Kathambari Novels

Kathambari Novels



டேவிட், ‘இந்தக் கவலையோடு என்னய இருக்க விடுங்க’ என்று சொன்னதும், “எப்படி உன்னய அப்படியே விட முடியும்?” என்று மது கோபம், கவலை கலந்த குரலில் சொல்ல, ரவி மெதுவாக டேவிட் அருகே வந்து நின்று, “சொல்றதைக் கேளுடா. இப்படி இருக்காத” என்றான்.

சோர்வான குரலில், “ஐ கேன் ஒன்லி பீ லைக் திஸ்” என்றான் டேவிட்.

“அதான் வேண்டாம்னு சொல்றோம்” என்று மதுவும் அருகில் வர, கண்களில் கண்ணீரின் அளவு அதிகரிக்க, “என்னால இதுலருந்து வெளிய வர முடியல மது” என்று ஆயாசத்துடன் சொன்னான் டேவிட்.

“அங்கிள் நம்மள விட்டுப் போய் எட்டு மாசத்துக்கு மேல ஆகுது. அதுலருந்து இன்னும் நீ வெளிய வர முடியலனு சொல்ற. அதுக்குத்தான் சைக்யாட்ரிஸ்ட் பார்க்கலாம்னு சொல்றேன். லைஃப் ஃபுல்லா இப்படியே இருப்பியா? நீ இப்படி இருக்கிறது எனக்கு கஷ்டமா இருக்குடா” என்று ரவியும் கண் கலங்கினான்.

இங்கே டேவிட்டின் கண்ணீர் ரவியையும் கலங்கச் செய்கிறதா என்று வினா எழுந்தால்… சற்றும் யோசியாமல், ‘ஆம்’ என்று ஒரே வார்த்தையில் விடை எழுதிவிடலாம்… எழுதிவிட வேண்டும்! ஏனெனில் ரவி அப்படித்தான்!!

ரவியும் டேவிட்டும் உயிர் நண்பர்கள்!!

ரவி குடும்பத்திற்குப் பூர்விகம் தமிழ்நாடு. ஆனால் அவனது தாத்தா, அப்பா, அவன் என்று மூன்று தலைமுறையாக அவர்கள் வசிப்பது வெனிஸில்தான். முதலில் வணிகத்திற்காக இங்கு வந்தவர்கள், தொழில் சிறக்கவும் இங்கேயே இருந்துவிட்டனர்.
இப்பொழுது அவன் பெற்றோர், தாத்தா, பாட்டி பாரீசில் இருக்கிறார்கள். சில உறவுகள் அங்கே இருப்பதால், முதுமையை அவர்களுடன் கழிக்கின்றனர்.

தொழிலை இப்போது ரவி பார்த்து வருகிறான். என்ன தொழில் என்றால்… வித விதமான வடிவங்களில் நுண்ணிய வேலைப்பாடுகள் கொண்ட முகமூடிகள் தயாரிப்பது மற்றும் இவைகளை நுகர்வோரிடம் கொண்டு சேர்க்க விற்பனை மையங்களும் உண்டு… இதுவும் தொழிலில் அடக்கம்!

வெனிஸ் வரும் சுற்றுலாப் பயணிகள் நினைவுப் பொருளாக இதை வாங்கிச் செல்வதால் இதன் விற்பனை வருடம் முழுதும் குறையாமல் இருக்கும். மேலும் ‘கார்னிவல் ஆஃப் வெனிஸ்’ திருவிழா கொண்டாட்டத்தில் இந்த முகமூடிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

டேவிட்டை ரவிக்கு சிறுவயதிலிருந்து தெரியும். அங்கிருந்தே அவர்களது நட்பு தொடங்கியிருந்தது. விளையாட்டு, அடிப்படைக் கல்விகள், பல்கலைக்கழகப் படிப்பு என்று இவர்கள் நட்பு பயணம் செய்த தூரம்… இவர்களது வயதைவிட ஒரு சில வருடங்களே குறைவு!

நண்பர்கள் என்றாலும் இருவரின் குணநலன்கள் வெவ்வேறே! ஏன்… நேரெதிர் என்றுகூட சொல்லலாம்!!

டேவிட் கூச்ச சுபாவம் கொண்டவன்! ரவி எல்லாரிடமும் சகஜமாகப் பேசிப் பழகுபவன்! தோழமை உணர்வை ரவி வெளிப்படையாகக் காண்பிப்பான்! அது அவனது பேச்சில், செயலில் நன்றாகத் தெரியும்! ஆனால் டேவிட் அதைப் பெரிதாக வெளிப்படுத்த மாட்டான்! கூர்ந்து கவனித்தால் மட்டுமே தெரியும்!

இப்படி இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்!!

முரண்பாடுகள் இருந்தாலும் இவர்களுடையது அசைக்க முடியாத, ஆழமான நட்பு! இந்த நட்புறவால்… தொழில் ரீதியாக அறிமுகமாகியிருந்த இருவர் குடும்பத்தினருக்கும் இடையே அழகான பிணைப்பு உண்டாகி, இவர்களைத் தங்கள் வீட்டுப் பிள்ளைகளாக உரிமை பாராட்ட வைத்திருக்கிறது!!

அதிலும் டேவிட்டின் அமைதியான குணம், சாந்தமான அவன் பேச்சு ரவியின் பெற்றோர், உறவுகளுக்கு அவ்வளவு பிடிக்கும். டேவிட்டின் உறவினர்களும் அப்படித்தான். அவனுக்காக ஒவ்வொன்றும் பார்த்துப் பார்த்துச் செய்வார்கள்!

மற்றவர்களே அப்படியென்றால் பெற்றவர் எப்படி இருப்பார்?

டேவிட் தந்தை ஜேன்சன் ஃபெரோ!

டேவிட்மீது எக்கச்சக்க பாசம் அவருக்கு! அன்பு, அரவணைப்பு, அக்கறை, அதட்டல், அறிவுரை… என்று எல்லாம் கலந்தே மகன்மீது ஜேன்சன் பாசத்தை வெளிப்படுத்துவார்! மகனின் பேச்சுகள், செயல்கள் என்று ஒவ்வொன்றையும் ரசிப்பார்… காணொளி எடுத்து வைத்துக் கொண்டு, அதை ஓராயிரம் முறை கண்டு கண்டு மகிழ்வார்!

