Kathambari Novels
அத்தியாயம்-29
அலைபேசி ஒலியைக் கேட்டபின்னும் அப்படியே இருந்தான் டேவிட். மூன்று நாளாக அவன் மாமா அழைத்துக் கொண்டிருக்கிறார். ஆனால் பேசும் நிலையில் மனம் இல்லாததால், அழைப்பை ஏற்காமல் இருக்கின்றான். இப்போதும் அவராகத்தான் இருக்குமென்று இருந்தான்.
சில நொடிகளிலே நேர வித்தியாசத்தை யோசித்தவன், இந்தியாவிலிருந்து இந்த நேரத்தில் அழைப்பு வராது என்பதால், அலைபேசி எடுத்துப் பார்த்ததும், அழைப்பை ஏற்று, “சொல்லு ரவி” என்றதும், “எங்கடா இருக்க” என்றான் ரவி.
“கேஃபேல”
“இவ்ளோ நேரமாச்சு இன்னும் ஏன் அங்க இருக்க… வீட்டுக்கு வரலயா”
“ம் கிளம்பறேன்” என்று சொல்ல, “நான் வெய்ட் பண்றேன், நீ வா” என்றதும் சரியென அழைப்பைத் துண்டித்துவிட்டு, வீட்டிற்குப் புறப்பட்டான்.
அவன் வீட்டிற்கு வரும்போது, ரவி வரவேற்பறையில் அமர்ந்திருந்தான். அவன் உள்ளே வந்ததும் வேகமாக எழுந்து சென்று, “இந்த நேரத்தில அங்க போய் ஏன் உட்கார்ந்திருக்க?” என்று பதற்றமாகக் கேட்டான்.
“நத்திங்” என்றான்.
“நத்திங்னு சொல்ற, ஆனா உன் முகம் ஒருமாதிரி இருக்கே” என்று இன்னும் பதற்றமான குரலில் கேட்டபடி டேவிட் சட்டை, தலை முடியைப் பார்த்ததும், “ஈரமா இருக்கு, மழைல நனைஞ்சிட்டியா” என்றான்.
என்ன சொல்ல என்று தெரியாமல் ஒரு நொடி டேவிட் நின்றுவிட்டு “நீ தூங்கு, லேட்டாயிடுச்சி” என்று போகப் போனவன்… ரவி முகம் பார்த்ததும் நின்று, “நீ சாப்பிட்டியா” என்று கேட்டான்.
“கொஞ்ச நேரத்துக்கு முன்னதான் வந்தேன்… இனிதான் சாப்பிடணும்” என்று சொல்லும் போதே… அங்கே வந்த மது, “சாப்பிட்டியா டேவிட்” என்று கேட்டாள்.
“இல்ல. பட் ஃபீலிங் எ லிட்டில் ட்ரௌஸி, தூங்கனும்” என்று கிளம்பப் போக, “சாப்பிட்டுப் போயேன்” என்றாள் மது. டேவிட் யோசித்து நிற்கவும்… ரவி, “நீ சாப்பிடலனாலும் கொஞ்ச நேரம் இருந்திட்டுப் போ” என்று சொல்ல, “டிரஸ் சேஞ் பண்ணிட்டு வர்றேன்” என்று, டேவிட் வீட்டிற்குச் சென்று உடைமாற்றி வருகையில், ரவியும் மதுவும் சாப்பாட்டு அறையில் இருந்தனர்.
அங்கே சென்று டேவிட் அமர்ந்தவுடனே… ரவி, “ரெண்டு நாளா இப்படித்தான் இருக்க, ஃபோன் பண்ண அப்புறம்தான் வீட்டுக்கு வர்ற, என்ன நினைக்கிறனு சொல்லுடா” என்றான்.
அப்போதும் டேவிட், “நத்திங்” என்று ஒரே வார்த்தையில் பதிலளித்தான்.
