Kathambari Novels
அத்தியாயம் – 31
மார்க்கோ போலோ விமான நிலையம்
அதே புன்னகையுடன் டேவிட் பயணம் தொடர்ந்தது. அன்று ஆகாயத்திலும் மழை இரவுதான். கனமழை, மின்னல் இருந்ததால் விமான அதிர்ச்சியைப் பயணிகள் உணர்ந்தனர். இருந்தும் சரியான நேரத்தில் மார்க்கோ போலோ ஓடுதளத்தில் விமானம் தரை இறக்கப்பட்டது.
பதினைந்து நிமிடத்திற்குப் பின் ஓடுதளத்திலிருந்து விமான நிலையத்திற்கு வந்த டேவிட், காத்திருந்து பயணப் பொதிகளை எல்லாம் எடுத்துக்கொண்டு பத்து முப்பது மணிக்கு வருகை மண்டபம் (Arrival Hall) வந்து நின்றான்.
இங்கிருந்து வெனிஸ் செல்ல நீர் மற்றும் சாலை வழி போக்குவரத்து உண்டு! நீர் வழியென்றால் இயந்திரப் படகில் நேரடியாக செயின்ட் மார்க் சதுக்கம் சென்றுவிடலாம்! அதிலும் தனிப்படகு ஏற்பாடு செய்தால், எந்த வரிசையிலும் காத்திருக்க அவசியமில்லை! மேலும் எந்த நிறுத்தங்களும் இருக்காது!!
டேவிட் தனிப்படகிற்கு முன்பதிவு செய்திருந்ததால் வருகை மண்டபத்தில் அவனது பெயர் பதாகை ஏந்தி எவரும் நிற்கிறார்களா என்று தேடினான்.
யாரும் இல்லை!
ஐந்து நிமிடங்கள் காத்திருந்துவிட்டு, ஓட்டுநருக்கு அழைத்தான். வேறொரு அழைப்பில் இருப்பது தெரிந்ததும், அழைப்பைத் துண்டித்துவிட்டு அங்கேயே நின்றான். சற்றுநேரத்தில் அவரே அழைத்து, அதிக அலை காரணமாக படகுச் சேவை ரத்தாகிற்று என்று வைத்துவிட்டார்.
‘என்ன இது?’ என்று அவன் நிற்கும் போது ரவி அழைத்தான்.
டேவிட் அழைப்பை ஏற்றதும், “லேண்ட் ஆயிட்டியா… டிரைவர் பிக் அப் பண்ண வந்துட்டாரா?” என்றான்.
“அக்வா ஆல்டா (acqua alta)… போட் சர்வீஸ் கேன்சல்னு சொல்றாரு”
“இது எப்பவும் இருக்கிறதுதானடா”
“அதான் எனக்கும் புரியல… பட் இங்க ஹெவி ரெய்ன்”
“ஓ… இப்ப என்ன பண்ணப் போற”
“அட்லிஸ்ட் பப்ளிக் போட் சர்வீஸ் இருக்கானு பார்த்திட்டு, ஐ வில் கால் யூ தென்” என்றதும் ரவி அலைபேசியை வைத்துவிட்டான்.
டேவிட், தன் கைப்பெட்டியை இழுத்துக்கொண்டு கப்பல் துறைக்கு நடந்தான். பெரிய கண்ணாடி தடுப்புகள் வழியாக இருண்டிருந்த இரவில் கொட்டும் மழையை, பலத்தக் காற்றை, வெட்டும் மின்னலைப் பார்த்தபடி நடந்தான்.
பயணச்சீட்டு வழங்கும் இயந்திரத்தில் சீட்டுப் பெற்றுக் கொண்டு, சூழலைப் பார்த்தான். அந்த இடம் இன்று இயல்பாக இல்லையென தெரிந்தது. கூட்டமும் அதிகமாகவே இருந்தது. எப்போதும் இப்படி இருக்காதே என்று யோசித்தபடி நடக்கும் போதே… நிறைய பேர் திரும்பிச் சென்று கொண்டிருந்தனர்.