தொழில், அங்கே சந்திக்கும் மனிதர்கள், நண்பர்கள் என்றொரு வெளியுலக வாழ்க்கை இருந்தாலும்… அவருக்கும், அவரது மகனுக்குமென சிறு உலகமும் உண்டு! ஆயிரமாயிரம் மகிழ்வான, அன்பான, அர்த்தமான தருணங்களால் அந்த உலகத்தை மகனுக்காக அழகாக்கி வைத்திருந்தார்!!

அவரின் எல்லாமும் அவர் மகன்தான்!!

டேவிட் தந்தை ஜேன்சன் பற்றிக் கூற வேண்டுமானால், வெனிஸிலிருந்து சில கிலோமீட்டர் தூரத்திலுள்ள மிரானோ [Murano] தீவில் கண்ணாடியை உருக்கி அலங்கார பொருட்கள், சிற்பங்கள், விளக்குகள் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றை நடத்தி வந்தார்.

இவர் ஒரு வெனிஸியர்! இருந்தும் ஜேன்சன் தமிழ் பேசுவார்!!

எப்படியென்றால்… ஜேன்சனின் மனைவி வாணி தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்பதால்! மேற் படிப்பிற்காக இத்தாலி வந்தவருக்கு, படிப்பை முடித்ததும், வெனிஸின் சுற்றுலா துறையில் வேலை கிடைத்து, அந்தப் பணிக்காக இந்த நகரத்திற்கு வாணி குடிபெயர்ந்தார்.

வேலை, தொழில் என்று நகர்ந்த வாணி, ஜேன்சன் நாளில்… ஏதோ ஒரு நாளில் இருவரும் முதன்முதலாகச் சந்திக்க நேர்ந்தது. அதன்பின்னும் இதுபோன்று சந்திப்புகள், ஓரிரு வார்த்தைகள் பேசும் தருணங்கள் இருந்தன. ஏதோ ஒரு கட்டத்தில் தற்செயலான சந்திப்புகள்… திட்டமிட்டச் சந்திப்புகளாக மாறின! பொதுவான பேச்சுகள்… ‘போதாது போதாது’ என்ற பேச்சுகளாக மாறின!

இருவருக்கும் இடையே இயல்பாக காதல் மலர்ந்தது!!

காதலாக நகர்ந்த இருவரின் நாட்களில், ஏதோ ஒரு நாளில் திருமணம் பற்றி யோசித்தனர். வாணி வீட்டில், ‘வெளிநாட்டவரா?!’ என்று மறுத்திட, இந்தியா சென்று… அவர்களிடம் பேசி, அவர்களை முழுமனதாகச் சம்மதிக்க வைத்து ஜேன்சன் வாணியைக் கைப்பிடித்தார்.

மனைவிமீது அப்படியொரு காதல் அவருக்கு!

அந்தக் காதல்தான் ஜேன்சனை… தமிழ் கற்றுக் கொள்ள வைத்தது! அந்தக் காதல்தான் மனைவி மறைந்தபின், காதலித்த நாட்களை நினைத்தே வாழ வைத்தது… சிறுவயதிலே தாயை இழந்த மகனுக்கு தாயுமானவராக இருக்க அவருக்குத் தைரியம் தந்தது.

அதே காதல்தான் ஜேன்சனை மகனுக்கும் தமிழைக் கற்றுக் கொடுக்க வைத்திருந்தது!

அப்பா சொல்லித் தந்தாலும்… நண்பன், அவன் உறவுகள் என்று தமிழ் பேசும் சூழலில் டேவிட் வளர்ந்திருந்தாலும்… ஜேன்சன் அளவிற்கு அவனுக்குத் தமிழ் பேச வராது. ஆங்கிலம் கலந்தே அவன் தமிழ் பேச்சு இருக்கும்!

சிலநேரங்களில் இத்தாலியன் மொழி பேசாமல், அப்பாவும் மகனும் சரியான உச்சரிப்புடன் அதிக தமிழ் வார்த்தைகள், குறைவான ஆங்கிலச் சொற்கள் என்று பேசிக் கொள்வார்கள்! வெனிஷிய தோற்றத்தில் இருக்கும் இருவரும் அப்படிப் பேசுவது, பார்த்துப் பழகியவர்களுக்கு வியப்பு ஒன்றும் இருக்காது! புதிதாக பார்ப்பவர்களுக்கு ஆச்சரியம் தந்திடும்!!

ஆனால் என்னவொரு துரதிஷ்டம் என்றால், இனிமேல் அத்தகைய ஆச்சரியம் யாருக்கும் கிடைக்கப் போவதில்லை!

ம்ம், இப்போது ஜேன்சன் உயிருடன் இல்லை. எட்டு மாதங்களுக்கு முன் அவர் தவறிவிட்டார். திடீரென்று நிகழ்ந்த தந்தையின் மரணத்திலிருந்து மீண்டு வர முடியாமல் டேவிட் தவிதவித்துக் கொண்டிருக்கிறான்.

தந்தை மறைவிற்குப் பின் அவன் இயல்பாகவே இல்லை. நிறைய நேரங்களில் தன்னைத் தனிமைப் படுத்திக்கொண்டு, பழகியவர்களிடம் கூடப் பேசாமல் இருக்கின்றான். கேள்வி கேட்டால் ஓரிரு வார்த்தைகளில் பதில் என்று பேச்சை நிறுத்திக் கொள்கிறான். தொழிலையும் பார்ப்பதில்லை.

அப்பாவுக்கும் அவனுக்குமென்று உண்டாகியிருந்த சிறு உலகம் உடைந்ததில், உருக்குலைந்து போயிருக்கின்றான்! அப்பா இல்லாத அந்தச் சிறு உலகிலே அவன் நின்று கொண்டதால், அவனுடைய அகம் ஆரோக்கியம் தொலைத்து அமைதியிழந்து, அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறது!

