Kathambari Novels

அத்தியாயம் – 14


ரவி வீடு, சான் போலோ

திருமண நாள் கொண்டாட்டத்திற்கு வந்தவர்கள் இரண்டு நாள் இருந்துவிட்டு திரும்பிச் சென்றிருந்ததால், வீடு அமைதியாக இருந்தது. அனைத்துவித நவீன அம்சங்களும் கொண்ட சமையலறையில் நின்று டேவிட் உணவு சமைத்துக் கொண்டிருந்தான். வெகுநாட்களுக்குப் பின்னர், ‘நான் குக் பண்றேன்’ என்று ரவியிடம் சொல்லிவிட்டு, சமையலில் இறங்கிவிட்டான்.

இந்த இரண்டு நாளில், டேவிட் இன்னுமே சற்று இலகுவாக மாறியிருந்தான். இதை… டேவிட் அம்மாவின் உடன்பிறந்தோர்க்கு ரவி சொல்ல, காலையில் அவர்கள் அழைத்திருந்தார்கள். டேவிட்டும்… தன் இரு மாமாவிடம், அவர்கள் பிள்ளைகளிடம் சற்று இயல்பாகப் பேசியிருந்தான். 

அதில் அவர்களுக்கு அளவில்லா மகிழ்ச்சி! கூடவே கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட டேவிட் புகைப்படங்களை ரவி அவர்களுக்கு அனுப்பியிருக்க, தங்கை மகனைப் பார்க்கப் பார்க்க அப்படியொரு ஆனந்தம் அவர்களுக்கு. ரவியின் பெற்றோர், உறவுகள்… இங்கிருக்கும் டேவிட்டின் உறவுகள் என்று அனைவருக்குமே சந்தோஷ மனநிலைதான்!

அவர்களுக்கே அப்படியென்றால் ரவிக்கு? சொல்ல வார்த்தைகளே இல்லை!!

இதோ இப்பொது நண்பன் சமைப்பதை சமயலறையில் இருந்த உயரமான பிரம்பு முக்காலியில் அமர்ந்தபடி பார்த்திருந்தான். இடையிடையே பேசவும் செய்தான். ஏதோ ஒரு நொடியில், ‘டேவிட் காஃபி போட்டு கொடுடா… ரொம்ப நாளாச்சு, உன் கையால காஃபி குடிச்சி” என்றான். 

டேவிட் ஒருமுறை ரவியைப் பார்த்தான். பின், “ம்ம்” என்று காஃபி தயாரிக்க ஆரம்பித்தபடியே, “நீ போய் மதுகூட பேசிக்கிட்டு இரு. அவ அப்செட்டா இருக்கானுதான ஃபேக்ட்ரி போகாம வீட்ல இருக்கிற… போ” என்றான்.

ஆம்! மதுவிற்கு சற்று மனச்சோர்வு. கொண்டாட்டத்திற்கு வந்திருந்த அம்மா அப்பா, அண்ணன், அண்ணி மற்ற உறவுகள் இந்தியா சென்றுவிட்டதால் சுறுசுறுப்பு இல்லாமல் சோம்பிய நிலையில் அறையிலே இருக்கிறாள்.

சில நொடிகள் பேசாமல் இருந்த ரவி, “அவளுக்காகத்தான் வீட்ல இருக்கேன். ஆனா பேசலாம் முடியாது! பேசினா… வீட்டு நினைப்பில அது இதுனு கத்துவா, எதையாவது உளறி வைப்பா. என்னால கேட்டுட்டு சும்மா இருக்க முடியாது. நானும் எதும் பேசி வச்சிடுவேன்” என்றான். 

அவர்கள் இருவரையும் பற்றி நன்கு தெரியுமென்பதால்… ஏதும் சொல்லாமல் டேவிட் இரு காஃபி கோப்பைகள் வைத்த தட்டத்தை(tray) நீட்ட, ரவியும் ஒன்றும் சொல்லாமல் அதை வாங்கிகொண்டு, அவர்கள் அறைக்குச் சென்றான்.

மது மெத்தையில் படுத்திருந்தாள். கண்கள் கலங்கி இருந்தன. அவளருகில் வந்தமர்ந்து, “மது” என்றழைத்தான். அதற்கு அவளிடம் பதிலில்லை. அவள் தலைகோதி, “ஏன் எப்படி இருக்க, வெளிய வந்து இரு. சரியாயிடுவ” என்றான்.

அதன்பின்னும் அவளிடம் பதிலில்லை! 

“இல்ல எங்கயாவது வெளிய போய்ட்டு வருவோமா?” என்று கேட்டான்.

