Kathambari Novels
அத்தியாயம் – 28
தோர்ஸோதுரோ செஸ்டேரி, திலீப் வீடு!
கீர்த்தி கிளம்பிப் போனதும் சுரேஷ் வேகமாக எழுந்து ராதிகா, பாலு முன் வந்து நின்று “எதுக்கு அவ வீட்டுக்குப் போனீங்க?” என்று கோபமாகக் கேட்க, பாலுதான், “என்னப்பா இப்படிக் கேட்கிறீங்க, எங்களுக்கும் அவமேல கோபம் இருக்கும்ல” என்றான். ராதிகாவோ எதுவும் சொல்லாமல் நின்றார்.
“சும்மா கோபப்பட்டுப் பேசறதால ஒரு பிரயோஜனமும் இல்ல” என்றுவிட்டு, மனைவியிடம், “நீ என்ன பண்ணிருக்க தெரியுமா, நீயும் பேசி… உனக்குச் சரிசமமா அவளையும் உன்னய பேச வச்சிருக்க. அவ நிலைமைக்கு அவளாம் நம்மள பேசறதுக்கு விடலாமா சொல்லு” என்றார். அடுத்து, “சரி, அவளைத் திட்டப் போனேல, அப்புறம் ஏன் திலீப்ப திட்டின” என்றார்.
“எனக்கு அவன் மேலயும் கோபம்! நான் பார்த்த பொண்ணலாம் வேண்டாம் வேண்டாம்னு சொல்லிட்டு, இவகிட்டப் போய் இப்படிக் கேட்டிருக்கான். ச்சே இவனுக்கு வேற பொண்ணே கிடைக்கலயா” என்ற ராதிகா, “எப்படியாவது சீக்கிரம் அவனுக்கு கல்யாணம பண்ணிடனும். அப்பதான் எனக்கு நிம்மதி” என்றார்.
அப்போது இஷா, “அன்னைக்கே கேட்டேன் அங்கிள், திலீப் லவ் பண்றானானு, நீங்கதான என்கிட்ட சொல்லாமா எப்படினு கேட்டிங்க. பாருங்க இப்போ என்னாச்சுனு” என்றாள்.
“இது லவ் இல்ல இஷா!” என்று சுரேஷ் சொல்லவும் … ராதிகா, “எதுவா வேணா இருக்கட்டும், ஆனா அது நடக்காது, நான் அத நடக்க விடமாட்டேன். எனக்கு என் பையன் வேணும்ங்க” என்றார்.
“இப்போ யார் இத நடத்தணும்னு நினைக்கிறா, முதல நீ இப்படிப் பேசறதை நிறுத்து” என்று சுரேஷ் ராதிகாவிடம் கோபமாகச் சொன்னார்.
“ப்பா…” என்று பாலு ஏதோ பேச வர… ராதிகா, “விடுடா, அவருக்கு என் கஷ்டம் புரியாது. அவர்கிட்ட திலீப் நல்லாதான பேசறான். என்கிட்டதான இப்படி; என்கூட அவன் சிரிச்சி பேசி… ஏன் நல்லா பேசியே எத்தனை வருஷமாச்சு, எனக்கு ஆசை இருக்காதா என் பையன் என்கிட்ட நல்லா பேசணும்னு… அவன் வாழ்க்கை நல்லபடியா இருக்கணும்னு” என்று ராதிகா அழ ஆரம்பித்தார்.
ஒருபக்கம் மகன் அழுது கொண்டிருக்கிறான். இன்னொரு பக்கம் மனைவி அழுகிறாள். பார்க்கப் பார்க்க சுரேஷிற்கு கீர்த்திமேல்தான் கோபம் கூடியது. மனைவியிடம் சாந்தமான குரலில், “நடக்கும் நீ நினைக்கிறது நடக்கும், நான் திலீப்கிட்ட பேசறேன்” என்றார்.
அழுகையினூடே ராதிகா, “நீங்க பேசறீங்களா, என்ன பேசுவீங்க? கீர்த்திகிட்ட இப்ப சொன்னீங்களே… திலீப்கிட்ட பேசாதனு, அதேமாதிரி அவன்கிட்டயும் சொல்வீங்களா… சொல்ல முடியுமா உங்களால” என்று கேட்டார்.