இருந்தும் படகு ஏறும் இடத்தில் சென்று விசாரித்தான். அதிக அலை, அதனால் சேவை இல்லையென அதே காரணம் சொன்னார்கள். உடனே இணையத்தில் உடனடிச் செய்திகளில் வெனிஸ் நகரைப் பற்றிப் பார்த்தான்.
ஒரு சிறு நடுக்கம் அவன் உடலில் வந்து போனது! காரணம் அக்வா ஆல்டா!!
வலுவான தென்கிழக்கு காற்று, குறைந்த காற்றழுத்தம், அட்ரியாட்டிக்கின் ஊசலாடும் நீரோட்டங்கள், அலைகள், கடல்மட்டம் உயர்வது மற்றும் மழை போன்ற காரணங்களால் வெனிஸ் கால்வாய்களின் நீர்மட்டம் உயரும்!
அட்ரியாடிக் கடலில் அலைகள் உருவாகி, கடல் மட்டம் 90 செ.மீக்கு மேலே உயரும் போது மட்டும் தற்காலிகமாக வெனிஸ் கால்வாய்களின் நீர்மட்டம் அதிகரித்து நகரின் தாழ்வான பகுதிகளில் கடல்நீர் புகுந்திடும்!
இந்த நிகழ்வே அக்வா அல்டா (Acqua Alta – High Water) எனப்படும்!!
ஆனால் எந்த ஆபத்தும் இருக்காது. ஒரு வருடத்தில் பலமுறை இது நிகழும். இருப்பினும் பொதுவான அக்வா அல்டா நிகழ்வுகள் அக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் நிகழ்கின்றன.
இங்கே வசிப்பவர்களுக்கு இது சகஜம்தான்! சமாளிக்க முடியும்தான்! ஆனால் இம்முறை அப்படியல்ல! அலைகளின் சீற்றம், பெருமழை, கால்வாய்களின் நீர்மட்ட உயர்வு அக்வா ஆல்டாவை அசாதாரண நிகழ்வாக மாற்றியிருந்தது. அது நகரை அச்சுறுத்துகிறது… அபாயகரமாக்கியிருக்கிறது!
இதுவே இணையத்தில் டேவிட் வாசித்த செய்தி!!
டேவிட் மழை, இடிச் சத்தத்திற்கு இடையே தூரத்தில் சிறு ஒளியாய் தெரிந்த வெனிஸ் நகர கட்டிடங்களைப் பார்த்தான். இதயம் எங்கும் பயம் பரவியது. அடுத்தநொடியே கீர்த்திக்கு அழைத்துவிட்டான். சென்று, அவளைப் பார்க்கும் வரை, இங்கே அவனால் நிம்மதியாக இருக்க முடியாது என்பதால்!
முழு அழைப்பு முடிந்தபின்னும் அவள் அழைப்பை ஏற்கவில்லை. திரும்பவும் அழைத்தான். முழு அழைப்பும் சென்று, அழைப்பு அதுவாக முடிந்தது. ‘ஏன் எடுக்க மாட்டிக்கிறா?’ என்று டேவிட் பயப்பட்ட நேரம், ரவி அழைத்தான்.
டேவிட் எடுத்து, “சொல்லு” என்றான்.
“நியூஸ் பார்த்தியா… ஹை டைடு ப்ரீடிக்ட் பண்ணிருக்காங்க”
“ம்ம்” என்று மட்டும் சொன்னான்.
“இது நார்மல் இல்லடா, ரொம்பவே டேஞ்சர். இப்ப போட் சர்வீஸ் இருந்தாலும் போகாத. சேஃப் கிடையாது, ரூம் புக் பண்றேன். நைட் தங்கிட்டு, நாளைக்குப் போ” என்றதுமே… சட்டென மது அலைபேசியைப் பிடுங்கி, “கீர்த்தி சிட்டில இருக்கிறப்ப, ஹோட்டல்ல போய் அவனால நிம்மதியா இருக்க முடியுமா, அவங்களைப் பார்க்கனும்தான நினைப்பான்” என்று கோபப்பட்டாள்.
