Kathambari Novels
இரவு நிலவு!
இரவு நேரம். நிலா ஒளிர, இரவு ஒன்பது மணிக்கு மேல் ஊரடங்கும் பொழுதில், இல்லை அடங்கிவிட்ட பிறகு மனசெல்லாம் படபடக்க… சட்டென மூளை வேலை நிறுத்தம் செய்ய… ஆள் அரவமற்ற ஒரு சாலையில்… எப்படித் தப்பிக்க என்று தெரியாமல் உயிருக்குப் பயந்து ஒரு பெண் தாறுமாறாக ஓடி ஓடிக் களைத்துக் கொண்டிருந்தாள்.
இந்த உயிர் பயம் எதற்கு? யாரால் இந்த பயம் வந்தது? காரணம், அவளைக் கொடூரமாகக் கொன்று போட வேண்டுமென்ற கொலை வெறியுடன் ஒருவன் துரத்திக் கொண்டு வருவதால்!
நேரம் இரவு 10:00
பெரிய பெரிய இடைவெளியில் நின்ற சாலையோர விளக்கு கம்பத்தின் ஒளி பட்டு, அவன் கையிலிருந்த கூர்மையான கத்தி பளபளத்தது. ஓடுபவளுக்கும், துரத்துபவனுக்கும் இடையே தூரம் குறையும்போது, கையிலிருந்த கத்தியால் அவள் முதுகின் மேல் சில கீறல்களைப் பதித்தான்.
கீறல்களால் உண்டான காயத்திலிருந்து ‘சிவப்பு வியர்வை’ கசிய தொடங்கி, ஏற்கனவே வியர்வையால் நனைந்த அவள் ஆடையை மேலும் நனைத்தது!
இருந்தும் அவன் கையில் மாட்டிவிட கூடாதென்று பயத்தில் அவளது வேகம் இருமடங்கானது! மருண்ட அவள் கண்களில், ‘யாராவது இவனிடமிருந்து தன்னை காப்பாற்றி விடமாட்டார்களா?’ என்ற நப்பாசை தெரிந்தது.
கொடூரத்துடன் இருக்கும் அவன் கண்கள், அவள் மரணத்தைக் காண வேண்டி தன் இமைகளைத் திறந்தே வைத்திருந்தன!!
நேரம் இரவு 10:30
கன்னாபின்னாவென்று ஓடி வந்தவள், ஒரு கிளைச் சாலையில் திரும்பினாள். அங்கொன்றும் இங்கொன்றுமாக சிறுசிறு கடைகள். அவையனைத்தும் மூடி இருந்தன. இருந்தாலும், ‘யாரேனும் இருக்கிறார்களா?’ என்று அவள் கண்கள் தேடிக் கொண்டும், கால்கள் ஓடிக் கொண்டும் இருந்தன.
யாருமில்லை! அதற்குமேல் ஓட அவளுக்குத் திராணியும் இல்லை. சோர்வுடன் ஒரு சின்ன கடையின் வெளிப்புறம் ஒழுங்கில்லாமல் வைக்கப்பட்டிருந்த மர பெட்டிகளுக்குப் பின்னால்… தன்னை குறுக்கி மடக்கி அமர்ந்து கொண்டாள்.
சற்று நேரத்திற்குப் பின்… அந்த ஒருவனும்… அதே கிளைச்சாலையில்… அதே கடையின் முன் வந்து நின்றான்.
அவள் பயத்தில் எச்சிலை முழுங்கி, இரு கைகளால் வாயை மூடினாள்.
அவன் கண்கள் அவளைத் தேடின.
அவன் கண்ணில் அவள் தென்படவில்லை. ‘அவளைத் தவற விட்டேனா?’ என்ற கடுங்கோபம் அவன்மீதே அவனுக்கு வந்தது. உடனே அதை வெளிக்காட்டும் வண்ணம் காலால் சாலையில் ஓங்கி ஒரு மிதி மிதித்தான்.
இல்லை தவறவிடமாட்டேன். அவள் ரத்தத்தில் குளிக்காமல் தன் கத்தி ஓயப் போவதில்லை என்று மனதில் சபதம் எடுத்துக் கொண்டான்.
அவளோ மரப்பெட்டியில் இருந்த சிறு ஓட்டைகளின் வழியே அவனை… அவன் முகத்தில் தெரியும் கோபத்தைப் பார்த்து, பார்த்து பயந்து கொண்டிருந்தாள்.
