Kathambari Novels
அத்தியாயம் – 24
மதுவிடம் பேசிவிட்டு வீட்டிற்கு வந்திருந்த கீர்த்தி, பதினோரு மணியளவில் வெளியே போகக் கிளம்பிக் கொண்டிருந்தாள். கடிகாரம் பன்னிரண்டு என்று நேரம் காட்டினால், அவள் பிறந்தாள்!
அந்த நேரத்தில் டேவிட்டைப் பார்க்க வேண்டும், அன்றைய நாள் முழுவதும் அவனுடன் இருக்க வேண்டும், அவனிடம் கேட்டு நிறைய நிறைய பரிசுகள் வாங்கிக்கொள்ள வேண்டுமென்ற ஆசை… அவளுக்கு! அதற்காக அலங்கார ஆடை அணிந்து, மெனக்கெடல் எடுத்து சிறு ஒப்பனைகள் செய்து கொண்டு டேவிட்டைப் பார்க்கத் தயாராகிக் கொண்டிருந்தாள்.
கிளம்பி முடித்ததும், அலைபேசி எடுத்து திலீப் பிறந்தநாள் வாழ்த்து அனுப்பி இருக்கிறானா என்று பார்த்தாள். இல்லை என்றதும், ‘என்னாச்சு இவனுக்கு, விஷ் பண்ணி ஒரு மெசேஜ்கூட அனுப்பல’ என்று யோசித்தாள். ‘சரி, பிசியா இருப்பானா இருக்கும், டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்’ என்று விட்டுவிட்டாள்.
ஒருமுறை கண்ணாடி பார்த்துவிட்டு டேவிட்டிற்கு அழைக்க நினைத்தவள், அவனை எங்கே வரச் சொல்ல என்று புன்னகையுடன் யோசித்த போது, கதவு தட்டப்பட்டது. ‘இந்த நேரத்தில யாரு’ என்று போய் திறந்தாள். திலீப் நின்று கொண்டிருந்தான்!
“திலீப்!” என்று ஆச்சரியம் கொண்டாள். “சொல்லவேயில்ல, இப்படித் திடிர்னு வந்து நிக்கிற” என்றாள். “இப்பதான் உன் மெசேஜ் வரலனு நினைச்சேன், நீயே வந்திட்ட” என்று சிரித்தாள்.
“நேர்ல வந்து சர்ப்ரைஸ் தர நினைச்சேன்” என்றபடி உள்ளே வந்தவன், “சரி, கிளம்பு. ஃப்ரண்ட்ஸ் வெய்ட் பண்றாங்க. பர்த்டே செலிப்ரேட் பண்ணலாம்” என்றான்.
எப்போதும் திலீப், அவள் பிறந்தநாளுக்கு அவன் நண்பர்களை அழைத்து, சிறு கொண்டாட்ட நிகழ்வு ஏற்பாடு செய்வான் என்பதால் அவளுக்கு ஆச்சரியம் எதுவும் இல்லை. ஆனால் ‘டேவிட்டைப் பார்க்க நினைத்தோமே… என்ன செய்ய?’ என்று அவள் யோசித்து நின்ற நேரம், “என்ன கிளம்பாம நிக்கிற, வா கிளம்பலாம்” என்றான் திலீப்.
அவளோ சிறிய முக்காலியைக் காட்டி, “இப்படிக் கொஞ்சம் உட்காரேன், உன்கிட்ட ஒன்னு சொல்லனும்… நேர்ல சொல்ல நினைச்சிதான் ஃபோன்ல பேசறப்பக்கூட சொல்லல. இது ரொம்ப முக்கியமான விஷயம்” என்று டேவிட் பற்றி, அவர்கள் காதல் பற்றிச் சொல்ல நினைத்தாள்.
