Kathambari Novels
அத்தியாயம் – 37 (final)
ஒரு வாரம் கடந்திருந்தது.
கீர்த்தியிடம் நிறைய மாற்றங்கள் இந்த நாள்களில். கைக்காயம் நன்றாகவே குணமாகியிருந்ததால், அவளிடம் சோர்வு சிறிதும் இல்லை. அவள் சோர்ந்தும் இருப்பதில்லை. பலநேரங்களில் முன்போல் பேச்சுகள் எட்டிப் பார்த்தாலும், புன்னகையும் இல்லை… கண்ணீரும் இல்லை என்றுதான் இருக்கிறாள்.
ஆனால் சிலசமயங்களில் மட்டும் நடந்ததை எண்ணி சற்று வருந்துகிறாள்!
அது டேவிட் மனதை வருத்தினாலும், அவன் அதை வெளிப்படுத்துவதில்லை. அவள் என்ன உணர்வை வெளிப்படுத்தினாலும், அதை ஒரு புன்னகையோடு ஏற்றுக் கொள்கிறான். அவள் காயங்கள் ஆறி வருவதில், பலசமயங்களில் அவள் முன்போல் அவனுடன் பேசுவதில் அவனுக்கு நிம்மதியே.
ஆனால் இன்னும் அவளது சிறு புன்னகைக்காக, அவளுக்குப் பரிசு வாங்கிக் கொடுத்திடும் நாளிற்காகக் காத்திருக்கின்றான்.
அன்று ஞாயிறு. மாலையை நோக்கி நாள் சென்று கொண்டிருந்தது.
கீர்த்தி உறங்கிவிட்டதால், டேவிட் படம் பார்த்துக் கொண்டிருந்தான். 2018-ல் வெளியான இத்தாலிய மொழி படம் தொலைக்காட்சிப் பெட்டியில் ஓடியது. சற்றுநேரத்தில் தூங்கி எழுந்து வந்த கீர்த்தி… ஓய்விருக்கையில் அவனருகில் அமர்ந்து, “மார்க்கெட் சைட் போலாமா” என்றாள்.
படம் பார்த்தபடியே, “வெஜ், ப்ரூட்ஸ் ஸ்டாக் பண்ணிருக்கேன். இன்னைக்கு வேண்டாம், இன்னொரு நாள்” என்றான். அவளும் சரியென்றாள். சிறிது நேரம் சென்றதும் அவனுக்கு ஏதோ பொறி தட்ட, “ஷாப்பிங் போக கேட்டியா, பர்த்டே கிஃப்ட் வாங்க” என்று பெரும் ஆவலோடு கேட்டான்.
“ம்” என்றாள் அவன் கண்கள் பார்த்து. “குட்டி குட்டியா நீ ஆசைப்பட்ட மாதிரி கிஃப்ட்ஸ்” என்று கேட்க, ஒன்றும் சொல்லாமல் அவனையே பார்த்திருக்க, “ஐ வாஸ் வெயிட்டிங் ஃபார் திஸ்” என்றவன், “போலாம்” என்று எழுந்தான்.
‘இது’ என்பது போல் அவள் படத்தைக் காண்பிக்க, “வந்து பார்த்துக்கிறேன், வா” என்று அவளைக் கூட்டிக் கொண்டு கிளம்பினான். சற்று நேர நடைக்குப் பின், இருபுறமும் கடைகள் இருக்கும் பகுதிக்கு வந்திருந்தார்கள்.
‘என்ன வாங்க ஆசை’ என்பது போல் அவளைப் பார்த்தபடியே கடைவீதியில் நடந்தான். அமைதியாக நடந்து வந்தவள், ஒரு கடை முன் வந்து நின்று, ‘இங்க பார்க்கலாமா’ என்று அவனைப் பார்த்தாள். “ம்ம்” என்று கோர்த்திருந்த அவள் கையை விட்டதும், கடைக்குள் நுழைந்தாள். அவனும் சென்றான்.