சரியாக உண்ணுவது இல்லை, உறங்குவது இல்லை, உடுத்தும் உடைகளில் கவனமில்லை. எப்போதும் சோர்வுடன் இருக்கின்றான். அப்பா ஞாபகம்தான், அவர் பற்றிய நினைவுகள்தான் எப்போதும். அப்பாவுடன் வாழ்ந்த நாட்களை நினைத்து நினைத்து கண்களில் கண்ணீர் கட்டிவிடுகிறது.

அவன் கண்ணீர் அத்தனை உறவுகளையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது!

ரவியின் பெற்றோர், உறவினர்கள்… டேவிட் பெற்றோர் வழி உறவுகள்… அவன் மனதை மாற்ற நிறைய முயற்சித்தார்கள். இடமாற்றம் அவனை மாற்றுமென நினைத்து பாரிஸுக்கு அழைத்துச் சென்றார்கள். தனியாக விட வேண்டாம் என்று, அவன் அம்மாவின் சகோதர்கள் இங்கே வந்து தங்கிப் பார்த்தார்கள்.

எதற்குமே எந்தப் பலனும் கிடைக்கவில்லை! டேவிட் அப்படியே இருந்தான்!!

அவனுக்காக… ரவியும் மதுவும் நிரம்ப மெனக்கெடல் எடுக்கிறார்கள். நிறைய யோசிக்கிறார்கள். அவனிடம் பேசுகிறார்கள். ‘இப்படி இருக்காத, இதுலருந்து வெளியே வா டேவிட்’ என்று சொல்கிறார்கள். ஆனால் அவர்களாலும் இந்தத் துயரிலிருந்து அவனை மீட்டுக் கொண்டு வர இயலவில்லை.

அதனால்தான் இதன்பின் மனநல மருத்துவரைப் பார்ப்பதே நல்லது என்ற முடிவிற்கு அனைவரும் வந்திருக்கிறார்கள். அதைப் பற்றித்தான் டேவிட்டிடம் இக்கணம் ரவி, மது பேசுகிறார்கள்! இன்று மட்டுமல்ல, கடந்த ஒரு வாரமாக இருவரும் இதைப் பற்றி அவனிடம் பேசிக் கொண்டுதான் இருக்கிறார்கள்!!

நண்பர்கள் இருவரும் கண்கலங்கி இருப்பதை பார்த்த மது, “டேவிட் ஒருதடவ வந்து பாரு. அன்கம்ஃபர்டபிலா ஃபீல் பண்ணா, இது வேண்டாம், விட்டுடலாம். இல்ல வேற பார்க்கலாம். ஆனா சைக்யாட்ரிஸ்ட்கிட்ட வரமாட்டேன்னு மட்டும் சொல்லாத. எங்களுக்கு நீ சரியாகணும் டேவிட்” என்றாள்.

“ம்கூம்… எனக்கு இப்படி இருக்கிறது ஓகேதான்”

“ஆனா எங்களுக்கு ஓகே இல்ல. நீ கஷ்டப்படுறத எங்களால பார்க்க முடியல. பாரு இவனை?” என்று கண்கலங்கி இருந்த ரவியை காட்டியவள், “உனக்காக இல்லனாலும் இவனுக்காவது வா ப்ளீஸ்” என்று மன்றாடினாள்.

கலங்கிய கண்களோடு டேவிட் யோசித்தான். அவனுக்கு… வெளியே செல்வது, சென்று யாரையும் பார்ப்பது, எவரிடமும் பேசுவது… என்று எதுவும் செய்திட முடியவுமில்லை… பிடிக்கவுமில்லை. அப்பாவை இழந்ததால், அவர் இல்லாமல் போனதால் உண்டான மனச்சோர்வு அவனை அப்படி ஆகியிருந்தது.

என்ன செய்யவென தெரியாமல் யோசித்தபடி டேவிட் இருக்க… ரவி, “ஒரு தடவை… ஒரே ஒரு தடவை போய் பார்க்கலாமே” என்று கெஞ்சினான். ரவி முகத்தைப் பார்த்தபடி சில வினாடிகள் இருந்த டேவிட், கவலைப் பெருமூச்சு ஒன்று எடுத்துக் கொண்டு, சரியென்பது போல் லேசாக தலையசைத்துவிட்டு, அப்படியே சோஃபாவில் படுத்துக் கண்கள் மூடிக் கொண்டான்.

முக வாட்டத்துடன் அவனைப் பார்த்த ரவி, “ம்ம நான் ஹாஸ்பிடல்ல பேசி டாக்டர் அப்பாயின்மென்ட் வாங்கறேன்” என்று கிளம்பப் போக, “சாப்பிட்டு போ” என்ற மது, “டேவிட் நீயும் வா” என்றழைக்க, “வேண்டாம்” என்று டேவிட் கலங்கிய குரலில் கண்கள் மூடியபடியே பதில் சொன்னான்.

சாப்பிட உட்கார்ந்த ரவி, நண்பன் உண்ணமறுக்கவும் மனமில்லாமல் எழுந்து கொள்ள, “நீ முதல சாப்பிடு. அவனை அப்புறமா சாப்பிட சொல்றேன்” என்று அவனுடன் அமர்ந்து பரிமாற ஆரம்பித்தாள் மது.

“மது நீ?” என்று ரவி கேட்டதற்கு, “உன்கிட்ட சரினு சொன்னா, கண்டிப்பா மாற மாட்டான். ஆனாலும் இன்னைக்கே அப்பாயின்மென்ட் கிடைக்கிற மாதிரி பாரு. அவன் மனசு மாறதுக்குள்ள கூட்டிட்டு போயிடனும்” என்றாள்.

“இன்னைக்கேனா கஷ்டம், பார்க்கிறேன்” என்று வேகமாகச் சாப்பிட்டவன், மதுவிற்கு இடையிடையே கொடுத்தபடி சாப்பிட்டு முடித்து கிளம்பினான்.

அவன் போனதும்… மது பாத்திரங்களை எடுத்து வைத்துவிட்டு ஒரு கண்ணாடி டம்பளருடன் சோஃபா அருகே சென்று, “எழுந்து இந்த ஜூஸ குடிச்சிக்கோ டேவிட்” என்றதும், “ம்கூம்… வீட்டுக்குப் போறேன்” என்றான்.