விழுக்கென எழுந்து அமர்ந்தவள், “ஒன்னும் வேண்டாம்! எங்க வீட்ல அப்பவே சொன்னாங்க, ரொம்ப தூரம்… உன்னால இருக்க முடியாதுடா, எங்களாலயும் உன்னைப் பார்க்காம இருக்கிறது கஷ்டம்னு. 

ப்ச் நான்தான் அதலாம் யோசிக்கல… அவங்க பேச்ச கேட்கல. ம்கூம் அப்படி சொல்ல கூடாது, என்னய யோசிக்க விடாம பண்ணிட்ட” என்று படபடவென பேசினாள்.

பொறுமையாக இருக்க முயற்சி செய்தபடி ரவி நின்றான்.

“பத்து நாள் நீ பேசினதெல்லாம் கேட்டு உன்னய லவ் பண்ணிட்டேன். இல்ல என்னெல்லாமோ பேசி என்னய லவ் பண்ண வச்சிட்ட. இப்போ பாரு இப்படி தனியா வந்து கஷ்டபடுறேன்” என்று அழுது கொண்டே படபடத்தாள்.

“தனியா எங்க இருக்க, நான்தான் கூட இருக்கேன்ல”

“நீ ஃபேக்ட்ரிக்கு போயிடுவேல”

“நீயும் வா, வந்து பிசினஸ பாருன்னு சொல்லிட்டேன்”

“நீ பண்றதலாம் பிஸினஸா? சேலஞ் இல்ல, ஒரு ஹார்ட்ஒர்க்கும் தேவையில்ல. எங்களுக்கு அங்க எவ்ளோ பெரிய பிசினஸ் தெரியுமா? காட்டன் மில்! அதுல எவ்ளோ வேலை இருக்கும் தெரியுமா? எவ்ளோ ஒர்க்கர்ஸ் தெரியுமா? அத அண்ணன், அண்ணி, நான் எப்படி மேனேஜ் பண்ணுவோம் தெரியுமா?”

“என்ன தெரியுமா… தெரியுமா? பத்து நாள் நான் மட்டும்தான் பேசினேனா, நீ ஒன்னும் பேசலயா? யாருக்கும் தெரியாம என்னய வந்து நீ பார்க்கலயா சொல்லு? ப்ரொபோஸ் பண்ணப்ப அவ்ளோ சந்தோஷப்பட்ட”

அவள் அவனைப் பார்க்காமல் குனிந்து கொள்ளவும், “எங்க வீட்ல எல்லாரும் சொல்றாங்க… மது எவ்ளோ அன்பா, அக்கறையா பேசறானு… ஆனா என்கிட்ட அப்படி ஒன்னும் தெரியல” என்றான்.

இன்னும் அவள் அமைதியாக இருக்கவும், “சொல்லு மது, வெளிய போலாமா வேண்டாமா?” என்று கேட்டதற்கு, “அதான் வேண்டாம்னு சொல்லிட்டேன்ல. அப்புறம் ஏன் திரும்பத் திரும்பக் கேட்கிற” என்றாள். 

காஃபியை எடுத்து குடித்தபடி, “போ எனக்கென்ன… உங்கிட்ட பேச வந்தேன் பாரு. இதுக்கு டேவிட்டுக்கு ஹெல்ப் பண்ணவாது செஞ்சிருப்பேன்” என்று கிளம்பப் போனான்.

“அவனுக்கு என்ன ஹெல்ப்?”

“சமைக்கிறான்ல… அதுக்கு”

“டேவிட் சமைக்கிறானா?” என்று ஆச்சரியமாக கேட்டு எழ, “ம், அந்த காஃபி எடுத்துக்கோ… அவன்தான் போட்டுக் கொடுத்தான்” என்றதும், கோப்பையை எடுத்துக்கொண்டு, விறுவிறுவென வெளியே வந்தாள். 

ஒரு மிடறு காஃபி குடித்தவள்… சாப்பாட்டு மேசையில் சமைத்த உணவுகளை எடுத்து வைத்துக் கொண்டிருந்த டேவிட்டிடம், “சமைச்சி முடிச்சாச்சா?” என்று கேட்டபடி அவன் முன் வந்து நின்றாள்.

“ம்ம்” என்றான்.

கண்ணீர் தடத்தைத் துடைத்தவள், “ரொம்ப நாளாச்சு, நீ குக் பண்ணி” என்று சொன்னதற்கு, “ஏன் இவ்ளோ அழணும், உன் கசின் மேரேஜ் வருதுல, அப்போ எல்லாரையும் பார்க்க முடியும்ல” என்றான்.

