Kathambari Novels
அத்தியாயம் – 8 [ Mini Episode]
டேவிட் அழைத்ததும், ‘என்ன?’ என்று கீர்த்தி பார்க்க, “டென் யூரோ எக்ஸ்ட்ரா கொடுத்திருக்கீங்க” என்று அவள் தந்த மீதி பணத்திலிருந்து பத்து யூரோவை திருப்பித் தர, “ஓஹ் சரியா பார்க்கலை” என்று சிறு புன்னகையுடன் வாங்கிக் கொள்ள, ஒன்றும் சொல்லாமல் அவன் சென்றுவிட்டான்.
****************************
அது ஒரு மாலைநேரம்!
குறுகிய கால்வாய் ஒன்று! ஒருபக்கம் கட்டிடங்கள்! நடைபாதையுடன் இருந்த மறுபக்கத்தில் உணவகங்கள் இருந்தன! அதன் வெளிப்புறத்தில் சதுர வடிவ மேசைகள், நாற்காலிகள் போடப்பட்டிருந்தன! அதில் அமர்ந்து கேன்டோலா போவதையும் வருவதையும் பார்த்தபடி மக்கள் உண்டனர்!
அந்த மக்களில் டேவிட், ரவி, மதுவும் இருந்தனர்!!
செயல்திறனுக்குத் தேவையான பொருட்களை வாங்கிய பின், ‘மூனு பேருமா ரெஸ்டாரன்ட் போய் ரொம்ப நாளாச்சு, போகலாமா?” என்று டேவிட்டிடம் மது கேட்டிருந்தாள். அவனும் சரியென்றிருக்க, இங்கே வந்திருந்தனர். இப்போது அவரவருக்குப் பிடித்ததை வரவழைத்து உண்டு கொண்டிருந்தனர்.
உணவை சாப்பிட்டபடி ரவி, “டேவிட், எங்க அனிவெர்சரி வருதுடா. ஃபர்ஸ்ட் அனிவெர்சரி! செலிப்ரேட் பண்ணலாம்னு நினைக்கிறேன். உனக்கு எப்படி, ஓகேவா?” என்று நண்பனின் மனநிலையை கருத்தில் கொண்டு கேட்டான்.
மது ஒன்றும் சொல்லவில்லை. அவளுக்குச் சிறிய அளவிலாவது கொண்டாட வேண்டுமென தோன்றியது. கூடவே டேவிட் இப்போதுதான் தேறி வருகிறான். இந்தநேரத்தில் எதுவொன்றும் அவன் முயற்சிகளைப் பாதித்து விடக்கூடாது என்றும் தோன்றியது. அதனால் எதுவும் பேசவில்லை.
இப்படிக் கேட்டுவிட்டு ரவியும் பேசாமல் இருந்தான்.
முள் கரண்டியில் உணவை எடுத்தபடி யோசித்திருந்த டேவிட், “உங்களுக்காக நான்தான் இத யோசிச்சிருக்கணும். பட் என்னால யோசிக்க முடியல” என்று வருந்தியவன், “நீ பார்ட்டி அரேஞ் பண்ணுடா” என்றான் ரவியைப் பார்த்து.
இப்போதும் மது ஒன்றும் பேசவில்லை! முகத்தில் சிறு புன்னகை தவழ்ந்தபடி மீண்டும் உணவை உண்ண ஆரம்பித்தாள்!
ஆனால் ரவி பேசினான். டேவிட் மாற்றம் கண்ட மகிழ்வில் சிரித்து, “சிம்பிளா நடத்தலாம். அம்மா, அப்பா, ரிலேட்டிவ்ஸ், அப்புறம் இங்க இருக்க குளோஸ் ஃப்ரண்ட்ஸ் மட்டும் இன்வைட் பண்ணலாம்” என்றான்.
