Kathambari Novels
அத்தியாயம் – 20
கீர்த்தி அப்படிச் சொன்னதும், “பேரன்ட்ஸ் பத்தியா” என்று டேவிட் முந்தைய நாள்களில் நடந்ததை நினைத்துக் கேட்க, “என்னய பத்தி” என்றாள்.
அந்த முரண்பாட்டை அவன் யோசிக்கையில், அவள் நிதானமாக மெல்லிய குரலில் பேச ஆரம்பித்தாள்.
“அம்மா சொந்த ஊர் திருச்சி பக்கத்தில ஒரு கிராமம். அவங்களுக்கு அம்மா இல்ல. அப்பா மட்டும்தான்! அண்ணா, அண்ணி… அவங்க பசங்க, ரெண்டு தங்கச்சினு பெரிய குடும்பம்.
அவங்க அண்ணா சின்னதா கடை வச்சிருந்தாராம், ஒரு தங்கச்சி பிளவுஸ் ஸ்டிச் பண்ணுவாங்களாம், இன்னொரு தங்கச்சி டுவெல்த் படிச்சிக்கிட்டு இருந்தாங்களாம்” என்று ஆரம்பித்தவள், “என் அம்மா லவ் மேரேஜ் பண்ணப்ப இதான் அவங்க பேமிலி சிச்சுவேஷன்” என்று அவனைப் பார்த்தாள்.
ஆச்சரியம் நிறைந்த குரலில் “உன் பேரன்ட்ஸூம் லவ் மேரேஜா” என்றான்.
அதற்கு ஏதும் சொல்லாமல், “அம்மா… அவங்க வீட்ல கஷ்டம்னு சொன்னாங்க. அதனால டுவெல்த் வரைக்கும்தான் படிக்க வைப்பாங்களாம். அம்மா சரியா படிக்கல, டென்த் பெயில். அதுக்கடுத்து படிக்க பிடிக்காம மில்லு வேலைக்குப் போனாங்களாம்.
மில்லு இருந்தது பக்கத்து ஊர்ல… பஸ்ல போய்ட்டு வருவாங்களாம். அந்தப் பையனை அப்பதான் பார்த்தாங்களாம். முதல அவன்தான் பேசினானாம். அம்மா பேசலயாம். கொஞ்ச நாளைக்கப்புறம் அம்மாவும் பேசிருக்காங்க. அவனைப் பிடிச்சிருந்திருக்கு… லவ் பண்ணிருக்காங்க.
நாலு மாசம் கழிச்சி வீட்டுக்கு எப்படியோ தெரிஞ்சி, அம்மாவ பயங்கரமா திட்டிருக்காங்க. அவங்க அண்ணன் அடிக்கவே செஞ்சாராம். இதனால வீட்ல யாரும் அம்மாகிட்ட பேசலயாம்… அவங்களை வேலைக்கும் அனுப்பலயாம். அம்மாக்கு உடனே கல்யாணம் பண்ணிடணும்னு பேசிருக்காங்க.
ஃப்ரன்ட் மூலமா அவன்கிட்ட அம்மா நடந்ததைச் சொன்னதுமே, கல்யாணம் பண்ணிக்கலாம், இல்லனா நம்மளைப் பிரிச்சிடுவாங்கனு சொல்லிருக்கான். அம்மாவும் அப்படி ஆயிடுமோனு பயந்திருக்காங்க. அதனால வீட்ட விட்டுப் போய் மேரேஜ் பண்ணிகிட்டாங்களாம்” என்று நிறுத்தினாள்.
” ஏன் லவ்வ அக்ஸ்ப்ட் பண்ணல?”
“தெரியல… அவங்ககிட்டதான் கேட்கனும்” என்றவள், “மேரேஜ் பண்ணிட்டு அம்மா அவங்க வீட்டுக்குப் போயிருக்காங்க. நாங்க சொன்னத கேட்கல, உன்னால ஊர்லயும் அசிங்கமா, அவமானமா போயிடுச்சி, இனி உனக்கும் எங்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லனு ஒதுக்கிட்டாங்களாம்.
ஊர்ல எல்லாரும் ஒருமாதிரி பேசிருக்காங்க. வேலைப் பார்த்த இடத்திலயும் அப்படித்தான். அது அம்மாவ காயப்படுத்திருக்கு. அம்மாக்கு அத ஹேண்டில் பண்ண, ஃபேஸ் பண்ணத் தெரியல… முடியல! இங்க இருக்க வேண்டாம், வேற எங்கயாவது போகலாம்னு அவன்கிட்ட சொல்லிருக்காங்க.
அதனால திருச்சிக்கு போனாங்களாம். சின்னதா வீடு ஒன்னு பார்த்துக்கிட்டு, அவனுக்கு ஒர்க்ஷாப்ல வேலை, அம்மாக்கு சூப்பர் மார்க்கெட்ல திங்ஸ் அரேஞ் பண்ற வேலைனு வாழ்க்கையை ஆரம்பிச்சிருக்காங்க.
