Kathambari Novels
அத்தியாயம் – 35 (mini-episode)
அன்று மாலை!
உறங்கி எழுந்திருந்தனர் டேவிட்டும் கீர்த்தியும். அவனுக்கு ஓரளவிற்கு அசதி போயிருந்தது. ஆனால் அவளோ சோர்வுடனே இருந்தாள். முழங்கையின் வலி, வீக்கம் வெகுவாகக் கூடியிருந்தது. எனவே தாமதிக்காமல், உடனே அவளை மருத்துவனைக்கு அழைத்துச் சென்றான்.
மருத்துவர் அவள் காயத்தைப் பரிசோதித்து, பரிசோதனை பண்ணச் செய்து, அதன் முடிவைப் பார்த்து, ‘மைல்டு போன் ஃபிராக்ச்சர்’ என்று தேவையான சிகிச்சை அளித்தார். அவர் பரிந்துரைத்த வலி நிவாரிணி, அழற்சி மருந்து வாங்கிய டேவிட், கவனமாக கீர்த்தியை வீட்டிற்கு அழைத்துச் சென்றான்.
வீடு வந்ததும், கீர்த்தி இரவு உணவு உண்டாள்! மருந்தின் வீரியத்தில், இருந்த வலியில் உறங்கினாலும், இடையிடையே விழித்துக் கொண்டேயிருந்தாள். இரவில் விழித்தவள்… நேற்றைய இரவின் தாக்கத்தில், ‘கண்ண மூடினா சுத்தி தண்ணியா இருக்கிற மாதிரி இருக்கு’ என்றாள்.
கீர்த்தி விழிக்கும் போதெல்லாம், ‘எதையும் நினைக்காம தூங்கு’ என்றான். அவனுக்கு உறக்கம் வரவில்லை. சற்று அயர்ந்து உறங்குபவளை, சடுதியில் திடுக்கிட்டு அவள் விழிப்பதை, அவள் கையில் போடப்பட்ட ஏந்து கட்டைப் [Casts & Sling] பார்க்க, பார்க்க… அவனுக்கு உறக்கம் வரவேயில்லை!
அடுத்தநாள் பகல் பொழுதிலும் சரியாக ஓய்வு எடுக்க முடியாமல், அடிக்கடி முழித்து அவன் இருக்கின்றானா என்று பார்ப்பதும்… வலி, வலி மருந்துகளால் தன்னையறியாமல் கண் மூடுவதுமாகவே இருந்தாள். அவள் இப்படி இருக்க, அவனாலும் ஓய்வெடுத்திட முடியவில்லை.
அடுத்து வந்த நாளும் இருவருக்கும் இப்படித்தான் போனது. அதற்கடுத்த நாள் காலையில்தான் இருவரும் உறங்கி ஓய்வெடுத்தார்கள்.
மதிய வேளையில், ‘சென்டர் போகனும்’ என்றாள். அன்று கடல் அலைகளின் வேகம் குறைந்திருந்தது. நீர் சற்று வடிந்திருந்தது. ஆனால் மழை பெய்தது. கீர்த்திக்கும் உடல் சுட்டது. எனவே, ‘நாளைக்குப் போகலாம், இப்ப வேண்டாம், ரெஸ்ட் எடு’ என்று சொல்லி மறுத்தான்.
சரியென்று கேட்டுக் கொண்டவளுக்கு, கண்ணில் நீர் கோர்க்க ஆரம்பித்தது. டேவிட், “கீர்த்தி” என்றதும், “எதுக்கு இப்படி நடக்கனும், கஷ்டமாருக்கு” என்று அவன் மார்பில் சாய்ந்தாள். ‘கண்ணீர் வேண்டாமே’ என்ற பொருளில் அவள் கண்ணோரங்களைத் துடைத்துவிட்டான்.