“நாங்க போகலை டேவிட்” என்றாள்.

“ஏன், எனக்காகவா?” என்றதற்கு… அவள் பேசாமல் இருக்கவும், “போகணும்னு உனக்குத் தோனலையா?” என்றான்.

“இல்லைனு பொய்யெல்லாம் சொல்ல மாட்டேன். சித்தி, சித்தப்பா, அத்தை, மாமா, தாத்தா, கசின்ஸ்னு எல்லாரையும் பார்க்கணும்னு… ஃபங்ஷன் அட்டன் பண்ணனும்னு ரொம்பத் தோனுது” என்று குடும்ப நிகழ்வில் கலந்து கொள்ள வேண்டுமென்ற ஆசையுடன் சொன்னாள்.

“அப்புறமென்ன… எனக்காக இனி இதலாம் மிஸ் பண்ண வேண்டாமே. இப்ப என்னால தனியா இருந்துக்க முடியும். ஐ கேன் டேக் கேர் ஆஃப் மைசெல்ஃப். அப்ப இருந்த மாதிரி இருக்க மாட்டேன்… நீங்க போய்ட்டு வாங்க”

மது, “இல்லனா இப்படிப் பண்ணலாம் டேவிட், ரவி இங்க இருக்கட்டும், நான் மட்டும் போய் பங்ஷன் அட்டன் பண்ணிட்டு வந்துடறேன்” என்றாள்.

“ரவிகூட போனாதான் நீ ஹேப்பியா இருப்ப மது. ரவியும் உன்கூட வரணும்னு நினைப்பான். அன்ட் உங்க பேமிலிலயும் இத எக்ஸ்ஃபெக்ட் பண்ணுவாங்கள. ரெண்டு பேரும் சேர்ந்து போங்க” என்று டேவிட் அவர்களுக்காகப் பேசினான்.

“நீ சொல்றது சரிதான். என்ன செய்ய” என்று யோசித்தவள், “சரி இத அப்புறம் பார்ப்போம்” என்றுவிட்டு, “வெளிய போலாம்னு ரவி சொன்னான். நீ வர்றியா டேவிட்” என்று கேட்க, “சென்டர் போகலாம்னு நினைச்சேனே” என்றான்.

அதுவரை எதுவும் பேசாமல் மதுவின் முகத்தை, அவளுடைய பேச்சுகளைப் பார்த்திருந்த ரவி, “இன்னைக்கு செஷன் இல்லயேடா” என்றான்.

“ம், பட் லாஸ்ட் டைம் பீஸ் கொடுக்கல. அத கொடுக்கலாம்னு நினைச்சேன்”

“அடுத்த தடவை கொடுத்துக்கலாமே”

“அப்படித்தான் கீர்த்தியும் சொன்னாங்க. பட் இன்னைக்குப் போய் கொடுக்க நினைச்சிருந்தேன்” என்றான் டேவிட்.

சட்டென ரவிக்கு, ‘அன்று நடந்ததை கீர்த்தி டேவிட்டிடம் சொல்வாளோ?’ என்ற கேள்வி வந்தது. இதை யோசித்தபடி இருந்தவன், “ம்ம் சரிடா” என்று மட்டும் சொல்லி சோஃபாவில் வந்தமர்ந்தான். 

அக்கணம் மது, “இரு டேவிட்” என்று சமையலறைப் போனவள், ஒரு டப்பாவை எடுத்து வந்து கொடுத்து, “அன்னைக்கு கீர்த்தி சாப்பிடாமலே போயிட்டாங்க. அதனால இப்ப போறப்ப இத கொடுத்திடு” என்றவள், “அம்மா செஞ்ச ஸ்வீட், அவங்ககிட்ட நான் கொடுத்தேன்னு சொல்லிக் கொடு” என்றாள்.

சரியென வாங்கிக்கொண்டு, “ரவி வர்றேன்டா” என்று டேவிட் போக… அவன் பின்னே வந்த மது, “நாங்க வேணா வெய்ட் பண்ணவா, நீ சென்டர் போய்ட்டு வந்தப்புறம் வெளிய போலாம்” என்றாள்.

“நீங்க போய்ட்டு வாங்க, கீர்த்தியைப் பார்த்திட்டு வந்தப்புறம் ஆக்ட்டிவிட்டி பண்ணலாம்னு நினைக்கிறேன்” என்று கிளம்பவும், “சரி, போய்ட்டு வா” என்று உள்ளே வந்தவள், “நாம எப்போ கிளம்பலாம்” என்று ரவியிடம் கேட்டாள்.