“போ… ஆனா இத குடிச்சிட்டுப் போ. ரவி ஃபோன் பண்ணி நீ சாப்பிட்டியானு கேட்பான். சாப்பிடலைனு தெரிஞ்சா பீல் பண்ணுவான்” என்றதும், டேவிட் டம்பளரை வாங்கி மெதுவாக குடிக்க ஆரம்பித்தான்.

“நீங்க சாப்பிட்டிங்கள?” என்று அவர்களுக்காக பார்த்துக் கேட்க, “ம் ம்” என்று சோஃபாவில் அமர்ந்தவள், “கொஞ்சமா சாப்பிடறியா?” என்றாள். ‘வேண்டாம்’ என்று மறுத்து, பழச்சாறு குடித்து முடித்ததும் அதே கட்டிடத்தில் மாடியில் இருக்கும் அவன் வீட்டிற்குச் சென்றான்!

கதவைத் திறக்கும் முன் ஒரு நொடி நின்றான். தந்தை வந்து வாசற்கதவைத் திறந்துவிட்டு… புன்னகையுடன் நின்ற நாட்கள் ஞாபகத்தில் வந்தன. அவைத் திரும்பிக் கிடைக்க போவதில்லை என்ற நிதர்சனம், அவனைக் கொன்றது. ஒருமுறையாவது திரும்பிக் கிடைத்துவிடாதா என்ற ஏக்கம்… நிந்தித்தது.

கண்களில் கண்ணீர் நிரம்பிட… கதவைத் திறந்தான்.

திறந்ததுமே… அப்பாவின் வாசத்தை தொலைத்திருந்த வீடு… தீராத வலியைத் தந்தது. மெதுவாகக் கதவைச் சாற்றி, அப்படியே அதில் சாய்ந்து கண்கள் மூடினான். தந்தை இழப்பின் தாக்கத்தை அவன் இதயம் தாங்கிக்கொள்ள இயலாமல், மூடிய இமைகளை மீறி கண்ணீர்த்துளிகள் வழிந்தன.

**********************************

மாலை நேரம், ரியால்டோ மார்க்கெட் பகுதி!

நான்கு நாள் கடந்திருந்தன!

வெகு நாட்களுக்குப் பின் ரவி, மது வெளியே வந்திருக்கிறார்கள்.

காலையில் டேவிட்டை மனநல மருத்துவரிடம் அழைத்து சென்றிருந்தார்கள். அவனைப் பரிசோதித்துவிட்டு அவனது மனநிலை மாறுவதற்கு என்னென்ன செய்ய வேண்டுமென சொல்லியிருக்கிறார். இனி அதையெல்லாம் அவர்கள் தவறாமல் பின்பற்றிட வேண்டும்.

இது, டேவிட் பழையபடி மாறிவிடுவான் என்ற நம்பிக்கையை இருவருக்குமே கொடுத்திருக்கிறது. அதுதான் ரவி ‘வெளிய போகலாமா?’ என்று கேட்டதும், மதுவும் கிளம்பிவிட்டாள்.

டேவிட்டையும் அழைத்தார்கள். ‘வரல. நீங்க போங்க’ என்று மறுத்துவிட்டான். அவனை எதற்காகவும் வற்புறுத்த வேண்டாமென மருத்துவர் சொன்னதால், இவர்கள் மட்டும் ரியால்டோ சந்தைக்கு வந்திருக்கிறார்கள்.

ரியால்டோ சந்தை! [Rialto Market]

பழங்கள், காய்கறிகளுக்கான மிகப் பெரிய சந்தை. கூடாரங்களுடன் கூடிய கடைகளில் விலைப்பதாகை வைக்கப்பட்டு… அன்று பறிக்கப்பட்ட பழங்கள், காய்கறிகள் விற்கப்படும். இதனுடன் மீன் சந்தை ஒன்று இணைந்திருக்கிறது. இந்தச் சந்தையின் பக்கமாகத்தான் கிராண்ட் கேனல் இருக்கிறது.

கிராண்ட் கேனல்! (Grand Canal)

இது வெனிஸின் குறுக்கே ஓடும் நான்கு கிலோமீட்டர் நீளமுள்ள பிரம்மாண்ட கால்வாய்! வெனிஸின் முக்கிய நீர் வழிப் போக்குவரத்து ஆதாரம் இது!!
போக்குவரத்திற்காக வாட்டர் பஸ், வாட்டர் டேக்சி, வெப்பரெத்தோ [vaporetto] பயன்படுத்தப்படுகின்றன. கரையின் இருபுறமும் அமைந்துள்ள பளிங்கு கல் மாளிகைகளைப் பார்த்தபடி கிராண்ட் கேனலில் செய்யும் பயணம் சுற்றுலா வாசிகளைக் கவர்ந்திழுக்கும் ஒன்றாகும்!

இந்த கிராண்ட் கேனல் குறுக்கே கட்டப்பட்டிருக்கும் பாலங்களில் ஒன்றுதான் ரியால்டோ பாலம்!

ரியால்டோ பாலம் [Rialto Bridge]!

வெனிஸ் நகரத்தின் பழைமையான பாலங்களில் இதுவும் ஒன்றாகும். பெரிய வில்வளைவான அமைப்பு கொண்டது. அளவில் பெரிது என்பதால் பாலத்தின் சரிவுகளில் பாதசாரிகள் நடக்க படிக்கட்டு வசதி உண்டு. பாலத்தின் இரு ஓரங்களிலும் பலதரப்பட்ட சிறுசிறு கடைகள் இருக்கும்.

மதிய நேரத்தில் வந்து காய்கறிகள், பழங்கள், மீன்கள் வாங்கியிருந்த ரவியும் மதுவும் அந்திசாயும் நேரம் ரியால்டோ பாலத்திற்கு வந்திருந்தார்கள்.

மது, பாலத்திலிருந்த கடை ஒன்றில் பொருட்களைப் பார்க்க, ரவி வெளியில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் பொருட்களைப் பார்த்துக் கொண்டிருந்தான். அப்போதுதான் அவன் கண்களில் ஒரு பொருள் தென்பட்டது.

