Kathambari Novels
அத்தியாயம் – 36 (pre final)
மது, ரவி வெனிஸ் வந்துவிட்டனர். சொன்னதைவிடவும் அதிகமான நாட்கள் பாரீசில் இருந்துவிட்டு வந்திருந்தனர். அவர்களிடம் எல்லாம் சொல்லவில்லை என்றாலும் கீர்த்தி சோர்வுடன் இருக்கிறாளென்று டேவிட் சொல்லிவிட்டான். கீர்த்தியிடமும் அவர்கள் வரவைப் பற்றிச் சொன்னான்.
மாலையில்தான் ரவி, மது வெனிஸ் வந்ததால், அவர்களுக்காக இரவு உணவு டேவிட் தயார் செய்திருந்தான். அவன், கீர்த்தி, ரவி, மது ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். டேவிட், மது மட்டும் பேசினர்.
கீர்த்தியோ, ரவியோ அவர்கள் பேச்சில் கலந்து கொள்ளவில்லை!!
இருவருக்கும் இடையே நிறைய வாக்குவாதங்கள் வந்திருக்கின்றன! சென்ற முறை சந்திக்கையில் அதையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு டேவிட்டிற்காக பேசியிருந்தார்கள்! ஆனால் இம்முறை அப்படிச் செய்ய இயலவில்லை! நடந்த நிகழ்வுகள் நினைவில் அப்படியே இருப்பதால், பேச்சில் கலந்து கொள்வதை இருவரும் தவிர்த்தார்கள்!
நிகழ்வுகள் நினைவிலிருந்து மறையும் போது, தவிர்ப்பு மறையுமா என்று கேள்வி எழுந்தால், கிடைக்கும் பதில்… அதற்கு காலம்தான் பதில் சொல்ல வேண்டும் என்பதே!
கீர்த்தி அமைதியாக தேக்கரண்டி உதவியுடன் உண்பதைப் பார்த்த மது, “கை இன்னும் பெயினா இருக்குதா” என்று அவளிடம் கேட்க, “ம்ம்” என்று மட்டும் சொல்லி சாப்பிட்டாள் கீர்த்தி.
“உங்க மொபைல் தொலைஞ்சிருச்சுனு டேவிட் நேத்து சொன்னான், தேடறது கஷ்டம்தான். ஆனா எதுக்கும் லொகேஷன் ட்ராக் பண்ணிப் பார்க்கலாமே நீங்க” என்று கேட்டு கீர்த்தியையும் பேச்சில் கலந்து கொள்ள வைக்க மது முயற்சித்தாள்.
ரவி உடனே, “என்ன பேசற, இவ்ளோ தண்ணீல எங்க போயிருக்குமோ” என்று சொல்ல… மது, “தண்ணீல போகாம வேற எங்கயும் ஒதுங்கிருந்தா, கிடைக்க சான்ஸ் இருக்குல” என்றாள்.
கீர்த்தி… முதலில் மது யோசனை சொல்லும் போது சிறு நம்பிக்கை துளிர்க்க இருந்தவள், ரவியின் பேச்சில் சோர்ந்து போனாள். மீண்டும் மது பேசியதைக் கேட்டதுமே, டேவிட்டைப் பார்த்தாள். அவள் பார்வைப் புரிந்து டேவிட், “ட்ரை பண்ணிப் பார்க்கலாம்” என்றதும், சிறு தலையசைப்பு தந்தாள்.
மது, “கவலைப்படாதீங்க கண்டிப்பா கிடைக்கும்” என்றுவிட்டு, “நீங்க நியூஸ் பார்த்தீங்களா, கவர்மென்ட் ரீலிஃப் ஆக்டிவிட்டிஸ் ஸ்டார்ட் பண்ணிட்டாங்க. சென்டர் லாஸ் என்னென்னு பார்த்துச் சொன்னா, காம்பென்ஸேஷன் கிளைம் பண்ணலாம் கீர்த்தி” என்றாள்.
அதற்கு கீர்த்தியே, “பார்க்கல… பார்க்கிறேன்” என்றாள்.
அதன்பின் மதுவும் கீர்த்தியும் பேசினார்கள். மது பேசியது பொதுவானதாக, கீர்த்திக்கு பயனுள்ளதா இருந்தது. எனவே அசௌகரியம் எதுவும் இல்லாமல் எளிதாகப் பதில் சொல்லவும்… கேட்டுக் கொள்ளவும் முடிந்தது கீர்த்திக்கு!
