Kathambari Novels
அத்தியாயம் – 33
டேவிட்டைப் பார்த்ததும் கீர்த்தி, “வந்திட்டியா” என்று இளைப்பாறும் குரலில் அழைத்து, நீருக்குள் சில எட்டுக்கள் வைத்து அவன் முன் வந்து, ஒருகணம் அவன் முகம் பார்த்து நின்றவள், மனஅழுத்தம் தீர அவன் நெஞ்சில் முகத்தை அழுத்தமாகச் சாய்த்துக் கொண்டாள்.
நிமிர்ந்து அவனின் விழி பார்த்து, “இத்தனை நாளா லைஃப் என்னமோ மாதிரி இருந்தது. உன்னய ரொம்ப மிஸ் பண்ணேன்” என்று சொல்லிவிட்டு, அவனை அணைத்துக் கொண்டாள்.
அவன் எந்தச் செயலுமில்லாமல் அப்படியே நின்றான்!
“உன்னய மட்டுமில்ல… ஃபோர்ஹெட் கிஸ், கஃபே, காஃபி எல்லாமே மிஸ் பண்ணேன்” என்று இலகுவானக் குரலில் சொல்லி, இன்னுமே இறுக்கமாக அணைத்துக் கொண்டாள்
டேவிட் சிறிதும் இலகுவாக இல்லை!!
அவன் அழைப்புகள் ஏற்கப்படாமல் போனதால், அவளுக்கு என்னானதோ, ஏதானதோ என்ற பதைப்பதைப்புடன் வந்திருந்தான். அவன்மீது அவளுக்குக் கோபம் இருக்குமோ என்ற பயம்கூட இருந்தது. ஆனால் அவள் பேசுவதைப் பார்த்ததும், இப்படியென்றால் என் அழைப்பை ஏற்றிருக்கலாமே, ஏற்காமல் இருந்து என்னை ஏன் கஷ்டப்படுத்த வேண்டும் என்ற ஒரு எண்ணம்.
மெல்ல அவளை விலக்கி நிறுத்தப் பார்த்தான். விலகாமல், “என்ன” என்று சிறு முறுவலுடன் கேட்க, மீண்டும் அவளைத் தள்ளி நிற்க வைக்கப் பார்த்தான். அதைச் சிறிதும் உணராமல், “ரொம்ப பசிக்குது, முதல சாப்பிடப் போய்ட்டு வரலாமா” என்று இயல்பாகக் கேட்டாள்.
மீண்டும் அவளை விலக்கி நிறுத்தவே முயன்றான். அந்தநொடி அவன் செயல் புரிந்து விலகியவள், “என்ன டேவிட்” என்றாள். அவனோ பதில் சொல்லாமல் நின்றான். “என்ன… இன்னும் கோபமா” என்று இலகுவாக அவள் கேட்கவும், “யாருக்கு, உனக்கா… எனக்கா?” என்றான்.
‘என்ன?’ என்பது போல் கண்கள் சுருக்கிப் பார்த்தாள்.
அலைபேசியை எடுத்துக் காட்டி, “ஜஸ்ட் லுக், நேத்து நைட்லருந்து இப்ப வரை உனக்கு எத்தனை கால் பண்ணிருக்கேன்னு, ஒரு ஃபோன் கால்கூட உனக்கு அட்டன் பண்ணத் தோனலயா? நீ சேஃபா இருக்கியா இல்லயானு தெரியாம, ஐ ஃபெல்ட் லைக், ஐ ஹேட் லாஸ்ட் எவரிதிங்” என்றான் கண்கலங்கி.
அவள், “டேவிட்” என்று அவனருகே வர, பின்னே தள்ளிப் போனவன், “நீ எப்படி இருக்கனு தெரியாம… அவ்ளோ பயத்தோட வந்து நின்னா, யூ ஆர் டாக்கிங் ஸோ நார்மலி! அப்படினா ஃபோன் அட்டன் பண்ணிருக்கலாமே” என்றான் கண்ணீர் தேங்கிய கண்களுடன்.
விழிகளில் நீர்ப்படலாம் நிறைந்துவிட அமைதியாக நின்றாள்.
“என்னய மிஸ் பண்ணேனா என்னய வந்து பார்த்திருக்கலாமே, இல்ல கால் பண்ணிருக்கலாமே, அட்லீஸ்ட் நான் கால் பண்ணா எடுத்திருக்கலாம் கீர்த்தி, பட் நீ எதுவுமே செய்யலயே… ஏன்?!