லவ் பண்ணவனயே மேரேஜ் பண்ணியாச்சினு நிம்மதி இருந்தாலும், வீட்ல ஒதுக்கிட்டாங்காங்கிற கவலை அம்மாக்குள்ள இருந்திருக்கு. ம்… ஆறு மாசம் இப்படியே போயிருக்குது. அம்மா ப்ரெக்னன்ட் ஆயிருக்காங்க.
அவன்கிட்ட சொன்னதும்… ஊருக்குப் போகலாம், இனி உங்க வீட்ல நம்மளை சேர்த்துப்பாங்கனு சொல்லிருக்கான். அம்மாக்கு அவ்ளோ சந்தோசம். அதே சந்தோசத்தோட அன்னைக்கு தூங்கிருக்காங்க. ஆனா அடுத்தநாள் காலைல எந்திரிச்சப்ப… அவன் அங்க இல்லயாம்” என்று இடைவெளிவிட்டாள்.
அவள் பயன்படுத்திய சில தமிழ் வார்த்தைகள் புரியவில்லைதான். ஆனால் அவள் சொல்வது புரிந்ததால் “இல்லனா?” என்றான்.
“இல்லனா… ம்ம் இல்ல” என்றவள், “கடைக்கு போயிருப்பான், வந்திருவான்னு நினைச்சிருக்காங்க. வரல! கொஞ்ச நேரம் பார்த்திட்டு, அவன் வேல பார்த்த ஒர்க்ஷாப்ல போய் கேட்டிருக்காங்க. அங்கயும் இல்லயாம்… அவங்களுக்கும் தெரியலயாம். அவ்ளோதான்… வேற என்ன சொல்ல” என்று விட்டுவிட்டாள்
“அப்புறம் தேடலயா?”
அவனைப் பார்த்தபடியே சில நொடிகள் இருந்தவள், “தொலைஞ்சாதான் தேட முடியும், விட்டுட்டுப் போனவனை… எப்படி?” என்றாள் ஆழ்ந்த குரலில்.
அப்போதிருந்தே அவனுக்கு ஒரு நெருடல் இருந்தது… ‘அப்பா’ என்று உறவைச் சொல்லாமல், ‘அவன்’ என குறிப்பிடுகிறாளே என்று. இப்போதுதான் அதன் காரணம் புரிந்தது!
அவளே, “அம்மா ரொம்பப் பயந்திருக்காங்க. அடுத்து என்ன செய்யணும்னே தெரியாம அழுதிருக்காங்க. அவங்ககூட ஷாப்ல வேலை பார்த்தவங்கதான், கம்பளைன்ட் கொடுக்க சொல்லிருக்காங்க. சரினு ஸ்டேஷன் போனா, அங்க மேரேஜ் சர்டிபிகேட் கேட்டிருக்காங்க.
கோவில்ல வச்சிதான் அம்மாவ மேரேஜ் பண்ணிருக்கான். ஸோ அது இல்ல. போட்டோவாது கொண்டுவாங்கனு சொல்லிருக்காங்க. சரினு வீட்டுக்கு வந்து தேடுறப்பதான், அவன் திங்ஸ் எதும் வீட்ல இல்லங்கிறதயே அம்மா நோட்டீஸ் பண்ணிருக்காங்க.
அப்பருந்து… ரெண்டு நாள் அம்மா அழுதுக்கிட்டே இருந்தாங்களாம். அப்புறம் மனசை தேத்திக்கிட்டுத் திரும்பவும் ஒர்க் ஷாப் போய் கேட்டிருக்காங்க. இதுக்கு முன்ன அவன் ஹோட்டல்ல வேலை செஞ்சதா சொல்லி, டீடெயில்ஸ் கொடுத்திருக்காங்க.
அங்கயும் போய் விசாரிச்சிருக்காங்க. ப்ச், எந்த யூஸூம் இல்ல. அதுக்குமேல அலையறதுக்கு அம்மாகிட்ட தெம்பில்ல… ம் தைரியமும் இல்ல! மொத்தமா உடைஞ்சிட்டாங்க. வேலைக்குப் போகாம, வீட்லயே அழுதிருக்காங்க. இருபது நாள் இப்படியே போயிருக்கு. ஃப்யூச்சர் பத்தின பயம் வந்திருக்கு.
உடனே கிளம்பி அவங்க வீட்டுக்குப் போயிருக்காங்க. நடந்ததைச் சொல்லி அழுதிருக்காங்க. வீட்டுக்குள்ளயே அம்மாவ விடலயாம். சொன்னத கேட்காம கல்யாணம் பண்ணிக்கிட்டு… இப்ப வந்து அழுதா என்ன செய்ய முடியும்னு திட்டினாங்களாம்.
இப்பதான் உன் விஷயத்திலருந்து வெளிய வந்திருக்கோம் அவங்க அண்ணா விரட்டினாராம். ஆனா அம்மா போகாம நின்னு பார்த்திருக்காங்க, அப்பவும் கண்டுக்கவே இல்லயாம்.