பதில் சொல்லியபடி சாப்பிட்டு முடித்த கீர்த்தி டேவிட்டிடம், “ரூம் போட்டுமா, தூக்கம் வருது” என்றதும், “வா” என்று அவனும் எழுந்துவிட்டான். மதுவிடம் லேசான தலையசைப்பில், ‘தூங்கப் போவதாக’ கீர்த்தி சொல்ல, அவளுடன் சென்ற டேவிட், அவளுக்கு மருந்து, மாத்திரைகள் எடுத்துக் கொடுத்துவிட்டு, அறையிலிருந்து வெளியே வந்தான்.
அவன் வந்ததும் மது, “என்ன இது, கீர்த்தி இவ்ளோ டல்லா ஆயிட்டாங்க” என்று கலங்கியவள்… ரவியிடம், “பாரு! எல்லாம் உன்னாலதான், நீ பேசினதாலதான். அவங்ககிட்ட சாரி கேட்கச் சொன்னேனே, இப்ப கேட்டிருக்கலாமே ரவி; ஏன் கேட்கல நீ” என்று கோபப்பட்டாள்.
ரவிக்கு அவளுடைய பேச்சில் கோபமும், எரிச்சலும் வந்துவிட, “நீ இவளுக்குச் சொல்லுடா” என்றான் டேவிட்டிடம்.
மது, ‘என்ன சொல்லணும்?’ என்று டேவிட்டைப் பார்க்க… அவன், “கீர்த்திகிட்ட சாரி கேட்கிறதா ரவி சொன்னான். நான்தான் வேண்டாம்னு சொல்லிட்டேன். இப்பதான் கொஞ்சம் கொஞ்சமா எல்லாம் மறந்து நார்மலா இருக்கிறா.
இவன் சாரி கேட்டு, அவ திரும்பவும் அந்த நாள நினைச்சிட்டா… இவன் சாரி கேட்கிறதவிட, எனக்கு அவ சரியாகணும்; அதான் இப்ப எதும் வேண்டாம்னு ரவிகிட்ட சொன்னேன்” என்றான் மதுவிடம்.
ரவியிடம் திரும்பியவன், “கீர்த்தி அப்பா பேர் பத்தி இனி எதுவும் பேசாத, அது அவ பெயின். ஆல்ஸோ அவ அம்மா ரிலேட்டிவ்ஸ் அவளை அக்ஸப்ட் பண்ண மாட்டாங்க. ஸோ இனி அந்தப் பேச்சே வேண்டாம்.
ஜென்ரலா நீங்க பேசறது பத்திச் சொல்லனும். ரெண்டு பேரும் கிரௌன் அப் [grown up]! ஸோ இப்படிப் பேசுங்கனு நான் சொல்ல முடியாது. பட் ஒருத்தரை ஒருத்தர் ஹர்ட் பண்ற மாதிரி ஹார்ஷா பேசிக்கிட்டா, இப்படிப் பேசாதீங்கனு நான் சொல்லுவேன்… ஐ கெனாட் என்கரேஜ் தட்!
அவளும் உன்னய பேசிருக்கா, ஸோ இதேமாதிரி அவகிட்டயும் சொல்லனும், சொல்லுவேன். பட் இப்ப என்னால முடியாது. ஷி இஸ் கம்ப்ளீட்லீ ப்ரோக்கன். இந்த நேரத்தில இப்படிப் பேச வேண்டாம்னு தோனுது… அவ சரியானதும் பேசறேன்” என்றான்.
டேவிட்டிற்கு… ரவியும், கீர்த்தியும் முக்கியம்! ஒருவருக்காக இன்னொருவரை என்றும் விட்டுக் கொடுக்க முடியாது! இன்று அவர்கள் பேசவில்லை. நாளைப் பேசினாலும் எப்படிப் பேசுவார்களோ… ஏனென்றால் இருவருக்கும் அவனிடம் அதீத அன்பு இருப்பதை அவன் புரிந்திருந்தான்!
அந்த அன்பில், உரிமை பாராட்டலில் அவர்கள் எப்படிப் பேசினாலும்… அவன் இருவரிடமும் சிறிதும் வேற்றுமைக் காட்டிட மாட்டான், அது அவனால் முடியாது என்பதைப் புரிந்து பேசியிருந்தான் டேவிட்.
டேவிட் பேசியதற்கு, “ம்ம் சரிடா” என்றான் ரவி.