வாங்கும் பொருட்களை வைக்க சிறு மூங்கில் கூடையை ஏந்திக்கொண்டு, அவளுடனே நடந்தான் டேவிட். அவள் ஒரு பொருளை நின்று பார்த்தாலே, “ம்ம் வாங்கிக்கோ, நல்ல செலெக்ஷன்” என்றான். அவளோ பொருட்களை எடுத்துப் பார்ப்பதும், திருப்பி வைப்பதுமாகவே இருந்தாள்.
சற்றுநேரம் இப்படியே போனது. அந்தநேரம் அவளுக்காக அவனாக ஏதாவது வாங்கிப் பரிசளிக்க விருப்பப்பட்டவன், “நீ பாரு கீர்த்தி, நான் அந்த சைட் இருக்கேன்” என்று சென்றான். பத்து நிமிடங்களில் ஒரு பரிசை வாங்கிவிட்டு, ‘என்ன செய்கிறாள்’ என்று அவள் நின்றிருந்த பக்கம் பார்த்தான்.
அங்கே முகத்தில் சிறு கீற்றாய் புன்னகையோடு அவள் நின்றாள். ஏதோ ஒரு பொருளைப் பார்த்துப் புன்னகைப்பது போலிருந்தது.
இத்தனை நாள்கள் கழித்து அவள் புன்னகைக்கிறாள் என்று அவன் இதயம் இன்பகீதம் வாசித்தது. ஆனால் அவனோ, ‘நான் முயற்சிக்கும் போதெல்லாம் புன்னகை செய்யாமல் இது என்ன?’ என்று பொறாமை கொண்டான்.
வேகமாக கீர்த்தியின் அருகே வந்து நின்றான். அவன் வந்து நின்ற பின்னும், கையிலிருந்த பொருளைப் பார்த்து புன்னகை முகமாக நின்றாள். அவளது கைக்கு பார்வையை நகர்த்தியவனுக்கு, ‘ப்ச் என்ன இது?’ என்று முதலில் ஒரு சலிப்பு. அடுத்து உடனே ஒரு குறுஞ்சிரிப்பு.
காரணம், கீர்த்தி கையிலிருந்தது… அவள் பெயரின் முதலெழுத்து கொண்ட ஒரு சாவிக்கொத்து!
“இது ஏன்?” என்றான். “வேண்டாம்!” என்றான். “வேற பாரு!” என்றான். ஆனால் எல்லாம் ஒரு புன்னகையோடு, அவள் புன்னகைக்கிறாள் என்ற பூரிப்போடு!
அவள், ‘மாட்டேன்’ என்ற பொருளில் அவனைப் பார்த்துவிட்டு, அதை அவன் வைத்திருந்த கூடையில் போட்டாள். “இது வேண்டாம், வேற பாரேன்” என்று கெஞ்சலோடு கேட்க, “உனக்கு இப்படித்தான பிடிக்கும், இதுவே இருக்கட்டும், எனக்கு இதான் வேணும்” என்றாள் இமையோரத்தில் சிறு கேலி வெளிப்பட.
“ஏன் கீர்த்தி… எவ்ளோ இருக்கு, வேற பாரு” என்றான் சிறு கண்டிப்போடு.
அவன் குரலினால் விளைந்த விரிந்த புன்னகையுடன், அதே போன்று வேறு மாதிரிகளிலிருந்த சாவிக் கொத்துகளையெல்லாம் கடகடவென்று எடுத்துக் கூடையில் போட்டுவிட்டு, அவன் முகம் பார்த்தாள்.
கண்டிப்பை அதிகரிப்பான் என்று பார்த்தாள். அவனோ காதலோடு அவளைப் பார்த்துக் கொண்டிருந்தான். “சும்மாதானு புரிஞ்சிடுச்சா” என்று கண்கள் சுருக்கிக் கேட்டாள். ‘அய்யோடா’ என்று ஒரு முகமொழி. தோள்களை மெல்ல சுருக்கி மென்னகையுடன் எடுத்ததை அதது இடத்தில் திரும்ப வைத்தாள்.