“எங்க கிளம்பனும்?” என்றான்.

“நான் அப்செட்டா இருக்கிறதால வெளிய போலாம்னு சொன்னேல”

“உன்னய பார்த்தா அப்படித் தெரியலயே. நல்லாத்தான இருக்க”

“ஆனா நீ அப்சட்டா இருக்க மாதிரி இருக்கே… யாராவது ஒருத்தர் அப்செட்டா இருந்தாலும் போலாமே” என்று அவன் பக்கமாக வந்தமர்ந்தாள். அவனோ எதுவும் பேசாமல் எழுந்து, சாப்பாடு மேசை முன் சென்று அமர்ந்தான்.

“என்ன ரவி கோபமா, கீர்த்திக்கு ஸ்வீட் கொடுத்து விட்டதுக்கு” என்று அவளும் வந்து அமர, “அன்னைக்கு அவ சாப்பிடாம போனப்ப கஷ்டமா இருக்குதுனு சொன்னப்பவே இப்படி ஏதாவது பண்ணுவனு தெரியும்” என்றான்.

“அப்புறமென்ன, வெளிய போலாமே”

“எனக்கு வேலை இருக்கு”

“என்ன வேலை”

“ம்ம் சேலஞ்சே இல்லாத ஃபேக்ட்ரிக்கு போற வேலை”

“ஓ, உள்ள வச்சி பேசுனதுக்கு கோபமா… சாரி ரவி” என்றாள். எதுவும் பேசாமல் இருந்தான். “உடனே எல்லாரும் கிளம்பினது கஷ்டமா இருக்கு… இதுல நீயும் இப்படி பேசாம இருந்தா எப்படி ரவி” என்றாள்.

ஒன்றும் பேசாமல் தட்டில் உணவை எடுத்து வைத்து உண்ண ஆரம்பித்தான். ஏதும் பேசுவான் என்று அவன் முகத்தையே பார்த்திருந்தாள். சாப்பிடுவதிலே அவன் கவனமாக இருக்கவும், எழுந்து சமையலறை சென்றுவிட்டாள். 

சமையல் மேடை முன் நின்றுகொண்டு, ரவி எப்போது வந்து பேசுவான் என்று அடிக்கடி திரும்பித் திரும்பிப் பார்த்தபடி இருந்தாள்.

இருபது வினாடிகளுக்குப் பின், ரவி வந்து அவள் முன் நிற்க, “கிளீன் பண்ண நிறைய இருக்கு, வழிவிடு” என்று முறைத்துக் கொள்ள, “சும்மா வேல செய்ற மாதிரி நடிக்காத. பாத்திரம் எல்லாம் எடுத்து டிஷ்வாசர்ல போட்டுட்டுதான் டேவிட் போயிருக்கான்” என்றான்.

சமையல் மேடையைப் பார்த்தாள். அங்கே ஒரு பாத்திரமும் இல்லை.  ரவியை இன்னமுமே முறைத்துவிட்டு அங்கிருந்து போக பார்க்க, மீண்டும் அவள் முன் வந்து, “கோபமா மது” என்று அவன் கேட்க, “ஆமானு சொன்னா என்ன செய்ய போற” என்றாள் பட்டென்று. 

“ஒன்னும் செய்ய மாட்டேன், என் மொபைல் ஸ்கிரீன் மட்டும் பாரேன்” என்று அலைபேசியைக் காட்ட, “ஃபேக்டரி போறேன்னு சொல்லிட்டு, ஏன் என்கிட்ட வந்து பேசிக்கிட்டு இருக்க” என்று படபடக்க, “மொபைல பாரு” என்று அவன் அதட்ட… அவனது அலைபேசி திரையைப் பார்த்தாள். 

பார்க்க பார்க்க அவள் முகம் கொஞ்சம் கொஞ்சமாக மலர்ந்து, “ரவி! இந்தியா போறோமா, டிக்கெட் புக் பண்ணிட்டியா, ஹே ஜாலி ஜாலி” என்று குதித்தாள்.  அடுத்த நொடி, “ஆனா டேவிட்?” என்று கேட்டு நின்றாள்.

ஆம்! மதுவின் விருப்பத்திற்காக பார்த்து இந்தியா செல்ல பயணச்சீட்டு பதிவு செய்திருந்தான்! ஆனால் அவனுக்கும் அந்தக் கேள்வி இருந்தது. அமைதியாக அவன் இருக்கவும், “பேசாம அவனையும் கூட்டிட்டுப் போகலாமா, தெரபிக்கு பிரேக் எடுக்கலாமானு ஹென்ரிகிட்ட கேட்கிறியா” என்றாள்.