ரவிக்கு… டேவிட்-கீர்த்தி பேசுகையில்அவன் இடையில் பேசியது தவறு என்று தெரிந்தது! ஆனால் இப்போது தெரிந்து என்ன செய்ய என்றும் புரிந்தது. இந்த இரண்டு நாளில் டேவிட் மிகவும் சோர்ந்து போயிருந்தான். அவன் இயல்பாக இல்லையோ, நடந்தது அவனைப் பாதிக்கிறதோ என்ற கேள்வியில் ரவியின் மனம் வெகுவாகக் கலங்கிப் போயிருந்தது.
மதுவிற்கு, டேவிட்-கீர்த்தி இருவரில் யாராவது விட்டுக் கொடுக்கலாமே என்று தோன்றியது. முதலில் கீர்த்தி பேசினால் சரியாக இருக்குமென நினைத்தாள். அதேசமயம் டேவிட்டிடம், ‘நீயாவது பேசலாமே’ என்று கேட்கத் தோன்றியது. ஆனால் இதுபற்றிய பேச்சுகள் அவனை இன்னும் காயப்படுத்திவிட்டால்? அதனாலேயே பேசாமல் இருந்தாள்.
கூடவே டேவிட் இப்படி இருக்க காரணம் ரவிதானே என்பது வேறு அவளைக் கஷ்டப்படுத்துகிறது. அதனால் அமைதியாகவே இருந்தாள்.
டேவிட் முகத்தின் வாட்டத்தைப் பார்த்த ரவி, “எதுனாலும் எங்ககிட்ட சொல்லு, இப்படியே இருக்காத” என்றான்.
“ம்ம்” என்று மட்டும் டேவிட் சொன்னான்.
“தெரபி எல்லாம் முடிஞ்சதா” – ரவி.
“இன்னும் ஒன்னு இருந்தது” என்றவன், ‘ரவி ஏன் கேட்கிறான்?’ என்று புரிந்து, “பட் அம் ஆல்ரைட்” என்றான் சுதாரிப்பு இல்லாத குரலில்.
“ஆல்ரைட்னு சொல்ற, ஆனா நீ அப்படியில்ல. வீட்ல எல்லாரும் பயப்படறாங்க டேவிட்”
சட்டென்று சுதாரித்த டேவிட், “எல்லாருக்கும் தெரியுமா” என்றான்.
“உன் லவ் தெரியாது” என்றுவிட்டு, “நீ மொபைல் பாரு. உன் மாமா எத்தனை தடவை கால் பண்ணிருக்காருனு” என்றான் ரவி.
“ஐ நோ, பட்… பட்… பேசற மைண்ட்ல இல்ல. ஸோ அட்டன் பண்ணல”
“நீ ஃபோன் அட்டன் பண்ணலனதும், எனக்கு ஃபோன் பண்ணி என்னாச்சுனு கேட்டாரு. ஒன்னுமில்லனு சொன்னாலும் அவருக்குப் பயம். ஒரு நாள்னா ஓகே. மூனு நாளா நீ ஃபோன் எடுக்கலனதும் பயந்திட்டு, எங்க வீட்டுக்குக் கூப்பிட்டு என்னென்னு போய் பாருங்களேன், நானும் வரமுடியாதுனு பார்க்கிறேன்னு சொல்லிருக்காரு.
அம்மா எனக்கு கால் பண்ணி, டேவிட் மாமா இப்படிச் சொல்றாரு, நீ எதும் சொல்லலனு கேட்டாங்க. அவங்களுக்கும் திடீர்னு உனக்கு என்னாச்சுனு பயம்” என்றவன், “அம்மா, அப்பா எப்ப இங்க வர்றதுனு கேட்கிறாங்க. என்ன சொல்லட்டும்” என்றான் ரவி.
