Kathambari Novels
அத்தியாயம் – 30
ரவி வீடு, பாரிஸ்
டேவிட் பாரிஸ் வந்து இன்றோடு எட்டு நாட்கள் ஆகிவிட்டன. இங்கே ரவியின் வீடு விசாலமான சுற்றுத் தாழ்வாரத்துடன், பரந்தகன்ற அறைகள் கொண்ட இரண்டடுக்கு கட்டிடம். அதில் டேவிட்டுக்கென்று வடிவமைக்கப்பட்ட மேன் மாடி அறையில் (Attic Room) அவன் இருந்தான்.
வந்த மூன்று நாட்கள் எப்படிப் போனதென்றே அவனுக்குத் தெரியவில்லை!
வெகு நாட்களுக்குப் பின் டேவிட் வந்திருப்பதால், அவனைப் பார்க்க இங்கே வசிக்கும் ரவி மற்றும் அவனது உறவுகள் வருவதும் போவதுமாக இருந்தனர்! எப்போதும் போல் அவர்கள் பேசிச் சிரிப்பதைப் பார்த்தும், ஏதும் கேட்டால் பதில் சொல்வதுமென அவன் பொழுதுகள் நகர்ந்திருந்தன.
அவன் இயல்பாக இருப்பதைப் பார்க்கப் பார்க்க அனைவருக்கும் அத்தனை மகிழ்ச்சி. காணொளி அழைப்பு மூலமாக அவன் மாமாவுடன் பேசினான். அவனை அப்படிப் பார்த்ததில், அவருக்குப் பெரிய திருப்தி, நிம்மதி. டிசம்பர் விடுமுறையில் அவனைப் பார்க்க வருவதாகச் சொல்லியிருந்தார்.
இந்தந்த காரணங்களால் மூன்று நாட்களின் பகல் பொழுதுகளை எளிதாக கடந்திருந்தான். இரவானதும் மனம் என்னவோ போல் உணரும். ஆனாலும் கஷ்டப்பட்டு உறங்கி… அதையும் கடந்திருந்தான்.
நான்காவது நாளின் காலைப் பொழுதுகளை எப்படியோ கடத்தியவனுக்கு, இரவானதும், ‘இதைக் கஷ்டப்பட்டுக்கூட கடந்திட முடியாது போலவே’ என்ற நிலையில் இருந்தான்! இருள் நிறைந்த அமைதியான சூழலில்… அறையின் தனிமையில்… அவனது இதயம் ஏதோ இரைச்சலைக் கேட்டிருந்தது!
இருந்தும் இழுத்துப் போர்த்திக் கொண்டு தூங்கியிருந்தான்!!
ஐந்தாவது நாள்… அவன் பகல் நேரங்கள் ஓரளவு சுமூகமாக நகர்ந்திருந்தன! ஆனால் இரவோ நகர மாட்டேன் என்று அடம்பிடித்திருந்தது! அவனது இதயம் இன்னலைச் சந்திப்பது போல் உணர்ந்திருந்தது!
தரை மட்டத்திலிருந்த மெத்தையில் படுத்துபடி யோசித்திருந்தான். கீர்த்தி பேசியதை நினைத்து இதயம் இப்படி இருக்கிறதா என்ற கேள்வி வந்ததால், அன்று நடந்த நிகழ்வுகள் ஞாபகத்தில் வந்திருந்தன. உடனே அவன் இதயமும் வெனிஸும், ‘சற்றுப் பின்னோக்கிச் சென்றும் பார்’ என்றிருந்தன!
கூடவே அவளுடன் அவன் செலவிட்ட ஒவ்வொரு நொடியையும் எடுத்து வந்து காண்பித்திருந்தன! இரவு விளக்கின் சிறு ஒளிக்கீற்றில் அதைப் பார்த்தப்படி வெகுநேரம் இருந்தவன், எப்படியோ… எப்பொழுதோ தூங்கியிருந்தான்!!
ஆறாவது நாளும் அதேதான்! ஆனால் தூங்கவே இயலாமல் புரண்டு புரண்டு படுத்திருந்தான்! இதயம் இடிபாட்டில் சிக்கியது போலிருந்தது! ஏனோ கஃபே சென்றால் அது இதமாக உணரும் என்றிருந்தது!
உடனே, ‘வெனிஸிலும் நிரம்ப நேரம் கேஃபேவிலே இருந்தாயே, ஏன்?’ என்ற கேள்வியை இதயம் கேட்டிருந்தது! அடுத்தநொடி, ‘அவளின் இருப்பை அங்கே உணர்வதாலா… இல்லை அவளருகில் இருப்பது போல் உணர்வதாலா?’ என்ற கேள்விகளைத் தூக்கிக்கொண்டு வெனிஸ் ஓடி வந்திருந்தது!