“இவகிட்ட பேசின மாதிரி ஏன் பேசணும், திலீப்கிட்ட எப்படிச் சொல்லணுமோ அப்படிச் சொல்லி, புரிய வைக்கிறேன்” என்றதும் ராதிகா ‘திலீப் கேட்பானா?’ என்ற பார்வை பார்க்க, “நான் பார்த்துகிறேன் ராதிகா, இதுலருந்து எப்படி அவனை வெளிய கொண்டு வர்றதுனு எனக்குத் தெரியும். நீ அழாத” என்றவர், “பார்த்துக்கோங்க” என்று இஷா பாலுவிடம் கூறிவிட்டு மாடிக்குச் சென்றார்.
மகனின் அறை வரைக்கும் சென்றவர் கதவைத் தட்டாமல் நின்றார். இப்படி நடந்த பின், இன்னும் மகனிடம் சுரேஷ் பேசியிருக்கவில்லை! மகன் இப்படிச் செய்துவிட்டானே என்ற கோபம்… ஆற்றாமை அவருக்கு! எனவே பேசுவதைத் தவிர்த்து வந்தார். ஆனால் இனிமேலும் பேசாமல் இருந்தால், சரியாக இராது என்று தோன்ற பேச வந்துவிட்டார்.
மகன் மனம் என்ன நினைக்கிறது, ஏன் இப்படிச் செய்தான் என்று தெரிய வேண்டுமெனவும் நினைத்தார். கோபம் எதுவும் காட்டாமல் நிதானமாகப் பேச தன்னைத் தயார் செய்து கொண்டு கதவைத் தட்டினார்.
அம்மாவாக இருக்குமோ என்று வந்து கதவைத் திறந்த திலீப்பிற்கு சுரேஷ் நிற்பதைப் காணவும் கண் கலங்கிவிட்டது. எல்லாவற்றையும்விட அப்பாவின் அமைதிதான் அவனை வாட்டி வதைத்தது. ‘பேசுங்க ப்பா’ என்று கேட்கவும் முடியாமல்… அப்படியே விடவும் முடியாமல் தவித்து வந்தான்.
இப்போது அப்பாவைப் பார்த்தபின்னும், ‘அவர் என்ன நினைக்கிறாரோ’ என்ற கேள்வியால் வார்த்தை வராமல் நின்றான். சுரேஷ்தான், “உள்ளே போய் நாம பேசலாம்” என்று அவனை அழைத்து வந்து, அறையிலிருந்த நீண்ட வெல்வெட் மெது இருக்கையில் மகனை அமரச் சொல்லி, அவரும் அருகே அமர்ந்தார்.
ஒருசில நொடிகள் அமைதியாக கடந்த பின் சுரேஷ், “திலீப்” என்று மகனின் கரத்தைப் பிடிக்கவும், “ப்பா, நான் பண்ணது தப்புதான், ஆனா அதுக்காக என்கூட பேசாம இருக்காதீங்க, என்னால சத்தியமா முடியல” என்று கண்ணீர் வடிக்க ஆரம்பித்தான்.
ஆறுதலாக அவன் உள்ளங்கையில் வருடிவிட்டார்.
“கஷ்டமா இருக்குப்பா, கீர்த்திகிட்ட அப்படிக் கேட்டத நினைச்சா, ரொம்பவே கஷ்டமா இருக்குது… நான் செஞ்சது பெரிய தப்பு பா” என்று வருந்தினான்.
“புரியுது, அழாம பேசு” என்று அவன் தோளில் தட்டிக் கொடுத்து, “இந்தமாதிரி அரேஞ்மென்ட் பண்றதுக்கு முன்னாடி… அவகிட்ட இதுபத்தி ஒரு வார்த்தைக் கேட்கனும்னு தோனலயா?” என்று கேட்டார்.
சில நொடிகள் அமைதியாக இருந்தான். பின், “கீர்த்திகிட்ட இப்படிக் கேட்க, கேட்க ஒரு… ஒருமாதிரி தயக்கமா இருந்தது பா” என்றான்.
“ஓ, ஆனா கேட்கவே தயக்கமா இருக்கிற ஒரு விஷயத்தை, ஏன்பா எல்லார் முன்னாடியும் சொன்ன?”
மகன் செய்ததில் துளியும் உடன்பாடில்லை என்பதை வெளிப்படுத்தும்படி அவர் குரலும், கேள்வியும் இருந்தது. அது அவனுக்கும் புரிந்தது. தலைகுனிந்து, “சொல்லிருக்க கூடாது. தப்புதான்” என்று மீண்டும் கண்கலங்கினான்.