அன்று முழுதும் உடல்வலி, மனவலிகளை மாறி மாறி வெளிப்படுத்த, அதற்கு அவனிடமிருந்து ஆறுதல் பெற… என்றே அவளுக்குப் போனது! சட்டென அவள் சரியாக முடியாதென புரிந்தாலும், சரியாக மாட்டாளா, சரி செய்ய முடியாதா என்ற யோசனையிலே அந்த நாள் அவனுக்குப் போனது!!
அடுத்தநாள் காலையில் விழித்ததிலிருந்து கண்களின் பரப்புகளில் காதலை, கவனிப்பை நிரப்பி வைத்தபடி அவன் அவளைப் பார்த்துக் கொண்டான். மனவலி, சோர்வு அவளை ஆட்கொண்டாலும் அவனுடைய கவனிப்பில் சற்று சுகப்பட்டாள்.
ஒரு நாள் கழித்து!
வெனிஸில் மழை, கடல் அலை, காற்று குறைந்திருந்தது. நகருக்குள் புகுந்த நீரும் படிப்படியாக வெளியேறிக் கொண்டிருந்தது. இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவது பற்றி மக்கள் யோசிக்க ஆரம்பித்தனர்.
டேவிட்டும் யோசித்தபடி இருந்தான். கீர்த்தி எப்போது சரியாகுவாள் என்று! அவன் எதிர்பார்க்கும் அளவு இல்லையென்றாலும்… சரியான இடைவெளியில் மருந்து எடுத்ததாலோ, இடைவேளை இல்லாமல் அவளை வருடிடும் அவனது கவனிப்பாலோ… சோர்வில்லாமல் தெரிந்தாள்.
மருத்துவமனைக்குச் சென்று கைக்கட்டை மருத்துவரிடம் காண்பித்துவிட்டு, இருவரும் சென்டர் வந்திருந்தார்கள். யோசித்துச் செய்தவை எல்லாம் அங்கே சேதப்பட்டுக் கிடப்பதைப் பார்த்ததும் அவளது மனம் தெம்பற்றுப் போனது. எதையும் யோசிக்க விடாமல்… அது அவளை முடக்கியது.
அவன் முன் வந்து… தளர்வான குரலில், “வீட்டுக்குப் போலாமா” என்றாள். ஏன் சொல்கிறாள் என்று அவனுக்குப் புரிந்தது. இருந்தும் சேதமில்லாத இடமாகப் பார்த்து அவளை அமரச் சொல்லிவிட்டு, “கொஞ்சம் இங்க சரி பண்ணிட்டுப் போகலாம்” என்றான்.
மிதமான வெயில் இருந்ததால், ஒரு மேசையை வெளியே போட்டு, நனைந்த புத்தகங்களைக் காயவைத்தான். கீழே விழுந்து உடைந்திருந்த சில அழகுப் பொருட்களை எடுத்துப் போட்டுவிட்டு, நனைந்த சுவர் தாள்களைக் கிழித்து எடுத்துவிட்டு, சிறிதும் தண்ணீர் இல்லாமல் தரையை துடைத்தான்.
காற்றோட்டத்திற்காக சன்னல்களைத் திறந்து வைத்து வந்தவன், அவளருகில் அமர்ந்து கொண்டு, அயர்வில் அசந்து சுவரில் தலை சாய்த்து உறங்குபவளை, தன் தோளில் சாய்த்துக் கொண்டான்.
அந்த அறையின் நிலையைப் பார்க்கப் பார்க்க, அவர்கள் இருவரும் சேர்ந்து அதன் உள்அலங்காரங்களைச் செய்த நாள்தான் ஞாபகத்தில் வந்தது. அதை நினைத்தபடி இருந்தான். அரை மணி நேரத்தில் அவள் எழுந்ததும், அவளைக் கூட்டிக்கொண்டு வீட்டிற்கு கிளம்பினான்.