அண்ணி, தங்கச்சி எல்லாம் மோசமா பேசிருக்காங்க. சுத்தி ஊர்க்காரங்க வேற நின்னாங்களாம். அம்மாக்கு ஒருமாதிரி இருந்திருக்கு, என்ன செய்யனு தெரியாம அங்கிருந்து கிளம்பிட்டாங்களாம்” என்று நிறுத்தினாள்.
“அந்தப் பையனோட பேரன்ட்ஸ்”
“லவ் பண்றப்ப அவனுக்கு யாருமில்லனு சொன்னானாம்” என்றவள், “அம்மா திருச்சி வந்தா, வீட்டுக்கு முன்ன கடன்காரங்க வந்து நின்னாங்களாம். அவன் ஒர்க்ஷாப் வைக்கிறதுக்காக சிலர்கிட்ட கடன் வாங்கியிருக்கான்.
அம்மாக்கும் அது தெரியுமாம். அவங்க வந்து அம்மாகிட்ட கேட்டப்போ, நான் கொடுக்கிறேன்னு சொல்லி அனுப்பிருக்காங்க” என்றபோது, “ப்ச் இவ்ளோ ப்ராப்ளம்… இப்படிச் சொல்லனுமா” என்றுவிட்டான்.
ஒருநிமிடம் முழுதாய் பேசாமல் இருந்துவிட்டு, “அவங்களுக்கு ஒரு நம்பிக்கை, அவன் திரும்பி வருவான்னு” என்று கீர்த்தி சொன்னதும், ‘ஏன் இப்படி?’ என்பது போல் டேவிட்டின் முகம் மாறியது.
அதைக் கவனித்தும் பேசுவதைத் தொடர்ந்தாள். “அம்மாவால வாழ்க்கையை தனியா பேஸ் பண்ண முடியல. அதனால திருச்சில இருக்கிற அம்மாவோட பெரியம்மா வீட்ல இருந்துக்க கேட்டிருக்காங்க. முதல அவங்க ஒத்துக்கல! அப்புறம் அம்மா அழறத, கெஞ்சிறத… பார்த்திட்டு, ஒத்துக்கிட்டாங்க.
ஒரு வேலைக்குப் போக ஆரம்பிச்சிருக்காங்க, அப்புறம் டெலிவரி… வேலைய விட்ருக்காங்க. அதுக்கடுத்து அம்மாக்கு எல்லாம் கஷ்டம்தான், பணம் கேட்டு கடன்காரங்க தொல்லை… டெலிவரிக்காக வாங்கின கடனை கேட்டு அவங்க பெரியம்மா திட்டிறது… அவங்க எடுத்த முடிவைக் குத்திக் காட்டிப் பேசற சொந்தக்காரங்க… இப்படி! டெய்லி அழுவங்களாம்!!
கடைசில ஒருத்தங்க வீட்ல… வீட்டு வேலைக் கிடைச்சிருக்கு. அந்த வீட்லருந்த லேடிதான், ‘என் பொண்ணு வெனிஸ்ல இருக்கா, உதவிக்கு ஆள் வேணும்னு சொல்றா, நீ போறியானு’ கேட்டிருக்காங்க.
அம்மாக்கு முதல ரொம்ப பயம்… இவ்ளோ தூரம் வர்றதுக்கு, இங்க சமாளிக்க முடியுமானு! ஸோ முடிவே எடுக்கலயாம். அந்த லேடிதான் திரும்பத் திரும்பக் கேட்டாங்களாம். என் பொண்ணு எல்லாம் பார்த்துப்பானு சொல்லிருக்காங்க. அம்மாக்கு கொஞ்சம் நம்பிக்கை வந்திருக்கு.
அதோட இங்க இப்படியொரு வாழ்க்கை வாழறதுக்கு, எங்கயாவது தூரமா போயிடலாம்னு தோனிருக்கு. அவன் வருவான்னு நம்பிக்கையும் போயிருக்கு. ஸோ இங்க வர முடிவு எடுத்திருக்காங்க. முதல அம்மா வந்தாங்க… அப்புறம் என்னய கூட்டிட்டு வந்தாங்க” என்று நிறுத்தினாள்.
“அப்போ நீ எங்க ஸ்டே பண்ணிருந்த” என்றான். சில நொடிகள் அமைதியாக இருந்துவிட்டு, “அம்மா அவங்க பெரியம்மா வீட்ல என்னய விட்டுட்டு… இங்க வந்திருந்தாங்க” என்றாள்.
‘எப்படித் தனியாக… அந்த வயதில்’ என்று கேட்க வந்தவன், கேட்கவில்லை. அவள் முகவாட்டமே சொன்னது, அவளுக்கும் அது கடினமாக இருந்திருக்கும் என்று! அதனால் அவள் முகம் பார்த்தபடி அமைதியாக இருந்தான்!