“நானும் உன்கிட்ட ஒன்னு சொல்லனும். அதுவும் இம்பார்டன்ட்தான்… ஆனா, எதுனாலும் பர்த்டே செலிப்ரேட் பண்ற இடத்துக்குப் போய் பார்த்துக்கலாம். நிறைய அரேஞ் பண்ணி வச்சிருக்கேன், என்னோட விஷ் இது”
ஒரு நொடி பேசாமல் நின்றாள். அடுத்தநொடி, “என்ன இது, வித்தியாசமா நீ பேசற” என்று கண்கள் சுருக்கினாள். “பர்த்டே கேர்ள்குதான விஷ் இருக்கும்? அரேஞ் பண்ணிருக்கேன்னு சொல்ற… அப்போ நீ எப்ப வந்த?” என்றாள்.
“அதலாம் போறப்ப பேசலாம், இப்போ நேரமில்லை. வா” என்று வெளியே சென்றான்.
‘ஏன் ரெஸ்ட்லெஸ்ஸா இருக்கிறான்? அவன் வர்றதே எனக்குத் தெரியாது. ஆனாலும் நான் கிளம்பி நிக்கிறேன். அது ஏன்னுகூட கேட்கல. இன்னைக்கு ஏன் இப்படி இருக்கிறான்?’ என்ற கேள்விகளோடு வெளியே வந்து வீட்டை பூட்டியவள், “வா போகலாம்” என்றதும், இருவரும் நடக்க ஆரம்பித்தார்கள்!
யோசனையுடனே திலீப் வந்தான். காலம் முழுவதும் அவளைக் கவனித்துக் கொள்ள வேண்டும் என்ற தன் எண்ணத்தைச் சொன்னால் எப்படி எடுத்துக் கொள்வாளோ என்ற பயம்! தான் சொல்ல வருவதை அவள் சரியாக புரிந்து கொள்வாளா என்ற பதற்றம்!
இதையெல்லாம் விட அவ்வளவு ஏற்பாடுகள் செய்திருந்தாலும், ‘நண்பன் என்று நினைப்பவளிடம் போய் தன் எண்ணத்தை எப்படிச் சொல்ல?’ என்ற மனமெங்கும் பெரும் தயக்கம்… சுணக்கம்!!
கலவையான மனநிலையில் குழம்பிக் கொண்டிருந்தான்!!!
அக்கணம், “செலிப்ரேஷன் எங்க?” என்று கேட்டாள்.
“ஹார்ட் ஆஃப் வெனிஸ்… சான் மார்கோ ஸ்கொயர்”
“ம்ம், அப்புறம் நான் ஒரு விஷயம் சொல்லனும்னு சொன்னேன்ல…” என்று ஆரம்பிக்க, “கீர்த்தி… எல்லாம் அப்புறமா… சரியா?” என்றான்.
“என்னாச்சு… ஒருமாதிரி இருக்க. பிசினஸ் டென்ஷனா? எல்லாம் சரியாதான போய்க்கிட்டு இருக்கு. பர்த்டேனு பாதியிலே விட்டுட்டு வந்திட்டியா? அதான் இப்படி இருக்கிறியா?” என்று மளமளவென கேள்விகளை அடுக்க, “கொஞ்சம் நேரம் எதும் கேட்காம வாயேன் கீர்த்தி” என்றான் மந்தமான குரலில்.
அவன் கேட்ட விதத்தில், “சரி நான் உன்னய எதும் கேட்கல, ஆனா எனக்கு ஒரு விஷயம் உன்கிட்ட சொல்லணும், நான் பேசுறதயவாது கேளு” என்றபோது அவள் அலைபேசிக்கு ஒரு அழைப்பு வந்தது.
“யாரு?” என்றான்.
“ஒரு கிளைன்ட்… முந்தாநாள் செஷன் ஸ்டார்ட் ஆனது. இன்னைக்கு ஈவினிங் சென்டர் வந்தாங்க. இப்ப திரும்ப கூப்பிடறாங்கனா, பேச வேண்டிருக்கும். எதும் இடையில பேசிடாத” என்று கடகடவென கூறி, அழைப்பை ஏற்றாள்.