பின், ‘ம்ம், வேற பார்க்கலாம், வா’ என்பது போல் அவனைப் பார்த்தாள்.
அவள் செயல்களைப் பார்த்திருந்தவன், “தேட் வாஸ் ஸோ க்யூட்” என்று அவள் முகத்தை அவன் முகத்தின் அருகே கொண்டு வந்து… நெற்றி முத்தம் ஒன்றை வைத்தான். அவன் செயலும் அவள் செயலைப் போன்று அழகாக இருந்தது.
அந்தக் கடையிலும்… அதற்கடுத்து சில கடைகளிலும் அவள் ஆசைப்பட்டது போல் கைக்குள் அடங்கிவிடும் சிறுசிறு பரிசுகளை வாங்கிக் கொடுத்ததில், காதல் கொண்ட கையளவு இதயமானது காற்றில் பறந்தது அவனுக்கு!
அடுத்து அவர்கள் சென்ற கடையில், பிப்ரவரி மாதம் நடக்கும் ‘வெனிஸ் கார்னிவெல்’ விழாவிற்கான முகமூடி விற்பனை தொடங்கியிருந்தது. அதைப் பார்த்ததும், கீர்த்தி அதையும் வாங்கிட ஆசைப்பட்டு அவனைப் பார்த்தாள். ‘எதுனாலும் வாங்கிக்கோ’ என்ற உடல்மொழியுடன் நின்றான்.
அது புரிந்தவள் சரியென தலையசைத்து, வண்ணமயமான, கலைநயமிக்க முகமூடிகளை ஒவ்வொன்றாக முகத்தில் வைத்துப் பார்த்துவிட்டு… எதுவும் தேர்ந்தெடுக்க முடியாமல், “எது என் ஃபேஸ்க்கு சூட் ஆகுதுனு சொல்லேன்” என்று டேவிட்டைப் பார்க்க, அவன் சிரித்தான்.
“எதுக்கு சிரிக்கிற?” என்று அவள் கேட்க, “ஃபேஸ் ஃபுல்லா மறைக்கிற மாதிரி செலக்ட் பண்ணிட்டு இப்படிக் கேட்டா, வாட் டு சே?” என்றதும், மட்டியைக் கடித்துச் சிரித்தாள்.
மறுமுறை சிரிக்கிறாள் என்றதில் அவன் மனம் சிறுகணம் சிரித்தே இருந்தது.
ஒவ்வொரு முகமூடியாகப் போட்டு, அதை அவன் அலைபேசியில் புகைப்படம் எடுக்கச் சொன்னாள். பின் அலைபேசி வாங்கி எடுத்து புகைப்படங்களைப் பார்த்தவள், வெள்ளை நிற பாரம்பரிய முகமூடி, பெண்கள் அணியும் கருப்பு வர்ண முகமூடியைத் தேர்ந்தெடுத்து, அவனிடம் சொன்னாள். அவன் அதை வாங்கியதும், மீண்டும் கடைத்தெரு வழியே நடக்க ஆரம்பித்தார்கள்.
நடந்து வருகையில்… “ஃபோன்” என்று அலைபேசியை டேவிட் கேட்க, “இரு இப்போ எடுத்த போட்டோஸ டெலீட் பண்ணிட்டுத் தர்றேன்” என்று சொல்ல, “வேண்டாம், கொடு” என்று அவன் வாங்கிக் கொள்ளவும், “அதுல என் முகமே தெரியல” என்றாள் அவன் எதற்காக வேண்டாம் என்கின்றான் என புரிந்து.
விரிந்த புன்னகையுடன், “பட், அது நீதானு எனக்குத் தெரியுமே” என்றதும், மீண்டும் அவள் புன்னகைப் புரிந்தாள். தொடர்ந்து அவள் புன்னகைப்பதைப் பார்க்கப் பார்க்க, இத்தனை நாள்கள் அதற்காகவே காத்திருந்த அவன் மனம் இன்று களிப்படைந்த வண்ணமே இருந்தது.