பதில் யோசிக்காமல் நேரம் பார்த்தான். கடிகாரம் பன்னிரண்டைக் கடந்திருந்தது! அளவில் பெரிய கண்ணாடிச் சன்னல் வழியே இரவு வானத்தைப் பார்த்தபடி படுத்திருந்தான்! வெகுநேரம் அதே கேள்விகள் அவனுள்ளே நிலைத்திருந்தன. என்னமோ அது நிறைவில்லா உணர்வைத் தந்திருந்தது!
மெல்ல எழுந்து அமர்ந்திருந்தான்! காதலின் தூரம் பாரம் ஏற்றிட… கண்களின் தூக்கமும் தூரே போய்விட இரவு முழுதும் அப்படியே இருந்திருந்தான்!!
ஏழாவது நாளின் எல்லா நொடிகளிலும் கீர்த்தி பற்றிய எண்ணம் மட்டுமே! பார்த்த நாளிலிருந்து அவள் பேசியதெல்லாம் யோசித்தான்! ‘நீ மெச்சூரிட்டி பத்திப் பேசாத’ என்று சொன்னது வரை யோசித்தான்! அதை நினைக்கையில் இன்றும்கூட முகச்சுளிப்பு அவனிடம்!
வெகுநேரம் அப்படியே இருந்தவனுக்கு… ஏனென்று தெரியாமல், ‘கீர்த்தியைப் ரவி பேசின விதத்தை இலகுவாக மன்னித்த தன்னால், ஏன் கீர்த்தி பேசியதை மறக்க… மன்னிக்க இயலவில்லை??’ என்றொரு கேள்வி வந்தது!!
‘அப்பா பற்றிப் பேசியதாலா?’ என்று அடுத்தொரு கேள்வி பின்னேயே வந்தது. ‘தன்னைத்தானே அவள் குறிப்பிட்டாள், இதில் அப்பா எங்கு வருகிறார்’ என்று அடுத்த கேள்வியும் வந்து சேர்ந்தது! ‘அவள் வார்த்தையைத் தவறாகப் புரிந்து கொண்டேனா?’ என்ற இன்னொரு கேள்வி பின்வரிசையில் காத்திருந்தது!
‘அதனால்தான் முடிவில் அவளிடம் அத்தனை அமைதியா’ என்ற கேள்வியைக் கொண்டு வந்து வரிசையின் கடைசியில் நிறுத்தியது வெனிஸ்.
அடுக்கடுக்காய் கேள்விகள்… எதற்கும் அவனால் பதில் எழுத முடியவில்லை. அது அவனைத் தூங்கவே விடவில்லை!!
எட்டாவது நாளும் அதே கேள்விகள்தான்! இன்னும் பதில்கள் கிடைக்காததால் ‘சரியாகப் புரியாமல் பேசி விட்டேனோ?’ என்று டேவிட் மனம் சங்கடப்பட்டது! கூடவே… நட்பிடம் பெருந்தன்மையாக நடந்துகொண்டு, காதலிடம் பாரபட்சம் பார்க்கிறேனோ என்று சந்தேகம் எழுந்தது!
இதற்கிடையே காதல் நிரம்பியிருந்த அவனது இதயம் காதலியைக் காண வேண்டுமென்று ஆசைப்பட்டது! அவள் நினைவில் நிற்பதும், நடப்பதுமாகவே அவன் நாழிகைகள் நகர்ந்தன!!
நான் ஒவ்வொரு நொடியும் அவளை நினைக்கின்றேனே, அவள் ஒரு நாளில் ஒருகணமாவது என்னை நினைப்பாளா, நினைத்தால் அழைத்திருப்பாளே, அப்படியென்றால் என்னை நினைக்கவேயில்லையா என்று அவனுக்குள் அத்தனை கேள்விகள்.
‘இதை உனக்குள் ஏன் கேட்கிறாய், அவளிடம் சென்று கேள்’ என்றது வெனிஸ்!
எப்படி அவளால் என்னை நினைக்காமல் இருக்க முடிகிறதென அதற்கொரு பக்கம் கோபம் அவனுக்கு! ‘உன் கோபத்தை அவளிடம் பேசி காண்பித்துக் கொள், பேசாமல் இருந்து காண்பிக்காதே’ என்றது அவளுக்கான முடிவிலா காதலை நிரப்பி வைத்திருக்கும் அவன் இதயம்.