சற்றுநேரம் ஏதும் பேசாமல் இருந்தாள். பின், “இங்க வந்தப்புறம் அந்த வீட்ல வேலை பார்த்திட்டு, அங்கயே கிச்சன்ல தங்கினாங்க. நானும் அம்மாகூட… ம், அப்படித்தான் எங்க லைஃப் வெனிஸ்ல ஆரம்பிச்சது” என்று சொல்லும் போது அவள் குரல் உள்ளே போயிருந்தது.
வெகுநேரம் அமைதியாக இருந்துவிட்டுப் பேசினாள். அதுவும், “கீர்த்தி” என்று அவன் அழைத்தபின்பு, “எனக்கு இங்க லைஃப் பிடிக்கலை டேவிட். அங்கயுமே பிடிக்கல. எப்பவும் நாங்க இன்னோருத்தர் வீட்லயே இருக்கிற மாதிரி… ப்ச் பிடிக்கவேயில்ல” என்று குனிந்துகொண்டு சொன்னாள்.
பின் நிமிர்ந்து பார்த்து, “ஆனா அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டு… ஸ்கூல் முடிச்சி, யூனிவர்சிட்டி ஜாயின் பண்ணேன்! அப்பலாம் நிறைய ஆசை எனக்கு… ஜாப் போகனும், எங்களுக்குனு ஒரு வீடு பார்த்துக்கனும், அம்மாவ வேலைய விட சொல்லிடனும், அவங்களை நல்லா பார்த்துக்கனும்…
அம்மாவும் என்னய பார்த்துக்கனும், என்கூட அவங்க பேசனும், எனக்காக அவங்க டைம் ஸ்பென்ட் பண்ணனும்… இப்படினு நிறைய…
அன்ட் லைஃப்ல நம்பிக்கையும் வந்திச்சி. வந்த கொஞ்ச நாள்யே போகவும் செஞ்சிடுச்சி” என்று நீண்ட இடைவெளிவிட்டு, “என் அம்மா இறந்துட்டாங்க. சர்குலேட்டரி ஃபெயிலியர், ஓவர் ஸ்ட்ரெஸ்னு சொன்னாங்க. நா… என்…” என்று வார்த்தை வராமல் கண்மூடி சற்றுநேரம் இருந்தாள்.
பின், “அப்புறம் ரிச்சுவல்ஸ் முடிச்சேன். முடிச்சதும் ராதிகா மேம், உன் ரிலேட்டிவ்ஸ் இந்தியால இருக்காங்கள, நான் அவங்ககிட்ட சொல்லிருக்கேன், அங்க போனு சொன்னாங்க. மாட்டேன்னு சொல்லிட்டேன்.
திரும்ப திரும்பச் சொன்னாங்க. நான் ஒத்துக்கவேயில்ல. அப்புறமா அவங்க ஹஸ்பண்ட் என்னமோ பண்றா விட்ருனு மேம்கிட்ட சொன்னாங்க.
அப்படினா இந்த வீட்ல இருக்க முடியாதுனு மேம் சொன்னாங்க. அவங்களே சொன்னாலும், இருந்திருக்க மாட்டேன். அம்மா திங்க்ஸ், இம்பார்ட்டன்ட் பேப்பர்ஸ் எடுத்திட்டு ரோம் போயிட்டேன்.
நாலைஞ்சி நாள் எதையும் யோசிக்க முடியல. ஆனா எனக்குத் தெரியும், நான் அப்படியே இருக்க முடியாதுனு… நான்தான் என்னய பார்த்துக்கனும்னு, ஸோ அம்மா பேங்க் அக்கௌன்ட்ல எவ்ளோ பணம் இருக்குதுனு பார்த்தேன். ஆனா அதுல அமௌன்ட் கம்மியா இருந்தது.
அன்ட் ரெண்டு ரெண்டரை வருஷமா சேலரி கிரெடிட் ஆகவேயில்ல. உடனே வெனிஸ் வந்து, மேம்கிட்ட கேட்டேன். இந்தியால கடனை அடைச்சது, இப்ப உன் அம்மாக்கு ஆன செலவு… இதுக்கே சரியாயிடுச்சி சொன்னாங்க.
இதெப்படி நான் நம்ப முடியும்? காலையில அம்மா எழுந்திருச்சா, ரெஸ்ட்டே எடுக்காம எவ்ளோ வேலைப் பார்ப்பாங்கனு எனக்குத் தெரியும். டொமஸ்டிக் ஹெல்பருக்கு இங்க என்ன சேலரினும் தெரியும். அப்புறம் இவ்ளோ கம்மியா எப்படினு… கேட்டேன்.
