Kathambari Novels
அத்தியாயம் – 19 (Mini Episode)
இதயத்தின் ஒரு மூலையில் அவள் வலிகளின் சுவடுகள் ஒட்டியிருந்தன. இதய இடுக்குகளில்கூட அவனுக்கான இஷ்டங்கள் ஆக்கிரமித்திருந்தன. அவனிடம் இன்றே இரண்டையும் சொல்லிவிட நினைத்தாள். முந்தைய இரு நாட்களில் அவர்கள் உரையாடல் முடிந்த விதத்தினால், இப்படியொரு முடிவு!
முடிவெடுத்த பின்னும் ஏன் யோசிப்பு என்றால் வலி, விருப்பம்… இதில் எதை முதலில் சொல்ல என்பதற்காக! யோசிப்பின் மூலம் பெருபான்மை எதுவென பார்த்தாள். முதலில் அதையே கூற முடிவு செய்தாள்!
‘வலியைச் சொல்வதில் பிரச்சனை இல்லை!’ என்றாலும், டேவிட் இதை எப்படி எடுத்துக் கொள்வான், தன் அம்மாவைப் பற்றிய அவன் அபிப்பிராயம் எப்படி இருக்கும் என்ற கேள்விகள் கண்முன் வந்து நின்றன!
‘அதை ஏன் இப்போதே யோசிக்கிறாய்?’ என்ற மற்றொரு கேள்வி வந்து நின்று, முந்தைய கேள்விகளை மறைத்தது!
எப்படிச் சொல்ல வேண்டும் என்று மட்டும் யோசித்துக் கொண்டாள். அதை ஒத்திகையும் பார்த்தாள். நினைவிலும் நிறுத்திக் கொண்டாள்.
அவ்வளவுதான்! கைப்பை, அலைபேசி எடுத்துக்கொண்டு எழுந்து, சென்டரை பூட்டிவிட்டு சான் போலோவை நோக்கி நடந்தாள். அவள் வரும்போது நேரம் ஒன்பது மணியைத் தாண்டியிருந்தது. வாடிக்கையாளர் யாருமில்லை. டேவிட் நாற்காலிகளை ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்தான்.
அவள் வந்தது கண்டு புன்னகை செய்தான். பதிலுக்குப் புன்னகை தந்துவிட்டு நேராக ஒர்க் ஏரியா சென்று அமர்ந்தாள். கஃபே கதவைத் தாழிட்டு… எறியும் விளக்குகளை அணைத்துவிட்டு… அவளிருக்குமிடம் வந்து, “காஃபி?” என்றான்.
“இப்ப வேண்டாம்… உன்கிட்ட பேசணும்… நிறைய பேசணும்” என்று விழியின் விளிம்புகளில்கூட விருப்பங்கள் வைத்து அவனைப் பார்த்தாள். அவளையே பார்த்தவன், “ஒன் மினிட்” என்று இழுப்பறை ஒன்றைத் திறந்து வண்ணத்தாள் சுற்றப்பட்ட சிறு பெட்டியை எடுத்து கொடுத்தான்.
ஆச்சரியமாக பார்த்தாள். சிறு அதிர்ச்சியும் கொண்டு, ‘டேவிட்’ என்றாள். வாய் மட்டும் அசைந்தது. சத்தம் வரவில்லை. அதிர்ச்சியை விலக்கி, “கிஃப்ட்?” என்று கேட்டாள். “ம்ம்” என்றான். மென்னகையுடன் வாங்கிக் கொண்டாள்.
“என்… என்னது?” என்று நிமிர்ந்து பார்த்துக் கேட்டாள். அவள் உச்சந்தலையில் உள்ளங்கையால் அழுத்தியவன், “ஓபன் பண்ணிப் பாரு” என்று சொல்லி, ஒர்க் ஏரியா மேடையில் சாய்ந்து நின்றான்.
ஒரு முழு நிமிடம் விழியசையாமல் பரிசைச் சுற்றியிருந்த வண்ணத்தாளின் நிறத்தைப் பார்த்திருந்தாள். பின், “எனக்கா” என்று கேட்டபடி எழுந்தாள். ‘இது என்ன கேள்வி?’ என்பது போல் பார்க்க மட்டும் செய்தான்.
