறந்து பறந்து வருதுங்க… வந்து என் கண்ணு பக்கத்தில… என் நெத்தி முன்னால நின்னுகிட்டு குத்த பாக்குது. இ… இதுல அந்த பல்லி வேற மேல மேல வந்து வி… விழுகுது… எப்படி பயந்து ஓடிக்கிட்டு கத்திக்கிட்டு இருந்தேன் தெரியுமா? உங்களுக்கு சத்தம் கேட்கலயா?
கடைசியில பெரிய கத்தி… இங்க” என்று தொண்டைக்குழியைக் காட்டி, “இங்க வந்து நின்னதும், வெளியே ஓடி வந்திட்டேன்” என்று கண்ணீரில் கரைந்தாள்.
அவன் அமைதியாக இருந்தான்!
“இந்த பிரச்சனை முடியவே செய்யாதா” என அவன் மேல் சாய்ந்து அழுதவள், “என்ன பேச மாட்டிக்கிறீங்க… பேசுங்க. எனக்கு பயமாருக்கு” என்று படபடத்தாள்.
அப்போதும் அமைதியாகவே இருந்து கொண்டான்!!
அன்று மாலை ஒரு நடைகூடத்தில் போடப்பட்டிருந்த நாற்காலி வரிசையில் பவியும், செல்வமும் அமர்ந்திருந்தனர்.
“இங்க எதுக்காக வந்திருக்கோம்?” என்று பதினொராவது தடவையாக பவி கேட்டாள்.
“கொஞ்ச நேரம் பேசாம இரு” என்றான்.
“அப்பருந்து இதயே சொல்லிக்கிட்டு இருக்கிறீங்க. இங்க எதுக்கு கூட்டி வந்தீங்கனு சொல்லுங்க ப்ளீஸ்” என்றபோது, ‘பவித்ரா’ என்று ஒருவர் வந்து அழைத்துவிட்டுப் போனார்.
“வா” என்று அவளை அழைத்து ஒரு அறைக்குள் போக, அங்கே மனநல மருத்துவர் என்ற பெயர் பலகை முன் இருந்தவர், “உட்காருங்க” என்றதும், அமர்ந்தனர்.
அவர், “என்ன பிரச்சனை?” என்று கேட்டதும், கடகடவென நடந்ததைச் சொன்னான். பவி குறுக்கிடாமல் அமைதியாக இருந்தாள்.
எல்லாம் கேட்டுவிட்டு, “நீங்க வெளிய இருங்க” என்றார் மருத்துவர் செல்வத்திடம்! அவன் போனதும், “சொல்லுங்க” என்றார் பவியைப் பார்த்து.
வெகு நேரத்திற்குப் பின் வெளியே வந்த பவித்ரா, “உங்களை கூப்பிடறாரு” என்று கரகரத்த குரலில் சொல்லி அமர்ந்து கொள்ள, அவன் உள்ளே சென்றான்.
“டாக்டர்… என் வொய்ஃப்க்கு என்ன பிரச்சனை?”
“இதுக்கு முன்னாடி இப்படி ப்ராப்ளம் வந்திருக்கா?”
“கல்யாணம் முடிஞ்சி கொஞ்ச நாள்தான் ஆகுது. எங்கண்ணா வீட்லருந்தப்ப இப்படி இல்ல. தனியா வந்தப்புறம் இப்படித்தான் இருக்கா”
“நீங்க பார்க்கிறப்போ இப்படி நடந்திருக்கா?”
“நான் பார்க்கிறப்போ இல்ல டாக்டர். இப்படி நடக்குதுனு சொல்வா. அவ்ளோதான்!”
மருத்துவரிடம் ஓர் அமைதி!
“ஏதாவது பிரச்சனையா டாக்டர்? எதுனாலும் சொல்லுங்க”
“உங்க வொய்ஃப்க்கு இருக்கிறது மெஜைரோகோ போஃபியா [Mageirocophobia]”
“ம்ங்… அப்படினா?” என்றான் புரியாமல்.
“அதாவது ஃபியர் ஆஃப் குக்கிங் [fear of cooking]. இந்த போஃபியா இருக்கிறவங்க சமைக்கிறதுக்கே பயப்படுவாங்க” என்றார் சுருக்கமாக.
“ஏன் அப்படி டாக்டர்?”