அவங்களுக்கு அப்படியொரு கோபம்! உன் அம்மா சமைக்க மட்டும்தான் வந்தா, அவளா எல்லா வேலையும் பார்த்தா, அதுக்கு எதுக்கு நான் சம்பளம் தரணும்னு கேட்கிறாங்க…
அதுமட்டுமில்ல…. எப்பவோ அம்மாகிட்ட வேலைக்கு இனி ஆள் வேண்டாம், கிளம்புனு சொன்னாங்களாம், ஆனா அம்மாதான் இங்கயே இருக்கேன்னு இருந்தாங்கனு சொன்னாங்க” என்றபோது, “கீர்த்தி” என்று குறுக்கிட்டான்.
அவள் அவனைப் பார்க்க, “உன் அம்மாகிட்ட இத நீ கேட்கலயோ” என்றான்.
“எத்தனை தடவ கேட்டிருப்பேன் தெரியுமா? விவரம் வந்தப்புறம்… அம்மாவ பத்தி தெரிஞ்சப்புறம்… அங்க எவ்ளோ கடன் இருந்தது, எப்படி அத இவங்க கொடுக்கிறாங்க, சம்பளம் என்ன, இவ்ளோ வேலை ஏன் செய்றீங்க… இப்படி எல்லாம் அம்மாகிட்ட கேட்டிருக்கேன்.
அத நீ யோசிக்காதனு சொன்னாங்க. யோசிக்காம எப்படிமா இருக்க, இது தெரிஞ்சா நம்மள நாமளே பார்த்துக்க முடியும்னு சொன்னா, மேம் எல்லாம் பார்த்துப்பாங்கனு சொல்லிட்டாங்க! திரும்பத் திரும்பக் கேட்டுப் பார்த்தேன், அழ ஆரம்பிச்சிட்டாங்க. என்ன செய்ய?” என்றாள் இயலாமையுடன்.
“அப்படினா ராதிகானு சொல்றியே அவங்ககிட்ட கேட்டிருக்கலாமே”
“கேட்காம இருந்திருப்பேனா… கேட்டேன். ஆனா அவங்க போய் அம்மாகிட்ட என்ன சொன்னாங்களோ, அம்மா என்கிட்ட வந்து ஒரே அழுகை. அவங்களை சந்தேகப்படுறியா, நிம்மதியா வாழ முடியாதானு இருந்த எனக்கு, இங்கதான் நிம்மதி கிடைச்சிருக்கு, உனக்கு அது பிடிக்கலயானு அப்படியொரு அழுகை.
அம்மாவ சமாளிக்கவே முடியல என்னால! இதுல என்ன நிம்மதினு கேட்கத் தோனிச்சி, ஆனா இத நிம்மதினு சொன்னா… இதுக்கு முன்ன லைஃப் எப்படி இருந்திருக்கும்னு புரிஞ்சிக்கவும் முடிஞ்சிச்சி”
“ஏன் இப்படிச் சொல்ற” என்றான்.
“ராதிகா மேம் அம்மாவ நடத்தற விதம் எனக்குப் பிடிக்காது. கொஞ்சம்கூட மரியாதைக் கொடுக்க மாட்டாங்க, எந்த வேலை செய்றதுக்கும் அம்மாகிட்ட சொல்ல வேண்டிய தேவையே இருக்காது. ஆனா எப்பவாது அம்மாவா செய்ய முடியாம இருந்தா… செஞ்சி முடிச்சிட்டு உட்காருனு சத்தம் போடுவாங்க!
எனக்கு எரிச்சல் வந்து ஒருதடவ அம்மாகிட்ட, ‘போதும், வேலைய விட்ருங்க, பார்ட் டைம் ஜாப் போறேன், நம்ம சமாளிக்க முடியும்’னு சொல்லிட்டேன். அம்மாக்கு அப்படியொரு கோபம்!
கோபத்தில என்கிட்ட ரொம்ப கத்தினாங்க. கடைசியா… படிக்க முடியாதுனு சொல்லாத, நல்லா படிக்கனும், கவனம் படிப்பில மட்டும்தான் இருக்கனும், லவ் அது இதுனு எந்த எண்ணமும் இல்லாம நீ படிக்கனும்னு… அழுதுகிட்டே சொன்னாங்க, கிட்டத்தட்ட ப்ராமிஸ் மாதிரி என்கிட்ட வாங்கிட்டாங்க.
நான் விட்டுட்டேன், அதுக்கப்புறம் ஒன்னும் கேட்டுக்கல, என்னால அம்மாக்கு எதையும் புரிய வைக்க முடியல… அவங்கள மீறி எதும் பண்ணவும் எனக்கு தோணல… விட்டுட்டேன்” என்றாள் விரக்தியுடன்.
அவன், “அவங்களும் புரிஞ்சிக்க ட்ரை பண்ணிருக்கனும்” என்று அவள் அம்மா பற்றிச் சொன்னதும், முகம் சுருங்க, “அம்மா… ராதிகா மேம ரொம்ப நம்பினாங்க… அதான் இப்படி” என்றாள்.
சிலநொடிகள் பேசாமல் அவளையே பார்த்திருந்தவன், “பேய்மென்ட், ஜாப் பத்தி ராதிகாகிட்ட அதுக்கப்புறம் நீ பேசலயா” என்றான்.