அடுத்தும் வெனிஸ் நகர வீதிகளில் அவனது கைகோர்த்தபடி வலம் வந்து, கைகொள்ளா பரிசுகளை வாங்கிருந்தாள்.
சற்று நேரத்திற்குப் பின், வெனிஸின் மிகமிகக் குறுகிய தெருவான காயே வரிஸ்கோ (Calle Varisco)-வின் முடிவில் இருக்கும் கால்வாய் படிக்கட்டில் கீர்த்தி இருந்தாள். சிலநொடிகளில் அவளுக்காக ப்ரௌவ்னி வாங்கிவிட்டு வந்தவன், அவள் அமர்ந்திருக்கும் விதம் பார்த்து, “கேர்புல்” என்று அதைத் தந்தான்.
“ம்” என்று வாங்கி கொண்டாள். அவன், “காஃபி” என்று காகித கோப்பையை நீட்டினான். “நீ போட்டுத் தர்ற காஃபிதான் வேணும்” என்றாள். “வீட்டுக்குப் போய், இப்போ இது” என்று சொல்லவும், வாங்கிக் கொண்டாள்.
வாங்கி வந்திருந்த குளிர்பானத்தைக் குடித்தபடியே அவனும் அந்தச் சந்துப் பாதையில் அமர்ந்து கொண்டான். ஆள் அரவமற்று அமைதி வியாபித்திருந்த சூழலில் அவளையே பார்த்திருந்தவன், “ஆஃப்டர் எ லாங் கேப், உன் முகத்தில இன்னைக்கு ஸ்மைல் பார்த்தேன்” என்றான்.
கீற்றாய் புன்னகை உதயமாக ஒருமுறை அவனை நிமிர்ந்து பார்த்துவிட்டு காஃபியைக் குடித்தாள். “இனி இப்படியே இருக்கனும்” என்று விருப்பமாய் ஒரு வேண்டுகோள் வைத்தவன், ஏதாவது பேசுவாள் என்று எதிர்பார்க்க, அவளோ அடர் அமைதியுடன் அமர்ந்திருந்தாள்.
“பேசு கீர்த்தி, ஏன் சைலன்ட்டா ஆகிட்ட” என்றான்.
“நீ பேசு” என்று மட்டும் சொன்னாள்.
“ஏன், நான் பேசினா லெக்ச்சரிங் மாதிரி இருக்குனு டீஸ் பண்றதுக்கா” என்று, மீண்டும் ஒரு சிறு கேலி பேச்சு… மீண்டும் ஒரு சிறு விளையாட்டு வார்த்தை அவளிடமிருந்து வந்துவிடாதா என்று எதிர்பார்த்துக் கேட்டிருந்தான்.
புன்னகை மறைந்துவிட சிலநிமிடங்கள் யோசனையாக இருந்தாள். அதன் பின்னும் ஒன்றும் பேசவில்லை. அவள் முகத்தில் பிரிவு வலியின் சாயல்கள் சற்று வந்திருக்க, “நீ பேசு டேவிட், நான் கேட்கிறேன்” என்றாள்.
“நான் எப்பவும் ஒரு குவஸ்ட்டின் கேட்பேனே, என்னய போரிங் பெர்சன்னு சொல்வியானு, அதுக்கு ஆன்சர் பண்ணு, பேசறேன்”
சில நொடிகள் அவன் விழிகளைப் பார்த்திருந்தவளின் விழிகளில் விழிநீர் மெல்லிய படலமாய் சேர்ந்திட, “நீ இல்லாமதான் டேவிட், லைஃப் போரிங்கா இருந்தது” என்றுவிட்டு, முட்டியில் முகம் புதைத்து கால்வாய் நீரோட்டத்தை பார்த்திருந்தாள்.