நிச்சயம் நேசத்தை வெளிப்படுத்தும் பரிசுதான் என்று அவள் மனம் அடித்துச் சொன்னது! அவள் விரும்பியது போல அவனே முதலில் சொல்லப் போகிறான்! அதில் அப்படியொரு ஆனந்தம் கீர்த்திக்கு! மனதின் எல்லாமும் பின்னுக்குத் தள்ளப்பட்டு, வண்ணத்தாள் பிரிக்கப்படும் ஓசை சரசரவென கேட்கும் அளவு படபடவென பிரித்தாள்!
அத்தனை அவசரம் அவளுக்கு… ஏன் இடம்மாற காத்திருக்கும் இதயங்களும், இத்தனை நாள் அவர்களைக் கவனித்த வெனிஸ் நகரமும் ‘என்ன பரிசு’ என்று ஆர்வத்துடன் எட்டிப் பார்த்து நின்றன!!
உள்ளிருந்த சிறு அட்டைப்பெட்டியையும் கடகடவென திறந்தாள்! பரிசைப் பார்க்கும் ஆர்வத்தில் சுற்றியிருந்த தாளை வேகமாக அகற்றியவளது முகம், அதைப் பார்த்ததும் ஒருமாதிரி மாறியது! ‘அட ச்சே’ என்றானது!
எட்டிப் பார்த்தவைகளும் இப்படித்தான் ஆயின!!
அப்படியென்ன பரிசு என்று பார்த்தால்… அது அவள் பெயரின் முதலெழுத்து இருக்கும் சாவிக்கொத்து! அதைப் பார்த்தாள். பின் அவனைப் பார்த்தாள். சிறு முறுவலுடன், “ஹவ் இஸ் இட்” என்று கேட்டான்.
“நல்லா இல்ல” என்றாள் முகத்தை உம்மென வைத்துக்கொண்டு.
நேராக நின்று, “ஏன் கீர்த்தி?” என்று காஃபி தயாரிக்க ஆரம்பித்தான்.
அவன் கேட்ட விதத்தில், ‘எதையும் பார்க்காம விட்டேனா?’ என்று அவளுக்குச் சந்தேகமாக போயிற்று. உடனே சாவிக்கொத்தை அப்படி இப்படி திருப்பிப் பார்த்தாள். இன்னும் ஏதும் அட்டைப்பெட்டியில் இருக்கிறதா என்று தேடினாள். எதுவும் இல்லை. அதன்பின், “ஏன்னா பிடிக்கல” என்றாள்.
“எந்த டிகேட்ல இருக்க டேவிட் நீ… இப்படி ஒரு கிஃப்ட் கொடுத்திருக்க. இதுக்கு நீ சும்மா இருந்திருக்கலாம்” என்று குரல் உயர்த்திச் சொன்னாள். “ப்ச், நானே சொல்லிருக்கலாம், ஒழுங்கா சொல்லிருப்பேன்… இப்போ என்ன சொல்ல? இத கொடுத்து… என்னய அப்செட் பண்ணிட்டான்” என்று முணுமுணுத்தாள்.
“நான்தான் ரொம்ப எக்ஸ்பெக்ட் பண்ணிட்டேன் போல” என்று சோர்வாய் சொன்னாள். சற்று யோசித்துவிட்டு, “இல்ல… அப்படிலாம் இல்ல, என்னோட எக்ஸ்பெக்டேஷன் கரெக்ட்தான்” என்று அவளுக்குள்ளே பேசிக் கொண்டாள்.
அந்நேரம் அங்கே இருந்த வண்ணத்தாள், சாவிக்கொத்து கண்ணில் பட, “ப்ச், வேற கிஃப்ட்டே கிடைக்கலயா” என்று சலிப்பாக கேட்டாள்.
அதுவரை அமைதியாக இருந்தவன், “இதுக்கென்ன” என்று வாய் திறந்தான்.
“இதுக்கென்னவா…? எனக்கு கிஃப்ட் பண்றப்ப யோசிச்சி செலக்ட் பண்ணிருக்க வேண்டாமா?”
“அப்படித்தான் செலெக்ட் பண்ணேன் கீர்த்தி”
“இத யோசிச்சி செலக்ட் பண்ணியா? அப்ப இதான் உன் டேஸ்ட்டா… இவ்ளோ மோசமாவா உன் செலக்க்ஷன் இருக்கு… ஆவேர்ஜ்னு கூட சொல்ல முடியாது, பிலோவ் ஆவேர்ஜ்… இல்ல ஒர்ஸ்ட்னு சொல்லிடலாம்… என்ன சொல்லிடலாம், அப்படித்தான் சொல்லணும்” என்றாள் கடகடவென.