கருப்பு நிற பீங்கானால் செய்யப்பட்ட ஏந்துதட்டுடன் கூடிய காஃபி கோப்பை! அதனுள் சிறுசிறு நுரைகளுடன் காஃபி ஊற்றப்பட்டிருப்பது போன்று மிகவும் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டிருந்தது!!

பார்த்ததும் அவனுக்குள் ஒரு சிறு நம்பிக்கை வந்தது. உடனே, “மது இங்க வாயேன்” என்று குரல் கொடுக்க, ‘என்ன?’ என்று கேட்பது போல் அவள் வந்து நிற்க… அந்தப் பொருளை எடுத்துக் காட்டி, “இத டேவிட்க்கு கிஃப்ட் பண்ண போறேன், எப்படி இருக்கு” என்றான்.

“அழகா இருக்கு… க்ளாஸா?” என்றாள் பார்த்துவிட்டு.

“இது செராமிக். இத கிஃப்ட் பண்ணா, கொஞ்சம் மைன்ட் சேஞ் ஆகி… டேவிட் ஷாப் ஓபன் பண்ணுவான்னு நினைக்கிறேன் மது”

“உனக்கு அப்படித் தோனிச்சினா ஓகே. பட் இப்படியே கொடுக்க வேண்டாம். கிஃப்ட் பேப்பர்…” என்று சொல்லும் போதே, ரியால்டோ பாலத்தின் படிக்கட்டு ஒன்றில் தடுமாறிய பெண்… ரவிமீது மோதியதில்… அவன் சமநிலை தவறி, கையிலிருந்த பொருள் கீழே விழுந்து சுக்குநூறாய் உடைந்தது.

அங்கே போய் கொண்டிருந்த சிலர் ஒருகணம் நின்று பார்த்துவிட்டு… நடந்து சென்றனர். கடைக்காரர் வந்து பார்த்ததும்… மது, ‘நான் பணம் கொடுத்து விடுகிறேன்’ என்று ஆங்கிலத்தில் சொல்ல, அவர் போய்விட்டார்.

அதற்குள் இடித்த பெண் ரவியின் முன் வந்து நின்று, “சாரி… சாரி. இட்ஸ் மை மிஸ்டேக். ரியலி வெரி சாரி” என்று அவர்களிடம் சொல்லிவிட்டு, “ஃபோன் கட் பண்றேன் திலீப். அப்புறம் பேசறேன்” என்று அலைபேசியில் சொன்னாள்.

ஆம்! அந்தப் பெண் கீர்த்திதான்!!

மீண்டும் அவள், “சாரி” என்று மன்னிப்பு கேட்டு, ‘படிக்கட்டில் தடுக்கியதில் இப்படி நடந்துவிட்டது’ என்று ஆங்கிலத்தில் சொன்னாள்.

ரவி அப்படியொரு கோபத்தில் நின்றான்! ஆனால் மது, “நீங்க தமிழா” என்று கீர்த்தியிடம் கேட்க, “ஆமா… நீங்களும் தமிழா?” என்று அவளும் கேட்க, “அட! ஆமாங்க” என்று மது வேக வேகமாக தலையாட்டினாள்.

சற்று இலகுவாக கீர்த்தி, “சாரி, ஸ்டெப்ஸ் தடுக்கி… அதான் இப்படி” என்று தமிழில் பேச, “பரவாயில்ல” என்று மது கூறும் போதே, டேவிட்டிற்காக வாங்க விரும்பிய பொருள் உடைந்த எரிச்சலில் இருந்த ரவி, “உனக்குப் பார்த்து வர தெரியாதா… கவனத்தை எங்க வச்சிக்கிட்டு வந்த?” என்றான்.

அவன் பேச்சில் கீர்த்திக்கு எரிச்சல் வந்தது. பேசாமல் போய் விடலாம் என்று தோன்றியது. ஆனால் தன்னால் பொருள் உடைந்ததால், “இப்படி மரியாதை கொடுக்காம பேசினா… அப்புறமா நானும் அப்படித்தான் பேசுவேன்” என்று பொறுமையாக சொல்லிப் பார்த்தாள்.

ரவி பதில் பேசுவதற்குள் மது, “அவங்க மன்னிப்பு கேட்டாங்கள, விடு” என்று சொல்ல, “அதெப்படி விட?! ஃபோன்ல பாய்பிரண்ட் கூடப் பேசிக்கிட்டே வந்து, மோதி… கிஃப்ட்ட உடைச்சிட்டு… மன்னிப்பு கேட்டா சரியாயிடுமா” என்றான் கோபமாக.

அந்தப் பேச்சை கேட்டபின் பொறுமையாக இருக்க இயலவில்லை கீர்த்திக்கு. கோபத்துடன், “ஏ, ஜட்ஜ்மென்டலா இருக்காதா! நான் பேசிக்கிட்டு வந்தது என் க்ளோஸ் ஃபிரண்ட்கிட்ட!!” என்றாள். பின் அமைதிப்படுத்தப்பட்ட குரலில், “ம், கிஃப்ட் உடைஞ்சதுக்கு, திரும்ப சாரி கேட்டுக்கிறேன்” என்றாள்.

“நீ சாரி கேட்டா… கிஃப்ட் பழைய மாதிரி வந்திடுமா? ப்ச், எவ்ளோ ஆசையா வாங்கி கொடுக்க நினைச்சேன் தெரியுமா?” என்றான் சமாதானம் ஆகாமல்.

கீர்த்தி ஒருமுறை மதுவை பார்த்துவிட்டு, “ஓ, உன் கேர்ள் ஃப்ரண்டுக்கு கிஃப்ட் பண்ண நினைச்சியா… அதான் இவ்ளோ கோபமா?” என்றாள்.

“நீயும் ஜட்ஜ்மென்ட்டலா இருக்காத!? இவ என் வொய்ஃப். இந்த கிஃப்ட் என் க்ளோஸ் ஃப்ரண்ட்காக வாங்க நினைச்சது”

ஓரிரு நொடிகள் யோசித்த கீர்த்தி, “நினைச்சதுனா, அப்ப இன்னும் வாங்கவே இல்லையா? அதுக்கே இவ்ளோ பேச்சா? ஓ, நீ வாங்காத பொருளுக்குப் பணம் கொடுக்கணும்னுதான் கோபமா?!” என்றாள்.