நடந்ததை நினைத்துவிட்டாள் என்று புரிந்ததும்… ஒரு நெடுமூச்சு எடுத்துக் கொண்டவன், “பேசுனு சொல்லிட்டு, இப்படி என்னய பார்க்காம வேற பக்கம் பார்க்கிற” என்றதும், திரும்பி அவன் முகத்தைப் பார்த்தாள். அவளை அருகே வருமாறு அழைக்கும் முகமொழியுடன் இருந்தான்.
அவள் வந்ததும், அவள் விழியோரம் கசிந்திருந்த கண்ணீரை பெரு விரலால் துடைத்துவிட்டு, அவளை நெஞ்சில் சாய்த்துக் கொண்டான். வேறெதுவும் சொல்லிக் கொண்டிருக்கவில்லை.
‘என்ன பேச?’ என்று யோசித்தவன், “இங்க இப்ப அக்குவா ஆல்டா வந்ததுல, இன் ஃபியூச்சர் அது மாதிரி வராம ப்ரொடெக்ட் பண்ண கேட்ஸ் இன்ஸ்டால் பண்ணப் போறாங்க, இது ஹை டைட் ப்ரெடிக்ட் பண்ணி பேரியர்ஸ் ரைஸ் பண்ணி வாட்டர் லாக் பண்ணறதுக்காக” என்று பேச்சை ஆரம்பித்தான்.
அவன்மீதி சாய்ந்து, வேடிக்கைப் பார்த்தபடி, அவன் பேசுவதைக் கேட்டாள். தகவலாகவே பேசினான். எனினும் அது அவளுக்குப் பெரும் தலைகோதல் உணர்வைத் தர, அப்படியே இருந்தாள். அவளுக்கு அந்த இதத்தை தொடர்ந்து தர, டேவிட்டும் அவன் இயல்பை மீறி பேசியபடி இருந்தான்.
சற்றுநேரம் சென்ற பின் இருவரும் வீட்டிற்குத் திரும்பினார்கள்.
நான்கு நாள்கள் கடந்திருந்தன!
கீர்த்தி டேவிட்டிடம் நன்றாக சிரித்துப் பேச, விளையாட்டாக, கேலியாக பேச தொடங்கியிருந்தாள். சென்டர் போய்விட்டு, வழக்கம்போல் இரவில் கேஃபே வந்தாள். அவள் இன்னும் சரியாகட்டும் என்று அவளுக்காக அன்று வாங்கிய பரிசைத் தராமல் காத்திருந்தவன்… இப்போது அவள் மாற்றம் கண்டு, “உன் பர்த்டே கிஃப்ட்” என்று கொடுத்தான்.
அதை வாங்கிப் பார்த்தபடி, “எப்ப வாங்கின” என்றாள்.
“சண்டே! இங்க வச்சி கொடுக்க நினைச்சிதான் வீட்ல கொடுக்கல” என்றான், அவர்கள் காதல் புத்தகத்தில் கேஃபே இல்லாத பக்கங்கள் ஏது என்பது போல! மேலும், “எ லிட்டில் சர்ப்ரைஸ் ஃபார் யூ” என்று கேக் லாட்டே கோப்பையை அவள் பக்கமாக நகற்றினான்.
பரிசைப் பிரிக்காமல், “நீ சர்ப்ரைஸ்னு சொல்ற…” என்று சிரித்தவள், “என்ன டேவிட்… இந்த டைம் வால் க்ளாக்கா” என்றாள் கேலியாக. உடனே பரிசை அவளிடமிருந்து பட்டென பிடுங்கி, “இது உனக்கு கிடையாது” என்றான்.
கூடவே, “சர்ப்ரைஸ் பண்ணா சர்ப்ரைஸ் ஆகலங்கிற! கிஃப்ட் தந்தா நல்லா இல்லங்கிற! ப்ரோபௌஸ் பண்ணா ஒழுங்கா பண்ணலனு சொல்ற” என்று சொல்லிக் கொண்டே வந்தவன், “சப்போஸ் நான் அன்னைக்கு ப்ரோபௌஸ் பண்ணலனா… நீ எப்படி பண்ணிருப்ப” என்றான்.
