Kathambari Novels
அத்தியாயம் – 32 (Mini-Episode)
மார்க் போலோ விமான நிலையம், அடுத்த நாள் காலை!
இரவு முழுவதும் விழித்திருந்த டேவிட், காலையில் கிடைத்த முதல் பேருந்தில் பியாசலே ரோமே வந்து இறங்கினான். குறைந்த எண்ணிக்கையில் படகுச் சேவை அங்கிருந்து வெனிஸிற்குத் தொடங்கப்பட்டிருந்து. காத்திருந்து, அதில் பயணம் செய்து சான் மார்கோ வந்தான்.
இன்னமும் கீர்த்திக்கு அழைத்துக் கொண்டே இருந்தான்! இன்னமும் அவன் அழைப்பு ஏற்கப்படவேயில்லை! இருவர் உயிரிழந்ததாக வந்த செய்தியைப் பார்த்திருந்தால், அவனது பயம் பதற்றம் பன்மடங்காக போயிருந்தது!!
கூடவே, தன் அழைப்பை கீர்த்தி ஏற்க விருப்பமில்லையோ? தன்னுடன் பேச விரும்பவில்லையா? ‘வேண்டாம்’ என்று சொன்னதில் இன்றளவும் உறுதியாக இருக்கிறாளோ என்ற கேள்விகள் வேறு அவனை மிகவும் வாட்டியது.
தூக்கமின்மை, பசி, பயம், பதற்றம் எல்லாம் சேர்ந்ததில் அவ்வளவு சோர்வு அவனிடம்! தண்ணீர் சூழ்ந்த தெருக்களில், மழையில் நனைந்தபடி நடக்கவே சிரமப்பட்டாலும்… முயன்று ஓட்டமும் நடையுமாக சென்டர் இருக்கும் இடம் நோக்கி வந்து கொண்டிருந்தான்!!
இதேநேரம் நகரில்…
வெனிஸ் நகரின் மேயர் அவசரநிலையைப் பிரகடணப்படுத்தியிருந்தார்!!
எண்பது சதவீத வெனிஸ் நகரம் நீரில் மிதந்தது! 1966 ஆம் ஆண்டிற்குப் பிறகு பதிவான மிக மோசமான ‘அக்வா ஆல்டா’ நிகழ்வு என்று நேற்றைய இரவின் நிகழ்வு பதிவானது! இதனால் ஏற்பட்ட பாதிப்புகளை, வெள்ள சேதங்களைக் கணக்கிடும் பணிகள் தொடங்கப்பட்டிருந்தன!!
கால்வாய் ஓரமாக, தாழ்வான பகுதிகளில் இருந்த கடைகள், கட்டிடங்கள் என அனைத்திலும் நீர் புகுத்திருந்தது! கடைகளின் புத்தகங்கள், கைப்பைகள், அழகுசாதனப் பொருட்கள் மற்றும் மின்னணு சாதனங்கள்… உணவகங்களின் நாற்காலிகள், மேசைகள்… வீடு உபயோக பொருட்கள்… நீரில் மிதந்தன.
இரவு அடித்த வலுவான காற்றிற்கு சில படகுகள் கடற்கரையில் மோதியதில் உடைந்து முழுதும் சேதமடைந்திருந்தன! சிலவைகள் நீரில் மூழ்கியிருந்தன! ஒன்றிரண்டு படகுகள் தெருக்களில் அடித்துச் செல்லப்பட்டிருந்து! அவைகள் தற்போதைக்கு அங்கேயே நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன!
நீர் வழி மருத்துவ ஊர்திகள், படகுகள் மற்றும் பணியாளர்கள் கொண்டு மீட்பு பணிகள் தொடங்கப்பட்டிருந்தன! முட்டி வரை தண்ணீர் இருந்த இடங்களில் தற்காலிக மரத்திலான பாலங்கள் அமைக்கப்ட்டிருந்தன!