அடுத்து மது பக்கம் திரும்பிய டேவிட், “கீர்த்தி இப்படி ஃபீல் பண்றதுக்கு ரீசன் நிறைய இருந்தாலும், மெய்ன் ரீசன் நான்தான்னு நினைக்கிறேன். என்னய அவ பார்க்க வந்தப்ப, நான் இங்க இருந்திருந்தா, அவ இவ்ளோ டெஸ்பெரெட் (desperate – நம்பிக்கையற்ற) ஆகிருக்க மாட்டா.
அக்வா ஆல்டா வந்தப்போ தனியா கஷ்டப்பட்டிருக்க மாட்டா, ஏன் கைல அடி கூடப் பட்டிருக்காது. இந்தளவுக்கு பெயின் கண்டிப்பா இருந்திருக்காது. நான் அதுக்காக பேரீஸ் போயிருக்க கூடாதுனு சொல்லல. நான் அவளைப் பத்தியும் யோசிச்சிருக்கணும்னு சொல்றேன்.
அன்ட் அபௌட் தேட் டே… இன்க்ளுடிங் மீ யாருமே சரியா யோசிச்சிப் பேசல! ஆக்ச்சுவலி அப்படிப் பேசறதுக்கு முடியல! சிச்சுவேஷன் அந்தமாதிரி! அப்படி இருக்கிறப்ப ரவிய மட்டும் தப்பு சொல்லாத மது” என்றான்.
மது, “ம்ம்” என்று கொண்டாள்.
டேவிட் பேசுவதை… ரவி, மது சாப்பிடுவதை நிறுத்தி கேட்டிருந்தனர். அவர்கள் மீண்டும் சாப்பிடத் தொடங்கவும், “வேறெதுவும் வேணுமா” என்றான் டேவிட். “எனக்கு காஃபி” என்றான் ரவி. “எனக்கும்” என்ற மது, “வீட்ல எல்லார்கிட்டயும் எப்போ சொல்லப் போற டேவிட்” என்றாள்.
“டென் டு பிஃப்டீன் டேய்ஸ் லேட்டர், ம்ம் நான் சொன்ன நெக்ஸ்ட் மொமென்ட் எல்லாரும் இங்க வர நினைப்பாங்க; கீர்த்தி இன்னும் நார்மலாயியிட்டா, அவளுக்கு எந்த டிஸ்கம்ஃபர்ட்டும் இருக்காதுல, அதுக்காக” என்றவன் எழுந்து ரவி, மதுவிற்குத் தேவையானதை எடுத்து வரச் சென்றான்.
என்ன சொல்ல இவர்களுக்கும் டேவிட்டிற்குமான நட்பு பற்றி? அழகான நட்பு இவர்களது! மேலும் எந்தச் சூழ்நிலையிலும் அவர்களை அவனும்… அவனை அவர்களும் புரிந்து நடந்து கொள்ளும் ஆழமான நட்பு இவர்களது என்றுதான் சொல்ல வேண்டும்!!
சாப்பிட்டதும் ரவி, மது வீட்டிற்கு வந்திருந்தார்கள்! மது முகத்தில் ஒரு நிம்மதி தெரிந்தது. ரவியால்தான் டேவிட், கீர்த்தியின் பிரிவு என்று எண்ணியவளுக்கு, கீர்த்தி, டேவிட் சேர்ந்ததால் வந்திருந்த நிம்மதி அது!
இருந்தும் அந்த முகத்தில் சிறு குறையும் தெரிந்தது. காரணம்… சற்றுமுன் ரவி காட்டிய கோபத்தால்! மேலும் வீட்டிற்கு வந்ததிலிருந்து ரவி பேசாமல் இருக்க, அவனுக்கு இன்னும் கோபம் இருக்குமோ என்று இவள் நினைப்பதால்!
இன்றைய நாள் குறையேதும் இல்லாமல் நிறைவாக முடிய வேண்டுமென்ற விருப்பத்தில்… ரவி முன் சென்று, “சாரி” என்றாள் சமத்தான குரலில்.
அலமாரியில் ஏதோ எடுத்துக் கொண்டிருந்தவன், அவள் முகம் பார்த்து, “ஐ லவ் யூ” என்றான் சம்பந்தம் இல்லாமல். கோபமில்லையோ என்ற சந்தேகம் வர, “நான் என்ன பேசறேன், நீ என்ன பேசற” என்றாள்.
“ஐ லவ் யூனு பேசறேன்” என்றான் அவளை அணைத்துக் கொண்டு.
அவன் மனநிலை புரிந்தும், “எதுக்கு இப்ப” என்றாள் வேண்டுமென்றே.