கடைசியில் காதலின் கடலில்… அவன் கோபத்தின் துளிகள் கரைந்தன!
அதற்குமேல் எதையும் நினைக்கவில்லை. ரவி, மது எங்கே என்று தேடினான். இருவரும் பொழுதுபோக்கு அறையில் இருந்தனர். ஒருபக்கம் தன் சகோதர சகோதரிகளுடன் ரவி ஃபுஸ்பால் விளையாட, மது புத்தகம் பார்த்திருந்தாள்.
டேவிட் வந்ததும், “என்ன வேணும் டேவிட்?” என்றாள். ரவியும் விளையாட்டை விட்டுவிட்டு வந்து நின்றான்.
டேவிட், “வெனிஸ்க்கு கிளம்பலாம்னு தோனுது” என்றான் மெல்லிய குரலில். மது உடனே, “ம், வெனிஸ் போறியா, இல்ல கீர்த்திய பார்க்க போறியா. சரியா சொல்லு டேவிட்” என்றாள்.
டேவிட் ஒன்றும் சொல்லாமல் நின்றான்.
“நீ ரெண்டு நாளா இருந்ததைப் பார்த்து, கீர்த்திய டேவிட் மிஸ் பண்றான்னு நானும் ரவியும் பேசிக்கிட்டோம்” என்றாள். அதுவரை ஒன்றும் சொல்லாமல் இருந்த ரவி, “எப்ப கிளம்ப?” என்றதும், “நம்ம இன்னும் ரெண்டு நாள் இருப்போமே ரவி” என்று மது கேட்டாள்.
“நீங்க இருந்திட்டு வாங்க நான் இன்னைக்கே போறேன்” என்றான் டேவிட்.
“இன்னைக்கேவா… ஃப்ளைட் டிக்கெட் கிடைக்கனும்ல” – ரவி.
“பிஸ்னஸ் க்ளாஸ் கூட வேண்டாம். ஐ அம் ஃபைன் வித் ஃபிளையிங் எக்கனாமி. ஈவென் ட்ரெயின் ஜர்னி கூட ஓகே. எனக்கு போகனும்”
மது “வெயிட் பண்ண முடியாதா, உடனே கீர்த்திய பார்க்கனுமா” என்று கேட்க, டேவிட் ஏதும் சொல்லவில்லை. அதுதான் உண்மை என்பது போல் நின்றான்.
ரவி, “ட்ரெயினா பத்து மணிநேரம் ஆகும். எப்படிப் போவ… நான் பிளைட் ட்ரை பண்றேன்” என்று போகப் போனவன், “நீ பேக் பண்ணுடா… எல்லார்கிட்டயும் சொல்லவும் செஞ்சிடு” என்றுவிட்டுப் போனான்.
“வா, முதல அத்தைகிட்ட சொல்லலாம்” என்று மது டேவிட்டை அழைத்துச் சென்றாள். டேவிட் கிளம்பப் போகிறான் என்றதும் ரவியின் அம்மா, அப்பா அவனுக்கு கொடுத்து அனுப்ப நினைத்திருந்த பொருட்களை எல்லாம் அரக்க பரக்க எடுத்து வைத்தனர்.
அன்று பயணச்சீட்டு கிடைக்கவில்லை என்பதால், ரவி அதற்கு அடுத்தநாள் மதிய வேளையில் டேவிட்டின் பயணத்திற்கு ஏற்பாடு செய்திருந்தான். டேவிட் அறையில் ஒரு பக்கம் ரவி அமர்ந்திருக்க… டேவிட் பயணத்திற்குத் தயாராகி கொண்டிருக்க… மது பேசியபடி அவனுக்கு உதவினாள்.
“கீர்த்திக்கு ஃபோன் பண்ணி சொல்லலயா?” – மது.
“சர்ப்ரைஸா இருக்கட்டும்னு நினைக்கிறேன். இதுக்கு முன்னாடியும் ஐ ட்ரைடு டு சர்ப்ரைஸ் ஹெர் ட்வைஸ்(twice). பட் அவ அப்படி இல்லனு சொல்லிட்டா. ஐ ஹோப், இந்த டைம் சர்ப்ரைஸா ஃபீல் பண்ணுவானு” என்றான்.
அவன் சொன்ன விதத்தைப் பார்த்தவள், “எப்படி இவ்ளோ நாள் அவங்கக்கூட பேசாம இருந்த” என்றாள்.