கவனமாக அவள் பேசிக்கொண்டு வர, அவன் அமைதியாக நடந்து வந்தான். அலைபேசி பேச்சை முடிக்கையில், கிராண்ட் கேணல் முடிவில் இருக்கும் சான் மார்க் சதுக்கம் வந்திருந்தது. திலீப், இங்கேதான் கீர்த்தி பிறந்தநாளை கொண்டாடுவதற்கு ஏற்பாடுகள் செய்திருந்தான்.
தூறல் விழுந்ததில் ஈரமாகியிருந்த சதுர வடிவ செங்கற்கள்… மஞ்சள் வண்ண விளக்கொளியில் பளபளத்து தெரியும் பிரமாண்ட அரண்மனை மற்றும் தேவாலயம்… கிராண்ட் கேணல் ஓரம் இருளில் நிறுத்தப்படட வாட்டர் பஸ், கேண்டலாக்கள்… என்றிருந்தது அந்த இடம்.
கூடி நின்ற திலீப்பின் நண்பர்களைப் பார்த்துக் கைகாட்டி சிரித்தபடி, கேக் இருந்த மேசையருகே வந்து கீர்த்தி நின்றாள். திலீப்பும் வந்திருந்தான். மேசை அலங்காரங்கள், கேக் வடிவமைப்பை பார்த்தவள், “எப்பவும் போல சூப்பரா இருக்குது” என்றாள்.
அவன் அமைதியாக இருந்தான்.
“டெம்ப்ட் ஆகுது சாப்பிடனும்னு” என்றதும், பலவண்ண மலர்கள் நிரம்பிய பூங்கொத்து தந்து, “ஹேப்பி பர்த்டே கீர்த்தி” என்றான். அவள் அதை வாங்கி, அதில் எழுதியிருந்த பிறந்தநாள் வாழ்த்துச் செய்தியை வாசித்துவிட்டு, சுற்றிப் பார்க்க… அங்கே நின்ற திலீப் நண்பர்களும் வாழ்த்து சொன்னார்கள்.
ஒவ்வொருவர் முகம் பார்த்து, ‘தேங்க் யூ தேங்க் யூ’ என்று கூறிவிட்டு, மீண்டும் திலீப்பைப் பார்த்தாள். அவனோ மண்டியிட்டு இருந்தான். மேலும் கைகளில் ஆங்கில வாசகம் எழுதிய அட்டையைப் பிடித்திருந்தான்.
திலீப் அவனது எண்ணத்தை வெளிப்படுத்தியதும், அவனுடைய நண்பர்கள், ‘ஹே கீர்த்தி என்ன சொல்ற… இந்த மேரேஜ் ப்ரோபௌஸல அக்சப்ட் பண்ணு’ என்று ஆங்கிலத்தில் குரல்கள் எழுப்பி கூச்சலிட்டு கைதட்டினார்கள்.
இங்கே இன்று வருவதற்கு முன் அவர்களிடம், கீர்த்தியிடம் இப்படிக் கேட்கப் போவதாக திலீப் சொல்லியிருந்தால், எந்த அதிர்ச்சியும் இன்றி அவர்கள் எதிர்வினை செய்தார்கள்.
கீர்த்தி அவர்களை எல்லாம் அதிர்ந்து போய் பார்த்தாள்! மெதுவாக திரும்பி திலீப்பை பார்த்தாள். அவன் கையிலிருந்த அட்டையில் எழுதியிருப்பதை வாசித்தவளுக்கு, முகம் அசூயையில் சுருங்கிற்று. ‘நீ ஏன் இப்படி?’ என்று அவனை அவள் பார்த்த பார்வையில் அப்படியொரு வலி அப்பிக்கிடந்தது!!
திலீப் இப்படிக் கேட்பான் என்று கனவிலும் அவள் நினைத்ததில்லை! ஆனால் கேட்டுவிட்டானே என்ற அதிர்ச்சியின் பிடியில்… நிலைகுலைந்து அங்கிருந்து நகரக் கூட முடியாமல் சிலை போல் நின்று கொண்டிருந்தாள்.