“எதுக்கா? எனக்குத் தோனுது, சொல்றேன்” என்றான். அடுத்து, “வேண்டாம்னா போ” என்று விலகப் போகவும், “வேணும் வேணும்” என்று சட்டென அவனைப் பிடித்துக் கொண்டாள். பின், “கோபமா இருப்ப, என்கிட்ட சண்டை போடுவனு எவ்ளோ பயந்தேன் தெரியுமா” என்றாள் சலுகையான குரலில்.
“நீ…? பயந்த…?” என்று சிரித்தவன், “ஏன் அப்படி?” என்றான்.
“அப்ப உன்மேல கோபப்பட்டேன்ல… அதுக்கு”
“என்னமோ புதுசா கோபப்படற மாதிரி ஃபீல் பண்ற, சாரி கேட்கிற! என்கிட்ட நீ என்னைக்கு அன்பா பேசிருக்க சொல்லு” என்றதும்… அவனிடமிருந்து சற்று விலகி, “மனசாட்சி இல்லாம இப்படிப் பொய் சொல்ற” என்றாள்.
ரவி, “இது பொய்யில்ல மது” என்றான். கோபம் வந்துவிட மது, “ப்போ” என்று மொத்தமாக விலகிச் சென்றாள். அதன்பின் கால்மணிநேரம், ‘மது, மது’ என்று சமாதானம் செய்ய அவள் பின்னேயே ரவி போனான். அவளோ ‘சமாதானம் ஆவேனா’ என்ற சாயலில் சுத்திக் கொண்டிருந்தாள்.
கடைசியில் ரவி சமாதானம் செய்ய முடியாமல், “பேசாம நானே கோபமா இருந்திருக்கனும், நீ இப்படி என் பின்னாடி வந்திருப்ப! இப்ப பாரு” என்றதும், மது சிரித்துவிட, “சிரிக்கிற நீ?!” என்று விளையாட்டாக அடித்து… விருப்பமாக அணைத்துக் கொண்டான்… அவளுமே!
அப்படியே அவர்கள் பேச்சு தொடர்ந்தது!
எப்படிச் சொல்ல மிகைத்தான இவர்கள் நேசம் பற்றி? ம்ம்… குறுங்கோபம் எங்கே தொடங்கியது, அதன் சமாதானம் எப்படி வந்தது என்று பிரித்தறிய முடியாத செல்லச் செல்ல சண்டைகள் நிரம்பியதொரு ப்ரியமான வாழ்வு இவர்கள் இருவருடையது என்று சொன்னால் சரியாக இருக்கும்!!
******************
பத்து நாட்கள் கடந்திருந்தன!
அரசிடமிருந்து நிவாரணமாகக் கிடைத்த சிறு உதவித்தொகையை வைத்து, ஓரளவிற்கு சென்டரை சீரமைத்து, முழுமையாக இல்லாவிடிலும் ஆலோசனை வழக்கும் பணியைத் தொடங்கியிருந்தாள்.
வேலையில் இயல்புநிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கிறாள்!
தனிப்பட்ட வாழ்வில்… உட்கொண்ட மருந்துகள் வெளிக்காயத்தை ஆற்ற, டேவிட் வெளிக்காட்டும் அன்பு, அவள் மனக்காயத்திற்கு மருந்தாக இருந்தது. முழங்கையில் இப்போது கட்டு மட்டுமே! முன்போல் சோர்ந்து இருப்பதில்லை என்றாலும், அவளிடம் பழைய பேச்சு, புன்னகை இன்னும் திரும்பவில்லை!
அனுபவித்த வலி, காயம் முழுதாக ஆறவில்லை என்பதால் சில நேரங்களில் கண்கலங்கியும்விடுகிறாள்.
கஃபே நடத்துவது, கீர்த்தியைக் கவனிப்பது என்று டேவிட் இருக்கின்றான்! அவளுக்காகப் பிறந்தநாள் பரிசு வாங்கித் தர அவ்வளவு ஆசை அவனுக்கு! அவள் மனமோ இப்போதுதான் சற்று சகஜநிலைக்குத் தயாராகி வருவதால், காத்திருக்கின்றான்… அதற்காகவும், அவளது சிறு புன்னகைக்காகவும்!!
இன்று ஞாயிறு, அதுவும் மாலை நேரம்! வேலை இல்லாததால், ‘கொஞ்ச நேரம் நடந்திட்டு வரலாமா’ என்று கீர்த்தி கேட்டிருக்க, சரியென்று டேவிட் அவளை வெளியே அழைத்து வந்திருந்தான்.