சிறுகணம் பேசாமல் நின்றவன், “என் செலக்க்ஷன் பத்தி இப்படிக் கமென்ட் பண்ணாத, அப்புறம் ஃப்யூச்சர்ல நீதான் பீல் பண்ணுவ” என்றான்.
“இப்பவே நான் பீல்…” என்று ஆரம்பித்து, சட்டென்று நிறுத்தினாள். ‘என்ன சொல்றான், என்ன சொல்ல வர்றான்?!’ என்று கண்கள் சுருக்கி யோசித்தாள். அக்கணம், தயாரித்த காஃபியை அவள் பக்கமாக நகர்த்தினான்.
கண்களை விரித்து கோப்பையைப் பார்த்தாள். இதய வடிவ லாட்டே போட்ட காஃபி. அதில் ஒற்றை ரோஜாவும், மோதிரமும் வரையப்பட்டிருந்தது. சிலபல வினாடிகளாக பேசாமல் அதையே பார்த்து நின்றாள்.
“கீர்த்தி” என்றான்.
அவளது மனம் மகிழ்ச்சியில் துள்ளியும் குதித்தது. நெகிழ்ச்சியில் குழைந்தும் போனது. அதைச் சற்று சமநிலைப் படுத்திவிட்டுப் பேச நினைத்து, ‘கொஞ்சம் டைம் கொடு’ என்று முகமொழியால், விரல்களால் சைகை செய்தாள்.
சரியென தலையசைத்து அமைதியாக நின்றான்.
என்ன முயன்றும், மனதைச் சமநிலைக்குக் கொண்டு வர முடியவேயில்லை. அதனால் மனதின் சந்தோசத்தை அப்படியே பிரதிபலித்திட, அவன் முன்னே சென்று நின்றாள். சிறு புன்னகையுடன், ‘சொல்லு’ என்ற பார்வை பார்த்தான்.
பரிசைக் காட்டி, “இப்பவும் இந்த கிஃப்ட் பிலோவ் ஆவரேஜ்தான்” என்று தன் ஏமாற்றத்தைச் சொன்னாள். மறுநொடி, “ஆனா இது சூப்பரா இருக்கு” என்று வெள்ளை கோப்பையில் அவன் வரைந்ததைக் காட்டினாள்.
“உனக்குத் தெரியும்ல… ப்ரோபௌஷல் கிரேயிட்டிவா இருக்கனும்னு நான் சொன்னது… அப்புறமும் ஏன் இப்படி? இன்னும் கொஞ்சம் கிரியேட்டிவா நீ யோசிச்சிருக்கலாம், ப்ச் நான் ரொம்ப அன்ஹேப்பி” என்றாள்.
அடுத்தநொடி, “உனக்குத் தெரியாது டேவிட், நீதான் முதல நம்மளைப் பத்தி பேசனும்னு ஆசைப்பட்டேன். அதேமாதிரி நீயும் பேசிட்ட… நான் ரொம்பவே ஹாப்பி” என்றாள் உடல்மொழிகளில் உற்சாகத்தை வெளிப்படுத்தி!
“நானே இதுபத்தி உன்கிட்ட பேச நினைச்சி… அதுக்காக நிறைய யோசிச்சி வச்சிதான் வந்தேன். ஆனா இங்க வந்ததும் அப்செட் ஆயிட்டேன். எல்லாம் உன் கிஃப்ட்டால வந்தது!
இப்ப அப்செட் போயிடுச்சி. எல்லாம் சொல்ல ஆசையா இருக்கு. ஆனா எதும் ஞாபகத்தல இல்ல! இதுவும் உன்னாலதான் டேவிட்” என்றாள்.
“என்ன இது, மாத்தி மாத்தி பேசிக்கிட்டு இருக்கேன்” என்று யோசித்தவள், “உன்னாலதான் இப்படிப் பேசறேன்” என்று அனைத்திற்கும் அவனைத்தான் பிழை சொன்னாள்!
ஆனால் என்னவொன்று… மழையில் நனையும் குழந்தையின் மகிழ்வோடு அனைத்தையும் சொல்லியிருந்தாள்!!
“இப்ப நான் என்ன சொல்ல” என்று பேசாமல் சில நொடிகள் நின்றவள், “ம்ம் இதுக்கு மேல சொல்லனும்னா… ஐ லவ் யூதான் சொல்லனும் இல்லயா?” என்று கேட்டுவிட்டு மனம்விட்டுச் சிரித்தாள்.