இது கோபமில்லையென பேசியவனுக்கும் தெரியும், இதைக் கேட்டவளுக்கும் தெரியும். இருந்தாலும் கோபம் போல் அவன் சொன்னது அள்ளிக் கொள்ளும் அழகுடன் இருந்தது. சட்டென்று அவனை அணைத்து, “அதான் நீ ஏற்கனவே ப்ரோபௌஸ் பண்ணிட்டியே… கிஃப்ட் கொடு” என்றாள் சிரிப்புடன்.
அப்போதும் அவன், “உன் வெர்சன் எப்படி இருக்குனு பார்க்கிறேன்… நல்லா இருந்தா கிஃப்ட் கொடுக்கிறேன்” என்றதும், அவனிடமிருந்து விலகி நின்று அவன் முகம் பார்த்து, “எனக்கு கிஃப்ட் வேணும்” என்று அடமாகக் கேட்க, “உனக்குத்தான் இது, பட் ஃபர்ஸ்ட் ப்ரோபௌஸ் பண்ணு” என்றான் விடாமல்.
சற்றுநேரம் அவனையே பார்த்திருந்தவள், “ஓகே சொல்லு… உனக்கு எப்படி வேணும்… பப்ளிக் ஆர் பிரைவேட் ப்ரோபௌஸல்” என்றாள்.
“இங்கயே”
“ஓகே…. ட்ரஸேர் ஹன்ட், பஸில், யூனிக், ரொமான்டிக், ஃபனி [funny]… இதுல எந்த டைப் வேணும் உனக்கு”
அவன் ஒருகணம் ஆச்சரியமாக நின்றுவிட்டு, “எத்தனை கீர்த்தி… எது செலக்ட் பண்ணாலும் உன்னால முடியுமா” என்று கேட்க, “நீ செலக்ட் மட்டும் பண்ணு டேவிட்” என்றாள், ‘நான் பார்த்துக்கிறேன்’ என்ற குரலில். “ஓகே, ஐ’ம் ச்சூஸிங் ஃபனி” என்றான் பெரும் ஆர்வத்தோடு.
“ஓகே! முதல அந்த நாளுக்கு போய்க்கோ, நான் வர்றேன். நீ காஃபி கொடுப்ப, அத நான் குடிப்பேன்” என்றவள், தற்போது அவன் தயார் செய்து வைத்திருந்த காஃபியை குடித்தவள், ‘ப்ரோபௌஸ் பண்றப்பலாம் ஆறிப்போன காஃபிதான் கிடைக்கு’ என்று முணுமுணுத்து, “ஓகே கொஞ்சம் நேரம் பேசுவோம். அப்புறம் நான் கிளம்பிடுவேன்” என்றதும், “கீர்த்தி… ப்ரோபௌஸல்” என்றான்.
உடனே அவள், “அன்னைக்கு இப்படித்தான் கேட்டிருப்பியா டேவிட்” என்றதும், சிரித்துக் கொண்டு, ‘கன்டினியூ பண்ணு’ என்பது போல் சைகை செய்தான்.
“ஸோ நான் குட்நைட் சொல்லிட்டுப் போறேன்” என்றுவிட்டு, ‘நீயும் குட் நைட் சொல்லு’ என்பது போல் அவனைப் பார்க்கவும், “குட்-நைட்” என்றான். “ஸ்வீட் ட்ரீம்ஸ்” என்றாள். அவன், ‘ஏன் இப்படி?’ என்று யோசித்தபடி இருக்க, “என்ன சொல்ல மாட்டியா” என்றாள்.
அவன் சொல்ல வர, “சொல்ல வேண்டாம். நீ சொல்லலனாலும் எனக்கு ஸ்வீட் ட்ரீம்ஸ்தான்” என்றாள். அவன் புருவம் சுருக்கவும், “என்ன டேவிட்… எப்படினு யோசிக்கிறியா… ஏன்னா என் கனவெல்லாம் நீதான் வர்ற” என்றாள்.