இந்தச் சமயம்தான் டேவிட், ரவி பார்த்தது. ‘என்ன இது’ என்ற முகமொழியுடன் டேவிட், “கீர்த்தி” என்று ஓங்கிய குரலில் அழைக்க, சட்டென்று திரும்பிப் பார்த்தாள். “டேவிட்” என்று உதடு அசைத்தவள், படபடவென தலையை உலுக்கி அதிர்ச்சியிலிருந்து வெளிவர முயற்சித்தாள்.
அவர்கள் அருகில் வரவும், ‘யாரிவர்கள்’ என்ற கேள்வியோடு திலீப் எழுந்தான். அங்கிருந்த ஏற்பாடுகள்… திலீப் கையிலிருந்த அட்டை என்று எல்லாம் பார்த்த டேவிட், “என்ன கீர்த்தி இதலாம்” என்றான் அதிர்ந்திருந்த குரலில்.
தன்னைப் போலவே அவனுக்கும் அதிர்ச்சி என்று புரிந்தது; இப்படியொரு மனநிலையில் எதுவும் பேசினால் சரிவராது என்று தோன்றியது. அத்தனை பேர் முன்னிலையில் எதையும் பேச விருப்பமில்லை. அதனால் கையிலிருந்த பூங்கொத்தை கீழே போட்டவள், இலகில்லா உடல்மொழியுடன், “அப்புறமா சொல்றேன்… இப்ப கிளம்பு டேவிட்” என்று ஓய்ந்த குரலில் சொன்னாள்.
அதற்கு ரவி, “ஏன் இப்போ சொன்னா என்ன?!” என்று கேட்க… எக்கச்சமான எரிச்சல் வந்தது கீர்த்திக்கு. அவன் பக்கம் திரும்பாமலே, “இப்ப பேசினா சரியா வராது டேவிட்… நீ போயேன்” என்றாள் குறைந்த குரலில்.
டேவிட், “ப்ச், எப்படி இத பார்த்திட்டு போக முடியும்னு சொல்லு” என்று சிறு கோபம், வலி, அதிர்ச்சி வெளிப்படும் குரலில் கேட்டான்.
அப்போதும் கீர்த்தி, “புரிஞ்சிக்கோ, ப்ளீஸ் போ” என்றே சொல்ல… மீண்டும் ரவி, “என்னென்னு சொல்லாம சும்மா ஏன் போ போனு சொல்ற” என்றான்.
இருந்த எரிச்சலில் கீர்த்தி, “டேவிட் நீ போ… போறப்ப இதோ இந்த லூசையும் கூட்டிட்டுப் போ” என்று ரவியைப் பார்த்துச் சொல்ல… குரலில் ஒரு அழுத்தம் தந்து டேவிட், “மைன்ட் யுவர் வேர்ட்ஸ், ரவிய இப்படிப் பேசாத” என்றான்.
அவள் பேச்சு ரவியைக் கோபப்படுத்த, “ஈவினிங் இவன்கிட்ட என்கேஜ்மென்ட் எப்படி இருக்கனும்னு சொல்லிட்டு, இப்போ இப்படி நின்னா இதுக்கென்ன அர்த்தம்னு முதல சொல்லு” என்று சத்தமிட்டான்.
‘இப்படிப் பேசாத!’ என்று டேவிட் பேசுவதற்குள்… கீர்த்தி, “ஏய், அத அவன் கேட்டுப்பான், நீ கேட்காத! உன்கிட்ட அன்னைக்கே சொன்னேன்ல… எனக்கும் டேவிட்டுக்கும் இடையில வராதானு! ஒருதடவை சொன்னா புரியாதா?” என்று கத்தினாள்.
அதிர்ச்சி இன்னும் கூட டேவிட், “இவ எப்ப உன்கிட்ட இப்படிப் பேசினா” என்று ரவியைப் பார்த்தான்.