டேவிட் பதில் சொல்லாமல் இருந்தான். மாமாவின் அழைப்புகளை ஏற்று பேசியிருக்கலாம் என்று தோன்றியது. பேசாமல் இருந்ததற்கு எல்லாரும் ஏன் இப்படிப் பயப்பட வேண்டும் என்றும் தோன்றியது. ஆனால் அவர்களைக் குறை சொல்ல முடியாது. முன்பு அவன் இருந்ததின் தாக்கம்தான், அவர்களின் இப்போதைய பயத்திற்குக் காரணம் என்று புரிந்தது.
ரவி, மது முகத்தைப் பார்த்தான். இருவர் முகத்திலும் கலக்கம்… அவனைப் பற்றிய பயம் தெரிந்தது.
சற்றுநேரம் அமைதியாக யோசித்தவனுக்கு, நான் ஏன் இவ்வளவு சுயநலமாக இருக்கிறேன். என் கவலையைப் பெரிதாக வெளிப்படுத்தி, ஏன் அவர்களைப் பயப்பட வைக்கிறேன். ஒருமுறை என்றால் சரி. இதையே நான் பழக்கமாக வைத்திருந்தால் அது சரியா? என்னைப் பற்றி இவ்வளவு யோசிக்கிறவர்கள் பற்றி, நான் சிறிதும் யோசியாமல் இருப்பது சரியா?
இப்படியான எண்ணங்கள் அவனுக்குள்!
யோசித்து அவன் ஒரு முடிவிற்கு வந்த போது, “டேவிட்… அம்மா அப்பாவ வர சொல்லவா?” என்று ரவி கேட்டான்.
“நாம முதல சாப்பிடலாம்” என்றான் டேவிட். அவன் குரல் சோர்வாக இல்லை. அதேசமயம் தெளிவாகவும் இல்லை. தன்னைச் சாதரணமாக காட்ட வேண்டி சரிசெய்யப்பட்டக் குரலாகத் தெரிந்தது. அவர்கள் அவனையே பார்க்க, “எவ்ளோ லேட்டாயிடுச்சி, வாங்க சாப்பிடலாம்” என்றான் மீண்டும்.
எல்லாம் எடுத்து வந்து வைத்து, மூவரும் சாப்பிட ஆரம்பித்ததும் டேவிட், “நாம பேரீஸ் போலாமா” என்று கேட்டான்.
இருவரும் அவனைப் பார்க்க, “எல்லாரையும் ஒரே இடத்தில மீட் பண்ணலாம், நான் சரியானப்புறம் யாரையும் இன்னும் பார்கலைல” என்றான்.
டேவிட் தங்களுக்காகப் பார்க்கிறான் என்று அவர்களுக்கு எப்படிப் புரியாமல் போகும்? ரவி, “நீ எங்களுக்காக பார்க்காத” என்றவன், “எல்லாரையும் உனக்கு பார்க்கனும்னு தோனிச்சினா, அவங்களை இங்க வர சொல்லலாம்” என்றதும், மதுவும், “ஆமா டேவிட், அவங்களை வெனிஸ் வர சொல்லுவோம்” என்றாள்.
சற்றுநேரம் ஒன்றும் சொல்லாமல் இருந்த டேவிட், “எனக்கு இங்க ஒருமாதிரி ஸ்ட்ரெஸ்ஸா இருக்கு. போனா ரிலாக்ஸா இருக்கும்னு தோனுது. போய்ட்டு வரலாமே” என்றான்.
அவன் சொன்ன விதத்தில், “அப்போ போலாம்” என்றனர் இருவரும்.
ஓரளவே டேவிட் சாப்பிட்டிருந்தான். இருந்தும், “ஐ அம் ஃபுல்” என்று எழுந்து, “டிக்கெட் புக் பண்றேன். நாளைக்குக் கிளம்பலாம். பேக் பண்ணுங்க. நான் மாமாகிட்டயும் பேசறேன். நீங்க சாப்பிடுங்க. குட் நைட்” என்று கிளம்பினான்.