அதும் நேத்து நைட்லருந்து… எவ்ளோ கஷ்டமா இருந்தது தெரியுமா? உனக்கும் எதும் ஆயிடுமோனு பயந்து… என்னய இப்படிக் கஷ்டப்படுத்தாத, என்னால முடியல” என்று சொல்லி முடிக்கையில் அவனுக்கு கண்ணீர் வந்துவிட்டது.
அவளுக்கும் கண்ணீர் கடகடவென நிற்காமல் வடிந்தது.
வெளியே… மக்கள் சத்தம், கொட்டும் மழை, நீரின் சலசலப்பு என்று இருந்தது. உள்ளேயும் முட்டிக்கு மேல் நீர் சூழ்ந்து இருக்க, இருவரும் கண்ணீர் சிந்தும் கண்களுடன் நின்றனர். ஓரிரு வினாடிகளில், அவளுக்கு எதுவுமில்லை என்ற நிம்மதியில் கண்ணீரைத் துடைத்துவிட்டு நிமிர்ந்து பார்த்தான்.
இடக்கையால் அழுத்தி வாய்மூடி சத்தமில்லாமல் அழுது கொண்டிருந்தாள். இதுவரை அவள் அழுதே பார்த்ததில்லை. இப்படி அழுவாள் என்றும் அவன் எதிர்பார்க்கவில்லை. அது தந்த அதிர்ச்சியில் அவன் நிற்க… கண்ணீர் வடியும் கண்களுடன், “உன்னய ரொம்பக் கஷ்டப்படுத்திட்டேன், இல்லயா” என்றாள்.
வந்ததும் பேசியதற்கு அழுகிறாளா, ஆனால் அதற்கு ஏன் இவ்வளவு அழுகை என்று அவன் யோசிக்க, அழுதபடி மீண்டும் சொன்னதையே அவள் சொல்ல, எதையும் அவன் யோசிக்கவில்லை. அவள் கண்ணீர் வெகுவாகத் தாக்க, எல்லாம் பின்னுக்குப் போக, “அப்படிலாம் எதுவுமில்ல, இந்தமாதிரி நினைச்சி நீ அழாத” என்றான் படபடவென்று.
ஏங்கி ஏங்கி அழுதபடி, “எனக்கு அழனும்னு தோனுது, விட்டுடு டேவிட்” என்று இத்தனை நாட்களாகக் காயம்பட்ட மனதின் வலியை, வேதனையை… இன்று கண்ணீராக வெளிப்படுத்தி, “நான் உன்னய மிஸ் பண்ணேன்… ரொம்ப மிஸ் ப… பண்ணேன் டேவிட்” என்றாள்.
‘என்னாச்சு இவளுக்கு’ என்று பதறியவன், “ஓகே, ஓகே என்னய மிஸ் பண்ண நீ, நான்… நான்தான் தெரியாம ஏதேதோ பேசிட்டேன், வா” என்று அவளை அரவணைக்க வந்தான்.
“வேண்டாம்” என்று விலகிக் கொண்டவள், “நீ சொன்ன மாதிரி நான் வந்து பேசிருக்கலாம், எனக்கு நீ வரனும்னு தோனிச்சி. சண்டை போட்ட நைட்டே கால் பண்ணிடுவனு தூங்காம மொபைல் பார்த்துக்கிட்டே இருந்தேன். ஆனா நீ ஃபோன் பண்ணல, கஷ்டமாயிருந்திச்சி டேவிட்” என்றாள்.
“அன்னைக்கு நா” என்று ஆரம்பித்தவன் போயொழிந்த நாட்கள் எதற்கென்று நினைத்து, “நான் வரனும்னு நினைச்ச, வந்திட்டேன்ல, அழாத. நீ கால் அட்டன் பண்ணலனதும், உனக்கு என்னாச்சுனு தெரியாம நான் பயந்திட்டேன். அந்த டென்சன்ல பேசிட்டேன். ப்ளீஸ் டோன்ட் க்ரை” என்றான்.
“புரியுது டேவிட்” என்று கன்னத்தில் வழிந்த கண்ணீரைத் துடைத்து, “நேத்து நைட் முதல ஒன்னும் தெரியல. வாட்டர் லெவல் இன்க்ரீஸ் ஆகவும், இங்க இருக்க முடியாதுனு, பேக் எடுத்திட்டு அவசர அவசரமா வெளிய போனேன். சுத்தியும் தண்ணீ… ரொம்ப மழை… இருட்டு… பயந்திட்டேன்.
என்ன செய்யனு யோசிக்க முடியல. உன்னைத்தான் நினைச்சேன், உன்னைப் பார்க்கனும்னு, என்கூட நீ இருக்கனும்னு ரொம்பத் தோனிச்சி… உனக்கு கால் பண்ண மொபைல் எடுத்தேன்… பாலன்ஸ் மிஸ் ஆகி கீழ விழுந்திட்டேன்.