“சொல்லாம இருக்கிறதும் தப்புதான். இத மனசில வச்சிக்கிட்டே கீர்த்திகிட்ட பேசறது, பழகிறது தப்பு!” என்றதுமே… விருட்டென்று நிமிர்ந்து, “ப்பா, அவகூட பேசறப்பலாம் இந்த எண்ணம் இருந்ததில்ல. எப்பவாது தோனும்” என்றான்.
“ஏன் அப்படித் தோனிச்சு, கீர்த்தி எதும் ஃபால்ஸ் ஹோப் கொடுத்தாளா” என கேட்ட அடுத்த நொடியே, “ச்சே ச்சே அப்படி கேட்காதீங்க பா. ஒரு பர்சென்ட்கூட அவ என்னய அப்படி நினைச்சிருக்க மாட்டா” என்றான்.
“அப்புறம் ஏன் உனக்கு இப்படித் தோனிருக்கு?” என்றதும், பதில் சொல்லாமல் அப்பாவையே பார்த்திருந்தான். “ஏதோ காரணம் இருக்கு திலீப், என்னனாலும் அப்பாகிட்ட சொல்லு” என்றார்.
அவன் பேசாமல் இருக்கவும், “அப்பா கேட்கிறேன்ல தயங்காம சொல்லு… அது என்னவா இருந்தாலும் அப்பா உன்னய புரிஞ்சிப்பேன்” என்றார்.
கண்களைத் துடைத்துவிட்டு இப்படி ஒரு எண்ணம் ஏன் வந்ததென சொல்ல ஆரம்பித்தான். “ப்பா, கீர்த்தி அம்மா இங்கதான வேலை பார்த்தாங்க. அவங்க என்னைக்காவது கீர்த்திய கவனிச்சிருக்காங்களா? அப்படி ஒன்னு நடந்ததா எனக்கு ஞாபகமே இல்ல!
ரொம்ப வேண்டாம் ப்பா… அவளுக்கு என்ன பிடிக்கும்னு தெரிஞ்சி, சமைச்சி கொடுத்திருக்காங்களா, இல்லயே? சரி ஒத்துக்கிறேன், அம்மா சொல்றததான் அவங்க சமைக்கனும்; ஆனா அவங்க நினைச்சிருந்தா அவளுக்குப் பிடிச்சத சமைச்சிக் கொடுக்க முடியாதா… அவங்க அதலாம் நினைக்கவேயில்ல.
அவங்க நிறைய கஷ்டப்பட்டிருக்காங்க, அதனால வாழ்க்கை மேல எந்தப் பிடிப்பும் இல்லாம இருந்தாங்க, ஆனா கீர்த்திக்கு? அவளுக்கு லைஃப் இப்படி இருக்கனும்னு… அம்மா நம்மள இப்படி இப்படிக் கவனிச்சிக்கனும்னு ஆசை இருந்திருக்கும்ல… அத அவங்க யோசிக்கவேயில்லயே.
அப்பா இல்லாத பொண்ணு, அவளை நல்லா பார்த்துக்கனும்னு யோசிக்கல. அப்படியொரு லைஃப்க்கு அப்புறம், இங்க கம்ஃபர்ட்டா ஃபீல் பண்ணி, இது போதும்னு இருந்திட்டாங்க. ஆனா தனக்கு அப்புறம் தன் பொண்ணு தனியா எப்படி இருப்பா… என்ன பண்ணுவானு அவங்க யோசிக்கவேயில்ல…
மொத்தத்தில கீர்த்திக்காக அவங்க எதயும் யோசிக்கல… ஆனா அப்பா, நான் இதலாம் யோசிச்சிருக்கேன். நான் இல்லனா அவளை யார் பார்த்துக்குவானு யோசிச்சி… யோசிச்சி எனக்குள்ள ஒரு பயம், குழப்பம்… அதான்பா நம்மளே பார்த்துக்கலாம்னு முடிவெடுத்து, இப்படிக் கேட்டேன்”
தன் எண்ணத்திற்கான காரணங்கள் திலீப் சொன்னபின் ஒருசில வினாடிகள் அவனிடம் நிசப்தம் மட்டுமே நிலவியது. சுரேஷ்தான், “ஏன்… கீர்த்தி அவளைப் பார்த்துக்க மாட்டாளா… அவளால முடியாதா?” என்று கேட்டார்.