“முதலயே சொல்லிருந்தாரே மது… தெரபி ஸ்கிப் பண்ணா தேவையில்லாம சரியாகிறது டிலே ஆகும்னு. அது வேண்டாம். ஆனா தனியா இருந்துப்பேன்னு அவன் சொல்றது சரியானு கேட்டு… அவர் என்ன சொல்றாரோ அதுக்கேத்த மாதிரி பார்த்துக்கலாம்” என்றான்.

“ம், அதுவும் சரிதான்” என்று தலையாட்டியவள், அலைபேசியில் பயண நேரம் மற்றும் நாளை பார்த்தாள். அவள் முகத்தின் மலர்ச்சியைப் பார்த்தவன், “மது ஹேப்பியா?” என்றான்.

“ஆமா ஹேப்பிதான்! நல்ல பையன் நீ, என்னைப் புரிஞ்சி நடந்துக்கிற” என்று முகமெங்கும் பூரிப்புடன் சொல்லிக் கொண்டாள்.

“அடப்பாவி… கொஞ்ச நேரத்துக்கு முன்ன அப்படிப் பேசிட்டு, இப்ப இப்படிப் பேசற” என்று அலுப்புடன் ஆரம்பித்து, “ஃபேஸ் வாஷ் பண்ணிட்டு வந்து முதல சாப்பிடு, காலையில சரியா சாப்பிடல” என்று அக்கறையாக முடித்தான். 

முகம் கழுவ சென்றபடி, “சரி இப்ப வெளிய போறோமா, இல்ல ஃபாக்ட்ரி போ போறியானு சொல்லு” என்று கேட்க, அதற்கு அவன் ஏதோ சொல்ல, அப்படியே அவர்களது பேச்சு தொடர்ந்தது.

*********************

ரீசோல் யுவர் லைஃப், சான் மார்க்கோ!

அறை உள் அலங்கரிப்புகளைச் சிறிதாக மாற்றி அமைத்துக் கொண்டிருந்த கீர்த்தி கதவு தட்டும் ஓசை கேட்டதும், வேலையை விட்டுச் சென்று கதவை திறந்தாள். டேவிட் நின்று கொண்டிருந்தான். 

கண்களைச் சுருக்கி, “இன்னைக்கு உங்க தெரப்பி செஷன் இல்லயே டேவிட், என்ன விஷயமா வந்துருக்கீங்க?” என்று புரியாமல் கேட்டாள். 

“லாஸ்ட் டைம் செஷன்க்கு ஃபீஸ் கொடுக்கல. அத கொடுத்திட்டுப் போக வந்தேன்” என்று மெதுவாகச் சொல்ல, “இதுக்காக வந்தீங்களா? அடுத்த தடவ வர்றப்போ கொடுத்திருக்கலாமே” என்றாள்.

மௌனமாக நின்றான். மளமளவென அந்த மௌனத்தை வாசித்தவள், “சாரி, சாரி! முதல உள்ள வாங்க டேவிட். உள்ள வந்து பேசுங்க” என்று அழைத்ததும் இருவரும் உள்ளே சென்றனர். 

“இது மது கொடுத்தது” என்று ஒரு டப்பாவைக் கொடுத்தான். “என்னது” என்று வாங்கிக் கொண்டாள். “ஸ்னாக்ஸ், மது அம்மா ப்ரீபெரேஷன். ஷீ கேவ் திஸ் டு யூ” என்றான்.

திறந்து பார்த்தவள், “ஓ, அதிரசம்” என்று ஒன்றை எடுத்து கடகடவென சாப்பிட ஆரம்பித்தாள். ஒன்றை முடித்து அடுத்தது எடுத்து, “டேஸ்ட் ரொம்ப நல்லா இருக்கு” என்று சாப்பிட்டாள்.

சிலவினாடிகள் பேசாமல் இருந்தவன், “கேட்கணும்னு நினைச்சேன், உங்க பேரன்ட்ஸ் எங்க இருக்கிறாங்க கீர்த்தி” என்றதும், “ம் ம் நான் தனியாதான் இருக்கிறேன்” என்று மட்டும் சொன்னாள். 

“பேரன்ட்ஸ் இல்லயா?”

அவள் பதில் சொல்லாமல் இருந்தாள். எனவே, ‘ஆம்’ என்பதுதான் பதில் என்ற முடிவிற்கு வந்தவன், “தனியா எப்படி மேனேஜ் பண்றீங்க” என்றான். 

