Kathambari Novels
அத்தியாயம் – 13 [ Mini Episode]
ஒருமணி நேரமாக அப்படியே வாசலிலே அமர்ந்திருந்தாள் கீர்த்தி. இப்போது அழவில்லை. கன்னங்களில் வழிந்திருந்த கண்ணீர் கோடுகள் அனைத்தும் காய்ந்திருந்தன. அதுவே சொன்னது, அவள் வலி மறைந்திருந்தது என்று. அப்போது வீசிய குளிர்காற்று விழிநீர் தடங்களில் பட்டதும்… சில்லென்று உணர்ந்தவள், மெல்ல அசைந்தாள்.
தெருவின் இருபக்கமும் பார்த்தபடி எழுந்து உள்ளே வந்து கதவை மூடினாள். முகம் கழுவி வந்தவள், அலைபேசியைத் தேடினாள். மேலே இருக்கிறது என்று தெரிந்தது. கடகடவென சென்று அதை எடுத்தாள். டம்ளர் நிறைய தண்ணீர் குடித்துவிட்டு, கீழே வந்தவளுக்கு தூக்கம் வரவில்லை.
ஒரு புத்தகத்தை எடுத்து வந்து, மெத்தையில் சாய்ந்து அமர்ந்து கொண்டாள். அலைபேசியில் அவளுக்குப் பிடித்த, சமீபமாக திரும்பத் திரும்பக் கேட்கும் பாடல் ஒன்றை ஓடவிட்டாள். அழுதே அகம் தானாய் சமாளித்துவிட்டதை நினைத்து, ஒரு மென்னகையுடன் புத்தகத்தை வாசிக்கத் தொடங்கினாள்.
பசித்தது. எடுத்து வந்திருந்த உணவை உண்டபடியே புத்தகம் படித்தாள்.
அரைமணி நேரத்திற்குப் பிறகு, அலைபேசி அழைப்பு வந்தது. தொடுதிரைக் காட்டிய பெயரைப் பார்த்ததும் அழைப்பை ஏற்றவள், “ஹலோ டேவிட், என்ன இந்த நேரத்தில கால் பண்ணிருக்கீங்க?” என்றாள்.
சிலநொடிகள் மௌனமாக இருந்தவன், “நத்திங்” என்றான்.
‘கால் பண்ணிட்டு நத்திங்கா’ என்று இப்போது அவள் மௌனம் பேச, “கீர்த்தி அன்டைம்ல கால் பண்ணிட்டேனோ?” என்று அவன் கேட்கவும், “அப்படியில்ல, என்ன திடீர்னு யோசிச்சேன்” என்றாள்.
“சும்மாதான் ஃபோன் பண்ணேன்” என்றான் மீண்டும்.
“ஓஹ், பார்ட்டி முடிஞ்சதா டேவிட்”
“ம்ம்” என்று மட்டும் சொன்னான்.
அடுத்து என்ன கேட்க என்று யோசித்தவள், “வீட்டுக்கு வந்தாச்சா?” என்றாள்.
அதற்கும், “ம்ம்” என்ற பதிலே அவனிடம்.
அடுத்து அவன் பேசட்டுமென அமைதியாக இருந்தாள். அதனால் அலைபேசி அலைவரிசையில் சில பல நொடிகள் சத்தமில்லாமல் கழிந்தன. கடைசியில் டேவிட்தான் பேசினான். “நீங்க வீட்டுக்குப் போயாச்சா?” என்று கேட்டான்.
“ம்ம், அப்பவே வந்துட்டேன்” என்றாள்.
“நான் இப்பதான் வீட்டுக்கு வந்தேன். வந்ததும் உங்களுக்கு கால் பண்ணேன். தூங்கிட்டு இருந்தீங்களோ?”
சிறுகணம் பதில் சொல்லாமல் இருந்துவிட்டு, “இன்னும் இல்ல” என்றாள்.
அவள் பதில் சொல்ல நேரமெடுத்ததால், அவன் கேள்வி அதிகப்படியோ என்று தோன்ற, “இட் இஸ் ஹாஃப் பாஸ்ட் டுவல்வ், அதான் அந்த குவெஸ்டின்” என்று விளக்கம் தந்தான்.
“பரவால்ல டேவிட், புக் படிச்சிட்டு இருந்தேன், அதான் தூங்கலை”
“சாப்பிட்டீங்களா?”
“சாப்பிட்டேன்”
அடுத்து அவன் ஏதும் பேசாமல் இருந்தான். அவன் ஏதோ கேட்க நினைத்து, ஆனால் கேட்கத் தயங்குவது போல் உணர்ந்ததால், “நீங்க என்ன சொல்ல நினைக்கிறீங்கனு ஹெசிட்டேட் பண்ணாம சொல்லுங்க” என்றாள்.