‘எப்போது அவள் திடமாவாள்?’ என்ற கேள்வியில் டேவிட்! ‘சென்டரை பழைய நிலைக்கு கொண்டு வர முடியுமா?’ என்ற கேள்வியில் கீர்த்தி! இப்படித்தான் அவர்களுக்கு அன்றைய பொழுதுகள் இருந்தன!!
மறுநாளிற்கு மறுநாள்!
டேவிட் கஃபே திறந்திருந்தான். கீர்த்தியையும் அவனுடன் கூட்டிக் கொண்டே வந்திருந்தான். வெனிஸ் மக்கள் இப்போதுதான் இயல்பிற்குத் திரும்புவதால், கஃபேவில் வாடிக்கையாளர்கள் குறைவாக இருந்தனர். அவர்களுக்கு காஃபி தயாரிப்பது, கிடைக்கும் நேரத்தில் அவளிடம் பேசுவது என்றிருந்தான்.
இயல்பை மீறி அவன் தொடர்ந்து பேசினான். ஓரிரு வார்த்தைகளிலே அவள் பதிலளித்தாள். ஆனால் அவளாக எதுவும், எதையும் பேசவில்லை. இருந்தும் வெகுநாட்களுக்குப் பின் ஒர்க் ஏரியாவில் அவளுடன் நேரம் செலவிடுவதால் அவன் இன்முகமாக இருக்க நினைத்தான்.
ஆனால் அவள் சோகம் கண்டு, “வீட்டுக்கு வேணா போலாமா” என்றான்.
“ம்கூம், இங்கயே இருப்போம்” என்றாள்.
அந்தப் பதிலால் அவள் முகம் பார்த்து மென்னகை புரிந்தான். ஆனால் அவள் இறுக்கமாக இருந்தாள். எதுவொன்றும் சொல்லாமல், அவள் பிடிக்குமென்று சொன்ன பாடலைத் தேடிப் பிடித்துப் போட்டுவிட்டான்… அவள் ‘அகம் தானாய்’ சரியாகட்டும் என்கின்ற நம்பிக்கையில்.
சற்றுநேரத்தில் கீர்த்தி, “டேவிட்” என்று அழைத்தாள். காஃபி கோப்பையைத் துடைத்துக் கொண்டிருந்தவன், ‘என்ன?’ என்று அவளைப் பார்த்தான். அருகே வரச் சொல்லி அவள் விழிமொழி இருக்கவும், “ம், சொல்லு” என்று அவள் முன் மண்டியிட்டு அமர்ந்தான். ஒரு கையால் அவனை அணைத்துக் கொண்டாள்.
“கஃபேல நம்ம… ரொம்ப மிஸ் பண்ணேன் இத” என்றாள் கரகரப்பான குரலில்! அதன்பின் எதுவும் பேசவில்லை. ‘அழறாளோ?’ என்று பார்க்க நினைக்கயிலே, அழுகிறாள் என்று அவன் சட்டையின் ஈரம் சொன்னது.
என்னை மீட்டெடுத்தவளை எப்படி மீட்டெடுக்கப் போகிறேனோ என்ற கவலை அவனுக்கு வந்தது. ஆனால் அவன் இதயம், உன் காதல் அவள் காயத்தை ஆற்றி, அவளை மீட்டெடுக்கும் என்றது. அது தந்த நம்பிக்கையில், நேசத்தில் நெகிழ்ந்தெடுத்த நெற்றி முத்தம் ஒன்றை அவளுக்கு வைத்துவிட்டு, அவளை நெஞ்சோரம் நெருங்கச் சாய்த்துக் கொண்டான்!
இத்தனை நாட்களுக்குப் பின்னர் கஃபே மஞ்சள் விளக்கொளியில் அவர்களை அப்படிப் பார்க்கவும்… தன் இயல்பை எப்படித் திரும்ப மீட்டெடுப்போம் என்ற தவிப்பிலிருந்த வெனிஸ் நகரம்கூட இன்முகத்துடன் இருக்க நினைத்தது!!