நண்பனிடம் எல்லாம் சொல்ல நினைத்திருந்த ரவி, “உனக்கு இவளைப் பத்தி சரியா தெரியலடா. இவ எப்பவும் இப்படித்தான் என்னய பேசறா. எனக்கு மேனர்ஸ் இல்லனு சொல்லிருக்கா! நீயும் மதுவும் அன்லக்கியாம்டா, என்னய மாதிரி ஒருத்தன் உங்க லைஃப்ல இருக்கிறதுக்கு.
உனக்காக நான் பணம் கொடுத்தா என்னடா தப்பு, என்ன தப்புனு சொல்லு, அப்போதான் நம்மள பிரிச்சிப் பார்க்கிற மாதிரி இப்படி சொன்னா” என்று அனைத்தையும் கொட்டினான்.
டேவிட், “ஏன் இதலாம் நீ என்கிட்ட சொல்லல ரவி” என்று கேட்டான். ‘இவ்ளோ நடந்திருக்கு, ஏன் என்கிட்ட சொல்லாம இருந்த’ என்ற தொனியில் ரவியிடம் கேட்டிருந்தான்.
ரவியிடம் டேவிட், ‘ஏன் இவ உன்னய இப்படிலாம் பேசணும்’ என்ற கேள்வியை கேட்பான் என்று கீர்த்தி எதிர்பார்த்தாள். ஆனால் அவன் கேள்வி வேறாக இருக்கவும், ‘தெரிந்திருந்தால் இந்தக் காதல் உன்னில் வந்திருக்காதோ’ என்ற தொனியில், “அவன் சொல்லிருந்தா, என்ன பண்ணிருப்ப!” என்று டேவிட்டிடம் கேட்டு நின்றாள்.
அவள் குரலின் வேறுபாடு உணர்ந்து டேவிட், “கீர்த்தி…” என்று ஏதோ பேச வர, அதுவரை அவர்கள் பேசுவதைக் கவனித்திருந்த திலீப், “இவன்தானா… எப்ப பார்த்தாலும் ஒருத்தன் மோசமா பேசிக்கிட்டு இருக்கான்னு சொல்லுவியே, அவன் இவன்தானா?” என்று கீர்த்தியிடம் ரவியைக் காட்டிக் கேட்டான்.
அவள் திலீப்பிற்குப் எந்தப் பதில் சொல்லவில்லை. அமைதியாக நின்றாள். அப்படியொரு கோபம் அவன்மேல்.
டேவிட், “ப்ச் என்ன கீர்த்தி இது, ரவி பத்தி இப்படிச் சொல்லி வச்சிருக்க” என்று எரிச்சல்பட, “இவனலாம் இப்படித்தான் சொல்ல முடியும்” என்றாள் பட்டென.
ரவி, “என்னய பத்தி பேசறத விட்டுட்டு, நீயும் இவனும் நின்ன விததுக்கு பதில் சொல்ல பாரு” என்று திலீப்பையும் அவளையும் கை காட்டி சவால் விடுவது போல் குரல் உயர்த்தவும்… டேவிட், “நான் கேட்டுக்கிறேன் ரவி, விடு, நீ இத பேசாத” என்றான் வார்த்தைகளுக்கு அழுத்தம் கொடுத்து!
அவர்கள் பேச்சுகளை வைத்து, கீர்த்தி, டேவிட் பற்றி திலீப்பிற்குப் புரிந்தது. கீர்த்தி காதலிக்கிறாளா? அதைத்தான் சொல்ல வந்தாளா? நான் குளறுபடி பண்ணிவிட்டேனா என்ற கேள்விகள் உள்ளுக்குள் வரவும், “என்னென்னு நான் சொல்றேன்” என்று அவனாக முன்வந்தான்.
கீர்த்தி அவனைப் பார்த்து, “வேண்டாம்!! தேவையேயில்ல!!” என்றாள். அவள் பார்த்த பார்வையில், வார்த்தைகளுக்கு கொடுத்த அழுத்தத்தில்… அவளுக்கு அவன்மீது எவ்வளவு கோபம் என்று புரிந்தது. இதை எப்படிச் சரிசெய்ய என்ற யோசனையில் பேசாமல் நின்றான் திலீப்!!