அப்போதும், “ம்ம்… ஐ ஜஸ்ட் கால்டு” என்றே சொன்னான்.
“சும்மானு சொல்றீங்க, ஆனா எதயோ சொல்ல நினைக்கிறீங்க. என்னென்னு சொல்லுங்க டேவிட்” என்றாள்.
சற்றுநேரம் அமைதியாக இருந்தவன், “சொல்லாம கிளம்பிப் போயிட்டிங்கள, அதான் கால் பண்ணேன்” என்று அழைத்ததின் காரணம் சொன்னான்.
“இல்லயே டேவிட்… மதுகிட்ட சொல்லிட்டுதான கிளம்பினேன்”
உடனே, “ஏன் எங்கிட்ட சொல்லாம போனீங்க” என்று கேட்டான்.
ஒரு கேள்வி உங்களிடம் கேட்கப்படுகிறது, என்ன செய்ய வேண்டும்? பதில் சொல்ல வேண்டும்! சரி, ஒரு கேள்வி உங்களுக்குப் பிடிக்கிறது, அப்பொழுது என்ன செய்ய வேண்டும்!! பதிலைத் தேடிக் கொண்டிருக்காமல், கேள்வியை ரசிக்கப் பழகிக் கொள்ள வேண்டும்!!
இதோ இப்போது கீர்த்தி செய்கிறாளே, அதுபோல்! ஆம், டேவிட் கேட்ட கேள்வி, அதை அவன் கேட்ட விதம்… அவளுக்குப் பிடித்திருந்தது! அதனால் அதையே ரசித்ததில், பதிலில்லாமல் இருந்தாள்!!
கேள்வி கேட்டவனே, “என்கிட்ட சொல்லிட்டுப் போயிருக்கனும்ல” என்று பதில் போல கேட்கவும்… சிறு புன்னகையுடன், “ம்ம், நான் உங்ககிட்ட சொல்லிட்டு வந்திருக்கனும்” என்று அதையே பதிலாக சொல்லிக் கொண்டாள்.
அதற்கடுத்து, ‘ம்ம், வேற என்ன பேச?’ என்று இருவரும் யோசித்து இருந்ததால், உரையாடலில் ஓர் இடைவேளை வந்தது. கீர்த்தி அதை, “வேற என்ன டேவிட், சொல்லுங்க” என்று கேட்டு முடித்துவைத்தாள்.
‘விங் சேரில்’ அமர்ந்திருந்தபடி, “ம்ம் வேற… வேற” என்று யோசித்தான். பின் எழுந்து இரவு விளக்கு வெளிச்சத்தில் அறை முழுதும் நடந்தபடி, “வேற… என்ன சொல்ல” என்று யோசித்து… கடைசியில், “நீங்களே சொல்லுங்க” என்றுதான் சொன்னான்.
“நான்… என்ன சொல்ல…!” என்று யோசித்தாள். பின், “ம்ம்… வேற வேற” என்று யோசித்தாள். அடுத்து, ‘பேசுவது எளிதுதானே எனக்கு! ஆனால் இப்போது ஒரு வார்த்தைகூட வரமாட்டிக்கிறதே, என்ன செய்ய?!’ என்று கட்டிலில் தலையை முட்டிக்கொண்டு யோசித்தாள்.
அவ்வளவு யோசித்த பின்னுமே வேறொன்றும் பேசிட வராமல், “வேற என்ன சொல்லனு தெரியலை, நீங்கதான் ஏதாவது சொல்லணும்” என்றாள்.
“நானா? ம், ஓகே” என்று பேசத் தயாரானான். ஆனால் வார்த்தை வராமல், ‘ப்ச் பேசுவது அத்தனை எளிதல்ல எனக்கு! என்னைப் பேசச் சொன்னால் எப்படி’ என்று மனதில் நினைத்தபடியே, வேறு வேறு அறைகளுக்குச் சென்றெல்லாம் யோசித்து யோசித்துப் பார்த்தான்.
ஆனாலும் வேறெந்த வார்த்தையும் கிடைக்காமல், “வேற… எத சொல்லனு தெரியல. நீங்களே சொல்லுங்க” என்று சொல்ல… வேறு வழியில்லாமல், “ஓகே, நானே சொல்றேன்” என்று கண்கள் மூடி யோசித்தாள்.
பேசுகிறார்களா? இல்லை, யோசிக்கிறார்களா? நல்ல கேள்விதான்! ஆனால் இந்தக் கேள்வியைவிட வேறொரு முக்கியமான கேள்வி இருக்கிறது என்றது வெனிஸ். அது… வேறெதுவும் பேச முடியாமல், ‘வேற, வேற’ என்று பேசிக் கொள்ளும் பேச்சில் வேறுபாடு தெரிவதை எப்போது இவர்கள் உணர்வார்கள் என்பதுதான்!!