“கத்தி மாதிரி கூர்மையான பொருள் கையை வெட்டிடுமோனு… ஸ்டவ், ஓவென் வெடிச்சிடுமோனு… சமைக்கிற சில செய்முறை மறந்திடும்னோ, இல்ல அவங்க ஃபாலோவ் பண்ண கஷ்டமா இருந்திடுமோனு… சமைச்ச உணவோட ருசி ரொம்ப பெர்பஃக்டா எந்தவொரு தப்பும் இல்லாம வரணும்னு எதிர்பார்கிறதாலயோ… இந்த போஃபியா வரும்” என்றார் விளக்கமாக.
சிறு பயத்துடன், “இதுல எதனால பவித்ராக்கு… இப்படி?” என்று கேட்டான்.
“உங்க வொஃய்ப்வோட பெரியம்மா பொண்ணு ஒருத்தங்க ஸ்டவ் வெடிச்சி இறந்து போயிருக்காங்க. அதோட தாக்கம்தான் இது. கல்யாணத்துக்கு முன்னாடி சமையல் எல்லாம் இவங்களோட அம்மா பார்த்துப்பாங்களாம்.
அப்படியே செய்ய வேண்டிய சிச்சுவேஷன் வந்தாலும், இவங்க ஒதுங்கிகிட்டு இவங்க தங்கச்சிய பண்ண சொல்லிடுவாங்களாம். அதனால அவங்க வீட்ல யாருக்குமே இது தெரிஞ்சிருக்க வாய்ப்பில்ல.
கல்யாணம் முடிஞ்சி உங்க வீட்டுக்கு வந்தப்புறமா… சமைக்க வேண்டிய சூழ்நிலை வந்திருக்கு. ஆனா உங்க அம்மாவோ, அண்ணியோ அவங்க கூட இருந்திருக்காங்க. அதனால சமாளிக்க முடிஞ்சிருக்கு. ஆனா உள்ளுக்குள்ள பயம் அதிகரிச்சிக்கிட்டே வந்திருக்கு.
நீங்க தனியா வந்தப்புறம் வீடு கிளீன் பண்ற வேல இருக்குன்னு மூணு நாள் வெளிய சாப்பிட்டதால அவங்களுக்கு ப்ராப்ளம் முதல இல்ல. அதுக்கப்புறம் அவங்க மட்டும் தனியா நின்னு சமைக்கணும் அப்படிங்கிறப்ப… அவங்களால சமாளிக்க முடியல. அதோட வெளிப்பாடுதான் இதெல்லாம்”
“அப்போ… கிட்சன்ல நடந்ததா அவ சொன்னதெலாம்?”
“கிட்சன்குள்ள காலடி எடுத்து வைக்கவே ரொம்ப பயப்படுவாங்க… அப்போ அதை அவாய்ட் பண்றதுக்கு என்னெல்லாம் செய்யணுமோ அதைச் செய்வாங்க. அவங்க சமைக்காம இருக்கிறதுக்கு கண்டுபிடிச்ச வழிதான்… இப்படி நடந்ததா சொல்றது. ஒருவிதமா சமைக்கிறதலருந்து எஸ்கேப் ஆகிறது”
“இதலாம் அவ இப்ப உங்ககிட்ட சொன்னாளா டாக்டர்?”
“ம்ம்ம்”
“என்கிட்ட ஏன் சொல்லல?”
“இப்பத்தான மேரேஜ் முடிஞ்சதுனு சொன்னீங்க. எப்படிச் சொல்வாங்க? நீங்க என்ன நினைப்பீங்களோனு இன்னொரு பயமும் இருந்திருக்கு. உங்ககிட்ட உண்மையைச் சொல்லாம இருக்கிறதும் பயம்… பொய் சொல்லிக்கிட்டு இருக்கோமேனும் பயம்.
அப்புறம் இதுமாதிரி பயந்தா, அவங்களுக்கு ரொம்பவே வியர்க்கும், உதடு வறண்டு போகும், கோபம் வரும்” என்று இதன் அறிகுறிகளைச் சொன்னார்.
அவன் அமைதியாக இருக்க, “பயப்படாதீங்க. தெரபிஸ் கொடுத்து சரி பண்ணலாம். கொஞ்சம் கொஞ்சமா சமையலுக்கு பழக்கணும். அவங்க கிட்சன்ல இருக்கிறப்போ யாராவது கூட நிக்கணும்” என்றவர், பவியை அழைத்தார்.
சில அறிவுரைகள், வழிமுறைகளை விளக்கமாக சொல்லி, அவர்களை அனுப்பினார்.
வீடு வரும்வரை செல்வம் எதுவுமே அவளிடம் பேசவில்லை! அவளோ, ‘எப்ப இவங்க பேசுவாங்க’ என்று கணவன் முகத்தைப் பார்த்தே வந்திருந்தாள்!!