இதேநேரம் டேவிட்… அங்கிருந்த ஏற்பாடுகள், அவள் உடை மற்றும் ஒப்பனை, கேக், திலீப் கையிலிருக்கும் வாசகம் என்று பார்த்துவிட்டு, “தேவையில்லயா, எனக்குத் தெரியனும்… சொல்லு” என்றான் கீர்த்தியிடம். அதேநேரம் ரவியும் அவளிடம், “டேவிட் கேட்கிறான்ல… சொல்லு” என்றான்.
“சொல்ல முடியாது” என்றாள் விட்டேற்றியாக. அவள் பதில் ரவிக்குத்தான். ஆனால் டேவிட்டும் கேள்வி கேட்டிருந்தானே. அவள் தந்த அந்தப் பதிலில் சட்டென அவன் முகம் சங்கடப்பட்டுப் போனது.
உடனே ரவி, “ஏய்!! நாங்க யாரும் அவன்கிட்ட இப்படிப் பேச மாட்டோம். நீ ஏன் இப்படிப் பேசற… ஒழுங்கா பேசு” என்று கத்த… “ஏய், நான் எப்படிப் பேசனும்னு யாரும் சொல்ல வேண்டாம். முக்கியமா நீ சொல்ல வேண்டாம்” என்று கீர்த்தியும் கத்தினாள்.
ஏற்கனவே ரவிமீது திலீப்பிற்குக் கோபம் உண்டு. இப்போது தன் முன்னேயே கீர்த்தியைப் பேசுகிறான் என்றதில் கோபம் மிகுந்துவிட, “அவங்க பேசறப்ப, நீ ஏன் இடையில பேசற… பேசாத” என்று ரவியை எச்சரித்தான்.
அந்தநொடி டேவிட் திலீப்பைப் பார்த்தான். அவன் பிடித்திருந்த அட்டையைப் பார்த்தான். தான் காதலிக்கிறவளிடம் இப்படிக் கேட்டுக் கொண்டிருக்கிறான் என்று அப்போதிருத்தே கோபம் கழன்றது. இருந்தும் கோபத்தை அடக்கிக் கொண்டு நின்றான்!
ஆனால் இப்போது அவன் திலீப்பைப் பார்த்த விதத்தில் கோபம் அப்பட்டமாக வெளிப்பட்டது! அதைக் கண்ட திலீப்… கையிலிருந்த அட்டையைத் தூக்கிப் போட்டான்!!
இதை ரவியோ, கீர்த்தியோ கவனிக்கவில்லை. “இடையில ஒன்னும் வரல. என் ஃப்ரண்ட்கிட்ட சரியா பேசுனு இவளை சொல்றேன்” என்று ரவி பேச, “அதான் இடையில வர்றது! என்னய சரியா பேசுனு சொல்ற அளவுக்கு உனக்கு அறிவு கிடையாது, அதனால பேசாம இரு” என்றிருந்தாள் கீர்த்தி.
அதைக் கேட்ட டேவிட், “பார்த்துப் பேசு கீர்த்தி, நீ அவனை இல்ட்ரீட் பண்ற! ஐ பீல் டெரிபிள்” என்று அதிருப்தி, கோபம் வெளிப்படச் சொல்ல, “ப்ச் நீ பீல் பண்ணுவனெல்லாம் அவனைப் பேசாம இருக்க முடியாது” என்றாள்.
ரவி, “எப்படி பேசறா பாரு. இதான்டா இவ. அவளோட பேமிலி பத்திக் கேட்க வேண்டாம், பீல் பண்ணுவானு நீ அவளுக்காக யோசிச்ச, ஆனா உனக்காக அவ யோசிக்கிறாளானு” என்று கத்தியதில்… மீண்டும் மீண்டும் கீர்த்தியைப் பேசுகிறானே என்று திலீப்க்கு எக்கச்சக்கமாக கோபம் வந்தது.