சாப்பிட்டபடி டேவிட், “ம்ம்” என்று தலையாட்ட… அந்தநேரம் மது, “பார்ட்டிக்கு கீர்த்தியையும் இன்வைட் பண்ணலாமா?” என்று கேட்டாள்.
கீர்த்தியால்தானே டேவிட்டிடம் இத்தனை மாற்றங்கள். அதனால் தங்களின் சந்தோஷ நிகழ்வில் கீர்த்தியும் கலந்து கொள்ள ஆசைப்பட்டே, மது இப்படிக் கேட்டிருந்தாள். ஆனால் கேட்டபின்தான் ‘ரவி என்ன நினைப்பானோ?’ என்ற கேள்வி வந்திருந்தது.
அவள் கேள்விக்கான பதில் போல், ‘ப்ச் அவ எதுக்கு?’ என்று ரவி முகம் மாறி இருந்தது. அவன், ‘வேண்டாம்’ என்று சொல்ல வந்த நேரம், “ம் அவங்களையும் இன்வைட் பண்ணலாம்” என்றிருந்தான் டேவிட்.
மதுவிற்கு என்ன சொல்லவென்றே தெரியவில்லை. பேசாமல் இருந்தாள். டேவிட் சொன்னதை மீறி, ரவிக்கு எதுவும் சொல்ல விருப்பமில்லை. இருந்தும் அழைக்க வேண்டிய நபர் கீர்த்தியாகப் போனதால், “டேவிட்… கீர்த்திய எதுக்கு இன்வைட் பண்ணனும்?” என்றான் மெதுவாக.
“ஷீ இஸ் மை தெரபிஸ்ட் அன்ட் ஆல்சோ எ நைஸ் பெர்சன்! அதான் மது சொன்னதும், இன்வைட் பண்ணலாம்னு தோனிச்சி” என்று மட்டும் டேவிட் சொல்ல, “சரி, இன்வைட் பண்ணிடலாம்” என்று ரவி ஒத்துக் கொண்டான். ஆனால், ‘வீட்டுக்கு வா உனக்கு இருக்கு’ என்பது போல் மதுவை முறைத்துப் பார்த்தான்.
அதன்பின் கொண்டாட்டம் பற்றி பேசியபடி சாப்பிட்டு முடித்ததும், மூவரும் வீட்டிற்கு நடக்கலாயினர். சான் போலோ சதுக்கம் வந்ததும் டேவிட், ‘எனக்கு ஆக்ட்டிவிட்டி பண்ணனும்’ என்று மேலே சென்றுவிட்டான்.
கதவைத் திறந்து மது உள்ளே போனதும்… பின்னேயே வந்த ரவி, “இப்ப ஏன் கீர்த்திய இன்வைட் பண்ண சொன்ன? நம்ம அனிவெர்சரி பார்ட்டிக்கு அவ எதுக்கு?” என்று அவள் கைப்பிடித்து நிறுத்திக் கோபத்தில் கத்தினான்.
திரும்பி அவனையே பார்த்தபடி… மது அமைதியாக நின்றாள்.
“கேட்கிறேன்ல… பதில் சொல்லு” என்றான் சன்னமான குரலில்.
இன்னும் அவன் முகத்தியே பார்த்திருந்தவள், “ஐ லவ் யூ ரவி” என்றாள்.
லேசாகத் தடுமாற, “நான் என்ன கேட்கிறேன், நீ என்ன சொல்ற” என்றான் சற்று குறைந்து போன குரலில்.
“ஐ லவ் யூ ரவி” என்றாள் திரும்பவும்.
அழுத்திப் பிடித்திருந்த அவள் கையை விட்டுவிட்டு, “நான் பேசறது என்ன… நீ சொல்றது என்ன?” என்றான் இன்னும் குறைந்த குரலில்.
“ஐ லவ் யூ… ஐ லவ் யூ… ஐ லவ் யூ…” என்றாள் புன்னகையுடன்.
இப்படிப் பேசினால் எப்படிக் கோபப்பட என்று நொந்தவன், “இப்போ எதுக்கு இது?” என்றான் இன்னும் குறைந்த குரலில்.