டப்பாவை மூடிவிட்டு, “சப்போர்ட் பண்ண ஃப்ரன்ட் இருக்கான்” என்றாள். சிறு இடைவெளிவிட்டு, “பெஸ்ட் ஃப்ரன்ட் இன் தே ஹோல் வேர்ல்ட்!” என்றாள். 

“ஓ, ஓகே” என்று சுற்றி பார்த்தவன், அறையில் கலைந்து கிடந்த பொருட்களை எல்லாம் பார்த்து, “என்ன பண்ணிட்டு இருக்கீங்க” என்றான். 

“கொஞ்சம் இன்டிரியர் மாத்தறேன்” 

“சர்வீஸ்க்கு சொல்லிருக்கீங்களா?” 

“அவங்க பேமென்ட்லாம் என்னோட பட்ஜெட்ல வரவே வராது. நானே மேனேஜ் பண்ணிடுவேன், பழக்கம்தான்” 

“நான் ஹெல்ப் பண்ணட்டுமா?” 

சற்று யோசித்துவிட்டு, “நீங்க எவ்ளோ பேமென்ட் கேட்ப்பீங்க டேவிட்” என்று விளையாட்டாகக் கேட்கவும், அவன் மெலிதாகச் சிரித்தான். 

“ஃபர்ஸ்ட் டைம் நீங்க சிரிக்கிறத பார்க்கிறேன்” என்றவள், “சரி சொல்லுங்க. எவ்ளோ பேமென்ட் உங்களுக்கு?” என்றாள் விடாமல்.

சிரிப்பு சற்றே விரிய, “ஒரு தெரபி செஷன் ஃப்ரீயா பண்ணி கொடுங்க” என்று சொன்னதும்… அவள் நன்றாகச் சிரித்துவிட்டு, “ஜோக் பண்றீங்க” என்றாள்.

“நீங்க சிரிச்சதுனால வேணா, இது ஜோக்கா ஆகிருக்கும்” என்றதும், சட்டென அவள் சிரிப்பதை நிறுத்திவிட்டாள். அவளிடம் ஒரு அமைதி வந்துவிட்டது. அதைக் கலைக்கும் வண்ணம், “சீரியஸா கேக்கறேன் கீர்த்தி, சொல்லுங்க என்ன ஹெல்ப் வேணும்னு” என்றான். 

“நான் பார்த்திடுவேன். நீங்க சும்மா பேசிக்கிட்டு இருக்குங்க” 

“பேசறது கஷ்டம்… ஹெல்ப் என்னென்னு சொல்லுங்க” 

“இவ்ளோ கேட்டிங்கனா… அப்புறம் சொல்லிடுவேன்”

“சொல்லுங்கனுதான் சொல்றேன்”

“ஓகே, அந்த புக்ஸ்லாம் செல்ஃப்ல அரேஞ்ச் பண்ணணும். வெயிட்டான புக்ஸ் கீழ… மத்த புக்ஸ் மேல” என்றதும், தரையோடு தரையாக இருந்த அலமாரி பக்கம் போனவன், பரப்பிக் கிடந்த புத்தகங்களை அடுக்க ஆரம்பித்தான். 

இருவரும் அவரவர் போக்கில் வேலை பார்த்தனர். பேச்சுகள் எதுவும் இல்லை!

அவன் புத்தக அலமாரியைத் துடைத்தான். அவள் முக்காலியில் ஏறி நின்று புகைப்பட சட்டங்களை மாட்டிக் கொண்டிருந்தாள். நேராக இருக்கிறதா என பார்க்க பின்னே பின்னே அவள் நகர்ந்து வரவும், “இன்னும் கொஞ்சம் பேக்ல வந்தா, யூ மைட் ஃபால் [you might fall] ” என்றான் டேவிட்.

மேலே நின்றபடி அவள் திரும்பிப் பார்க்கவும், “ஸ்ட்ரெயிட்டா இருக்கு” என்று அவன் சொல்ல, சிறு முறுவலுடன் இறங்கியவள், சுவர் ஒப்பனைத்தாள்களை ஒட்ட ஆரம்பித்தாள். நல்ல உயர, அகலமுள்ள சுவர். அதில் கால்வாசிக்கும் குறைவாக ஒட்டியபின், கை வலித்தது. ஓய்வு எடுப்பதற்காக ஒட்டுவதைச் நிறுத்திவிட்டு, ‘என்ன செய்கிறான்?’ என்று அவனைப் பார்த்தாள்.

புத்தகங்களை அடுக்கி முடித்து, ஒரு புத்தகத்தை எடுத்து அவன் படித்துக் கொண்டிருந்தான். “அவ்ளோதான் ஹெல்ப்பா டேவிட்” என்று கேட்டுவிட்டு ஒப்பனைத்தாள்களை வெட்ட ஆரம்பித்தாள்.