“இத எதுக்கு இப்ப சொல்ற” என்று டேவிட் ரவியை அதட்ட, “அப்ப அவளைச் சொல்ல சொல்லுடா, உன்னய லவ் பண்ணிட்டு இவன்கிட்ட இப்படி பொக்கே வாங்கிட்டு ஏன் நின்னானு சொல்ல சொல்லு” என்றான்.
‘என் குடும்பம் பற்றி என்ன பேசிருப்பார்கள்’ என்ற கேள்வி வேறு உள்ளுக்குள் ஓட கீர்த்தி, “நீ எவ்ளோ கத்தினாலும் சொல்ல முடியாது, போ” என்றாள் முகத்தில் அடிப்பது போல் ரவியிடம்.
உடனே திலீப், “கீர்த்தி ஒன்னு நீ சொல்லு… இல்ல என்னய சொல்ல விடு. தப்பா போகுது பாரு” என்ற நேரம், “அப்ப ஏமாத்திறியா நீ!? இவ்ளோ நாளா டேவிட்ட ஏமாத்திருக்கியா நீ!?!” என்று கீர்த்தியைப் பார்த்து ரவி கேட்டிருந்தான்.
டேவிட், “ரவி! கீர்த்திய இப்படிப் பேசாதடா” என்று கத்த… அதேநேரம் ரவி முன் வந்த திலீப், “ஏன்… எப்ப பார்த்தாலும் அவளை ஏதாவது பேசிக்கிட்டே இருக்க. உனக்கு வேற வேலயே இல்லயா?!” என்று கோபத்தில் அறைந்துவிட்டான். ரவி திலீப்பை திரும்ப தாக்க பார்க்க… திலீப் அவனைச் சரமாரியாக அடித்தான்.
டேவிட் கீர்த்தியைப் பார்க்க… ரவி மீதிருந்த கோபத்தில், “உன் ஃப்ரண்டுக்கு இது தேவைதான்” என்றாள்.
அவளிடம் இதை எதிர்பார்க்கவில்லை. இப்படியெல்லாம் பேசுவாள் என்றும் அவன் எதிர்பார்க்கவில்லை. ஏமாற்றமும் கோபமும் நிறைந்த ஒரு பார்வை பார்த்துவிட்டு… ரவி, திலீப் இருவருக்கும் இடையே சென்றான் டேவிட்.
ரவியைப் பிடித்து தனக்குப் பின்னே நிறுத்தி, திலீப் சட்டையை இழுத்துப் பிடித்து தன் முன் நிறுத்தி… அறைந்தான். “யாரு நீ?! என் முன்னாடி அவனை அடிக்கிற? நான் லவ் பண்ற பொண்ணுக்கு மேரேஜ் ப்ரொபௌஸல் பண்ணிக்கிட்டு இருக்க” என்று மீண்டும் அடித்து, திலீப்பை விட்ட வேகத்தில், அவன் தட்டுத் தடுமாறி கீழே விழுந்தான்.
திலீப் நண்பர்கள் வந்து அவனைத் தூக்கிவிட்டார்கள். அதில் சிலர் டேவிட்டை நோக்கி கோபமாகப் போக, அவர்களைத் திலீப் தடுத்து நிறுத்தினான்.
அதீத கோபத்தில் இருந்த டேவிட், “இனி நீ ஒரு வார்த்தை பேச கூடாது” என்று ரவியை எச்சரித்தான். அவ்வளவு கோபத்தில் டேவிட்டைப் பார்த்ததே இல்லை என்பதால், சரியென்று சொல்லகூட ரவி வாய்திறக்காமல் நின்றான். அதே கோபத்துடன் டேவிட் திலீப்பைப் பார்த்து, “இதுக்கு முன்ன உன்கூட பேசினதே இல்ல. இப்பவும் பேச போறதில்லை. நீயும் பேசிடாத” என்றான் காட்டாமாக.
அடுத்து கீர்த்தி பக்கம் திரும்பிய டேவிட், “நீ மட்டும் பேசற… இப்ப” என்றான் கோபம் கொட்டிக் கிடந்த தொனியில்.
Super sis 💝
thanks dear