வீட்டுக்கு வந்ததிலிருந்தே பவித்ரா ஒரே அழுகைதான். வார்த்தைக்கு வார்த்தைக்கு ‘சாரி, சாரி’ என்று மருத்துவரிடம் சொன்னதை அப்படியே செல்வத்திடம் சொல்லிக் கொண்டிருந்தாள்.
அப்போதும் அவன் எதுவும் பேசவில்லை!
அவனை இறுக்கமாக கட்டிக்கொண்டு, “என்ன அமைதியா இருக்கிறீங்க? என்னய எங்க வீட்டுக்கு அனுப்பிடுவீங்களா? இனி இங்க இருக்க விடமாட்டிங்களா?” என்று அவன் முகத்தைப் பார்த்துக் கேட்டாள்.
அதற்கும் அவன் ஒன்றும் பதில் சொல்லவில்லை!
அவனது நெஞ்சில் முகத்தை அழுத்தி, “தெரிஞ்சிடுச்சி… நீங்க என்னய வேண்டாம்னு சொல்லப் போறீங்க. உங்களை எனக்கு ரொம்பப் பிடிக்கும். உங்களால வேணா நான் இல்லாம இருந்துக்க முடியும். என்னால அப்படி இருக்க முடியாது” என்றாள்.
உடனே அவளை விலக்கிவிட்டு, “உனக்கே இது அநியாயமா தெரியல?” என்றான்.
“என்னதுங்க” என்றாள் கண்ணீரைத் துடைத்தபடி.
“நாலு நாள்கூட உன்னய விட்டுட்டு இருக்க முடியாம நேத்து உங்க வீட்டுக்கு உன்னய கூப்பிட வந்தா… இன்னும் நாலு நாள் இருந்திட்டு வரவானு கேட்டவ… பேசறத பாரு! நான் இவளை விட்டுட்டு இருந்துப்பேனாம். இவளால என்னய விட்டுட்டு இருந்துக்க முடியாதாம்” என்றான்.
முப்பது நாள்தான் சேர்ந்து வாழ்ந்திருக்கிறார்கள். ஆனாலும் அவன் பேச்சில் இருந்த மூச்சிருக்கும் வரை சேர்ந்திருக்க வேண்டும் என்ற எண்ணம் புரிந்ததில்… அவளுக்கு ஒரு ஆசுவாசம் பிறக்க, “அப்படினா என்னய விட்டுட மாட்டிங்கள” என்றாள்.
“இப்படி ஒரு பயம் இருக்குதுனு எங்கிட்ட சொல்லியிருந்தா… நானே சமைச்சிருக்க போறேன். அத விட்டுட்டு என்ன கதையெல்லாம் சொல்லிருக்க” என்றவன், “முதல நீ சொன்னதெல்லாம் நம்பி எவ்ளோ பயந்தேன் தெரியுமா?” என்றான் இறுக்கமாக.
மீண்டும் கண்ணீர் வந்துவிட, “சாரி, உங்களை ஏமாத்த அப்படி நடந்துக்கல. எனக்குப் பயம்… சமையல்கட்டு, அடுப்பு, தீ பார்த்தாலே ரொம்ப பயம். சாரிங்க. இப்படி நான் எதும் சொல்லிக்கிட்டே இருந்தா, யாராவது பெரியவங்கள இங்க வர சொல்வீங்கனு நினைச்சேன்.
நானும் எப்படியாது சமைச்சிடணும்னு ட்ரை பண்ணேன். ஆனா உள்ளே போனாலே கை, கால், உடம்பெல்லாம் நடுங்கி… வேர்த்திட்டு வந்துரும். உடனே பயந்துக்கிட்டு வெளியே ஓடி வந்துருவேன்.
பொய் சொன்னது, உங்களை குழப்பினது தப்புதான். ஆனா அதுக்காக என்னய விட்றாதீங்க. வீட்டுக்கு வந்தா… உங்களுக்கு என்னால கஷ்டம். அதான் எங்க வீட்ல இருந்துக்காவனு கேட்டேன்” என்று கேவலுடன் மறுபடி மறுபடி மன்னிப்பு கேட்டபடி இருந்தாள்.
அவளைப் பார்க்க பாவமாக இருக்க, “எதுக்கு சாரி கேட்டுக்கிட்டே இருக்க. போதும். இத விடு. எனக்கு உன்மேல இப்ப கோபம் இல்ல பவி” என்றான் இதமாக.