இவர்கள் இருவரும் நடந்து செல்கையில், கடைவீதிக்கு அம்மா அப்பாவுடன் வந்த திலீப் கீர்த்தியைப் பார்த்துவிட்டான். கூடவே டேவிட் இருப்பது கண்டு நிம்மதி அடைந்தவன், கீர்த்தி கைக்கட்டைப் பார்த்ததுமே பதற்றம் கொண்டு விறுவிறுவென நடந்து அவள் முன் வந்து நின்றான்.
வந்தவன், “சேஃப்னு சொன்ன, கைல என்ன கட்டு” என்றுதான் ஆரம்பித்தான்.
சில நாட்களுக்கு முன் கீர்த்தி, ‘இங்க இப்படினு தெரிஞ்சதும், திலீப் எனக்கு கால் பண்ணுவான். என் ஃபோன்தான் இல்லயே. கால் அட்டன் பண்ணலனா பயப்படுவான். சேஃபா இருக்கேன்னு அவன்கிட்ட சொல்லனும்” என்று டேவிட் அலைபேசி வாங்கி திலீப்பிற்கு குறுஞ்செய்தி மட்டும் அனுப்பியிருந்தாள்.
அதனால்தான் இப்படி வந்து கேட்டுக் கொண்டிருக்கின்றான்.
திலீப் கேட்டு முடித்த நொடி… மகன் போன வேகம் பார்த்து, அவன் பின்னே வந்திருந்த சுரேஷ், ராதிகா ‘நேத்துதான வந்தோம், அடுத்தநாளே இவளைப் பார்க்கனுமா’ என்ற முகமொழியுடன் அங்கே வந்து நின்றார்கள்!
ஆம், நேற்றுதான் இந்தியாவிலிருந்து வந்திருந்தனர். ‘அக்வா ஆல்டா’ பற்றிய செய்திகளைப் பார்த்ததும், கீர்த்தியின் நிலையைத் தெரிந்து கொள்ள திலீப் அலைபேசி மூலம் முயற்சித்தான்! முடியவில்லை என்றதும் பயந்தான்! கீர்த்தி ‘சேஃப்’ என்று குறுஞ்செய்தி அனுப்பியதும் நிம்மதியடைந்தான்.
வெனிஸ் வந்ததும் கீர்த்தியைப் பார்க்க நினைத்து, அப்பாவிடம் கேட்டான்! அவர் வேண்டாம் என்று சொன்னதால் சரியென்று இருந்து கொண்டான்!!
தற்செயலாக கீர்த்தியை… அதுவும் இந்த நிலையில் பார்த்ததும், எதையும் யோசிக்காமல் வந்து பேசத் தொடங்கினான். ஆனால் அவளோ பேசாமலே நின்றாள். திலீப் மீண்டும் அதையே கேட்க, அப்போதும் அவள் பேசவில்லை!
அதன்பின்னும் திலீப் பேசப் போகையில், ‘முடிந்தது முடிந்ததாக இருக்கட்டும்’ என்று நினைத்த சுரேஷ், “திலீப்… வா போலாம்” என்றார்.
அக்கணம் ராதிகா, “இதான் நீ லவ் பண்ற பையனா, சேர்ந்திட்ட போல” என்று கீர்த்தியிடம் கேட்க, “ஆமா, நான் ஏமாறவும் இல்ல… யாரையும் ஏமாத்தவும் இல்ல” என்றாள் சுரேஷைப் பார்த்து. ராதிகா புரியாமல் நின்றதால், “உங்க ஹஸ்பண்ட் அன்னைக்கு என்கிட்ட கேட்ட கேள்விக்குப் பதில்” என்றாள்.
‘மறுபடியும் ஏன்?’ என்று சுரேஷ் எரிச்சல்பட்ட நேரம், “என்னைக்கோ கேட்ட கேள்விக்கு இன்னைக்குப் பதில் சொல்ற” என்றார் ராதிகா நக்கலாக. உடனே டேவிட் கோபமாக, “ஸோ வாட், பதில் இருக்கு சொல்றா” என்றான்.
ஆம், கோபம்தான்! திலீப்பைப் பார்த்தவுடன்… வந்தவர்கள் அவன் பெற்றோர் என்று புரிந்தவுடன்… கீர்த்தி அழுதது ஞாபகத்தில் வர, அதற்கானக் காரணம் இவர்களும்தானே என்ற கோபம் அவனுக்கு!!