“புரியாம பேசாத, இந்த நேரத்தில…” என்று ரவி பேசுவதைக் கவனிக்காமல், அலைபேசியில் டேவிட்டிடம், “கீர்த்திக்கு கால் பண்ணியா” என்றாள்.
“ம், ஃபோன் அட்டன் பண்ணல, அதான் மது பயமா இருக்கு”
“ஐயோ” என்றாள் உடனே. அடுத்தே, “பயப்படாத, ஒன்னும் இருக்காது” என்று ஆறுதலாக சொல்லிவிட்டு, “இப்ப என்ன பண்ண போற” என்றாள்.
“டேக்சி பே(bay) போய் பார்க்கிறேன். கார், பஸ்… எதுலயாவது ட்ரை பண்றேன்”
“ம்ம்” என்று அவள் சொன்னபோது… அலைபேசியை ரவி வாங்கி, “கார்லயோ பஸ்லயோ பியாசலே ரோமே வரைக்குத்தான்டா போக முடியும். அங்கிருந்து சிட்டிக்குள்ள எப்படிப் போவ” என்றான்.
“தெரியும் ரவி, வாட்டர் பஸ் ஆப்பரேட் பண்ண மாட்டாங்க, பட் நடந்தாவது போகப் பார்க்கிறேன்”
முதலில், “ரொம்பக் கஷ்டம்” என்றான். பின் டேவிட் குரலில் தெரிந்த பதற்றம் பரிதவிப்பைப் புரிந்து, “சரி” என்றுவிட்டு, “மழை ரொம்பவா” என்றான்.
தனக்காக யோசிக்கிறான் என புரிந்து, “பார்த்துக்கிறேன்” என்றான் மெல்ல. பின், “கீர்த்தி அட்ரஸ் சென்ட் பண்றேன். உன் ஃபிரண்ட்ஸ் யார்கிட்டயாவது சொல்லி, போய் பார்க்கச் சொல்றியா. அவ சேஃப்னு தெரிஞ்சா… கொஞ்சம் நிம்மதியா இருக்கும்” என்றான் இன்னுமே மெதுவாக.
“ம்” என்று ரவி வைத்துவிட்டான். டேவிட் கீர்த்தி முகவரியை அனுப்பிவிட்டு, திரும்பவும் அவளுக்கு அழைத்துப் பார்த்தான். அழைப்பு போய்க் கொண்டே இருந்தது. ஏற்கப்படவேயில்லை. முணுக்கென்று, ‘ஃபோன் எடுத்தா என்ன, ஏன் இப்படி இருக்கா?’ என்று ஒரு கோபம் வந்தது.
அடுத்தநொடியே, ‘சேஃபா இல்லயோ… அதான் அட்டன் பண்ண முடியலயோ, என்ன செய்ய?’ என்று கவலைப்பட்டான்.
அதே மனநிலையில் விமான நிலையத்திலிருந்து கிளம்பி வாடகை கார்கள் நிற்கின்ற பகுதிக்கு வந்தான். அக்கணம் நிலைமை இன்னும் மோசமாக மாறியிருந்தது. இடி… பேய்மழை… பலத்தக் காற்று, வெகுநீளமாக வெட்டும் மின்னல் என்று மாறியிருந்தது சூழல். பயணப் பொதிகளுடன் நடப்பதற்கு அனைவருமே வெகுவாக சிரமப்பட்டார்கள்!
டேவிட்டிற்கும் அதே சிரமம்தான்!!
அங்கே நான்கு கார்கள் நிற்பதைப் பார்த்தான். ஆனால் அதிலும் சிலர் ஏறிக் கொண்டிருந்தனர். வேறு கார் கிடைக்குமா என்று அரைமணி நேரம் முயற்சி செய்தான். எல்லாரும் பாதுகாப்பான இடம் நோக்கிச் செல்வதாலும், படகுச் சேவை ரத்தானதாலும்… எதுவும் கிடைக்கவில்லை.
சடுதியில் சோர்ந்து போய்விட்டான்!!