“அதலாம் பார்த்துப்பா… நான் எதும் கேர் பண்ணாலும், நான் பார்த்துப்பேன் திலீப்னுதான் சொல்லுவா. எனக்குத்தான் பா அவளை அப்படியே விட பயம்! அதான் அப்படிக் கேட்டுட்டேன். ஆனா அவ லவ் பண்றானு தெரிஞ்சிருந்தா, கேட்டிருக்க மாட்டேன். நானே முன்ன நின்னு அவங்க மேரேஜ்க்கு என்ன அரேஞ்மென்ட்ஸ் பண்ணனுமோ பண்ணிருப்பேன்”
இஷா சொன்னது போல் ஏதுமில்லை. அவர் அனுமானித்தது போல் மகனுக்கு கீர்த்திமீது இருப்பது வெறும் அனுதாபமே! அது அவருக்கு சிறு நிம்மதியைத் தர, “கடைசில அம்மா சொல்ற மாதிரி, அவளைப் பார்த்துக்கிற பொறுப்ப நீ எடுத்துக்க நினைச்சதாலதான் இப்படி… இல்லயா?” என்றார்.
அதற்கு அவன் ஏதும் சொல்லவில்லை. சற்றுநேரம் அமைதியாக இருந்தான். பின், “இதலாம் கீர்த்திகிட்ட சொல்ல முடியாது, அம்மாகிட்ட சொன்னாலும் கேட்க மாட்டாங்க. உங்ககிட்டதான் சொல்ல முடியும்னு எனக்குத் தெரியும். ஆனா நீங்களும் பேசலனதும் ரொம்ப உடைஞ்சி போயிருந்தேன், இப்பதான் பரவாயில்ல ப்பா” என்றான்.
அவன் கரத்தை ஆறுதலாக தட்டிக் கொடுத்தவர், “கீர்த்திகிட்ட ஏன் சொல்ல முடியாது?” என்றார்.
“கீர்த்தி அம்மா மேல எனக்கிருக்க கோபத்தை, ஒருதடவை அவ முன்னாடியே காட்டிட்டேன். அப்ப எங்களுக்குள்ள சின்ன மிஸ்அன்டர்ஸ்டேன்டிங் வந்தது. அவளுக்கு அவங்க அம்மாவ பிடிக்கும்னு புரிஞ்சது. அதனால அதுக்கப்புறம், அவளும் சரி… நானும் சரி… அவங்க அம்மா பத்தி பேசறது இல்ல”
“கீர்த்தி அம்மாவ உனக்குப் பிடிக்கல… இதுபத்தி வெளிப்படையா உன்னால அவகிட்ட பேச முடியாது. உன் அம்மாவ நிச்சயம் அவளுக்குப் பிடிக்காது! உன் அம்மா கீர்த்திய பேசறத, அவ உன்கிட்ட சொல்றது இல்ல. அதோட அம்மாக்கு நீங்க பேசறதே பிடிக்காது. எவ்ளோ முரண்பாடு… நீ இதலாம் யோசிக்கலயா”
‘இல்லை’ என்று தலையசைத்தவன், “ஆனா வேற ஒன்னு யோசிச்சிருக்கேன். உங்களுக்கும் கீர்த்திக்கும் இருக்கிற டெர்ம்ஸ் பத்தி. ரெண்டு பேருமே எனக்கு முக்கியம். ரெண்டு பேரையும் காயப்படுத்தாம… எல்லாம் மேனேஜ் பண்ண நினைச்சேன். அது என்னால முடியாம போயிடுச்சி” என்றான்.
அவன் பேசியதை சுரேஷ் யோசித்திருக்க, “அப்பா… இதுல கீர்த்தி தப்பு எதும் இல்ல. இதுக்கும் அம்மா அவளைத்தான் திட்டுவாங்க. இதுக்கு மட்டுமில்ல, எப்பவும் அவளை ரொம்ப மோசமா பேசறாங்க!
இந்தியா போகச் சொல்றாங்களே, ஏன் அம்மாக்கு தெரியாதா… அவளோட ரிலேட்டிவ்ஸ் அவளைச் சேர்த்துக்க மாட்டாங்கனு? அவளை அவ அப்பாவ போய் தேடச் சொல்றாங்க. விட்டுட்டுப் போன ஒருத்தர எதுக்காக அவ போய் தேடனும்? அது அவளுக்குத் தேவையா?
அம்மா இதலாம் புரிஞ்சிக்க மாட்டாங்க. நீங்கதான் பா புரிஞ்சிப்பீங்க. நீங்க அம்மாகிட்ட இத எடுத்துச் சொல்லனும். இனி அம்மா கீர்த்திய எதுவும் பேச வேண்டாம்னும் சொல்லுங்க” என்று வருத்தத்துடன் கோரிக்கை வைத்தான்.