“ஃப்ரண்டுக்காகனு சொல்றேன்… அப்புறமும் பணத்துக்காகனு சொல்ற!! என் ஃப்ரண்ட்ஷிப் பத்தி” என்று ஆரம்பித்தவன், “ப்ச், உன்கிட்ட போய் எதுக்கு இத எக்ஸ்பிளேன் பண்ணனும்?! சாரி கேட்டுட்டேல. பேசாம போ… ப்ச், எரிச்சலா இருக்கு!!” என்று ரவி படபடத்தான்.

“அப்படித்தான் இருக்கு எனக்கும்! நான் ஏன் இங்க நிக்க போறேன்? உடைஞ்ச பொருளுக்கானப் பணத்தைக் கொடுத்திட்டுப் போகத்தான் போறேன்” என்று கீர்த்தி தன் பணப்பையை [Wallet] எடுத்தாள்.

“போ… போ… இனிமேலாவது யார்கூடவும் பேசிக்கிட்டு நடக்காம… பாதையில கவனத்தை வச்சி நடக்கப் பாரு. இல்லனா சம்பாதிக்கிற பணத்தையெல்லாம் இப்படித்தான் கொடுக்க வேண்டியதா இருக்கும்” – ரவி.

“என்ன நீ… சாரி கேட்டப்புறமும் மேனர்ஸ் இல்லாம இவ்ளோ பேசிக்கிட்டு இருக்கிற” என்று கீர்த்தி குரல் உயர்த்த, “நீ மட்டும் என்…” என்று பேசப் போன ரவியை, “போதும் பேசினது” என்ற மதுவின் அழுத்தமான குரல் பேச விடாமல் தடுத்துவிட்டது.

இதற்குமுன்னும் இதையே சொல்லிக் கொண்டுதான் இருந்தாள். அவன்தான் கேட்கவில்லை. இப்போது அழுத்திச் சொன்னதாலே கேட்டுக் கொண்டான். இதற்கு இவ்வளவு பேச்சுகள் வேண்டுமா என்று மதுவிற்கு தோன்றியது.

எனவே கீர்த்தியிடம், “அவன் பேசினதுக்கு நான் சாரி கேட்டுக்கிறேன். பணம் நாங்க கொடுத்துக்கிறோம். நீங்க போங்க” என்றாள் பொறுமையாக.

கீர்த்தி, “ஐயோ நீங்க எதுக்கு சாரி கேட்கிறீங்க… விடுங்க. நான் வேணும்னு பண்ணல. இருந்தாலும் கிஃப்ட் உடைஞ்சது என்னாலதான். பணம் நானே கொடுத்திடறேன்” என்றாள் தன்மையாக.

“பரவாயில்ல, நான் பார்த்துக்கிறேன். நீங்க போங்க” என்ற மதுவிடம்… கீர்த்தி திரும்பவும் மன்னிப்பு கேட்டு, கோபமாக ரவியைப் பார்த்துவிட்டே சென்றாள்.

அவனும் அப்படித்தான் இருந்தான். மது சொன்னதற்காக எதுவும் பேசாமல் நின்றானே தவிர, கோபம் இன்னும் குறையவில்லை. அதிலும் அவனுக்காக, கீர்த்தியிடம் மது மன்னிப்பு கேட்டதில் கோபம் கூடியிருந்தது.

உடைந்த பொருளுக்குப் பணம் கொடுத்து வந்த மது… இன்னும் இறுக்கமாக நின்றவனிடம், “ஏன் ரவி இப்படி, இது சாதாரண விஷயம்” என்றதும், “டேவிட் சம்பந்தப்பட்ட எதுவும் எனக்குச் சாதாரண விஷயமில்ல” என்றான்.

“ஏன் இப்ப இவ்ளோ கோபம்” என்று அவள் சிறு எரிச்சலுடன் கேட்க, “பின்ன, டேவிட்காக பார்த்துப் பேசினா, பணத்துக்காகப் பார்க்கிறியானு கேட்கிறா! கோபம் வராம என்ன செய்யும்” என்றான் பட்டென்று.

ரவி இப்படித்தான்! பொதுவாகவே முன்கோபக்காரன்… அதிலும் நண்பனுக்கு ஒன்றென்றால்… நண்பனை, நட்பை யாரும் ஏதாவது சொன்னால் சுர்ரென்று கோபம் வந்துவிடும்! பொறுமைகாக்க தெரியாது… பொங்கிவிடுவான்!!

“சரி… அதுக்காக இவ்ளோ பேசணுமா” என்றாள் மது.

“அவளும்தான பேசினா, அதுக்கு மட்டும் ஒன்னும் சொல்ல மாட்டிக்க. எனக்கு மேனர்ஸ் இல்லனு அவ சொல்றா, நீ அவகிட்ட போய் சாரி கேட்கிற… அதுவும் எனக்காகனு சொல்லிட்டு, தேவையேயில்ல” என்று மதுவிடமும் கோபத்தைக் காட்டினான்.

“இப்படிப் பேசத்தான் வெளிய கூட்டிட்டு வந்தியா, இதுக்கு நான் வீட்டுக்கே போறேன்” என்று நடக்க, “மது நில்லு” என்று அவள் முன் சென்று, “இத்தனை நாளைக்கு அப்புறமா ஷாப்பிங் வந்திட்டு, எதுவும் வாங்காம போகாத” என்று சிறு எரிச்சலுடன் சொன்னான்.

“நீ இப்படி இருந்தா… எப்படி ஷாப்பிங் பண்ண?” என்று அவன் முகத்தைக் காட்ட… அடுத்த நொடி கோபத்தை, எரிச்சலை தூர தூக்கிப் போட்டு, “இப்படி இருந்தா ஓகேவா மது?” என்று புன்னகையுடன் கேட்டு நின்றான்.

அவ்வளவுதான் அவளிடம் அவன் கோபம் தாக்குப் பிடிக்கும்!