சிரிப்போடு சிலாகித்தபடி, “சொல்றேன்! எனக்குச் சொல்லணும், எஸ், ஐ அம் இன் லவ்” என்று காற்றில் கைகள் விரித்துக் கத்திச் சொன்னாள். அவனைக் காதல் பார்வைப் பார்த்து, “ஐ லவ் யூ டேவிட்” என்று ரகசியமாகச் சொன்னாள்
தோன்றிய உணர்வுகளை உடனுக்குடன் வார்த்தைகளாய் உதிர்த்த அவளது உதடுகளின் வேகத்திற்கு ஈடுகொடுத்து கருவிழிகள் உருண்டதை, இமைகள் குதித்ததை, நாசி அசைந்ததை, புருவங்கள் உயர்ந்ததை, கூந்தல் சரிந்ததை, அதை அவள் சரி செய்ததை… ரசித்துப் பார்த்திருந்தான்!
இப்போது அவள் சிரிப்பதையும் அப்படித்தான் பார்த்தான்!!
கூடவே… விரிந்து சிரிக்கின்ற அவள் கன்னங்களை கைகளால் மென்மையாக ஏந்தியவன், “ஐ டோன்ட் நோ ஹவ் டு புட் இட் இன் டு வேர்ட்ஸ்… பட் கீர்த்தி, நானும் சொல்லணும்” என்று அவள் முகத்தை, அவன் முகம் அருகே கொண்டு வந்து முன்னெற்றி முத்தம் ஒன்றை வைத்து, காதலை வெளிப்படுத்தினான்!
அந்தக்கணம் இதயங்கள் இடம் மாறி… இன்னிசை வாசித்தன! வாழ்மொழி இல்லாமல் முத்தமொழியால் அவளுக்காக டேவிட் வெளிப்படுத்திய காதல், அப்படியொரு இதத்தை தந்தது கீர்த்திக்கு!!
அந்த இதத்தை இமைகள் மூடி உள்வாங்கினாள். பின் மெல்ல இமை திறந்து விளக்கின் வெளிச்சத்தில் தெரியும் அவனது முகம் பார்த்தபடி நின்றாள். பின், அவனது நெஞ்சத்தில் முகம் சாய்த்தவள், “சீக்கிரம் மேரேஜ் பண்ணிக்கலாம், அப்புறமா நீயும் நானும் ஒரு பேமிலி” என்றாள்.
இருகைகளால் அணைத்து… இன்னும் அவள் இதத்தைக் கூட்டி, “ம்” என்றான். இறுக்கமாக அவனை அணைத்துக் கொண்டாள்! சிறிது நேரம் உலகம் மறந்து இருவரும் உறைந்து நின்றனர்!!
பின் மெதுவாக அவளை விலக்கி, “காஃபி குடி” என்றான். அவன் தந்த பரிசை கைப்பையினுள் பத்திரப்படுத்தி, காஃபி எடுத்துக்கொண்டு கீழே அமர்ந்தாள். அவளருகினில் அமர்ந்த டேவிட், ஒரே மடக்கில் அவள் காஃபியை குடித்ததைப் பார்த்து ஆச்சிரியமாகப் புருவங்கள் உயர்த்த, “சூடே இல்ல” என்றாள்.
சிறிதாகச் சிரித்துக் கொண்டான்!
“சந்தோஷமா இருக்கேன்” என்று மனதாரச் சொன்னாள். “உன்னய அவ்ளோ பிடிக்கும்” என்று அவன் தோளில் தலை சாய்த்துக் கொண்டாள். “என்னமோ மனசு ரிலாக்ஸா, ரீலிஃபா ஃபீலாகுது” என்று அவன் கைவிரல்கள் கோர்த்துச் சொல்லிக் கொண்டாள்.
பற்றிய அவள் விரல்களுக்கு ஆறுதலாக சிறு அழுத்தம் தந்து… அவள் கையை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டான்!!
பலநொடிகள் அமைதியாக இருந்தவள், “டேவிட்…” என்றழைத்து, “எப்பவாது, எதுக்கு இந்த வாழ்க்கை எனக்கு மட்டும் இவ்ளோ அன்ஃபேரா இருக்குதுனு தோனும்” என்றவள், “அது ஏன்னு உன்கிட்ட சொல்லணும்… சொல்லட்டுமா டேவிட்” என்று அவன் முகம் பார்த்துக் கேட்டாள்!!