அவன் எதுவும் பேசாமல் நின்றான். ஆனால் அடுத்தநொடியே கீர்த்தியைக் கண்கள் காண வேண்டும் போல் ஆசையாக இருந்தது.
“உன்னய பார்த்ததும் அவங்க எப்படி ரியாக்ட் பண்ணுவாங்க” என்று கேட்க, ‘தெரியலயே’ என்பது போல் அவன் முகமொழி இருக்கவும், “அவங்க எப்படிப் பேசினாலும், நீ சாரி கேட்டுச் சமாதானப் படுத்திடனும்… சரியா” என்றாள்.
உடனே ரவி எழுந்து வந்து, “இவன் எதுக்காக மது சாரி கேட்கனும், அவதான பேசிருக்கா, இவன் எதுவும் பேசலயே” என்றதும், “ஆனா நீ பேசிருக்கியே ரவி, அதுக்குத்தான், போதுமா” என்று பட்டென சொல்லி, “இவன் சொல்ற மாதிரி எல்லாம் யோசிக்காத” என்றாள் டேவிட்டிடம்.
அதற்கு டேவிட் ஒன்றும் சொல்லவில்லை. “அவ சைடுலருந்து யோசிக்கிறேன் மது” என்றான். பின், “பட் இந்த மாதிரி… யார்மேலயும் இவ்ளோ கோபப்பட்டு பேசாம… இருந்ததே இல்லை நான்” என்றான் சிறு வியப்புடன்.
“கீர்த்தி உனக்கு ரொம்ப ஸ்பெஷல்… அதான் இந்தக் கோபம்” என்றாள்.
அதற்கு ரவி முகம் போனதைப் பார்த்தவள், “இவன் ஃப்ரெண்ட்ஷிப் அவாய்ட் பண்ண சொன்னாலும் யோசிக்காம பண்ணிடு” என்றாள்.
“உன்ன” என்று ரவி வர… அதற்குள், “ரவி இங்க வாப்பா” என்று அவன் அம்மா சத்தமாக அழைப்பது கேட்டது. “இருடா… உனக்குக் கொடுக்கத்தான் பேக் பண்ணிருக்காங்க. வாங்கிட்டு வரேன்” என்றவன், “அப்புறம் வந்து உன்கிட்ட பேசிக்கிறேன்” என்று மதுவை முறைத்தபடி போனான்.
அவன் போனதும்… டேவிட், “ஏன் மது… ரவிதான் இதுக்கெல்லாம் காரணம்னு நினைக்கிறியா” என்றதும், அவள் அமைதியாக இருந்தாள். “அவன் மட்டும் இல்ல மது” என்றதும், “அவனும்தானா” என்றாள் மெதுவாக.
இப்போது டேவிட் அமைதியாக நிற்கவும், “கீர்த்தி கோபமா இருக்காங்கனு தெரியுது. நீதான் பேசி சரி பண்ணனும்” என்றாள். டேவிட் சரியென்றாலும், கீர்த்தி பேச்சுகள் தந்த கோபம் இன்னும் கொஞ்சம் இருந்தது. கூடவே அவளது கோபத்தை எப்படிப் போக்கிட என்ற யோசனையும் வந்தது.
அடுக்கி வைத்துக் கொண்டிருந்த டேவிட், ரவி வந்து தந்ததையும் எடுத்துக் கொண்டான். பயணத்திற்காக எல்லாம் தயார் செய்ததும்… அனைவரிடம் சொல்லிவிட்டு டேவிட் கிளம்பினான். ரவி அவனை விமான நிலையத்தில் கொண்டு வந்து விட்டான்.
சற்றுநேரத்தில் வெனிஸ் நோக்கிய டேவிட்டின் பயணம் தொடங்கியது! சில மணி நேரங்களில் விமானம் வெனிஸை நெருங்கியது. அதை உணர்ந்தவன், அவளைப் பார்க்க வீட்டிற்குப் போகவா, சென்டர் போகவா என யோசித்தான். கைக்கடிகாரம் பார்த்தவன், வீட்டிற்கே போகலாமென்று முடிவு செய்துவிட்டு, விமானத்தின் சன்னல் வழியே கீழே பார்த்தான்.
இரவுநேரத்தில் ஆகாயத்திலிருந்து அங்கங்கே மஞ்சள் விளக்கொளி, காரிருள் என்றிருந்த வெனிஸைப் பார்த்ததும், கீர்த்தியை இன்னும் சற்று நேரத்தில் பார்த்திடுவேன் என்ற பூரிப்பில், வெகுநாட்களுக்குப் பின் அவன் முகத்தில் மெல்லிய புன்னகை அரும்பியது.