மொபைலும் விழுந்திடுச்சி. அந்த நேரத்தில, அவ்ளோ தண்ணீல எப்படித் தேட முடியும்? சைரன் சத்தம் வேற கேட்டுக்கிட்டே இருந்தது. இங்க நிக்கிறது சேஃப் இல்லனு, வேற ஏரியா போய் ஒரு ஷாப்ல இருந்திட்டு, கொஞ்சம் நேரத்துக்கு முன்னதான் இங்க வந்தேன்.
நீ கால் பண்ணதே எனக்குத் தெரியாது. தெரிஞ்சே அவாய்ட் பண்ணல. வேற எப்படியாவது உன்னய கான்டெக்ட் பண்ணிருக்கலாம், முடியல, கம்ப்ளீட்டா பிளாங்க் அவுட் ஆயிடுச்சி” என்று இன்னும் அதிகமாக அழுதாள்.
எப்போது ‘விழுந்திட்டேன்’ என்று அவள் சொன்னாளா அப்போதிருந்து ‘கீர்த்தி அடிபட்டிருக்கா’ என்று ஆயிரம் முறை கேட்டிருப்பான். பதில் சொல்லாமல் அழுது கொண்டே இருந்தாள். “ப்ளீஸ் கீர்த்தி, சொல்லு. அடிபட்டிருக்கா” என்று கெஞ்சவும், “ம்ம்ம்” என்று வலது முழங்கையைச் சுட்டிக் காட்டினாள்.
அந்தக் கணம்தான் அவள் இடதுகையால் மட்டுமே அவனை அணைத்தது நினைவில் வர, ‘ஐயோ கீர்த்தி’ என்று மனம் அடித்துக் கொள்ள, “கைய காட்டு பார்க்கலாம்” என்று அவளருகே வரவும், “வேண்டாம்” என்று அவள் பின்னே செல்ல, “ட்ரீட் பண்ணனுமானு பார்க்கனும்” என்று அவள் கையைப் பார்க்கப் போக, “ம்கூம், வேண்டாம்” என்று மறுக்கத்தான் செய்தாள்.
“வேண்டாம்… வேண்டாம்னு சொல்லாத”
“எனக்கு வேணும் டேவிட்… நீ வேணும், நீ கேர் பண்றது வேணும், எல்லாம் வேணும்” என்று சிறுபிள்ளை போல் தேம்பித் தேம்பி அழுதாள்.
சிலநொடிகள் செய்வதறியாமல் ஸ்தம்பித்து நின்றவனுக்கு, ‘நான் இப்படி நின்றால் எப்படி’ என்று தோன்றியவுடன், “அன்னைக்கு நடந்ததை நினைச்சி கஷ்டப்படறியா, அதான் இவ்ளோ அழறியா” என்றான் தவிப்புடன்.
“அதுவும்தான்” என்றாள் அழுதபடி.
தேங்கியிருந்த நீரை… சேதமடைந்த மிதந்து கொண்டிருந்த பொருட்களை, சுவர் தாள்கள் கிழிந்திருந்ததைப் பார்த்தவன், “கீர்த்தி, இததான் கஷ்டம்னு சொல்றியா” என்று கேட்க, “இதுவும்தான், ஆனா இதுக்காக மட்டுமில்ல” என்று அழுதபடியே பொருட்களை எடுக்கப் போனாள்.
‘வேறு எதற்காக இவள் இப்படி?!’ என்று யோசித்து நின்றவனால், கணிக்கவே முடியவில்லை ஏன் இவ்வளவு கண்ணீர் என்று! நானில்லாத அவள் நாட்களில் என்ன நடந்திருக்கும் என்று அவன் யோசித்து நிற்கையிலே, பொருட்களை அவள் எடுக்க ஆரம்பித்திருந்தாள்.
வேகமாகச் சென்றவன், “இதலாம் இப்ப வேண்டாம், கைல அடிபட்டிருக்குனு சொன்னேல, பெயின் இருக்கும்” என்று தடுத்தான்.
“கொஞ்சமாவது திங்ஸ் சேஃப் பண்ண முடியுதானு பார்க்கனும்”
“பார்க்கலாம், யாரையாவது அரேஞ் பண்ணி, அப்புறமா பார்க்கலாமே”
“வேண்டாம்… இப்பவே” என்றாள் அழுதபடியே.
இப்படி ‘வேண்டாம், வேண்டாம்’ என்றால் என்ன செய்வது என்று தவித்துப் போனவன், “ப்ளீஸ் இவ்ளோ அழாத கீர்த்தி” என்று மன்றாடினான். அவளோ கேட்காமல் கண்ணீர் சிந்தியபடி இருக்க, “ஓகே எல்லாம் க்ளீன் பண்ணலாம், பசிக்குதுனு சொன்னேல சாப்பிட்டு வந்து பார்க்கலாம்” என்றான்.