டேவிட் தமிழில் பேசுவது கண்டு, ராதிகா ஒருநொடி ஆச்சிரியமாக நின்றார். அடுத்தநொடியே, “நீதான திலீப்ப அடிச்சது… உன்மேல சரியானக் கோபத்தில இருக்கேன்! பேசாத நீ!!” என்றார் கோபமாக.
“ஸோ உங்களுக்கு என்மேலதான் கோபம், அப்போ நீங்க என்னதான வந்து குவஸ்ட்டின் பண்ணிருக்கனும், எதுக்கு கீர்த்திகிட்ட அப்படி நடந்திருக்கீங்க!” என்று இத்தனை நாட்களாகக் கேட்க நினைத்த கேள்வியைக் கேட்டான்.
ஆம், கீர்த்திக்காக அவர்களைச் சந்தித்து கேள்வி கேட்க டேவிட் நினைத்தான்! இருந்தும் கேட்கவில்லை! காரணம், பிரச்சனை வேண்டாமென நினைத்தான்! ஆனால் சந்தர்ப்பம் அமையவும் கேட்காமல் இருக்க இயலவில்லை!
அதனால்தான் கேட்டுவிட்டான்!!
டேவிட் போலவே, ‘பிரச்சனை வேண்டாம்’ என்று நினைத்த சுரேஷ், “ராதிகா போதும் போகலாம்” என்றபோது… திலீப் டேவிட்டைப் பார்த்து, “என்னாலதான உங்க ரெண்டு பேருக்குள்ளயும் ஃப்ராப்ளம் வந்தது, சாரி, சாரி” என்றான்.
உடனே டேவிட், “சாரி கேட்டா, செஞ்ச தப்பு சரினு ஆயிடுமா” என்று பட்டென கோபமாகக் கேட்டதும், திலீப் அமைதியாக நின்றான். மகனைச் சொன்னதும் அப்படியொரு கோபம் வர… சுரேஷ், “ஆகாது! ஆனா சரி செய்ய நினைக்கிற தப்பா மாறிடும்” என்று அழுத்தமாகச் சொன்னார்.
கேட்கனும்னா நிறைய கேட்கலாம்! பட் நான் கேட்டு, அதுக்கு நீங்க பேசறது, கீர்த்திய மறுபடியும் ஹர்ட் பண்ணிடுமோனு பயமா இருக்கு. ஸோ நடந்தத பத்திப் பேசி ஃப்ராப்ளம்ம காம்ப்ளிகேட் பண்ண எனக்கு இன்டரெஸ்ட் இல்ல! இத இப்படியே விடறதுதான் பெஸ்ட்னு தோனுது.
பட் ஒன் திங்! கீர்த்திக்காக பேசறதுக்கு நான் இருக்கேன்னு உங்களுக்கு இப்ப புரிஞ்சிருக்கும். அவளுக்கு யாருமில்லனு சொன்னது தப்புனு புரிஞ்சிருக்கும். தேட்’ஸ் எனஃப் ஃபார் மீ!” என்று முடித்தான்.
அவன் நிறுத்தியதும் சுரேஷ், “இப்போ நான் பதில் சொல்லலாமா” என்றுதான் ஆரம்பித்தார். “நீ என்ன கேட்டாலும், அதுக்கு என்கிட்ட ஒரு பதில் இருக்கும். ஆனா இதுபத்திப் பேச எனக்கு விருப்பமில்லை… என் பையனுக்காக.
இவளை” என்று கீர்த்தியைக் காட்டி, “இன்சல்ட்லாம் பண்ணல. உண்மையைச் சொன்னேன்! அது அப்படி இருந்தா, நான் என்ன செய்ய!? அப்புறம், இவளுக்கு யாருமில்லைனு நான் சொன்னதுல எந்தத் தப்புமில்ல! ஏன்னா நான் அப்படிச் சொன்னப்ப… இவ தனியாதான் இருந்தா! நீ இவகூட இல்ல!!
ம், இப்பவும் சொல்றேன் திலீப் பண்ணது தப்புதான்! ஆனா அது இவளுக்காக யோசிச்சதாலதான்! அதுவும் இவளோட அம்மா இவளுக்காக யோசிக்காம விட்டதாலதான்!” என்று முடித்தார்.
எரிச்சலுடன் டேவிட், “டு அஃபன்ஸிவ் (too offensive- அவமதிப்பு) ஸ்டேட்மென்ட் மிஸ்டர் சுரேஷ்!” என்றுவிட்டு, “ஐ வொன்டர், தப்பு செஞ்சிருக்கானு தெரிஞ்சும் இவ்ளோ சப்போர்ட் பண்ணிப் பேசறீங்க” என்றான்.