இருந்தாலும் கனமழையில் நனைந்தபடி விமான நிலைய மற்றும் பொதுப் பேருந்துகள் நிற்கும் பகுதிக்குச் சென்றான். எந்தப் பேருந்தும் இல்லை. நேரம் பார்த்தான், பன்னிரண்டு என்று கைக்கடிகாரம் காட்டியது. பொதுவாக ஒரு மணியளவில் பேருந்துச் சேவை முடிந்துவிடும்.
எனவே அவசர அவசரமாக பயணச்சீட்டு இயந்திரம் இருக்கும் இடம் நோக்கி ஓடிச் சென்றான். ஆனால் அங்கே குடும்பத்துடன் நின்ற ஒருவர் மழையால் பேருந்துச் சேவையும் ரத்து, இனி காலைதான் என்றுவிட்டுப் போனார்.
‘என்ன செய்ய?’ என்று தெரியாமல் ஓய்ந்து போய் நின்றான்!
அதுவுமே சில கணங்கள்தான்! மீண்டும் கீர்த்திக்கு அழைத்தான்! இப்போதும் அழைப்பு ஏற்கப்படவில்லை! அது பதற்றத்தை இன்னுமே அதிகரித்தது!
அந்தநேரம் ரவியிடமிருந்து அழைப்பு வந்தது. அரக்க பரக்க அலைபேசியை எடுத்து, “சொல்லுடா” என்றான் படபடப்புடன்.
“என்னடா ஆச்சு?”
“பஸ், டேக்ஸி எதும் கிடைக்கல… ப்ச் நீ சொல்லு”
“கீர்த்தி வீடு இருக்க ஏரியால தண்ணி வரல” என்றதும், “உஃப்” என்று டேவிட் நிம்மதியில் நெடுமூச்சு விடுகையிலே… தாழ்ந்த குரலில் ரவி, “ஆனா கீர்த்தி அங்க இல்லயாம்” என்றான்.
“இல்லயா… அப்புறம் எங்க… அப்போ அவ சென்டர்லதான் இருப்பா… அங்கயும் போய் பார்க்க சொல்லேன்” என்றான் தவிப்புடன், தடுமாற்றத்துடன்.
“டேவிட், டென்சன் ஆகாத!” என்ற ரவி, “இங்க பாரு, செயின்ட் மார்கோலதான அவ சென்டர் இருக்கு, ஹை டைடு வந்தாலே அந்த ஏரியா எப்படி இருக்கும்னு உனக்குத் தெரியும்ல, இன்னைக்கு அங்க ஃபுல்லா சீ-வாட்டர்தானாம்! யாரும் போக பயப்படறாங்க” என்றான் பொறுமையாக.
டேவிட் ஏதும் பேச முடியாமல் இருந்தான்!
ரவியும் என்ன பேசவென தெரியாமல் அமைதியாகிவிட, மது அலைபேசியை வாங்கி, “என்னாச்சு உங்களுக்கு? இப்படி ஒரு சிச்சுவேஷன்ல அவங்க அந்த ஏரியால இருப்பாங்களா… சேஃப் பிளேஸ்க்கு போயிருப்பாங்கள” என்றாள்.
டேவிட் அப்போதும் பேசாமல் இருந்தான். ரவிதான், “அப்போ வீட்லதான அவ இருக்கனும், அங்க இல்லயே” என்றான்.
அலைபேசி வழியே நடந்த உரையாடலில் ஒரு அமைதி நிலவியது.
மதுதான், “எனக்கொன்னு தோனுது…” என்று மெல்லத் தொடங்கி, “திலீப்கிட்ட கேட்கலாமா… கீர்த்தி பத்தி” என்று யோசனையாக சொல்லி, “இல்லனா, திலீப் நம்பர் இருந்தா கொடு, நான் கேட்கிறேன்” என்றாள்.
டேவிட், “இல்லயே மது” என்று சற்று இடைவெளிவிட்டு, “ப்ச் என்ன செய்யனே தெரியல” என்றான் ஆயாசமாக!