உடனே அவர் கீர்த்தியிடம் பேசியது நினைவில் வந்தது. அதைச் சொல்லவா, வேண்டாமா என்று தடுமாறினார். பின், “சரி, அம்மாகிட்ட சொல்றேன்” என்று சொல்லி, மேலும் சில நொடிகள் யோசித்து… கீர்த்தி இங்கே வந்ததை, அவர் பேசியதை மகனிடம் சொல்லிவிட்டார்.
திலீப் அமைதியாக இருந்தான்.
சுரேஷ்தான், “கீர்த்தியால உன்னய ஒருத்தன் அடிச்சிருக்கான், அத என்னால தாங்கிக்க முடியல திலீப். அந்தக் கோபத்தில அவகிட்ட அப்பா அப்படிப் பேசிட்டேன்” என்று விளக்கம் தந்தவர், தன் மகன் இதை எப்படி எடுத்துக் கொள்வானோ என்று பார்த்திருந்தார்.
அதன்பின்னும் திலீப் அமைதியாக இருந்தான்! எதுவொன்றும் கேட்கவில்லை! கீர்த்திக்காக அம்மாவை அத்தனை கேள்விகள் கேட்டவன்தான்… கீர்த்தியைப் பேசியதற்காக ரவியை அடித்தவன்தான்… ஏன் டேவிட்டைக்கூட, ‘கீர்த்தியைப் புரிந்து பேசு’ என்று சொன்னவன்தான்.
ஆனால் அப்பா என்று வரும்போது, கீர்த்திக்காக எதுவும் கேட்கவோ, பேசவோ அவனால் முடியவில்லை. அமைதியாக இருக்கத்தான் முடிந்தது.
அவன் இப்படித்தானே! இதற்கு முன்புமே அப்பாவா… கீர்த்தியா என்று வந்தால், அப்பாவிற்குத்தானே முக்கியத்துவம் கொடுத்திருக்கின்றான். இப்போதும் அதைத்தான் செய்தான்.
அக்கணம் வெனிஸ், ‘அது தவறில்லை. ஆனால் இப்படி இருக்கையில் காலம் முழுதும் அவளைக் கவனிக்க வேண்டுமென எண்ணம் ஏன்? உறுதுணையாக இருந்ததோடு நின்றிருக்கலாமே?’ என்று திலீப்பிடம் ஒரு கேள்வி கேட்டது. பதில்கூட அவனிடம் எதிர்பார்க்கவில்லை. கீர்த்திக்காக இதைக் கேட்க வேண்டுமென தோன்றியது. அதனால் கேட்க மட்டும் செய்தது.
அவன் அமைதி கண்டு சுரேஷ், “திலீப்… அப்பா” என்று விளக்கம் சொல்ல வர… அவன் மெல்லிய குரலில், “ம் புரியுது ப்பா, என்னய யாரும் எதுவும் பேசக்கூட நீங்க விடமாட்டிங்களே, அதனால என்னால உங்களைப் புரிஞ்சிக்க முடியுது” என்று அப்பாவைச் சமாதானம் செய்தான்.
சற்று யோசித்தவன், “ப்பா, கீர்த்தி அவங்க அம்மா வேலை பத்தி உங்ககிட்ட கேள்வி கேட்கிறதுல நியாயம் இல்லாம இருக்கலாம், ஆனா அதுக்குப் பதில் உங்ககிட்ட இருக்குதுப்பா!
நீங்க இதுபத்தி அவகிட்டயும் சொல்லிருக்கலாம்! சொல்லிருந்தா அவ அவங்க அம்மாகிட்ட பேசிருப்பா. ஏன் சொல்லல? வேண்டாம்னு சொன்னப்புறமும், ஒருத்தங்க வேலை செய்றாங்க. செய்யற வரைச் செய்யட்டும்… நமக்கென்ன பணம் மிச்சம்னு நினைச்சிருப்பீங்க… சரியா?” என்றான்.
அவர் ஏதோ சொல்ல வர, “விடுங்கப்பா, இது உங்க தப்பு மட்டுமில்ல. கீர்த்தி அம்மா தப்பும்தான்” என்றவன், “நீங்க ஏன்பா அவகிட்ட கடனைக் கேட்டீங்க. அது முதல கடனா? எவ்ளோ நாள் இங்க இருந்திருக்கா, அதுக்காக… இல்லனா எனக்காகவாது இந்தப் பணம் மேட்டர தூக்கிப் போடலாமே” என்றான்.