வீட்டிற்கு வந்தவன், முதலில் பாரிசுக்கு பயணச்சீட்டு ஏற்பாடு செய்துவிட்டு, பயணத்திற்குத் தேவையானதை எடுக்க ஆரம்பித்தான். இயந்திரம் போல் எல்லாம் எடுத்துப் போட்டவனுக்கு, சட்டென நடந்தது எல்லாம் ஞாபகத்தில் வர அப்படியே அமர்ந்துவிட்டான்.
கண்களை மூடி ஏதோ முணுமுணுத்தான். மூடிய விழிகளுக்குள், கீர்த்தி முகம் வந்து விழுந்தது. கூடவே அவள் அன்று பேசியதும் நினைவில் வந்து நின்றது. மிக எளிதாக அவள் காதலைத் தூக்கிப் போட்டதை நினைக்க நினைக்க, அவன் மனம் கஷ்டப்பட்டுப் போனது.
அன்று அவள் சொன்னது போல், நான்தான் கஷ்டப்படுகின்றேன். நான், என் காதல் இல்லையென்றால் அவளுக்கு எந்த பாதிப்பும் இல்லை போல என்று எண்ணிக் கொண்டான்! அன்று அவள் பேசிய வார்த்தைகளை நினைத்தான். இன்றும் அது அவனைக் காயப்படுத்தியது… கோபத்தையும் கொடுத்தது!!
எழுந்து, மீண்டும் எடுத்து வைத்தான். முடிக்கும் போது நேரம் நள்ளிரவைத் தாண்டியிருந்தது. அதன்பின்னும்கூட உறக்கம் வரவில்லை. மனம் என்னவோ போல் இருந்தது. வீட்டிற்குள் சுற்றிக்கொண்டே வந்தான்.
அன்றைய இரவும் தூங்கவே முடியவில்லை. இனிமேல் இப்படித்தான் தன் நாட்கள் நகருமோ என்ற கேள்வி வந்தது. விடை தெரியவில்லை அவனுக்கு. ஆனால் திரும்ப எந்த மனஅழுத்தத்திற்குள்ளும் சென்று, யாருக்கும் சிரமம் தர விரும்பவில்லை.
அதனால், அடுத்தநாள் பாரிஸ் செல்ல புறப்பட்டான் டேவிட். போவதற்கு முன் இங்குள்ள உறவுகளிடம் இப்படிச் செல்வதாகச் சொல்லிவிட்டு, அவர்களின் ஒருவனை விமானநிலையத்தில் கொண்டு விடும்படி கேட்டான். அவனும் ரவி, மது, டேவிட்டை மார்கோ போலோவில் வந்து ஏற்றிவிட்டான்.
ரவி, மது… டேவிட் இயல்பாக இருக்க முயற்சிப்பதை நினைத்து திருப்திபட்டுக் கொள்ளவா, என்னதான் அவன் இயல்பாகக் காட்டிக் கொண்டாலும், மனம் இறுக்கத்தில்தானே இருக்குமென வருந்தவா என்ற மனநிலையில் தங்கள் விமானப் பயணத்தைத் தொடங்கினர்.
டேவிட்டிற்கு, காதல் கொடுத்த காயங்கள் அப்படியே இருந்தாலும், நடந்ததை நினைத்து மொத்தமாக உடைந்து போகாமல்… தன்னைத் தானே தேற்றிக் கொண்டது, மனஅழுத்தத்தைக் குறைத்தது. கீழே தெரியும் வெனிஸைப் பார்த்தபடி ஆகாயத்தில் பயணித்தான்.
வெனிஸ் புள்ளியாக தெரியும் தூரத்திற்கு விமானம் உயரே பறக்கவும், மனம் ஏதோ அயர்வை உணர கண்களை மூடிக் கொண்டான்.
அப்படி அவன் புள்ளியாக பார்த்த வெனிஸின் வீதிகளில் கீர்த்தி அலைந்து கொண்டிருந்தாள். சுரேஷ் சொன்னது போல் கடனைக் கொடுத்துவிட முடிவு செய்தவள், வங்கிக் கடனிற்காக முயற்சித்து வருகிறாள். சில நாட்களில் வங்கியிலிருந்து கடன் தொகை கிடைத்தது!