உடனே ரவி, “யாரையாவது போய் பார்க்கச் சொல்றேன்… நீ அப்செட் ஆகாத, பயப்படாம தைரியமா இரு… ஒன்னும் ஆகிருக்காது” என்றான் ஆறுதலாக.
டேவிட் மனம் தைரியம் கொள்ள மறுத்தது. அவளுக்கும் ஏதும் ஆகிவிடுமோ என்று மனம் பயந்து, பரிதவித்தது. ‘ம்’ என்றாவது கூற நினைத்தான். ஆனால் அவனால் முடியவேயில்லை!!
மீண்டும் ரவிதான், “இதுக்கப்புறம் டிரான்ஸ்போர்ட் எதும் இருக்காது… காத்து, மழைக்குள்ளயே ஏன் நிக்கனும்… வேண்டாம்டா” என்றான்.
டேவிட், “தூங்குங்க, காலைல வெனிஸ் போய்ட்டு ஃபோன் பண்றேன்” என்று ஓய்ந்த குரலில் சொன்னான்.
அதுவே சொன்னது அவன் அங்கேதான் இருக்கப் போகிறான் என்று! கீர்த்தி நிலை என்னவென்று தெரியாமல் டேவிட்டால் நிம்மதியாக இருக்க முடியாது என்று ரவிக்கும், மதுவிற்கும் புரிந்தது!!
ஆதலால், ‘போ’ என்று சொல்லவும் முடியவில்லை. ‘இரு’ என்றும் சொல்லவும் மனமில்லை. இருந்தும் வேறு வழியில்லாமல், ‘பார்த்து இரு… எதும்னா ஃபோன் பண்ணு, முழிச்சிட்டுத்தான் இருப்போம்” என்று சொல்லி வைத்தார்கள்.
டேவிட்… சற்றுநேரம் புருவங்கள் சுருக்கி நின்றான்!
வெளியே அடிக்கும் காற்றுக்கும் கனமழைக்கும் குளிருக்கும் நனைந்திருந்த டேவிட்டின் உடல் நடுங்கியது. இருந்தாலும் விமான நிலையத்திற்குள் செல்ல மனமில்லை. வாகனங்கள் எதுவும் வராதென தெரியும். படகோ, பேருந்தோ இனிமேல் காலையில்தான் போக முடியும்.
ஆனால் டேக்சி ஏதும் வந்துவிட்டால்?
எனவே அங்கேயே மழையில் நனையாமல் இருக்கும்படி பேருந்து நிழற்கூடை உள்ளே சென்று அமர்ந்து கொண்டான்! மீண்டும் டேக்சி கிடைக்குமா என்று அலைபேசி வழியே முயற்சி செய்தான்… இணையத்தில் தேடினான்!
கூடவே அடிக்கொருமுறை கீர்த்திக்கும் அழைத்தபடி இருந்தான்!!
**********************
சான் மார்கோ, வெனிஸ்!
நவம்பர் 12, 2019, நேரம் இரவு பன்னிரண்டைக் கடந்திருந்தது.
அக்வா ஆல்டா வெனிஸ் நகரை ஒரு வழியாக்கிக் கொண்டிருந்தது!
காலையிலிருந்து நகரில் கனமழை! சூறாவளி காற்றும் அடித்தது! மாலையில் நிலைமை மிகவும் மோசமாக போய்விட்டது. ஐந்து மணியளவில் ஆரம்பித்த பேய்மழையுடன், ஒன்பது மணிக்கு பேரிரைச்சலாய் இடியும், பார்வையைப் பறிக்கும் மின்னலும் சேர்ந்து… நகரையே அச்சுறுத்திக் கொண்டிருந்தது!
ஆறடிக்கும் மேலே சீறியெழும் கடலின் அலைகள்… சுழற்றி அடிக்கும் சூரைக் காற்று… கடுமையாக இருண்டிருந்த இரவுநேரம்… கடல்பரப்பை, கடற்கரைப் பகுதிகளைப் மிகப்பயங்கரமாக காட்டிக் கொண்டிருந்தது!