“நான் பேசினேன் டேவிட், அம்மாவ நல்லா வேலை வாங்கிட்டு, இப்ப வந்து இப்படிப் பேசறது சரியா? உங்ககிட்ட வந்து அம்மா வேலைப் பத்தி கேட்டப்ப இத சொல்லிருக்கலாமே… ஏன் சொல்லலைனு கேட்டேன்.
கொஞ்சமாவது நியாயமா, மனசாட்சியோட நடந்துக்கோங்க, அம்மா வேலை பார்த்ததுக்கானப் பணத்தைக் கொடுங்கனு கத்தினேன். அதுல அவங்களுக்கு பயங்கிற கோபம்… உன் அம்மா இங்க வேலை பார்த்தா, இங்க தங்கினா. நீ என்ன பண்ண? நீ எதுக்கு இங்க தங்கின?
நீ தங்கினதுக்கு சாப்பிட்டதுக்கு, இப்ப உன் அம்மா ஹாஸ்பிட்டல் செலவுக்கு, போனு சொன்னப்புறமும் ரெண்டர வருஷத்துக்கு மேல நீயும், அவளும் இங்க இருந்ததுக்கு… நான் கணக்கு போட்டா நீதான் எனக்கு காசு கொடுக்கனும்னு அவங்களும் கத்தினாங்க.
அதுக்கப்புறம் மாறி மாறி ரெண்டு பேரும் கத்திக்கிட்டோம்… கடைசில நான் அம்மாவ ஏமாத்திட்டிங்கனு சொன்னேன். அ… அதுக்கு ஒன்னு சொன்னாங்க. நான் அவ்ளோதான்… உடைஞ்சிட்டேன் டேவிட்.
அவங்க பேசினது என்னய அவ்ளோ காயப்படுத்திடுச்சி… இப்பவுமே அந்த வார்த்தை என்னய காயப்படுத்தும்” என்று பெருமூச்சு எடுத்தவள், பேச்சை நிறுத்தினாள்.
அது என்னவென்று ‘அவளாக சொல்வாளா, நான் கேட்க வேண்டுமா, இல்லை அதைச் சொல்ல வேண்டாமென நினைக்கிறாளா?’ என்று ஒரு குழப்பத்திலே அவளைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
சற்றுநேரம் பேசாமல் இருந்தவள், “அவங்க சொல்றாங்க டேவிட்… என்னயவா ஏமாத்திறனு சொல்ற, உன் அம்மாக்காக, உனக்காக செலவழிச்ச பணத்தைக் கேட்டா, அத கொடுக்காம நீதான் என்னய ஏமாத்த பார்க்கிறனு கத்தினாங்க.
அ… அப்புறம் சொ… சொன்னாங்க… நீ அப்படித்தான், உன் புத்தி அப்படித்தான் இருக்கும். ஏமாத்திறதலாம் உன் ஜீன்லயே இருக்குனு சொல்லிட்டாங்க” என்று சொன்னவள்… ஒரு கனமான மௌனத்திற்குள் சென்று தன் கனத்தை சற்று கணத்திற்கு மறைக்கப் பார்த்தாள்.
சிலபலநொடிகள் அவளது மெல்லிய மூச்சொலி மட்டுமே அங்கே கேட்டது.
எழுந்து தண்ணீர் எடுத்து வந்து, ‘கொஞ்சம் குடி’ என்ற பொருளில் அவளிடம் கொடுத்தான். அதைக் குடிக்காமல் அவனது முகம் பார்த்து, “அவங்க என்ன மீனிங்ல சொன்னாங்கனு புரியுதா டேவிட்” என்றாள் குரல் உடைய.
லேசாக தலையசைக்க மட்டும் செய்தான்.
“அம்மா மேரேஜ் பண்ணவன் ஏமாத்தினதால… நானும்… அப்படிச் சொன்னா எனக்… என்னால” என்று பேச முடியாமல் நிறுத்த, அவள் தலையில் மெதுவாக தடவிக் கொடுத்தவன், “தண்ணி குடி” என்றான்.
அப்போதும் அவள், “எனக்கு அப்… அப்படிச் சொன்னா பிடிக்காது… ஆனா அடிக்கடி அ… அவங்க சொல்லி என்னய…” என்று திணற, “சொல்றேன்ல கீர்த்தி தண்ணி குடி” என்றான்.
தண்ணீர் குடித்து சற்று நிதானமானாள். சற்றுநேரம் பேசாமல் இருந்தாள். பின், “அவங்க அப்படிப் பேசினதால, எங்களுக்கு என்ன செலவானதுனு சொல்லுங்க, நான் கொடுக்கிறேன்னு சொல்லிட்டேன். எஜுகேஷன் ஃப்ரீ, அதனால படிச்சி முடிக்கிற வரைக்கும்… என் மத்த செலவ பார்த்துக்க கடனா பணம் கொடுங்கனு கேட்டேன்” என்றாள்.