ஒரு சிறு நிம்மதியுடன் வங்கியிலிருந்து வெளியே வந்தாள். சென்டர் வாடகை, வீட்டு வாடகை, வட்டி எல்லாம் யோசித்தால்… சமாளிப்பது கஷ்டம் என்றே தோன்றியது. வீட்டு வாடகை என்று யோசித்தபின்பே, வீடு மாற்ற வேண்டும் என்பதே ஞாபகத்தில் வந்தது.
எப்படி இதை மறந்தேன் என்றொரு கேள்வி அவளிடம். அதற்குப் பதிலாய் காதல் என்று வந்தது. காதல் என்றதும் டேவிட் முகம் கண்களை நிறைத்தது.
அவ்வளவு நேரமாய் நடந்தபடியே யோசித்தவள், அப்படியே நின்றுவிட்டாள். அக்கணம் அலைபேசி ஒலித்தது. எடுத்துப் பார்த்தாள். ராதிகா அழைத்துக் கொண்டிருந்தார். சிலநொடிகள் யோசித்தபின் அவள் அழைப்பை ஏற்றால், எதிர்முனையில் சுரேஷ் குரல் ஒலித்தது.
“நாளைக்கு ஈவினிங் சாண்ட்டா லூசியா வந்திடு. கொஞ்சம் பேசணும்” என்றார் அவர்.
எதற்கு என்று கேட்டுக் கொண்டிருக்கவில்லை. முடியாது என்று சொல்லவும் இல்லை. சரியென்று சொல்லி வைத்துவிட்டாள்.
அடுத்தநாள் மாலைநேரம் சாண்ட்டா லூசியா ரயில் நிலையம் சென்றாள். மழை பெய்து கொண்டிருந்தது. விஸ்தாரமான ரயில் நிலைய முன் பகுதியில் குடைப் பிடித்தபடி கீர்த்தி நின்று கொண்டிருந்தாள். அவளுக்கு எதிரே… திலீப், ராதிகா மற்றும் சுரேஷ் நின்றார்கள்.
திலீப் வருவான் என்று கீர்த்தி நினைக்கவில்லை. இப்போது வந்திருந்தாலும் அவனை அவள் கண்டுகொள்ளவில்லை.
கடன் பணம் வேண்டாமென்று அலைபேசியிலே சொல்லலாம் என்று சுரேஷ் நினைத்தார். ஆனால் திலீப், ‘அது நல்லா இருக்காது ப்பா, நேர்ல பார்த்துச் சொல்லலாம். நானும் வர்றேன், நீங்க சொல்லி, கீர்த்தி ஒத்துக்கலனா, நான் பேசிப் பார்க்கிறேன்’ என்றிருந்தான். இதில் ராதிகாவிற்கு உடன்பாடில்லை. ஆனால் சுரேஷ் மகனுக்காக ஒத்துக் கொண்டார்.
ஆனாலும் ஓரிரு நொடிகளில் சொல்ல வந்ததைச் சொல்லிவிட்டுக் கிளம்பவே நினைத்தார். நேரம் கடத்தாமல், “உன்கிட்ட கடனைக் கேட்டது திலீப்க்குப் பிடிக்கல. அதனால நீ என்ன பண்ற… கடனைத் திருப்பித் தர வேண்டாம். உனக்கு ஒரு உதவி பண்ணதா நினைச்சிக்கிறோம்” என்றார்.
அவர் சொன்ன விதமே எரிச்சல் தந்தது. கைப்பையிலிருந்த காசோலையை எடுத்தவள், “பேசணும்னு சொன்னதும் அன்னைக்கு மாதிரி வந்து நிப்பேன்னு நினைச்சீங்களா, இத கொடுக்கத்தான் வந்தேன்” என்று அவர்முன் நீட்டினாள்.