சற்றுமுன் அவன் பேசிய விதத்தில் உடன்பாடு இல்லாததால், “கோபத்தில என்ன பேசறோம்னு யோசிக்காம பேசற ரவி. நல்லதில்ல, தப்பும் கூட. இப்படி இருக்காத நீ!” என்று கண்டிப்புடன் சொன்னாள்.

“நானும் ட்ரை பண்றேன். முடியல, என்ன செய்ய!? ஆனா மது எனக்கு சமமா அவளும் பேசினா… இத ஒத்துக்கனும் நீ”

“நீ பேசின… அதான் அவங்களும் பேசினாங்க”

அவளையே பார்த்தவன், “ஏன் மது… லவ் பண்ணிதான என்னய கல்யாணம் பண்ணிக்கிட்ட, எனக்காக சப்போர்ட் பண்ணனும்னு உனக்குத் தோனவே தோனாதா” என்று ரவி கேட்ட விதத்தில்… அவளுக்குப் புன்னகை வந்துவிட, அதற்குமேல் எதுவும் பேசாமல் அவனுடன் சென்றாள்.

அவ்வளவுதான் அவனிடம் அவளால் கண்டிப்பைக் காட்ட முடியும்!

மது… முழுப்பெயர் மதுமிதா. இந்தியாவிலிருந்து வெனிஸிற்கு குடும்பத்துடன் சுற்றலா வந்தபோதுதான் ரவியைச் சந்தித்தாள். பார்த்ததும் இருவரும் காதல் வயப்பட்டனர். பின் இரண்டு வருடங்கள் காதலித்து, பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.

ரவி வெனிஸில், மது தமிழ்நாட்டில் என்று அவர்கள் காதலித்த நாட்கள் ஒரு அழகான காதல் கதைக்குச் சமம்! ஆனால் முதலில் இவர்கள் காதலை ஏற்றுக் கொள்ள இருவரது குடும்பத்தினர் பெரும் தயக்கம் காட்டினர்!

மது வீட்டில் அவளை இவ்வளவு தொலைவில் திருமணம் செய்து கொடுக்க விருப்பமேயில்லை! எப்படி அவளை பார்த்துக் கொள்வார்களோ என்ற பயம்! அதிலும் மதுமிதா பெற்றோருக்கு இந்தப் பயம் நிரம்பவே இருந்தது!!

ரவியின் பெற்றோர்… இங்கே வசிக்கும் இந்திய குடும்பத்திலிருந்து மருமகள் வரவேண்டும் என்று விரும்பினர்! அவர்களது வாழக்கைமுறைக்கு மதுமிதா பொருந்திப் போவாளோ, மாட்டாளோ என்ற பயம்!

இந்தெந்த காரணங்களலால் இருவரது குடும்பத்தினருக்கும் தயக்கம்! அதை வெளிப்படுத்தவும் செய்தார்கள்! ரவி, மதுதான் அவரவர் வீட்டினரிடம் பேசி அவர்களைச் சம்மதிக்க வைத்து திருமணம் செய்து கொண்டனர்!

திருமணத்திற்குப் பின் ரவி மதுவைப் பார்த்துக் கொள்ளும் விதத்தில், இங்கே மதுமிதா பொருந்திப் போனதில் அவர்கள் குடும்பத்தினருக்கு அவ்வளவு நிறைவு. தங்கள் தயக்கம் தேவையற்றது என்று புரிந்து கொண்டனர்.

அதிலும்… யார் மனதையும் புண்படுத்தாமல் மது பேசுவது, பழகுவது, நடந்து கொள்ளுவது ரவியின் உறவினர்களுக்கு நிரம்ப பிடிக்கும்.

அப்படித்தான்… அதேபோல்தான் ரவிக்கும் மதுமிதாவைப் பிடிக்கும் என்று சொல்ல முடியாது. ஏனென்றால் ரவிக்கு மிக மிக… ம்கூம்… எத்தனை ‘மிக’ தட்டச்சு செய்தாலும் போதவே போதாது… நீண்டு கொண்டே போகும்!

அதாவது ரவிக்கு மனைவிமீது கொள்ளை ப்ரியம்!!

இதோ… அவள் ஆசை ஆசையாக கேட்டதை எல்லாம் வாங்கிக் கொடுத்தான்! அவளுக்காக வாங்கித் தர ஆசைப்பட்ட அனைத்தையும் வாங்கித் தந்தான்! டேவிட் சரியாகிவிடுவான் என்ற நம்பிக்கையில் வெகுசில மாதங்களுக்குப் பின் இருவரும் இப்படி இருக்கிறார்கள்!!

**********************************

கால்வாய் ஒன்றின் குறுக்கே மர சட்டங்களால் அமைக்கப்பட்ட பாலத்தில் திலீப் நின்று கொண்டிருந்தான். ஆட்கள் போவதும் வருவதுமாக இருந்தனர். நேரம் இரவை நெருங்குவதால் கால்வாய் ஓரம் கட்டப்பட்ட இருக்கைகளில், உணவகங்களில், மதுக்கூடங்களில் மக்கள் கூடியிருந்தனர்.

கீர்த்தி அழைப்பைத் துண்டித்த பின், ‘என்னாச்சு?’ என்று தெரியாமல் திரும்ப திரும்ப அவளுக்கு அழைத்துக் கொண்டிருந்தான். சற்று நேரத்திற்குப் பின் அவள் வரவும், “திடீர்னு கால் கட் பண்ணிட்ட. திரும்ப ஃபோன் பண்ணாலும் ஏன் எடுக்கலை?” என்று கேட்டான்.

ரவி பேச்சில் உண்டான கோபத்தில், “சரியான டென்சன்ல இருக்கேன். எதுவும் கேட்காத” என்றாள்.

“என்னாச்சு, என்ன டென்சன்” என்றான் எப்போதும் காட்டும் அவளுக்கான அக்கறையுடன்.

“உன்கிட்ட பேசிக்கிட்டே வந்ததுல, தெரியாம ஒருத்தன் மேல மோதிட்டேன். அதுல அவன் கைலருந்த கிஃப்ட் விழுந்து உடைஞ்சிருச்சி. அஃப்கோர்ஸ் தப்பு என்மேலதான். மன்னிப்பு கேட்டேன். பணம் கொடுக்கிறேன்னு சொன்னேன். அப்புறமும் ரொம்பப் பேசினான்” என்றாள் எரிச்சலாக.