“ரொம்ப கஷ்டமாருக்கு டேவிட், இப்ப சாப்பிட முடியாது” என்று பொருட்களை எடுக்க ஆரம்பித்தாள். அவள் கேட்கும் மனநிலையில் இல்லையென புரிந்து, தேங்கியிருக்கும் நீரை வெளியேற்ற ஆரம்பித்தான். மோட்டார் இல்லாததால், மிகுந்த சிரமமாக இருந்தது. ஆனாலும் தொடர்ந்து செய்தான்.
ஒன்றரை மணி நேரத்திற்குப் பின், அறையில் நீரின் அளவு கணுக்கால் வரை என்று குறைந்திருந்தது. அதையும் வெளியேற்ற அவன் முயற்சிக்க… அவளோ நனைந்த புத்தகங்களை, கீழே விழுந்த பொருட்களை எடுத்து வைத்துவிட்டு, அப்போதே அயர்வுடன் ஒரு முக்காலியில் அமர்ந்துவிட்டாள்.
சோர்வுடன் அவள் முன் வந்தவன், “இதுக்குமேல வைப் பண்ணிதான் வாட்டர் ரிமூவ் பண்ணனும், இப்ப முடியல. அப்புறமா பார்த்துக்கலாமா” என்று கேட்க, சரியென்று தலையாட்டினாள்.
சோர்ந்திருந்த அவள் முகம் பார்த்து, “வா, வீட்டுக்குப் போலாம்” என்றான்.
“இல்ல இங்கயே” என்று மட்டும் சொன்னாள்.
“இங்க எப்படி மேனேஜ் பண்ணுவ? நேத்து நைட்லருந்து இதே அட்மாஸ்பியர்ல இருந்திருக்க, இன்னும் இங்கயே இருக்கிறது ஹெல்த்துக்கு நல்லதில்ல, வா கீர்த்தி… வீட்டுக்கு” என்று அழுத்திச் சொன்னான்.
“வேண்டாம்” என்றாள் மீண்டும்.
“உனக்கு என்மேல கோபம்னு தெரியுது, உன் வீட்டுக்கு நாம போலாம்னுதான் சொல்றேன். வா, எந்திரி” என்று அமைதியாகப் பேசிப் பார்த்தான்.
கண்கள் கலங்கிவிட, “எனக்கு உன்மேல கோபம்லாம் இல்ல டேவிட், அப்படிச் சொல்லாத” என்றவள், “வீடு அக்ரீமென்ட் பீரியட் முடிஞ்சிருச்சு, அத யோசிக்க மறந்துட்டேன். அதான் இங்கனு சொன்னேன். நாலு நாளா இங்கதான் ஸ்டே பண்றேன். இனிதான் வீடு பார்க்கனும்.
சென்டரயும் சரி பண்ணனும். பைனான்ஷெல் ப்ராப்ளம் வேற இருக்கு, எப்படி எல்லாம் செய்ய போறேனோ, அதோட இதுக்கெலாம் என்கிட்ட கொஞ்சம்கூட ஸ்ட்ரென்த் இல்ல, என்ன செய்வேன் நான்” என்று ஓவென அழுதாள்.
அவள் என்ன சொல்கிறாள் என்று கவனிக்க முடியாதளவு அவளது கண்ணீர் அவனைப் பாதித்தது. கண்ணோரங்களில் கவனிப்பு வெளிப்பட கீர்த்தியைச் சற்றுநேரம் பார்த்து நின்றவன், “அதலாம் அப்புறம் பார்த்துக்கலாம். இப்போ வா, வீட்டுக்குப் போலாம்” என்றான்.
“சொல்றேன்ல” என்று ஆரம்பித்தவள், “ஓ உன் வீட்டுக்கா, நீ போ, நான் இங்க இருந்துப்பேன்” என்று அழுகையினூடே சொன்னாள்.
பட்டென்று, “கோபம் இல்லனு சொல்ற… ஆனா வரமாட்டிக்கிற” என்றான்.
அவள் பார்த்த பார்வையில், அந்தப் பார்வையிலிருந்த பலவீனத்தில், எதுவும் அழுத்திச் சொன்னால் தாங்க மாட்டாளென்று புரிந்தவன், “கீர்த்தி…” என்று பேச வர… அவள், “திரும்ப சென்டர்குள்ள தண்ணீ வந்தா, எல்லாம் மொத்தமா போயிடும். நான் இங்க பார்க்கணும், நீ போ” என்றாள்.