உடனே திலீப், “அப்பா சொன்னப்புறமும், ஏன் இப்படிப் பண்ற” என்றான். “பா வாங்காதீங்க ப்பா, அவளால மேனேஜ் பண்ண முடியாது” என்றான். சுரேஷ் மகன் சொன்னதைக் கேட்டுக் கொண்டார். ஆனால் ராதிகா காசோலையை வாங்கிக் கொண்டார். ‘ப்ச் ஏன் ராதிகா’ என்று சுரேஷ் பார்க்க, “வாங்கலனா நம்ம சொன்னது பொய்யினு ஆயிடும்” என்றார் ராதிகா.
அக்கணம் கீர்த்தியைப் பார்த்தார் சுரேஷ். ‘வாங்கினாலும், அது பொய்தான்’ என்று அவள் முகமொழி சொன்னது போல் இருந்தது.
திலீப், “கீர்த்தி பணம் எப்படி வந்தது” என்று கேட்டான். “அன்னைக்கு அப்படி உன்கிட்ட கேட்டிருக்க கூடாது. தப்புதான்” என்றான். “உனக்காகதான் அப்படி யோசிச்சேன்” என்றான். “டேவிட்கிட்ட பேசறியா, பேசலனா பேசு” என்றான்.
மகன் வருந்திப் பேசுவதை… கீர்த்தி அதைக் கண்டு கொள்ளாமல் நிற்பதை, பார்த்த சுரேஷ்… அடுத்து திலீப் ஏதோ பேச வர, “போதும், திலீப், மழை பெய்து பாரு… ஸ்டேஷன் உள்ள போய் நில்லு” என்று சொல்லி, அதற்குமேல் அவனைப் பேச அனுமதிக்கவில்லை.
அவளைப் பார்த்தவாறு அவன் வருத்தப்பட்டு… கண்கள் கலங்கி நிற்க, “போ, அப்பா சொல்றேன்ல” என்றவர், சற்றுத் தள்ளி நின்ற பாலுவிடம் தம்பியை அழைத்துச் செல்லும்படி கூறினார். பாலுவும் உடனே வந்தான். திலீப், அப்பா சொன்னதைக் கேட்டு, பாலுவுடன் இரயில் நிலையத்திற்குள் சென்றான்.
அவர்கள் போனதும், ராதிகா கீர்த்தியை ஏதோ பேச வந்தார். சுரேஷ், “எதுவும் நீ பேச வேண்டாம், போ” என்று அழுத்திச் சொல்ல, அவரும் சென்றுவிட்டார்.
சுரேஷ் கீர்த்தியைப் பார்த்தார். அவள் முகம் தெளிவாகத் தெரிந்தது. மகன் இவளுக்காக யோசித்துக் குழம்புகிறான், இவள் இப்படி இருக்கிறாளே என்று கோபத்தில், “எப்பவும் உன்கிட்ட பேச பிடிக்காது. இப்பவும் பிடிக்கல” என்று அவளை உதாசீனப்படுத்திப் பேசினார்.
‘இனி இப்படி என்னைப் பேச அனுமதிக்க மாட்டேன்’ என்ற தொனியில், “ம்ம், அப்புறம் ஏன் பேசணும்னு ஃபோன் பண்ணீங்க” என்றாள்.
“அது… திலீப் உன்கிட்ட பணம் வாங்கக் கூடாதுனு சொன்னான், அதுக்காக”
“என்கிட்ட பேசக்கூடாதுனு சொன்ன மாதிரி அவன்கிட்ட சொல்லலயா”
அவள் கேள்விக்கு சுரேஷ் பதில் சொல்லவில்லை. மாறாக, “திலீப் சொன்னத கேட்டேல, உனக்காக யோசிச்சிதான் அவன் அப்படிக் கேட்டிருக்கான். நான் சொன்ன மாதிரி உன்மேல இருக்க அனுதாபத்தால அப்படிக் கேட்டிருக்கான்” என்று அவள் நிலையைக் குறையாகச் சொன்னார்.