இரவு போல் தீவிரமாக இல்லை என்றாலும், இன்னும் பலத்த காற்று அடித்தது, மழையும் தொடர்ந்தது. நகருக்குள் புகுந்த தண்ணீர் இன்னும் வடியவில்லை!!
இன்றும் கனமழை, உயரமான அலைகள், கடுமையான காற்று இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்திருந்ததால், மக்கள் பாதுகாப்பான இடத்தை நோக்கி நகரவும்… சுற்றுலா பயணிகள் நகரைவிட்டு வெளியேறவும் தொடங்கியிருந்தனர்.
நடக்க சிரமமில்லாமல் இருக்க ரப்பர் பூட்ஸ்… குளிரிலிருந்து காத்துக்கொள்ள ஏற்ற உடை… மழையில் நனையாமல் இருக்க குடை என்றபடி மக்கள்! நியான் வர்ண பாதுகாப்பு உடை அணிந்த மீட்பு பணியில் இருப்பவர்கள்! பாதிப்பைப் பார்வையிட வந்த அதிகாரிகள்! நிழற்பட கருவிகளுடன் ஊடக குழுக்கள்!
இப்படித்தான் வெனிஸ் நகரம் இருந்தது! சான் மார்கோவும் அப்படித்தான்!!
இங்குதான் பாதிப்பு அதிகம். நேற்றைய இரவு கடைகளுக்குள் நீர் புகுந்ததும், அடுக்கியிருந்த பொருட்கள் கீழே விழுந்தன! ஊழியர்கள், உரிமையாளர்கள் உடையாத பொருட்களை எப்படியாவது பத்திரப்படுத்த முயற்சித்தனர்!
ஆனால் நீரின் வேகமும், அளவும் அதிகரித்த பின் எதுவும் செய்ய இயலாமல், இரும்புத் தடுப்பால் வாயிலை அடைத்து, கதவை மூடிவிட்டுப் பாதுகாப்பான இடத்திற்குச் சென்றுவிட்டனர்!
கீர்த்தியும் அப்படித்தான்!!
சென்டரில் கணுக்கால் வரை தண்ணீர் இருக்கையில், சோஃபாவில் அமர்ந்து சமாளித்திருந்தாள்! நீர் புகுந்து, பொருட்கள் எல்லாம் மூழ்க ஆரம்பித்ததும், அவளால் அப்படி அமர்ந்திருக்க இயலவில்லை! முடிந்தவரை பொருட்களைப் பாதுகாக்க போராடியிருந்தாள்!
ஆனால் நீரின் வேகமும் அளவும் மடமடவென்று அதிகரித்த பின் அவளால் அங்கே நிற்கக்கூட முடியவில்லை!!
பெட்டியில் முக்கியமான பொருட்களை, சில ஆடைகளை எடுத்துக் கொண்டு அவசர அவசரமாக அங்கிருந்து வெளியேறியிருந்தாள்! மிகுந்த சிரமத்துடன் நடந்து சென்றவள், இரவு முழுவதும் மேடான பகுதியிலிருந்த உணவகத்தில் இருந்துவிட்டு, காலையில் இங்கே வந்திருந்தாள்!
இப்போது தேங்கியிருக்கும் நீரை, அதனால் சேதமடைந்த பொருட்களைப் பார்த்தபடியே நின்று கொண்டிருந்தாள்!!
அக்கணத்தில்தான் டேவிட் வந்து நின்றான். அவளைப் பார்த்த நிம்மதியில் அவனது இதயம் இயல்பாகத் துடித்தது. தண்ணீரில் வேகமாக நடந்ததால் மூச்சிரைக்க, ஓய்ந்து போய் கதவில் தலைசாய்த்து, ‘கீர்த்தி’ என்றான்! அந்த அழைப்பிலே குரல் யாரினது என்று உணர்நதவள், சட்டென்று திரும்பினாள்!!