“எனக்கு உன்கூட சண்டை போட இஷ்டமில்ல. நான் சந்தோஷமா இருக்கேன். அதனால… வேண்டாம்னா போ” என்று சமையலறைக்குச் சென்று, பாத்திரம் கழுவும் இயந்திரத்திலிருந்து பாத்திரங்களை எடுத்து வைத்தாள்.
அவள் பேசிய விதத்தில் சில நொடிகளில் ரவிக்கு புன்னகை வர, “மது” என்று அழைத்தபடி சமையலறை வந்தவன், அவளைத் தூக்கி சமையல் மேடையில் அமரவைத்துவிட்டு, “எதுக்கிந்த சந்தோசம்?” என்றான்.
“நீ அனிவெர்சரி செலிப்ரேட் பண்றதா சொன்னதுக்கு”
சமையல் மேடையில் ஏறி அவளருகில் அமர்ந்துகொண்டு, “நீ ஏதாவது பிளான் வச்சிருந்தியா” என்று கேட்க, “வருதுனு தெரியும்… ஆனா செலிபிரேஷன் பத்தி யோசிக்கல” என்றாள்.
அவன் ஏதும் சொல்லவில்லை. ஆனால் அவள் தோளில் சாய்ந்து கொண்டான். “ரவி… கீர்த்தியாலதான டேவிட்கிட்ட இவ்ளோ சேஞ்சஸ். அதான் அவங்களை இன்வைட் பண்ண நினைச்சேன்” என்றாள்.
“எந்த தெரபிஸ்ட்கிட்ட ட்ரீட்மென்ட் எடுத்துக்கிட்டாலும் அவன்கிட்ட சேஞ்சஸ் வந்திருக்கும்” என்று ரவி பட்டென சொல்ல, “கரெக்ட், எந்த தெரபிஸ்ட்னாலும் நான் இன்வைட் பண்ணிருப்பேன்” என்றாள்.
தலையை மெல்ல நிமிர்த்தி, “ஆனா நான் கீர்த்திங்கிறதுக்காக மட்டும்தான் இன்வைட் பண்ண வேண்டாம்னு நினைச்சேன்” என்றான்.
“ஏன் ரவி இவ்ளோ கோபம்?”
“எனக்கு மேனர்ஸ் இல்லைனு சொல்லிருக்கா… டேவிட்காக வாங்க நினைச்ச கிஃப்ட் உடைஞ்சிருச்சேன்னு கோபப்பட்டா, பணத்துக்காக பார்க்கிறியானு கேட்டுக்கிட்டு நிக்கிறா!
இதலாம் விட… என் ஃபிரன்ட்ஷிப்ப விட இவ கிளைன்ட் ரிலேஷன்ஷிப் பெருசுனு பேசறா! இவளுக்கு என்ன தெரியும் என் ஃபிரென்ட்ஷிப் பத்தி, அதபத்தி ஏன் கமெண்ட் பண்றா? அதான் கோபம்… அந்தக் கோபம் இன்னும் இருக்கு”
மது அமைதியாக இருந்தாள்.
ரவியே, “இங்க பாரு… இத உனக்காகவும், டேவிட்க்காகவும்தான் சொல்றேன். நீங்க அவளை இன்வைட் பண்ணிக்கோங்க. நான் வர மாட்டேன்” என்றதும், அவன் சம்மதித்ததே போதுமென, “சரி” என்று இறங்கப் போனாள். .
“இரு, எங்க போற” என்று அவளை இறங்கவிடாமல் பிடித்து, “அனிவெர்சரி டே-க்கு என்ன கிஃப்ட் வேணும்னு சொல்லு” என்று மீண்டும் அவள் தோளில் தலை சாய்த்துக் கொண்டான்.