உடனே, “சரி, அவ பணம் எதும் தர வேண்டாம், நானே அவளைக் கூப்பிட்டுச் சொல்லிடறேன்” என்றவர், “இது உனக்காகத்தான்” என்றதும், அப்பாவையே பார்த்தவன், “எனக்காக நீங்க ஒவ்வொன்னும் பார்த்துப் பார்த்துப் பண்றீங்க, நான்தான் உங்களை ரொம்பக் கஷ்டப்படுத்திட்டேன்” என்று கலங்கினான்.
“விடு திலீப்… அதலாம் ஒன்னுமில்ல” என்றவர், “பதில் சொல்ல வேண்டாம். இத கேட்கனும்னு தோனுது அதனால கேட்கிறேன். கீர்த்தியைப் பார்த்துக்கனும்னு நினைச்சா… நீ மேரேஜ் பண்ணிட்டு பார்த்திருக்கலாமே” என்றார்.
“அம்மா, ஸ்டேட்டஸ் பார்ப்பாங்க. அப்போ எனக்கு மேரேஜ் பண்ணினா அந்த மெண்டாலிட்டி உள்ள பொண்ணதான பண்ணி வைப்பாங்க. அப்போ எப்படி என்னால கீர்த்திய பார்த்துக்க முடியும்… பார்த்துக்கிட்டாலும், இப்ப எனக்கும் அம்மாக்கும் எப்படி இருக்கோ அப்படித்தான இருக்கும்”
“கீர்த்தி அம்மா அவளுக்காக யோசிக்கலனு நீ சொல்ற… அந்த அம்மாக்காக அவ அவ்வளவு பேசறா. ஆனா உனக்காக யோசிக்கிற, உங்கிட்ட நல்லா பேசனும்னு நினைக்கிற உன் அம்மாகிட்ட நீ எப்படிப் பேசறனு பாரு. இப்படி அம்மாகிட்ட நீ நடந்துக்கிறது எனக்குச் சரியா படல” என்று மனைவிக்காகப் பேசினார்.
அவன் அமைதியாக இருக்கவும், “ஏன் திலீப் உன் எண்ணத்தைப் புரிஞ்சிக்கிற மாதிரி ஒரு பொண்ண லவ் பண்ணிருக்கலாமே?” என்றார் பொறுமையாக.
“கீர்த்திக்காக பார்த்து ஒரு பொண்ண லவ் பண்றது சரியா பா”
“நீ சொல்றதும் சரிதான்” என்றவர், “திலீப்! இதலாம் மறக்க உனக்கு எவ்ளோ நாளாகும்னு சொல்லு” என்றார்.
“எத ப்பா, நான் அப்படிக் கேட்டதயா?”
“ம்ம்” என்று மெல்ல தலையசைத்தார்.
“அத அப்பவே தூக்கிப் போட்டாச்சு. ஆனா கீர்த்திய என்னால அப்படி தூக்கிப் போட முடியாது. இப்ப அவளுக்கு என்மேல கோபம். பேச மாட்டிக்கிறா. ஆனா இதுவே தொடரும்னு சொல்ல முடியாது. கோபம் போனதும் பேசுவானு நான் நம்பறேன். புரிஞ்சிக்கோங்க பா” என்று தளர்ந்த குரலில் சொன்னான்.
இதற்காகவே காத்திருந்தது போல், “நான் புரிஞ்சிக்கிறேன் திலீப்! உன்னய அப்பா புரிஞ்சிப்பேன். ஆனா நீ கீர்த்திய பார்த்துக்க நினைக்கிறத, உன்னய கல்யாணம் பண்ணிக்கப் போற பொண்ணும் புரிஞ்சிக்கணும்.
முக்கியமா கீர்த்திய லவ் பண்ற பையன் புரிஞ்சிக்கனும். எனக்கென்னமோ அவன் இத புரிஞ்சிக்கிட்ட மாதிரி தெரியலனு தோனுது, அப்படி புரிஞ்சிருந்தா இந்த மாதிரிலாம் நடந்திருக்காதுல. அதனால இனி நீ கீர்த்திகிட்ட பேசறது சரியா வரும்னு அப்பாக்கு தோனல” என்றார் நிதானமான குரலில்.
அதேசமயம் அதற்குமேல் அதைப் பற்றிப் பேசாமல் நிறுத்தியும் கொண்டார்!