அதுவரை சிரித்தபடி நின்றவன், சத்தமாகச் சிரித்தான். சிரித்தபடி அவளைப் பார்த்து “இட்ஸ் லிட்டில் ஃபனி” என்றான். அவன் அப்படிச் சிரிப்பதை இமை அசையாமல் பார்த்தவள் “ப்ரோபௌஸ் பண்ணா இப்படித்தான் நீ ரியாக்ட் பண்ணுவியா” என்றாள்.
இன்னும் அவன் சிரித்தே இருக்க, “இது ரொம்ப ஃபனியா போயிடுச்சி போல, எனக்கு கிஃப்ட் வேணும். ஸோ நெக்ஸ்ட் ஒரு பப்ளிக் ப்ரோபௌஸல்” என்றாள்.
சட்டென சிரிப்பை நிறுத்தி, “நோ நோ, பப்ளிக் முன்ன எனக்கு கம்ஃபர்டபிளா இருக்காது… ம் வாங்கிக்கோ” என்று பரிசை நீட்டினான். “வேண்டாம், நல்லா ப்ரோபௌஸ் பண்ணிட்டு இத வாங்கிக்கிறேன்” என்றதும், “கீர்த்தி” என்றான் உடன்பாடில்லா குரலில்
விரிந்த புன்னகையுடன், “நோ வொரிஸ், பப்ளிக் இன்வால்வ் ஆக மாட்டாங்க. வெயிட் பண்ணு” என்று சொல்லி வெளியே போனவள், இருபது நிமிடங்கள் கழித்து, “வா போலாம்” என்று அவன்முன் வந்து நின்றாள்.
“அதுக்குள்ள அரேஞ் பண்ணிட்டியா” என்று ஆச்சரியப்பட “ம்ம், வா” என்று அவன் கைப்பிடித்து இழுக்க… பரிசை எடுத்துக் கொண்டவன், வெளியே வந்து கேஃபே கதவைப் பூட்டிவிட்டு அவளுடன் நடந்தான்.
வேகமாக அவன் கைப்பிடித்து நடந்து வந்தவள்… இரண்டு தெருக்கள் பிரிந்து செல்லும் பாதை வரவும், “ம் சொல்லு லெஃப்ட் ஆர் ரைட்” என்றதும், அவன், ‘எதுக்கு இது’ என்று அவளைப் பார்க்க, ‘முதல சொல்லு’ என்பது போல் அவள் முகமொழி இருக்கவும், “லெஃப்ட்” என்றான்.
அந்தப் பாதையில் இருவரும் நடந்தார்கள். சற்றுதூரம் சென்றதும் நின்றவள், “இப்ப சொல்லு… கேனல் சைட் ஸ்ட்ரீட், இல்ல… நார்மல் ஸ்ட்ரீட்” என்று கேட்க, “அஃப்கோர்ஸ் கேனல் சைடு” என்றதும் அத்தெருவின் வழியே நடந்தார்கள்.
இப்படியே பாதையைத் தேர்வு செய்து, ஒரு இடத்திற்கு வந்தால், அங்கே ஒரு சிறு கடை இருந்தது. அதுவும் மூடியிருந்தது முதலில் கடையைப் பார்த்தான். பின்னரே அதன் கண்ணாடிக் கதவைப் பார்த்தான். அதில், அவர்கள் இருவர் பெயரெழுதி, இடையே இதய வடிவம் வரையப்பட்டிருந்தது.
அவன் பார்த்துவிட்டான் என்றதும், “எப்படி இருக்கு” என்றாள்.
கண்ணீர், கவலை எல்லாம் போய் அவள் கலகலப்பாக இருக்கிறாள் என்ற சந்தோஷத்தில் சிரித்தபடி, “இததான் எழுதிட்டு வந்தியா” என்றான்.