கேட்ட அடுத்த நொடியே, “நீ சிம்பிளா செலிப்ரேட் பண்ணலாம்னு சொன்ன, ஆனா ரவி எனக்கு என்னோட அம்மா, அப்பா, அண்ணா, அண்ணியையும் வர சொல்லணும்” என்றாள்.
“அதலாம் நான் பார்த்துப்பேன். உனக்கு என்ன வேணும்னு சொல்லு”
“அதுவே போதும்”
“போதுமா… உனக்காக எதும் கேளு மது”
“எனக்காகத்தான் கேட்கிறேன், எல்லாரையும் மிஸ் பண்றேன், அவங்க வந்தா, சூப்பரா இருக்கும்! நான் அவங்களோட எவ்ளோ அட்டாச்சுடு தெரியும்ல ரவி”
சிறு பொறாமையில், “தெரியும் தெரியும்” என்றவன், “ஓகே, நானே யோசிச்சி கிஃப்ட் பண்ணிக்கிறேன்” என்று சொல்லிவிட்டு… ஆசையாக, “மது, உனக்கு நான் எப்படினு சொல்லேன்” என்று கேட்டான்.
“என்ன திடீர்னு?”
“சொல்லேன்”
“ஏற்கனவே நிறைய டைம் சொல்லிருக்கேனே ரவி” என்று மது சொல்ல, “ஏன் திரும்பச் சொன்னா என்ன… உன்கிட்ட நான் கேட்ருக்கவே கூடாது” என்று படபடவென சொல்லி பட்டென்று இறங்கிப் போனான்.
‘அச்சச்சோ மறுபடியுமா?’ என்று நொந்தவள், “ரவி… ரவி நில்லு” என்று அவன் குறுக்கே போய் நின்று, “ஐ லவ் யூ ரவி” என்று சொல்லிப் பார்த்தாள்.
“சந்தோசத்துல சொல்றியா, இல்ல என்னய சமாதானப்படுத்த சொல்றியானு தெரியாதுனு நினைச்சியா?” என்று கேட்டதில், அவளுக்குச் சிரிப்பு வந்தது, சிரித்துவிட்டாள். “எதுக்கு இப்ப சிரிக்கிற?” என்று கேட்க, “ஐ லவ் யூ ரவி” என்று இன்னும் சிரித்தபடி அவன் மேல் சாய்ந்தாள்!
சாய்ந்தவளைச் சந்தோசமாக அணைத்துக் கொண்டு, அவனுமே சிரித்தான்! ஏனெனில் அவனுக்குத் தெரிந்தது… அவள் எவ்விதமாகச் சொல்கிறாளென!!
********************************
இரண்டு நாட்கள் கழித்து, இரவு பொழுது!
தோர்ஸோதுரோ செஸ்டரியில் கட்டிடங்களுக்கு இடையே அமைந்திருந்த ஒரு ஸ்னாக் பார்! இரவு நேர மஞ்சள் விளக்கொளியில் இருந்தது!
திலீப் முன்னிருந்த பீங்கான் தட்டு… சின்னஞ்சிறிய சாண்ட்விச், கடல் உணவு, வேகவைத்த காய்கறிகள், அவித்த முட்டை, சில காய்கறிகள் வைக்கப்பட்ட ரொட்டித் துண்டு என்றிருந்தது.
எதையும் உண்ணாமல், கீர்த்தி சொன்னதைப் பற்றியே யோசித்திருந்தான். அவளும் அங்கேதான்… அவனுக்கு எதிரேதான் அமர்ந்திருந்தாள். வரவழைத்த உணவை உண்டபடி, மதுவின் மணநாள் கொண்டாட்டத்திற்கு தன்னையும் அழைத்திருப்பதை அவனிடம் சொல்லியிருந்தாள்.
திலீப்பின் யோசிப்பு அதற்காவே! யோசித்து முடித்துவிட்டு, “இதுக்கு நீ போக வேண்டாம் கீர்த்தி… போகத் தேவையில்ல” என்றான்!!