அப்பா சொன்னதையே யோசித்திருந்த திலீப்… சட்டென, “ப்ச், என்னாலதான் பா, கீர்த்திக்கும் அவனுக்கும் இடையில இப்படிலாம் சண்டை வந்திடுச்சு” என்று வருந்தினான்.
“எல்லா தப்பயும் உன்மேல போட்டுக்காத. அவங்க ஒருத்தர ஒருத்தர் சரியா புரிஞ்சிக்காம இருக்கப் போய்தான் சண்டை வந்திருக்கு. அவங்க மேலயும் தப்பு இருக்குது” என்று மகன் பக்கமிருந்து பேசினார்.
“கீர்த்தி… என்மேல ரவிமேல கோபப்படறது சரி. டேவிட்மேல கோபப்படறது சரியில்லப்பா. கோபத்தில் அவ எடுத்த முடிவும் தப்பு. இத அவளுக்கு எடுத்துச் சொல்லனும். ஆனா அவ என்கிட்ட பேசுவாளானு தெரியல. இப்ப என்னப்பா செய்ய” என்று இயலாமையுடன் கேட்டான்.
ரவி, டேவிட் யார் என்று கேட்டுத் தெரிந்து கொண்டார். பின் சில நிமிடங்கள் மகனையே கூர்ந்து பார்த்தார். பின், “கீர்த்தி மெச்சூர்டுனு நீ நினைக்கிறியா திலீப்?” என்று கேட்டார்.
“நிச்சயமா நினைக்கிறேன்”
“அப்ப அவளால முடிவெடுக்க முடியும். அவ ஒரு முடிவெடுத்த பின்ன, நீ என்ன செய்ய முடியும்? இங்க இருந்தப்ப அவளைப் பார்த்துக்கிட்ட, இப்ப வரைக்கும் அவளுக்கு சப்போர்ட்டா இருந்திருக்க, அதலாம் ஓகே. ஆனா இது பர்சனல். இதுல நீ தலையிட முடியாது… வேண்டாம்”
சற்றுநேரம் பேசாமல் இருந்தவன், “கீர்த்தி லைஃப் நல்லா இருக்கனும், அவ சந்தோசமா இருக்கனும்னு நினைச்சேன். ஆனா நானே அவ லைஃப் ஸ்பாயில் ஆக காரணமா இருந்திட்டேன். எப்படி இத சரி பண்ணனு தெரியாம ரொம்பக் கஷ்டமா… குழப்பமா இருக்குதுப்பா” என்றான்.
மகன் இப்படித் தவிப்பதைப் பார்த்து சுரேஷ் வருந்தி… சற்றுநேரம் எதுவும் பேசாமல் இருந்துவிட்டு, “திலீப் அப்பா ஒன்னு சொன்னா கேட்பியா” என்று கேட்க, ‘என்ன, எது’ என்று கேளாமல், “கண்டிப்பா கேட்பேன்” என்றான்.
“நாம கொஞ்ச நாள் இந்தியா போய் இருந்திட்டு வரலாம்”
“இப்பவா… ஏன்” என்றான் சிறு அதிர்ச்சியுடன்.
“ம், இங்கயிருந்தா நீ இதயே நினைச்சி கஷ்டப்படுவ. அம்மாவும் எதையாவது சொல்லிக்கிட்டே இருப்பாங்க. அதும் உனக்கு டென்சன். அங்க போனாதான், நடந்ததுலருந்து வெளிய வந்து, அத நீ மறக்க முயற்சிப்ப” என்று மகனுக்காக யோசித்துச் சொன்னார்.
அப்பா முகம் பார்த்தான். தன் செயல் அப்பாவிற்குப் பெரும் கோபத்தைத் தந்திருக்கிறது. தான் வருந்துவது அவருக்கு வேதனையைத் தருக்கிறது என்று தெரிந்தது. அதனால் அவருக்காக யோசித்து, “சரிப்பா போலாம்” என்றான்.
அடுத்து, “ப்பா… முன்னமே அம்மா என் மேரேஜ் பத்தி யோசிப்பாங்க, இப்ப அதுல இன்னும் தீவிரமா இருக்காங்க. உடனே மேரேஜ் பண்ண சொல்லி என்னய ஃபோர்ஸ் பண்றாங்கப்பா. இந்த மனநிலைல இதலாம் என்னால யோசிக்க முடியாது. நான் சொன்னா கேட்க மாட்டாங்க. நீங்க அம்மாகிட்ட திலீப்க்கு இப்ப மேரேஜ் வேண்டாம்னு சொல்றீங்களா ப்பா” என்றான்.