நேரம் இரவு 11:10
தீடிரென்று அவனைக் காணவில்லை. அங்கே தேடி அவளைக் காணவில்லை என்பதால் வேறு இடத்திற்கு தேட சென்று விட்டான் போல! அக்கணம் சைரன் ஒலியுடன் காவலர் வாகனம் வரும் சத்தம் கேட்டது. அவள் முகத்தில் அப்படியொரு நிம்மதி… தப்பிக்க வழி கிடைத்திருக்கே என்பதால்!
அந்த ஒலி எந்தப் பக்கமிருந்து வருகிறதென காதை தீட்டி வைத்துக் கொண்டு கேட்டாள். எங்கிருந்து வருகிறதென தெரிந்து கொண்டவள், சத்தம் பக்கத்தில் கேட்டதும் சட்டென்று மறைவிலிருந்து வெளியே வந்தாள்.
விரைவாக காவலர்களின் உதவியை நாடி விட வேண்டுமென்று அரக்க பரக்க ஓடினாள். இடையிடையே அவன் வருகிறானா? என்று பார்த்துக் கொண்டாள்.
அவன் வரவில்லை!
நேரம் இரவு 11:30
கிளைச் சாலையின் முனையில் வந்து எட்டிப் பார்த்தாள். இரவுநேர காவலர் வாகனம் நின்றது. தப்பியாயிற்று… அவனிடமிருந்து தப்பியாயிற்று! அவளது முகத்தில் சிறு மகிழ்ச்சி… பெரிய நிம்மதி தெரிந்தது. உயிர் பயம் குறைந்தது.
இரண்டரை மணி போராட்டம் முடிவிற்கு வந்தது!
காவலர்கள் எங்கே என்று பார்க்க ஒரு அடி முன்னே எடுத்து வைத்த பொழுது, அவள் தலைமுடியை பிடித்து தரதரவென்று பின்னோக்கி இழுத்து… அவளது முன்னங்கழுத்தில் கத்தியை வைத்துக்கொண்டு… அவன் நின்றான்.
அவள் மாட்டிக் கொண்டாள்!
தன் கத்தி ரத்தம் பார்க்க போகிறது என்ற கொடூர திருப்தி அவன் முகத்தில்!
அவள் முகத்தில் மீண்டும் மரண பயம்!!
.
.
.நேரம் இரவு 10:00
சட்டென்று இருள் பரவி… ஒரு நிசப்தம் நிலவியது. அடுத்து என்ன செய்ய என்று தெரியாமல் ஒரு தடுமாற்றம்!
நிகழ்கணத்தில் ஒரு குரல்!
“ம்ம்க்கும் இவனுங்களுக்கு இதே வேலையா போச்சு. திடிர் திடிர்னு கரென்ட்ட எடுத்துறானுங்க. ஒரு படத்தை பார்க்க விட்றானுங்களா?” என்று இருட்டில் ஓர் பாட்டி துழாவி துழாவி தன் கைபேசியை எடுத்து ஒளிர செய்தார்.
காற்று வேண்டி கதவைத் திறந்து வெளியே வந்தார் பாட்டி. நிலா ஒளிர்ந்து கொண்டிருந்தது. மணி பத்தரையைக் கடந்திருக்கும். ஊரடங்கிவிட்டது.
அவரது மூளைக்குள், ‘அந்தப் பொண்ணுக்கு என்னாயிருக்கும்? அவ கழுத்தில கத்தியால குத்தியிருப்பானோ? போலீஸ் அவளை காப்பாத்திருப்பாங்களோ?’ இல்லை அவளே தப்பிச்சி போயிருப்பாளோ?’ என இத்தனை விடை தெரியாத கேள்விகள் வந்தன.
எழுந்த கேள்விகளுக்கான விடையை யோசிக்காமல் அவரது மூளை வேலை செய்வது நிறுத்திவிட்டது.
கடைசியில், “ஆங்ங்… அந்த டிவி காரன்தான… நூறுநாள் டிவியிலயே படத்தை ஓட்டுவான். இன்னொருநாள் பார்த்துக்கலாம்” என்று ஒருவிதமாக தன்னைச் சமாதனப்படுத்திக் கொண்டு, அலைபேசியில் பாட்டு போட்டுவிட்டார்.
பபப பப்பாப பப்பாப பாபப
பபப பப்பாப பப்பாப பா….
பபப பப்பாப பப்பாப பாபப
பபப பப்பாப பப்பாப பா….
இரவு நிலவு உலகை ரசிக்க நினைத்தது…
ஜொலிக்கும்…
சிறகை விரித்து தரையில் இறங்கி நடந்தது…
கால்களில் தாளம் போட்டபடி இரவு நிலவு பாடலை ரசித்தார் அந்தப் பாட்டி!