உடனே சுரேஷ், “என் பையனுக்காக நான் பேசறதுல… ஆச்சரியப்பட என்ன இருக்குது” என்று சாந்தமாகச் சொன்னார். பின், “இங்க பாரு… என் பையன நீ அடிச்சிருக்க! உன்மேல அவ்ளோ கோபம் வருது!” என்றார் கடுமையாக. பின் சாதாரணக் குரலில், “ரொம்பப் பேச வேண்டாம்னு நினைக்கிறேன்” என்றார்.
பின் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் சுரேஷ், “நான்கூட அவனை அடிச்சதில்ல தெரியுமா” என்றார். பின்னர், “உனக்கு எப்படித் தெரியப் போகுது என் பாசம் பத்தி” என்றார். பின், “அவன்தான் எனக்கு எல்லாம்” என்றார். உடனே திலீப், “ப்பா” என்று அவர் கையைப் பிடித்துக் கொண்டான்.
சுரேஷ் பேசப் பேச… அவரும் திலீப்பும் சேர்ந்து நிற்பதைப் பார்க்கப் பார்க்க, டேவிட்டிற்கு… தன் அப்பா நினைவு வந்திருக்க, அந்த உறவு இல்லாமல் போன நிலை நிந்திக்க எதுவும் பேச முடியவில்லை… அமைதியாகிவிட்டான்!!
ஏதோ யோசனையில் நின்ற கீர்த்தியைப் பார்த்து சுரேஷ், “திலீப்க்கு இனிமே மெசேஜ்கூட பண்ணாத! இவ்ளோ நடந்தப்புறம்… எங்க பையன் எங்க பையன் மட்டும்தான்!!” என்றார். பின் மனைவி, மகனைக் கூட்டிச் சென்றுவிட்டார்!
அப்பா என்ற ஓர் உறவு திலீப்பைத் தாங்கிப் பிடிப்பதைக் கண்ட கீர்த்திக்கு அப்படியொரு உறவு தனக்கில்லையே என்ற ஏக்கம் அப்போதிருந்தே வந்து அழுத்த அப்படியே அமைதியாக நின்றாள்!!
ம்ம், என்ன சொல்ல கீர்த்தி இன்னும் திலீப்பிடம் பேசாமல் இருப்பது பற்றி?
‘பேசலாமே?’ என்ற கேள்வி வந்தால், ‘அவன்மீது இன்னும் கோபம் அவளுக்கு’ என்று பதில் வரும்! ‘எவ்வளவு பக்கபலமாக இருந்தவன், அவனை மன்னித்துப் பேசலாமே?’ என்று விடாமல் கேள்வி எழுப்பினால், ‘அவன் செயல் தந்த வலி ஆற காலஅவகாசம் தேவைப்படும் அல்லவா?!’ என்பதே பதிலாக வரும்!
இன்னொன்று… இதற்குமுன் எப்படியோ, இனி தன்னால் திலீப் குடும்பத்தில் சண்டை, சச்சரவுகள் வரக்கூடாதென்ற எண்ணத்தில் உறுதியாக இருக்கிறாள் என்றும் ஒரு பதில் இருக்கிறது!!
‘ஆனால் திலீப் கவலைப்படுவானே’ என்று கேள்வி கேட்டால், ‘இதற்கு அவனே சற்றுநேரத்தில் பதில் சொல்வான்’ என்பதே பதிலாக அமைகிறது.
திலீப் பேசாமல் வர, “என்ன யோசிச்சிட்டு வர்ற” என்றார் சுரேஷ்!
“ஒன்னுமில்ல ப்பா” என்றான்!
மிருதுவான குரலில், “எந்தக் குறையுமில்லாம, நீ சந்தோஷமா இருக்கனும்னு எனக்கு ஆசை. நீயும், கீர்த்தியும் பேசிக்கிறத… உனக்கு வரப் போற மனைவி புரிஞ்சிக்கலனா… உன் லைஃப் சிக்கலாயிடுமோனு எனக்குள்ள ஒரு பயம்.
அதான் திலீப்… கீர்த்திய பார்க்க வேண்டாம், பேச வேண்டாம்னு உன்கிட்ட ஸ்ட்ரிக்டா சொல்றேன். அவகிட்டயும் இப்படிச் சொல்லிட்டு வர்றேன்” என்று தந்தையாக யோசித்ததைத் தன்னிலை விளக்கமாகத் தந்தார்.
“புரியுது ப்பா” என்று அவர் கூற்றை ஏற்றுக் கொண்டான்.