“இப்ப வேண்டாம்னு சொன்னா உன்னய எதும் சொல்வாங்க. இல்ல கீர்த்திய எதும் பேசுவாங்க. அம்மா உனக்காக அலைன்ஸ் பார்க்கட்டும். அத நிறுத்த சொல்ல வேண்டாம். ஆனா இந்தியா போனப்புறம்… அப்பா பொறுமையா அம்மாகிட்ட பேசி இத புரிய வைக்கிறேன்”
“ம்ம், சரிப்பா. ஆனா பிசினஸ் ஸ்டார்ட் பண்ணி வஞ்சிருக்கேனே… அவ்ளோ பணம் அதுல இன்வெஸ்ட் பண்ணிருக்கேனே… அதலாம் விட்டுட்டு இந்தியா போறதுனா… என்ன செய்யப்பா?”
“இந்தப் பணமெல்லாம் எனக்கு முக்கியமில்ல திலீப். அப்பாக்கு நீ தெளிவா, சந்தோஷமா இருந்தா போதும்” என்றவர், “நாலு நாளைக்கு அப்புறம் ட்ராவல் பண்ணலாம். அதுக்குள்ள இங்க எதும் அரேஞ் பண்ணவா… இல்ல அங்கருந்தே ஃபோன்ல எல்லாம் மேனேஜ் பண்ணவானு பார்த்துக்கலாம்” என்றார்.
அப்பாவைப் பார்த்தான் திலீப். எப்போதும் போல் அவர் வார்த்தைகள் அவன் மனதைச் சற்றுச் சாந்தப்படுத்தியது! ஒவ்வொரு பிரச்சனையாக சொல்லச் சொல்ல அப்பா எளிதாக தீர்வு சொல்வது போல் அவனுக்கு இருந்தது. மனம் வருந்தி, “சாரி ப்பா, உங்கள ரொம்பக் கஷடப்படுத்திட்டேன்” என்றான்.
“இந்த மாதிரி பண்ணுவனு அப்பா நினைச்சிக்கூடப் பார்க்கல திலீப், ஆனா பண்ணிட்ட. அதுக்காக அதயே யோசிக்காத” என்றதும், அப்பாவின் தோளில் தலை சாய்த்தான்! மகனை ஆறுதலாக அரவணைத்துக் கொண்டார்!
மகனிற்கு இது கஷ்டமான நேரம் என்று சுரேஷிற்குப் புரிந்ததால், அவரும் எப்போதையும் விட அதிகமாகவே அவனைத் தாங்கிக் கொண்டார்.
இதே நேரத்தில் இப்படித் தாங்கிப்பிடிக்க இருந்த தந்தையை இழந்து, அந்த இழப்பில் தவித்திருந்து, பின்னர் அதிலிருந்து மீண்டு வந்த டேவிட், திரும்பவும் தவித்துக் கொண்டு வந்தான். நேரம் பத்தரையைக் கடந்திருந்தது. எனினும் வீட்டிற்குப் போகாமல் வெனிஸ் வீதிகளில் அலைக்கழிந்து கொண்டிருந்தான்.
எப்போதோ நடக்க ஆரம்பித்திருந்தான். கால்கள் வலிக்க இன்னும் நடந்து கொண்டிருக்கின்றான். மழை வேறு பெய்தது. நனைகின்றோமே வீட்டிற்குப் போகலாம் என்றோ, எங்காவது ஒதுங்கி நிற்கலாம் என்றோ தோன்றாமல் நடந்து கொண்டிருந்தான்.
வெகுநேரத்திற்குப் பின் கேஃபேக்கே வந்தவன், ஒர்க் ஏரியா சென்று அமர்ந்து கொண்டான். எந்த விளக்குகளும் போடாமல் இருட்டில் இருந்தான். இரவின் இருள் அவன் இழப்புகளை எல்லாம் இழுத்து வந்து காட்டியதில், மனம் பெரிய அழுத்தத்தைச் சந்தித்ததுக் கொண்டிருந்தது.
மீண்டும் எந்த அழுத்தத்திற்குள்ளும் மனம் போய்விட வேண்டாமேயென்று வெகுவாகப் போராடினான். ஆனால் அது முடியாமல் போக, அதை எப்படிச் சமாளிக்க என்று தெரியாமல் தனியாகத் தவிதவித்துக் கொண்டிருந்தான்.
அக்கணம் அவனுக்கு ஓர் அலைபேசி அழைப்பு வந்தது!