“நீ இப்படி அழுதுகிட்டே இருக்க… இன்னும் ஹை டைட் பாசிபிளிட்டி இருக்கு! எப்படி உன்னய விட்டுப் போவேன்”
அப்போதும் அவள் எழாமல் இருக்க, “கீர்த்தி, என்னய பாரு; டென்சன்ல நைட் தூங்கல. அம் ஸோ டயர்ட். நீட்(need) டு டேக் அ ரெஸ்ட். எனக்காக வா” என்று பொறுமையாகச் சொல்லிப் பார்த்தான்.
கண்ணீர் வழிந்த கண்களால் அவனையே பார்த்திருந்தவள், மெல்ல எழுந்து பெட்டியை எடுத்தாள். அவன் மழைக்கான உடைகள் இல்லாமல் இருந்ததால், அவளது ‘ரெயின் கோட்’ ஒன்றை எடுத்து தந்தாள். அவளையே பார்த்தவன், அதை வாங்கிவிட்டு, “கீர்த்தி வா” என்று இருகைகளையும் விரித்தான்.
ஒரு நொடி அவனைப் பார்த்து நின்றவள், ‘வேண்டாம்’ என்று தலையசைத்து, வெளியே போய் நின்றாள். அவள் அணைத்த போது, தள்ளி நிறுத்தியதற்காக வேண்டாம் என்கிறாளென புரிந்தது. ஆனால் ஏன் இப்படி ஒட்டுமொத்தமாக உடைந்தவளாய், ஓய்ந்தவளாய் அழுகிறாளென புரியவில்லை.
எதுவானாலும் வீட்டில் போய் பேசிக் கொள்ளலாம், வெகுநேரம் தண்ணீரிலே நிற்பது நல்லதல்ல என நினைத்தவன், கடகடவென வெளியே வந்து இரும்புத் தடுப்பைப் போட்டுவிட்டு, சென்டர் கதவைத் தாழிட்டு, அவளைக் கூட்டிக் கொண்டு, நீர் தேங்கியிருந்த தெருக்கள் வழியே நடந்தான்.
மழை பெய்து கொண்டிருந்தது. அவள் மெதுவாக நடப்பதைப் பார்த்தவன், “முடியலயா” என்றான். ‘ம் ம்’ என்று அவள் பலமிழந்த குரலில் சொல்லவும், ‘கொடு’ என்று அவள் பெட்டியை வாங்கிக் கொண்டான்.
பாதுகாப்பு உடைகள் சரியாக இருந்தும், நனைந்தபடி வீடு வந்து சேர்ந்தனர். வந்ததும் அவன், “போ, போய் டிரஸ் சேஞ் பண்ணு. பசிக்குனு சொன்னேல, லஞ்ச் ரெடி பண்றேன்” என்றான். அவள், “நீயும் நனைஞ்சிருக்க” என்றதும், “பார்த்துக்கிறேன், நீ போ” என்று அனுப்பினான்.
அவள் போனதும், அவனும் குளித்து வேறு உடை மாற்றி சமையலறை வந்து, இலகுவான உணவைச் சமைத்து முடித்தான். அப்படியே ரவி, மது மற்றும் உறவினர்களுக்கு அழைத்து அவன் பாதுகாப்பைத் தெரியப்படுத்தினான். பின் காஃபியை எடுத்துக்கொண்டு, அவளிருந்த அறைக்குப் போனான்.
குளித்து உடை மாற்றியிருந்தாள். டேவிட் உள்ளே வரும் போது சன்னலருகே நின்றவளின் பார்வை வெளியே நீர் சூழ்ந்திருந்த நகரில் நிலைத்திருந்தது.
அவளருகே சென்று, “ம்ம்” என்று கோப்பையை நீட்ட… மறுத்து தலையசைத்து, அப்படியே சரிந்து… சுவரில் சாய்ந்து அமர்ந்தாள். அவனும் அமர்ந்து, “டயர்டா தெரியற கீர்த்தி, குடி” என்றான் அனுசரணையான குரலில்.
மீண்டும் மறுத்தவள்… கண்கள் லேசாக கலங்க, சோர்ந்திருந்த அவன் முகம் பார்த்து சற்றுநேரம் இருந்துவிட்டு, “அதுமாதிரி ஒரு செட்டப்ல, ஏன் பொக்கே வாங்கிட்டு நின்னேன்னு தெரியனுமா?” என்றாள் களைத்திருந்த குரலில்.
“அதுபத்தி எதும் பேச வேண்டாம்… விடு” என்றான் சட்டென்று.
கண்களில் கண்ணீர் நிரம்ப, “ம்” என்றாள் அழுகையை அடக்கியபடி.