அடித்த காற்றிற்கு… தெருக்களில் போடப்பட்டிருந்த நாற்காலிகள் எல்லாம் தூக்கி வீசப்பட்டுக் கொண்டிருந்தன. கிராண்ட் கேணல், மார்கோ பகுதியில் நிறுத்தப்பட்ட கேண்டலோகள், வாட்டர் பஸ்கள் எல்லாம் கரையுடன் மோதி மோதி சேதமாகிக் கொண்டிருந்தன!
கடல் மட்டம் உயர்ந்ததால், வெனிஸின் கால்வாய்களுக்கு வரும் நீரின் அளவு எக்கச்சமாய் அதிகரித்திருந்தது! இதனுடன் விடாமல் மழை கொட்டியதால் கால்வாய்களின் நீர்மட்டம் மளமளவென உயர்ந்துவிட்டது!
சூழல் காற்றால் அட்ரியாடிக் கடல் நீரும்… கால்வாய்கள் அனைத்தும் நிரம்பி வழிந்து, அதிலிருந்து வெளியேறும் தண்ணீரும்… நகரெங்கும் மடமடவென்று புகுந்து கொண்டிருந்தன! அதிலும் கடல் மட்டத்தில் இருக்கின்ற தாழ்வான பகுதிகள் வெள்ளக்காடாக மாறிக் கொண்டு வந்தன!
சான் மார்கோவும் அப்படியொரு தாழ்வான பகுதிதான்! கீர்த்தியின் சென்டர் இருப்பதும் இங்குள்ள செயின்ட் மார்க் சதுக்கம் இருக்கும் பகுதியில்தான்!!
அப்பகுதி முழுவதும்… அங்குள்ள கடைகள், வீடுகள் எல்லாமே நீரில் மிதந்து கொண்டிருந்தன! நீர்வரத்தின் வேகத்தில், மழையின் கோரத்தில், காற்றின் தாக்கத்தில்… அங்கும் அலைகள் அடிப்பது போன்று காட்சியளித்தது!
பேரழிவை நோக்கி நகரம் சென்று கொண்டிருப்பதை எச்சரிக்கை செய்யும் விதமாக சைரன் ஒலிகள் கேட்டுக் கொண்டிருந்தன!!
மார்க் போலோ விமான நிலையம்
நேரம் இரண்டைக் கடந்திருந்தது! பேருந்து மற்றும் வாடகை டேக்சி நிற்கும் இடத்தில் ஆட்கள் யாருமே இல்லை! சற்று நேரத்திற்குப் முன் நின்ற சிலரும் மழை, காற்றின் தீவிரத்தில் விமான நிலையத்திற்குள் சென்றுவிட்டனர்!
டேவிட்… அதே நிலையில்… அங்கேயே அமர்ந்திருந்தான்! ஒருபக்கம், ‘தனக்கு அவள் அழைத்து தகவல் சொன்னால்தான் என்ன?’ என்ற கோபம் கனன்றது. மறுபுறம், ‘அழைத்து நிலவரம் சொல்ல முடியாத நிலையில் இருக்கிறாளோ… எனக்கானவள்?’ என்று மனம் கலவரம் அடைந்தது!!
ஏற்கனவே பெற்றோரை விபத்தில் பறி கொடுத்தவனுக்கு, அவளுக்கும் ஏதும் நடந்துவிடுமோ என்ற பயத்தில், பதற்றத்தில் கண்களில் கண்ணீர் பொங்கி நின்றது. ஒரு முறையாவது அவளிடம் பேசினால்தான் ஓரளவாவது இயல்பாய் இயங்கிட இயலும் என்றளவிற்கு அவன் இதயம் இறுக்கத்தை அடைந்திருந்தது!
ஒருகணம், ‘எங்களை ஏன் இப்படிச் சோதிக்கிறாய்?’ என்று இயற்கையைத் திட்டித் தீர்த்தான்! மறுகணம், ‘அவளுக்கு எதுவும் ஆகிவிடக் கூடாது’ என்று அதே இயற்கையிடம் இறைஞ்சிக் கொண்டான்!!