எழுந்து வந்தவன், “ஸ்டார்ட் பண்ணேன். இன்டர்ஸ்டிங்கா இருந்தது, ஸோ ரீட் பண்ண உட்கார்ந்திட்டேன். கொடுங்க நான் கட் பண்றேன்” என்றான்.

ஒன்றும் சொல்லாமல் அவனிடம் கொடுத்து, வெட்டும் அளவுகளை சொல்லி நின்றாள். வெட்டி ஒட்ட ஆரம்பித்த சிறிது நேரத்தில், “ஏன் எல்லாம் டல்லான கலரா சூஸ் பண்ணிருக்கீங்க? இது… போட்டோ பிரேம்! ஈவென் வால் கலர்கூட அப்படித்தான் இருக்கு” என்று அவளைப் பார்த்துக் கேட்டான்.

“இந்த ஜாப்ல ஒர்க்பிளேஸ் செட்டப் ரொம்ப முக்கியம். திங்ஸ் ஆர்கனைஷ்டா இருக்கனும். அட்ராக்ட்டிவா இருக்க தேவையில்ல. மனசில பிரச்சனையோட வர்றவங்களுக்கு, இந்த அட்மாஸ்பியர் ஏதோ ஒரு விதத்தில அமைதியைக் கொடுக்கணும். 

போட்டோ பிரேம், வால்பேப்பர், உள்ள இருக்கிற கர்டெய்ன்ஸ்னு… எல்லாமே மைல்டு கலர்ஸ்தான். கிளைன்ட் கம்ஃபர்டபிளா இருக்க இது உதவும். அன்ட் என்னோட டிரஸ் கலர் சாய்ஸ்கூட இப்படித்தான். ஐ மீன்… கன்செர்வ்டிவ் அட்டயர்தான் ப்ரீஃபர் பண்ணுவேன்.  

இதெல்லாம் தெரபி செஷன்ல பெரிய இம்பேக்ட்ட உண்டு பண்ணும். அன்ட் இப்படியிருந்தா கிளைன்ட் கவனம் வேற எங்கயும் போகாம, நான் பேசறதுல மட்டும்…” என்று நீளமாக பேசி வந்தவள் அப்படியே நிறுத்திவிட்டாள்.

காரணம்? அவனுடைய கவனம் அவள் பேச்சில் இல்லை என்று தெரிந்ததால்! அவளிடம் இருக்கிறது என்று புரிந்ததால்!!

பேச்சை நிறுத்தி, “டேவிட்” என்று அழைப்பில், அவனது கவனச் சிதறலைச் சுட்டிக் காட்ட, ‘என்ன பேச?’ என்று தெரியாமல் திரும்பிக் கொண்டான். ‘நான் ஏன் இப்படி?’ என்பது போல் கண்கள் சுருக்கினான். உடனே அவள் எதுவும் எண்ணுவாளோ என்று திரும்பி, “ம், ஐ கெட் இட்” என்றான்.

சற்றுநேரம் பேசாமல் இருந்தாள். பின் அவன் பேசுவான் என்று இருந்தாள். அவன் பேசவில்லை என்றதும், “ம், உங்களுக்கு டல் கலர்ஸ் பிடிக்குமா?” என்று அவளே பேசினாள்.

“ஏன் கேட்கிறீங்க?” என்றான்.

“உங்க டிரஸ் கலர்ஸ் எல்லாம் அப்படித்தான இருக்கு. அதான் கேட்டேன்”

“இதெல்லாம் நோட் பண்ணீங்களா?” என்ற கேள்வியில் அவள் கவனித்ததை அவன் அடிக்கோடிட்டு காட்ட, ‘என்ன செய்ய?’ என்று தெரியாமல் நின்றாள். பின், “சாப்பிட போலாமா” என்று கேட்டாள். பின், “சாரி, லன்ச் டைம். சாப்பிட போகணும்” என்று திருத்திக் கொண்டாள்.

“போலாம் கீர்த்தி” என்று அவள் கேள்விக்கே அவன் பதில் சொல்ல, இருவரும் சேர்ந்து கிளம்பினார்கள்!

பல்வேறு வகையான கடைகள் மிக நெருக்கமாக அமைந்திருந்த பகுதி அது!  உயரமான இரு கட்டிடத்தின் இடையே குறுக்கமாகச் சென்றது அந்தத் தெரு! சாம்பல் நிற செங்கற்கள் பதிக்கப்பட்ட தெருவின் முடிவிலிருந்த படிக்கட்டில் இருவரும் அமர்ந்திருந்தனர்!  