“உங்களுக்காக அவங்க ஸ்பென்ட் பண்ணத ரீபே பண்றது ஓகே. பட் உன் எக்ஸ்பென்சஸ் நீயே பார்த்திருக்க முடியாதா” என்றான்.
“முடியும்! ஒருதடவ ஜாப் போறதா அம்மாகிட்ட சொன்னப்ப, அவங்க என்கிட்ட சொன்னது கவனம் எதுலயும் போகாம படிக்கனும்னுதான, அதான்… அப்படி. அம்மா என்கிட்ட கேட்டதும் அது ஒன்னுதான… அம்மாக்காக நிறைய செய்ய நினைச்சேன்… இனி எதும் முடியாதுங்கிறப்ப… இதுவாது…
எனக்குத் தெரியுது எமோஷனலா முடிவெடுத்திருக்கேன்னு. இப்ப தோனும் இன்னும் கொஞ்சம் சரியா யோசிருக்கலாம்னு… ஆனா இப்ப இருக்க கீர்த்தி வேற, அப்போ வேறல. அந்த ஏஜ்ல அவ்ளோதான் யோசிச்சேன். அது தப்பா இருந்தாலும், அதுல எனக்கு எந்த வருத்தமும் இல்ல.
அதுக்கப்புறம்… எந்த என்டர்டெய்ன்மென்ட்டும் இல்லாம, அதுக்கு முன்ன படிச்சத விட நல்லா படிச்சேன். படிப்பு முடிஞ்சதும், ஒரு சைகாட்ரிஸ்ட்கிட்ட அசிஸ்டென்ட்டா ஜாயின் பண்ணேன்.
எனக்குனு வீடு பார்த்துக்கிட்டேன். கடனை அடைக்க ஆரம்பிச்சேன். கிளினிக் ஸ்டார்ட் பண்ணி ரெண்டு வருஷமாகுது! அதோட ரென்ட், வீட்டோட ரென்ட், அவங்க கடன்னு லைஃப் போகுது” என்று முடிக்கையில் அவள் குரலில் சோர்வு இருந்தது. அதைவிட சுகப்பட்டும் தெரிந்தது.
அவள் பேசியதை ஒருமுறை மனதிற்குள் ஓட்டிப்பார்த்தான். எந்த இடத்திலும் அம்மா மேல் அவள் புகார்கள் வாசிக்காதது… அவளது அம்மாவின் செயலிற்கு ஒரு சின்ன அதிருப்தி அவன் காட்டிய போது அவளது எதிர்வினை… எல்லாம் யோசித்தான். அதன் விளைவில்… அவனுக்கு ஒன்று புரிந்தது.
அது, அம்மா என்றால் கீர்த்திக்குப் பிடிக்கும் என்று!!
எனவே மற்ற பேச்சை விடுத்து, “அம்மா ஃபோட்டோ இருக்கா” என்றான்.
“ம், பார்க்கிறியா” என்று ஆர்வமாக கேட்டு… அலைபேசி எடுத்து அம்மாவின் புகைப்படம் காட்டி, “யூனிவர்சிட்டி போனதுமே மொபைல் வாங்கினேனா, அப்போ எடுத்தது” என்றாள்.
அவன் பார்க்கையில், “அம்மா ஞாபகமா என்கிட்ட இருக்கிறது இதுதான், இது மட்டும்தான் டேவிட்” என்றாள் நா மேலண்ணத்தில் ஒட்டிக்கொள்ள.
“திங்ஸ் எடுத்திட்டுபோனதா சொன்னியே”
“ம்ம் அம்மா கட்டின சாரீஸ். ஆனா சண்டை போடறப்ப ராதிகா மேம், உன் அம்மா திங்ஸ்னு சாரீஸ் எடுத்திட்டுப் போனியே அது எல்லாம் என் பழைய சாரீஸ்தான், எதும் உன் அம்மவோடது இல்லனு சொல்லிட்டாங்க, அதான் அத வச்சிக்கத் தோணல” என்றாள் அவஸ்தையான குரலில்.
அடுத்தென்ன பேசவென்று தெரியாமல் ஒருநொடி இருந்தவன், “அம்மா பேர் நீ சொல்லவேயில்ல” என்றதும், “என் அம்மா பேர் தேவி” என்று அத்தனை ஆசையாகக் கூற… மென்னகையுடன், “ம் ம்” என்றான் அலைபேசியில் அவள் அம்மா புகைப்படங்களைப் பார்த்தபடி.
அடுத்து அவள் அடங்கிப் போன குரலில், “அம்மா மேரேஜ் பண்ணவன் பேர் சொல்ல மாட்டேன். எனக்குப் பிடிக்காது” என்றாள். பேசியதிற்குச் சம்பந்தமே இல்லாமல், “இன்னொரு காஃபி வேணும் டேவிட்” என்றாள்.