‘ஏன் கீர்த்தி நீ இப்படி ஆயிட்ட’ என்று பார்வைப் பார்த்தவன், “உனக்கு எதும் ஷேர் பண்ணனும்னா பண்ணு, பட் எனக்கு எந்த டவுட்டும் இல்ல. நீ அதுக்காக எதையும் சொல்ல வேண்டாம். அட் தே சேம் டைம், அந்த செட்டப் பார்த்தே, நீ கெஸ் பண்ணிருந்தா, அந்த சிச்சுவேஷனை அவாய்ட் பண்ணிருக்கலாம்னு தோனுது” என்றான் அமைதியான குரலில்.
‘சரிதான்’ என்பது போல் தலையைசைத்தவள், “மத்த நாள்னா, ஏன் இப்படினு யோசிச்சிருப்பேன், ஆனா அன்னைக்கு…” என்று நிறுத்தினாள். சற்றுநேரம், ‘என்ன அன்று’ என்ற பார்வைப் பார்த்தவனைப் பார்த்திருந்துவிட்டு, “டேவிட், என் பர்த்டே அன்னைக்கு” என்றாள் அழுதபடி.
‘பர்த்டேவா’ என்று அதிர்ந்தவன், “இப்படினு சொல்லிருக்கலாமே கீர்த்தி, ஏன் சொல்லல” என்றதும், “அப்ப கோபத்தில சொல்லத் தோனல” என்றாள்.
“அத கேட்கல நான், ஈவினிங் மீட் பண்ணப்ப சொல்லிருக்கலாமே. எதுக்காக அப்போ சொல்லாம இருந்த”
‘சொல்லியிருக்கலாம்’ என்பது போல் தலை ஆட்டியவள், “சொல்லாம இருக்க நினைக்கல, அப்புறம் கால் பண்றதா சொன்னேன்ல டேவிட், அப்ப சொல்ல நினைச்சேன். சொல்லிட்டு, உன்கூட அன்னைக்கு ஃபுல்லா டைம் ஸ்பென்ட் பண்ண… நிறைய கிஃப்ட் குட்டி குட்டியா வாங்கிக்க நினைச்சேன்” என்றாள்.
அழுதபடியேதான் சொல்லியிருந்தாள். எனினும் அன்று அவளுக்கு எவ்வளவு ஆசை இருந்திருக்குமென உணரும் படியும் இருந்தது. இப்போதே அவளைக் கடைவீதிக்கு கூட்டிச் சென்று அவள் கை காட்டும் அனைத்தையும் வாங்கி அவள் கைகளை… காதலை நிரப்பிட வேண்டுமென்ற தவிப்பு கொண்டான்.
இப்படியொரு விருப்புடன் இருந்தவளுக்கு, அன்றைய நிகழ்வு எப்படியொரு வலியைக் கொடுத்திருக்கும்? அவள் வலியைப் போக்க வேண்டும். அவளது கண்ணீரை நிறுத்த வேண்டும். அவனது கரத்திற்குள் அவளை இருத்திக் கொண்டால், ஆறுதல் அடைவாள், அழுகை குறையுமென, “கீர்த்தி” என்று அரவணைக்க வர, “வேண்டாம்” என்று சுவரோடு ஒட்டிக் கொண்டாள்.
“கீர்த்தி அப்ப டென்சன்… ஸோ ஐ டிட்ன்ட் ஹக் யூ” என்றான். அவள் ஒன்றும் சொல்லாமல் விக்கி விக்கி அழவும், “வேற எதும் ப்ராப்ளமா, அதான் இவ்ளோ அழறியா?” என்றான்.
அவன் கேட்டதும், அவளது அழுகை ஏகத்திற்கும் அதிகமாக, “அழாத கீர்த்தி, என்னென்னு சொல்லு, சொன்னாதான தெரியும்” என்றான். திரும்பத் திரும்ப அதையே கேட்டுக் கொண்டிருந்தான்.
அவளோ பேசாமல் கண்ணீர் சிந்தியபடியே இருந்தாள். சில வினாடிகளுக்குப் பின் கண்ணீர் மட்டுப்பட்டிருந்தது. மேலும் சில நொடிகள் எடுத்துக் கொண்டு கலங்கிய கண்களுடன் அவனைப் பார்த்து, “திலீப் அப்பா…” என்று ஆரம்பித்து சுரேஷ் பேசியது அனைத்தையும் சொல்லி, கண்களை மூடிக் கொண்டாள்.