கையிலிருந்த பேப்பர் பிளேட்டில் பிரைட் மீட் பால்ஸ் இருக்க, கீர்த்தி அதைச் சாப்பிட்டபடியே படிக்கட்டு ஓரமாக செல்லும் கால்வாயைப் பார்த்திருந்தாள்! கேன்டு ஐஸ் டீ [canned ice tea] குடித்தபடி கால்வாயின் மறுபுறமாக பேசியபடி நடந்து செல்லும் மக்கள்மீது டேவிட்டின் பார்வை இருந்தது! 

வெகுநேரம் இப்படித்தான் இருக்கிறார்கள்! 

ஏதோ ஒரு நொடியில் பார்வையை அவள் பக்கமாக திருப்பி, “ஒரு குவஸ்டின் தோனிக்கிட்டே இருக்கு. ஷேல் ஐ ஆஸ்க்?” என்றதும், “கேளுங்க” என்று அவன் முகம் பார்த்தாள்.

“இவங்க எல்லாரையும் பார்க்கிறப்ப…” என்று எதிர்புறம் நடக்கும் மக்களைக் காட்டி, “ஹேப்பியா இருக்க மாதிரி தெரியுது. இவங்க யாருக்கும் வொரிஸ் இருக்காதா? லைஃப்ல லாஸ் பேஸ் பண்ணிருக்கவே மாட்டாங்களா… அந்த பெயின் இருக்காதா??” என்றான்.

ஒருமுறை அந்த மக்களைப் பார்த்துவிட்டு, “எல்லார் லைஃப்லயும் கவலை, இழப்பு இருக்கும் டேவிட். ஆனா அவங்களுக்கு அத நினைச்சிக்கிட்டே இருக்க முடியாத சிச்சுவேஷன் இருக்கலாம்.  அப்போ என்ன செய்வாங்க? 

அவங்க வாழ்க்கை அவங்களோட பொறுப்புனு, முடிஞ்சளவு அத சந்தோசமா, பாஸிட்டிவா கொண்டு போக நினைக்கலாம்; வலியை எல்லார் முன்னாடியும் வெளிப்படுத்த வேண்டாம்னு நினைக்கலாம்; தனியா இருக்கிறப்ப, அழுது வெளிப்படுத்திக்கலாம்.

ஆனா வெளிய இருந்து பார்க்கிறப்ப… அப்படித் தெரியாது. ஏதோ அவங்க மட்டும் கவலையில்லாம வாழற மாதிரி தெரியும். ம்ம், எல்லார் லைஃபலயும் கவலை இருக்கும். அதனால இப்படி நீங்க நினைக்காதீங்க” என்றாள்.

சாப்பிட்டபடியே அவள் பேசியிருக்க, அமைதியாக அதைக் கேட்டிருந்தான். அதன்பின்னும் அமைதியாகவே இருந்தான். வெகு நேரத்திற்குப் பின், “இஃப் ஸோ, உங்களுக்கும் வொரிஸ் இருக்குதா” என்று கேட்டான்.

பதில் சொல்லாமல் கால்வாயில் போகின்ற கோண்டலோவை, எதிர்ப்பக்கத் தெருவில் நடக்கின்ற மக்களைப் பார்த்தபடி இருந்தாள்! சற்றுநேரம் எதுவும் கேட்காமல் அவளையே பார்த்திருந்தான். பின், “கீர்த்தி” என்றான்.

ஒரு ஆழ்ந்த பெருமூச்செடுத்து அவனைப் பார்த்து, “எல்லார் மனசிலயும் வெளிய சொல்லிக்காத சோகம் ஒன்னு இருக்கும் டேவிட்” என்றாள் மென்னகையுடன். 

அதன்பின் இருவரும் விழி அசையாமல், மொழி பேசாமல் இருந்தனர்! டேவிட் விழிகளில் வெளிப்படுத்தி முடித்த வெறுமை தெரிந்தது! கீர்த்தி விழிகளில் வெளிப்படுத்த துடிக்கும் வெறுமை தெரிந்தது!

வாழ்வின் ஏற்படும் வெற்றிடம் என்பது நிரந்திரம்! அது யாராலும் நிரப்பவே முடியாது! ஆனால் வெற்றிடம் தரும் வெறுமை நீக்கப்படலாம் அல்லவா என்ற கேள்வியுடன் வெனிஸ் நகரம் அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தது!!

Leave a Comment

error: Content is protected !!
Scroll to Top