கீர்த்தி முகம் பார்த்தவன், அலைபேசியை அவளிடம் தந்துவிட்டு எழுந்தான். யோசனையாக காஃபி தயாரித்துக் கொடுத்துவிட்டு, உட்காராமல் நின்றான். மெதுவாக காஃபி குடித்து முடித்து, கோப்பையைத் தரையில் வைத்துவிட்டு, ஓரிடத்தையே வெறித்துப் பார்த்திருந்தாள்.
கீர்த்தியையே பார்த்திருந்தான்.
அடரமைதியில் இருந்தாள் அவள். முகத்தில் வேதனை பரவியிருந்தது. தவிப்பு கண்களில் குவிந்து கிடந்தது. பார்வைகள் மனதின் அழுத்தத்தை, வலியை வெளிப்படுத்தின. இருந்தும்… தன்னை இயல்பாக காட்ட வேண்டி, இப்போது கோப்பையை இங்கும் அங்கும் நகர்த்திக் கொண்டிருந்தாள்.
அப்பா என்ற உறவு தரும் அன்பு, அரவணைப்பு அவளுக்கு கிடைக்கவில்லை. அது எவ்வளவு பெரிய வெற்றிடம்? எந்தளவிற்கு வெறுமையை அவளுக்குத் தந்திருக்கும் என்று புரிந்தது.
இப்படியொரு நிலையில்… அன்பு, அக்கறையை இருமடங்காக அவள் அம்மா கொடுத்திருக்க வேண்டும். அவள் பேசியதை வைத்துப் பார்த்தால், அதுவும் அவளுக்கு கிடைக்கவில்லை என்று தோன்றியது. முந்தைய நாட்களின் அவள் வெளிப்படுத்திய அலைப்புறுதலுக்கு காரணம் என்னவென்று புரிந்தது.
அவள் மட்டுமாக இருப்பது… சிலசமயங்களில் அவளைத் தாக்குகிறது என்று புரிந்ததும் அவளுக்காக கவலைப்பட்டான்! அதேநேரம், இனி அவளுக்கென நான் இருக்கிறேனே… அவளும் நானும் என்பதுதானே எதிர்காலம்… தனிமை தாக்காது என்று அமைதியும் கொண்டான்!!
மெதுவாக வந்து மண்டியிட்டு அமர்ந்து, “கீர்த்தி” என்றழைத்தான்.
உடனே, “டேவிட்…” என்று நிமிர்ந்து, “எனக்கு அம்மா மட்டும்தான், ஃபேமிலினா நானும் அம்மாவும்தான்… வேற யாரும் அதுல இல்ல. யாரும் வேண்டாம், என் அம்மாவ வேண்டாம்னு சொன்னவங்க யாரும்… எனக்கும் வேண்டாம்” என்று தெளிவாக சொல்லி வந்தவள் அனத்தும் குரலில், “ஃபேமிலினா நான்… அம்மா, இப்ப அம்மாவும் இல்ல, சிலநேரம் கஷ்டமா இருக்குது டேவிட்” என்றாள்.
அவளின் வெற்றிடம், வெறுமை, தனிமை… இவை கொடுத்திடும் வலிகளைப் புரிந்தவன், ‘என்னிடம் வந்துவிடு’ என்பது போல் கைகளை விரித்தான். “டேவிட்…” என்று அவள் பேச வர, “போதும்… என்னால உன்னய புரிஞ்சிக்க முடியுது கீர்த்தி” என்றான்.
இன்னும் அவனைப் பார்த்தபடி அவள் இருந்தாள்.
அவன், “உன் இஷ்டம், உனக்கு வேண்டாம்னா வேண்டாம், விடு” என்றதும், ஓரிரு நொடிகள் அவன் விழிகளைப் பார்த்திருந்தாள்.
அதற்கடுத்த நொடி எம்பி எழுந்தவள், அவனது கழுத்தில் கரங்களைச் சுற்றிக் கொண்டு… அவனது தோளில் அழுந்த முகம் சாய்த்து… அவனை அழுத்தமாக அணைத்து கொண்டாள். அவளது அழுத்தம் தீர அணைத்திருந்தாள்!
விலக மனமில்லாமல் வெகுநேரம் அப்படியே இருந்தாள்! அவன்தான் மெல்ல அவளிடமிருந்து விலகி, நேராக அமர்ந்து, வாகாக அவளைத் தன் நெஞ்சில் சாய்த்து, அரவணைத்துக் கொண்டான்!
மனதின் காயத்திற்கு அவன் காதல் தந்திடும் கதகதப்பு மருந்தாக இருந்தது. இதயம் அதை உணர வேண்டுமென்று இமைகள் மூடிக்கொண்டாள்! அந்தக் கதகதப்பை அனுதினமும் உணர்த்த துடித்த இதயத்திற்காக, அவன் இதழ்கள் அவளுக்கு நெற்றிமுத்தம் ஒன்றை உதிர்த்தன!!