அவனையே அவள் பார்க்க… அவன் அவள் கண்ணீரைத் துடைக்க… சில வினாடிகள் அப்படியே அவனது தோளில் சாய்ந்து கொண்டாள்.
புரிந்து கொள்கின்றான் என்ற நிம்மதியுடன், “நான்… சமைக்க நீங்களும் கூட வந்து நிக்கிறீங்களானு, கேட்டேன். நீங்கதான் கவனிக்கல” என்றுவிட்டு, “இன்னிக்கு எப்படி ஆஸ்பத்திரி கூட்டிப் போகனும்னு தோணிச்சி?” என்று விலகிக்கொண்டு கேட்டாள்.
“ம்ம்… காலைல நீ சொன்னது பொய்னு தெரிஞ்சது” என்று எழுந்துகொண்டான்.
“எப்படி கண்டுபுடிச்சீங்க?”
“கிட்சன்ல ஒட்டியிருந்த பேப்பர்லாம் கிழிச்சி போட்ருந்தேன். அந்த பல்லி மேல் வீட்டு குட்டிஸோடது. தெருவில நின்னு தூக்கிப் போட்டு விளையாடறப்ப சன்னல் வழியா இங்க விழுந்திருச்சின்னு சொல்லி… வந்து வாங்கிட்டு போயிருச்சுங்க.
அப்புறமும் அதயே சொன்னா எப்படி நம்புவேன்” என்று அவள் கையில் டம்பளரைக் கொடுத்து, “காஃபி குடி” என்றான் இலகுவாக.
அவள் அவ்வளவு அழுந்திருந்தாள் அல்லவா? மிகச் சோர்வாகவும் இருந்தாள்! அதன் பொருட்டே… இந்த காஃபி! அவளுடன் பேசிக்கொண்டே காஃபி போட்டிருந்தான்!!
சற்று சரியானவள் காஃபி குடித்தபடி, “பேய் ஓட்டுறவரு வந்திட்டுப் போனதால எப்படித் திரும்ப நடக்கும்னு டவுட் பண்ணீங்களோனு நினைச்சேன்” என்றாள்.
“ப்ச் அதுலெல்லாம் எனக்கு நம்பிக்கையே கிடையாது”
“அப்புறம் எதுக்கு அதலாம் பண்ணீங்க?”
“நீ ஏதோ இருக்குதுனு சொன்ன… எங்கம்மா அது பேய்தான்னு நினைச்சி பேயோட்ட ஆள் அனுப்பினாங்க. சரி அப்படியாது உன் பயம் போகுமானு பார்த்தேன்” என்றவன், “காசுதான் வேஸ்ட்” என்று அலுத்துக் கொண்டான்.
“அமௌன்ட் சொல்லுங்க, நானே குடுத்துறேன்” என்று சிலுத்துக் கொண்டவள், “ஏங்க, நம்ம ஒரு டீல் போட்டுக்கலாமா?” என்றாள் கெஞ்சலாக.
“எதுக்கு இப்ப டீல்?”
“இந்த பேயோட்ட ஆன செலவ நான் கொடுத்திடுவேனாம். அதுக்குப் பதிலா… நம்ம வீட்டு கிட்சன் சரியாயிடுச்சினு உங்க வீட்ல நீங்க சொல்வீங்களாம்”
“என்னய பொய் சொல்ல சொல்றியா…?” என்றான் விளையாட்டாய்.
“நீங்க இத ஈஸியா எடுத்துக்கிட்டீங்க. ஆனா உங்க பேமிலி வாட்ஸ்அப் குரூப்பல, அத்தை நம்ம வீட்ல இப்படினு மெசேஜ் போட்டதிலருந்து இதயே பேசிக்கிட்டு இருக்காங்க. கிட்சன்ல பிரச்சனைனாலே இவ்ளோ பேசறவங்க… எனக்குத்தான் பிரச்சனைனா எவ்ளோ பேசுவாங்க… அதுவும் பயமாருக்குதுங்க”
அவள் சொன்ன விதத்தில் அவன் சிரிக்க, “நான் பாவம்ல” என்று அவள் செல்லமாக பார்க்க, “யார்ரு நீயா!?” என்று செல்வம் கேலி செய்ய, “எனக்காக ப்ளீஸ்…” என்று பவி கணவனைக் கெஞ்சிட ஆரம்பித்தாள், அடுக்களை அமானுஷ்யம் என்ற ஒன்றை அடுக்களை ரகசியமென மாற்றும் முயற்சியாய்!
*******************************