அவளுக்கும் தனக்கும் மனஸ்தாபம்… அது சரியாக நாளாகும் என்றுமட்டுமே நினைத்திருந்தான். ஆனால் இங்கே பிரச்சனை அதுமட்டுமல்ல என்றதும் ‘ஏன் இப்படி யோசிக்காமல் விட்டேன்’ என்ற கேள்வியில் தங்கி, தடுமாறி, தவித்துப் போனதில் பேசாமல் இருந்தான். அவளது கண்ணீரால், அவளுக்கான அவனது கவலையால் தெம்பில்லாமல் அவன் மனம் துவண்டது.
அந்தநேரத்தில், “டேவிட்” என்று அவள் அவனைப் பார்க்க… குனிந்திருந்தவன் நிமிர்ந்து அவளைப் பார்த்ததும், “திலீப் அப்படிக் கேட்டதுக்கு அடுத்த நாள், அவங்க அம்மா… வீட்டுக்கு வந்தாங்க” என்று நிறுத்தினாள். உடனே, “எதும் ஹார்ஷா அவங்களும் பேசிட்டாங்களா” என்று பதற்றத்துடன் கேட்டான்.
சில வினாடிகள் கருவிழி அங்கும் இங்கும் அலைய இருந்தவள், “பேசினாங்க, ஆனா அவங்க அதோட நிறுத்தல… அடிக்கவும் வந்தாங்க, அடிச்சாலும் கேட்க யாருமில்லனு சொல்றாங்க” என்றவளிடம் அப்படியொரு அழுகை.
‘கேட்க யாருமில்லையா’ என்று அப்படியொரு கோபம் அவனுக்கு. அதைவிட இவள் ஏன் தன்னிடம் வரவில்லை என்ற ஆதங்கத்தில், “ஏன் கீர்த்தி, இப்போ என்கிட்ட சொல்ற மாதிரி, அப்பவே வந்து சொல்லிருக்கலாமே” என்றான்.
அவள் பேசாமல் இருக்கவும், “சொல்லு இவ்ளோ நடந்திருக்கு, என்கிட்ட ஷேர் பண்ண தோனலயா” என்று அவன் பலமுறை பலவாறு கேட்டபின், “தோனிச்சி டேவிட்… தோனிச்சி” என்று கத்தினாள்.
“அப்ப ஏன் வரல… அவ்ளோ கோபமா என்மேல” என்றான் சத்தமாக.
நேராக அவன் முகம் பார்த்து “நான் வந்தேன் டேவிட்” என்றாள் காற்றாகிப் போன குரலில்.
‘என்னைத் தேடி வந்தாளா’ என்ற கேள்வியில் இதயம் பதைபதைக்க, “வந்தியா… எப்போ” என்றான் பரிதவிப்பாக.
“ஒரு நாள்… கடன் பத்தி பேசணும்னு சுரேஷ் சார் கூப்பிட்டாங்க” என்றுவிட்டு, அதன்பின்னும் சொல்வதற்கு என்னவோ போலிருந்தால் அவள் தயங்கியே இருந்தாள்! அவனோ அவள் என்ன சொன்னாலும், ஆறுதல் சொல்வதற்காக துவண்டிருந்த மனதைத் தயார் செய்து, திடப்படுத்திக் கொண்டான்.
அவள் தயக்கம் மேலும் தொடரவும், “ப்ளீஸ் டோன்ட் ஹெசிட்டேட், எதுனாலும் என்கிட்ட ஷேர் பண்ணிக்கோ” என்றான் கலங்கிய குரலில்.
அதன்பின்னும் தயக்கம் நிறைந்த தொனியில், “அ… அவங்க, அம்மா மேரேஜ் பண்ணவனைச் சொல்லி, அவனை மாதிரி நீ ஏமாத்திட்டு இருக்கியா… உன் அம்மா மாதிரி ஏமாந்திட்டியானு கேட்டாங்க டேவிட்” என்று ஆழ்ந்தமூச்சுகள் எடுத்து எடுத்து அழுகையை அடக்கிக் கொண்டேயிருந்தாள்.
ஆறுதல் சொல்ல தயார் செய்த அவன் மனம் ஒருமுறை மரணித்து மீண்டது! என்ன சொல்லவென தெரியவில்லை. சுரேஷ் மீது அவ்வளவு கோபம் வந்தது. அவள் பேசியது மட்டுமே அவனுக்கு வலி. ஆனால் அவளுக்கு…? நினைக்க நினைக்க கண்களில் கண்ணீர் சூழ்ந்தது… பேசவும் முடியவில்லை.