மனதிலிருந்து சிரிப்பவனை புன்னகையுடன் பார்த்தபடி, “ம்ம் எப்படி இருக்கு” என்று கேட்க, “மார்க்கர் பென்னா?” என்றான் அதே சந்தோஷ சிரிப்புடன்.
“ம், டெம்பரரி மார்க்கர்தான், போறப்ப அழிச்சிடுவேன். எப்படி இருக்குனு நீ சொல்லு” என்றாள். அப்போதும் அவன், ‘ஒருவேளை நான் வேறு பாதையை தேர்ந்தெடுத்திருந்தால்?’ என்று ஆங்கிலத்தில் கேட்டான்.
பதில் சொல்லாமல் சற்றுநேரம் அவனைப் பார்த்தபடி நின்றவள், சட்டென்று அவனை இருகைகளால் இறுக்கமாக அணைத்து நின்றாள். அதன்பின்னும் சில நொடிகள் ஒன்றும் பேசாமல் இருந்துவிட்டு, “நாம எந்தப் பாதையை சூஸ் பண்ணினாலும், இது இப்படித்தான் முடிஞ்சிருக்கும்” என்று எழுதியதைக் கை காட்டினாள்.
‘உனக்காவே நான்… எனக்காவே நீ, நமக்காகவே இந்தக் காதல்’ என்று அவள் சொல்லாமல் சொன்னதைக் கேட்டு, உணர்வுபூர்வமாக அவளை அணைத்துக் கொண்டு, பரிசைக் கொடுத்தான். அதை வாங்கியவள், அணைப்பிலிருந்து லேசாக விலகி, ‘என்ன இது’ என்பது போல் ஆர்வமாகப் பரிசையே பார்த்தாள்.
அவளையே பார்த்திருந்தவன்… அவளது கன்னங்களை இருகைகளில் ஏந்தி நெற்றி முத்தம் ஒன்றை வைத்தான். மென்னகையுடன் அவள் அவன் முகம் பார்த்தே இருக்க, மீண்டும் முத்தமிட்டு, அவளை நெஞ்சோடு அரவணைத்து நின்றான். அவளும் அவன் உள்ளத்தோடு ஒன்றி நின்று கொண்டாள்.
வெற்றிடம், வெறுமை, அது தந்திட்ட வேதனை, காதல், அது தந்த இதம், சிறு பிரிவு, அந்தப் பிரிவின் வலி, என்று நெடுந்தூரம் கடந்து வந்து இன்று இப்படி நிற்கும் இருவரின் விழியோரத்திலும் பெரிய நிம்மதி வெளிப்பட்டது. கூடவே, நமக்கென்று ஒரு உலகம்… அதில் காயங்கள் மறந்து காதல் நிறைந்து வாழ வேண்டுமென்ற ஆசையும் இருந்தது.
சில வினாடிகள் எதுவொன்றும் பேசாமல், அப்படியே நின்றார்கள்.
அந்நேரம் தூறல் விழுந்து, சட்டென மழையாக மாற, அவனிடமிருந்து விலகி, கைப்பையிலிருந்த குடையை எடுத்து அவனிடம் கொடுத்து, கடகடவென்று சென்று எழுதியதை அழித்துவிட்டு, ஓடி வந்து அவன் விரித்து வைத்திருந்த குடைக்குள் அவனருகே நிற்கவும், அவன் அவளைத் தோளோடு தோளாக அணைத்துக் கொண்டான்.
இருவரும் பேசியபடி வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தார்கள்.
வெகுநாளுக்குப் பின்னர்… இரவு நேரத்தில், மஞ்சள் விளக்கொளியில், மழை நேரத்தில், சிவப்பு குடை பிடித்து, புன்னகை பூசிய முகத்துடன், இருவரும் பேசியபடி நடந்து போவதைப் பார்த்ததில்… இப்போதுதான் இயல்பிற்கு திரும்பியிருந்த வெனிஸ் நகரமும் புன்னகை புரிந்து கொண்டது!!
Thank you for choosing to read this story. It is based on the historic Acqua Alta flood of 2019 in Venice.