யாரோ ஒருவன் கீர்த்தியைப் பேசுவதா என்று பொங்கி வந்த ஆத்திரத்தில், கோபத்தில், “யாரவன்?” என்றான்.

“யாருனு எப்படித் தெரியும்… ஆனா தமிழ்ல பேசினான்”

உடனே திலீப், “என்ன கீர்த்தி உன்னய பேசினான். நீயேன் என்னய கூப்பிடல. கூப்பிட்டிருந்தா, அந்த ரொம்ப பேசினவனை நாலு கேள்வி கேட்ருப்பேன்ல, தேவைனா நாலு அடி அடிச்சிருப்பேன்ல” என்று கோபமாகப் படபடத்தான்.

அவன் படபடப்பைப் பார்த்தவள்… தன்னை இலகுவாக்கிக் கொண்டு, “எதுக்கு இவ்ளோ கோபம் திலீப்… போறான் விடு” என்றாள்.

“அதெப்படி அப்படியே விட சொல்ற நீ?!”

“விட சொல்லலை… திருப்பிப் பேசிட்டுத்தான் வந்திருக்கேன்னு சொல்றேன்”

அவனுக்குத் தெரியும்… இதையெல்லாம் அவளே சமாளித்து விடுவாளென்று. ஆயினும் அவளுக்காக அவளே நிற்க வேண்டும் என்ற நிதர்சனம் அவனை நிந்திப்பதால், “நீ பேசியிருப்பனு தெரியும், ஆனா நானும் வந்து உனக்காக பேசிருப்பேன்ல, என்னய கூப்பிட்டிருக்கலாம் நீ” என்றான்.

சிலநொடிகள் ஒன்றும் பேசாமல் இருந்தாள். பின் பொறுமையாக, “இங்க பாரு திலீப், என் டென்சன் போயிடுச்சி. நீயும் ரிலாக்ஸ் ஆகு” என்றாள்.

அப்போதும் “உன்னய டென்சன் பண்ற மாதிரி ஒருத்தன் பேசிருக்கான்கிறதா நினைச்சா, கோபம் அப்படி வருது. ப்ச், இதுல எப்படி ரிலாக்ஸ் ஆக?” என்றே சொன்னான்.

அவளுக்காக யோசிப்பதால்தான் அவனிடம் இந்தக் கோபம் என்பதால், “சரி, இனி இப்படி எதும்னா உன்னய கூப்பிடுறேன்” என்று சொன்னபின்தான் சற்று சாதாரணமானான் திலீப்!

அதைக் கண்டவள்… அவனை மேலும் இலகுவாக்க, “அப்போ நீ வந்து நல்லா கேள்வி கேளு, இல்ல நாலு அடி கொடு, சரியா?” என்றாள் விளையாட்டாக.

அவள் சொன்ன விதத்தில், அவனுக்குச் சின்னதாக சிரிப்பு வந்தது. சிரித்தும் கொண்டான். அதன்பின் கீர்த்தி எதுவும் பேசவில்லை, சூரியன் அஸ்தமிக்கும் வானத்தை, சூழலில் நடப்பவைகளை வேடிக்கைப் பார்க்க ஆரம்பித்தாள்.

சற்றுநேரம் சென்றபின், அவனைப் பார்த்து, “கோபம் போயிடுச்சா…” என்று அவள் கேட்டதற்கு, “இல்ல, போகல” என்றுதான் சொன்னான்.

ஆம்! திலீப் அப்படித்தான்! கீர்த்தியை யாரும் எதுவும் சொன்னால், பேசினால் கடுங்கோபம் கரைபுரண்டு வந்துவிடும்! அதைக் கட்டுப்படுத்த நினைக்கவும் மாட்டான், கட்டுப்படுத்தி இருக்கவும் அவனால் முடியவே முடியாது! ஏதேனும் ஒரு விதத்தில் அதை அவர்களிடம் காட்டினால்தான் அவனுக்கு நிம்மதி!!

**********************************

ரீசோல் யுவர் லைஃப், சான் மார்க்கோ!

அடுத்தநாள் மதியநேரம்!

அதிகமாக யோசித்து யோசித்து மனஅழுத்தம் வந்த ஒருவருக்கு ஆலோசனை வழங்கிக் கொண்டிருந்தாள். அந்த நபர் பேசி முடிக்கவும்… கீர்த்தி, ‘உங்களால மாத்த முடியுங்கிற விஷயத்தைப் பத்தி மட்டும் இப்போதைக்கு யோசிங்க.

ம் ஒரு விஷயத்தை மாத்த முடியாதுனு தெரிஞ்சா விட்டுடுங்க… உங்களைக் கஷ்டப்படுத்திக்காதீங்க’ என்றாள் ஆங்கிலத்தில். அந்த ஆலோசனை அமர்வு இப்படியே போய்க் கொண்டிருந்தது.

கடைசியில், ‘நெக்ஸ்ட் செஷன் டைமிங்க் டீடெயில்ஸ் எல்லாம் டெக்ஸ்ட் பண்றேன்’ என்று சொல்லி அவரை அனுப்பினாள்.

அதன்பின் யாரும் வரவில்லை என்பதால் குறிதாள் அட்டையில் ஏதோ எழுதிக் கொண்டிருந்தாள் சிலவினாடிகளுக்குப் பின் கதவு தட்டப்பட்டதும், “எஸ் கம் இன்” என்று கீர்த்தி சொல்ல… ரவியும் மதுவும் உள்ளே வந்தார்கள்.

சட்டென்று கீர்த்திக்கும் ரவிக்கும் அன்றைய பேச்சுதான் ஞாபகத்தில் வந்து நின்றது! ‘இவன் ஏன் இங்க?’ என்று கீர்த்தி கண் சுருக்கினாள்! ரவியும், ‘ப்ச், இவளா?’ என்று முகம் சுருக்கினான்! என்னமோ ஒருவருக்கு மற்றொருவரை நல்லவிதமாக எண்ணத் தோன்றவில்லை!!

Leave a Comment

error: Content is protected !!
Scroll to Top