அவள் பேசினாள். “அத என்னால தாங்கிக்க முடியல, எனக்கு உடனே உன்னய பார்க்கணும்னு தோனிச்சி, கஃபே வந்தேன்… பூட்டிருந்தது. நீ வருவேன்னு வெயிட் பண்ணிப் பார்த்தேன், நீ வரவேயில்ல. உடனே இங்க ஓடி வந்தேன், கதவைத் தட்டித் தட்டிப் பார்த்தேன், திறக்கலை. சரி, வெயிட் பண்ணலாம்னு மாடிப்படியில உட்கார்ந்துகிட்டேன்.
நீ வருவ, வருவனு ரொம்ப நேரம் பார்த்திட்டு இருந்தேன். நீ வரல. அன்னைக்கு மழை வேற பெஞ்சதா… ஒரு ஸ்டேஜ்க்கு மேல நிக்க முடியல. என்ன செய்யனு தெரியல, திரும்பப் போயிட்டேன்” என்றாள் சங்கடமாக.
கண்ணீரின் அளவு அதிகரிக்க… கண்களை விட்டு அது இறங்காமல் இழுத்துப் பிடித்து வைத்துக்கொண்டு, “எனக்கு கால் பண்ணிருக்கலாமே” என்றான்.
“என்கிட்ட சொல்லாம எங்கயோ போயிட்டனு தெரிஞ்சது, ஃபோன் பண்ணி எடுக்கலனா” என்று வேதனையாக அவள் கேட்க, “என்ன பேசற நீ, உன்னோட கால் அட்டன் பண்ண மாட்டேனா” என்று வேகமாக அவன் கேட்டான்.
“தெரியலயே” என்று ஏமாற்றம் கொட்டிக் கிடந்த குரலில் சொன்னவள், “ஆமா எங்க போயிருந்த நீ” என்றாள் குரலில் ஏக்கங்கள் எக்கச்சமாக கிடக்க!
கண்ணெங்கும் கண்ணீர் ததும்பி நிற்க, “பேரீஸ், அது கீர்த்தி… நடந்ததுல மைன்ட் டிஸ்டர்பா இருந்தது. டிராவல் எங்கயும் போனா, எல்லாரையும் மீட் பண்ணா… மைன்ட் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகும்னுதான் போனேன்” என்று மெதுவாக விளக்கம் தந்தான்.
அவளோ விழிகளில் விழிநீர் பொங்கி நிற்க, “புரியுது டேவிட். நீ எக்ஸ்பிளைன் பண்ணாத” என்றதும், சற்றுநேரம் அங்கே அமைதி நிலவியது.
அதன்பின் கீர்த்திதான், “ஆ… ஆனா அவங்க எனக்கு யாருமில்லனு சொன்னது உண்மைதான் இல்ல, இந்த நிமிஷம் வரைக்கும் கீர்த்திய எதுக்கு இப்படிப் பேசறீங்கனு கேட்க யாருமில்லங்கிறத விட… அத சொல்லக்கூட எனக்குனு யாரும் இல்லைல?!” என்றாள் உடைந்து போன குரலில்.
இழுத்துப் பிடிக்க இயலாமல் இருதுளி கண்ணீர் கன்னம் வழிந்தது அவனுக்கு! அதைத் துடைத்துவிட்டு, “ஏன் கீர்த்தி இப்படிலாம் பேசற… உனக்காக நான் இருக்கேன்ல” என்றான்.
அவன் வார்த்தைகளில் அவளால் ஆறுதல் அடைய முடியவில்லை!
கண்ணீரில் காயத்தைக் கரைக்கப் பார்த்தாள். அது முடியாமல் போக… இறுக கண்களை மூடி கண்ணீரைக் கட்டுப்படுத்தப் பார்த்தாள். அதுவும் முடியாமல் போக, “அதான் டேவிட்… நீ வந்ததுமே, இனி நீ பார்த்துப்பனு… எல்லாத்தையும் மறந்து என்னால அப்படிப் பேச முடிஞ்சது” என்று உடைந்தழுதாள்!!
அதன்பின்னர் அவளிடம் வாய்மொழி வார்த்தைகள் இல்லை! விழிநீர் எனும் மொழி வழியாக வலிகளை வெளிப்படுத்திக் கொண்டிருந்தாள்! அவன் மனம் ஆறுதல் வார்த்தைகள் தெரிவு செய்ய இயலாமல் தொய்ந்து போயிருந்தது!
அவனது இதயம்… அடைப்புக் குறிக்குள் அவள் அடிக்கோடிட்ட அர்த்தத்தில் அணுவளவு அமைதி கொண்டது! ஆனால் அவனோ, அவள் அவ்வளவு அழுவது கண்டு, அடைப்புக் குறிக்குள் அடைக்கப்பட்ட வார்த்தைகளுக்கு ஒப்பான அழுத்தத்தை அடைந்தான்… அதுவும் ஆகாயமளவிற்கு!!