“இருக்கும் இருக்கும், அவன் அம்மா அப்பா என்னய எப்படி நடத்திறாங்கனு அவனுக்கு தெரியும்ல” என்று அவர் பேச்சை அப்படியே திருப்பி அவர்களைக் குறையாகச் சொன்னாள்.
அப்படியொரு கோபம் அவருக்கு. “ரொம்பப் பேசற நீ! திலீப்க்காக உன்னய எதும் பேசக் கூடாதுனு நினைக்கிறன்” என்றார்.
அதற்கும் அவள், “அவனுக்காக பார்த்து என்னய எதும் பேசாம இருக்கிறவரா நீங்க” என்று அன்று பேசியதைச் சொல்லிக் காட்டினாள்.
சுரேஷிற்கு என்ன சொல்லவென்று தெரியவில்லை. பேசாமல் நின்றார்.
கீர்த்தி, “கடனைக் கொடுத்து முடிச்சிட்டேன். இனி எந்தச் சம்பந்தமும் இல்ல. ஃபோன் பண்ணி பேசணும்னு வர சொல்லாதீங்க… வரமாட்டேன். ஏன் இனி ஃபோனே எடுக்க மாட்டேன்” என்று சொல்லிவிட்டுப் போகப் போனவளிடம், “யாரையோ லவ் பண்றனு தெரியும், அது என்னாச்சு” என்றார்.
பேச்சு அவள் பக்கமாக முடிந்ததை, அவரால் துளியும் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. இவளெல்லாம் என்னைப் பேசுவதா என்ற எண்ணம். அதனால் சுரேஷ் பேச்சைத் தொடர்ந்தார்.
அவர் கேட்ட அடுத்தநொடியே, “அது எதுக்கு உங்களுக்கு?” என்றாள்.
“தெரிஞ்சிக்கலாம்னு நினைச்சேன்” என்று அடுத்து அவர் கேட்ட கேள்வியின் தாக்கத்தில், கீர்த்தி கையிலிருந்த குடை நழுவிவிட்டது. அவளது முகத்தைப் பார்த்தவருக்கு ஒரு திருப்தி ஏற்பட, “ராதிகாகிட்ட பேசின மாதிரி என்கிட்ட பேசணும்னு நினைக்காத” என்று கடுமையாகச் சொல்லிப் போய்விட்டார்.
அவர் வார்த்தைகள் தந்துவிட்ட காயத்தில், மழையில் நனைகின்றோம் என்ற உணர்வே இல்லாமல் அப்படியே நின்றாள் கீர்த்தி.
அந்த வழியே போன பெரியவர் ஒருவர் அவள் குடையை எடுத்து கொடுத்தார். அதன்பின்தான் சுயநினைவிற்கு வந்தாள். அவருக்கு நன்றி சொல்லக்கூட முடியாமல், குடையை வாங்கிவிட்டு விறுவிறுவென அங்கிருந்து சென்றாள்.
அன்றைய நாளின் இரவு நேரம். மழை பெய்து முடிந்திருந்தது. மழை இரவு என்பதால் மக்கள் நடமாட்டம் இல்லாமல், வீதிகள் வெறிச்சோடிக் கிடந்தன. வீட்டிற்குப் போகாமல் அங்கே இங்கே என்று அலைந்து வந்த கீர்த்தி, நகரின் ஏதோ ஒரு மூலையிலிருந்த மர சாய்விருக்கையில் வந்தமர்ந்திருந்தாள்.
கைகளை முட்டிக்கு குறுக்கே கட்டியபடி, ஒற்றை விளக்குக்கம்பம் சிந்திடும் மஞ்சள் விளக்கொளியை விழியசையாமல் பார்த்திருந்தாள். கண்கள் எங்கும் வெறுமை சூழ்ந்திருந்தது. தன்னைத் தானே தேற்றிக் கொள்ள முடியாதளவு, அன்று அவள் மொத்தமாக உடைந்து போயிருந்தாள்.