“நீயும், கீர்த்தியும் பேச வேண்டாம்னு நினைக்கிறேன்தான். ஆனாலும் அப்பா இத கேட்கிறேன்” என்றவர், “கீர்த்தி பேசலனு கஷ்டப்படறியா” என்றார்.
“என்னால அவளுக்கும் கஷ்டம்தான”
“அப்பா உன்னய பத்திக் கேட்டேன்”
“கஷ்டம்தான். கீர்த்தி என்கிட்ட பேசாம இருக்கிறது கஷ்டம்தான்” என்றதும் சுரேஷ் ஒருமாதிரி ஆகிவிட, “ப்பா முழுசா கேளுங்க” என்றுவிட்டு, “யாராவது கீர்த்திக்காக அவகூட நிக்கனும்னு நினைச்சேன்.
இதோ டேவிட் நிக்கிறானே ப்பா. அவ தனியா இருப்பாளோ, அவளை யாரு கவனிச்சிப்பானு ரொம்பப் பயந்தேன். இப்போ டேவிட் பார்த்துப்பாங்கிறதுல, எனக்குள்ள ஒரு நிம்மதி வந்திருக்கு.
ம் அப்புறம்… கோபம் போனா கீர்த்தி என்கிட்ட பேசுவா… எனக்கு வரப் போற வொய்ஃப் என்னய புரிஞ்சிப்பாங்க… அப்ப நீங்க இப்படிப் பேச மாட்டிங்கனு நம்பிக்கையும் இருக்குப்பா” என்றான் சிறு முறுவலோடு.
இவன் சொல்வதுபடி நடக்குமா, நடக்காதா, நடக்க சுரேஷ் விடுவாரா என்று கேள்வி கேட்டால், தெரியவில்லை; ஆனால் சிறு முறுவலோடு இவன் இதைச் சொன்னது நன்றாக இருந்தது என்பதே பதில்!
மகன் சொன்னதைக் கேட்ட சுரேஷ்… அவன் தோளில் தட்டிக் கொடுத்து, அப்படியே அவன் தோளில் கை போட்டுக்கொண்டு மனைவியைப் பார்த்தார். ராதிகா உம்மென வர, “நீ ஏன் இப்படி வர்ற, என்னாச்சு” என்று கேட்க, “நீங்க எப்பவும் அவன் பக்கமே பேசறீங்க” என்றார் ராதிகா.
இந்தியா சென்றபோது திலீப் திருமணம் பற்றிய முடிவை எடுத்துவிட ராதிகா நிறைய முயற்சித்தார். சில வரன்கள் பார்க்கவிட்ட சுரேஷ்… பின், ‘கொஞ்சம் நாள் போகட்டும், திலீப் பிசினஸ்ல ஸ்டடி ஆகிட்டானா இன்னும் நல்ல வரன் வரும்’ என்று மகனுக்காகப் பேசி மனைவியின் முடிவை மாற்றியிருந்தார்.
இப்போதைக்கு கீர்த்தியுடன் திலீப் பேசப் போவதில்லை. எனவே இனிமேல் மகனுக்கும் அவருக்கும் இடையே வாக்குவாதங்கள் எதுவும் வராது என்பதில் ஒரு அம்மாவாக ராதிகாவிற்குப் பெரும் சந்தோசமே!
மேலும் மகன் திருமணம் குறித்து கணவர் முடிவில் சம்மதமே!!
இருந்தாலும் வேண்டுமென்றே அதை இப்போது சொல்லிக் காண்பிக்கிறார். அதற்கு சுரேஷ் ஏதோ பதில் சொல்ல, ராதிகா சிரித்துக் கொண்டார். திலீப் முகத்திலும் சிறு சிரிப்பு வந்திருந்தது. அதன்பின்னும் தந்தை பேச… தாயும், மகனும் சேர்ந்து பதில் பேசினார்கள்!
மூவரும் சிரித்தபடியே பேசிச் சென்றனர்!!
எப்படிச் சொல்ல மிகைப்படுத்தி இவர்கள் மூவரைப் பற்றி?
ம், இப்படிச் சொல்லிக் கொள்ளலாம். இவர்கள் குணத்திலும், செயலிலும் பல விமர்சனங்கள் இருந்தாலும்… அம்மா, அப்பா, மகன் என்று இவர்கள் இப்படிச் சிரித்து, மகிழ்ந்து பேசியபடிச் செல்வதை யாரேனும் பார்த்தால்… நிறைவான, நிம்மதியான குடும்பம் என்றுதான் நினைப்பார்கள்!!