Kathambari Novels
அத்தியாயம் – 12
கீர்த்தியும் டேவிட்டும்… சடசடத்த மனதை சமன்படுத்திக் கொண்டு மீண்டும் ஒருவரை ஒருவர் பார்த்தனர். “கேக் கட் பண்ண போறாங்க, வாங்க” என்று அவன் மெதுவாக அழைக்க, “ம் வர்றேன்… நீங்க போங்க” என்று அவள் மெல்ல சொன்னதும், சரியென்று அவன் உள்ளே சென்றுவிட்டான்.
சற்றுநேரத்திற்குப் பின் அவளும் உள்ளே சென்றாள். கேக் வைக்கப்பட்டிருந்த மேசையைச் சுற்றி அனைத்து உறவுகளும் நின்றனர். ரவியும் மதுவும் நடுவில் நின்றிருந்தனர். இருவரும் கேக்கை வெட்டியிருந்தனர்.
கூச்சலிட்டுத் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்திய இளைய உறவுகளுக்கு இடையே… ‘கேக்’-லிருந்து சிறு துண்டு எடுத்து ரவி மதுவிற்கு ஊட்டிவிட்டான்.
அவனிடம் ரகசியமாக, “இப்பவாது என்ன சர்ப்ரைஸ்னு சொல்லேன்” என்று கேட்க, “ம்கூம்” என்று சிரித்து அவளைத் தோளோடு தோளாக அணைத்துக் கொள்ள, அவளும் சிரித்து அவனுக்கு ‘கேக்’ ஊட்டிவிட்டாள்.
பெற்றவர்கள் மனம் நிறைந்து பார்த்திருக்க, நண்பர்கள் ஆர்ப்பரிக்க, சிறு பிள்ளைகள், இளைய உறவுகள் வந்து கேக் எடுத்து உண்ண ஆரம்பித்தனர்.
டேவிட் வந்து… ஒரு ‘கேக்’ துண்டு எடுத்து ரவி மதுவிற்கு கொடுத்து, “ஹேப்பி அனிவெர்ஸரி! ஸ்டே ஹேப்பி, ஜஸ்ட் லைக் ஆல்வேஸ்!!” என்று மனதார வாழ்த்திட, இருவர் மனமும் மகிழ்ச்சியில் திளைத்தது.
அதிலும் ரவி மனம் இரட்டிப்பு மகிழ்ச்சியில் இருந்தது. காரணம் அன்றைய நாளிற்கான மகிழ்ச்சியுடன் நண்பனின் மாற்றமும் சேர்ந்து கொண்டதால்! அதை வெளிப்படுத்தும் விதத்தில்… ஒருபக்கம் டேவிட்டை நிறுத்திக்கொண்டு, மற்றொரு பக்கம் மதுவை நிறுத்திக் கொண்டான்!
தன் அண்ணனிடம் அதைப் புகைப்படம் எடுக்கச் சொன்னான்! ரவி வாழ்வில் முக்கியமானவர்கள், முதன்மையானவர்கள்… அவனது அன்பிற்குரியவர்கள் டேவிட், மது… என்பதைப் பறைசாற்றும் வண்ணம் புகைப்படம் வந்திருந்தது!!
அதன்பின் நெருங்கிய உறவுகள், நண்பர்கள் ஒவ்வொருவராக வந்து நிற்க, புகைப்படம் எடுப்பது தொடர்ந்தது. கூடவே வாழ்த்துகள், பரிசுகள், கேலிகள், கிண்டல்கள் என்றும் இருந்தது. சற்றுநேரத்தில் அந்த இடமே கொண்டாட்ட நாளுக்கு உரிய ஆர்ப்பரிப்பு, ஆனந்தம் என்று மாறியிருந்தது.
அனைவரும் பேசி, சிரித்திருப்பதை டேவிட் அமைதியாகப் பார்த்திருந்தான். அவனுக்கு இரு பக்கமும் ரவி மற்றும் மதுவின் பெற்றோர் நின்றனர். தங்கள் பிள்ளைகளின் மகிழ்ச்சியை, அவர்கள் அகமகிழ்ந்து பார்த்திருந்தனர்.
ஓரமாக இருந்து இதையெல்லாம் பார்த்திருந்த கீர்த்தி… சிலர் சாப்பிடவென்று புல்வெளி பகுதிக்குச் செல்வதைப் பார்த்ததும், அங்கிருந்து சென்றுவிட்டாள்.
சற்றுநேரம் அங்கே அவள் நிற்க, “கீர்த்தி” என்று டேவிட் வந்து… “இந்தப் பக்கம் ஈரோப்பியன் குஷின்… அந்தப் பக்கம் இந்தியன் டிஷ்ஷஸ் இருக்கு” என்றான்.
தகவலாகச் சொல்கிறான் என நினைத்து, “ம்” என்று மட்டும் சொல்ல, “கசின்ஸ் அவங்ககூட சேர்ந்து சாப்பிடச் சொல்றாங்க, ஸோ நீங்க…” என்று நிறுத்திய பின்தான்… தனக்காக சொல்லியிருக்கின்றான் என்று புரிய, “நீங்க போங்க, நான் பார்த்துப்பேன்” என்று சொல்ல, “சரி” என்று போனான்.
உணவு பஃபே முறையில் என்பதால், கூட்டம் போனபின் சென்று எடுத்துக் கொள்ளலாம் என்று மரத்தின் பக்கமாக நின்றாள். அப்போது யாருக்கும் ஏதும் தேவையா என்று கவனிக்க ரவி அங்கே வந்து நிற்பதைப் பார்த்தாள்.
இன்று அவனது திருமணநாள், அதற்காக வந்துவிட்டு வாழ்த்தாமல் போனால் நன்றாக இருக்காதென தோன்றியது. இதற்குமுன் அவன் பேசிய பேச்சுகளை எல்லாம் பின்னுக்குத் தள்ளி… அவன் முன்னே சென்று, “ஹேப்பி வெட்டிங் அனிவெர்ஸரி” என்றாள்.
இதற்குமுன் அவள் பேசிய பேச்சிற்கான கோபம் அப்படியே இருக்க, “எதுக்கு இந்த விஷ்?! நான்தான் உன்னய இன்வைட் பண்ணலயே” என்றான். அதோடு விடாமல், “அன்ட் இன்வைட் பண்ணிருக்கவும் மாட்டேன். டேவிட், மதுதான் நீ வரணும்னு நினைச்சாங்க” என்றான் முகத்தில் அடித்தார் போல்.
‘விஷ் பண்ணதுக்குப் போய் இப்படிப் பேசணுமா’ என்று கீர்த்திக்கு கோபம்! இந்தநாளில் போய் அவனைப் பேசவா என்றும் யோசித்தாள். ஆனால் அவன் பேச்சு அவளைப் பேச சொல்லியது. “நீ என்னய இன்வைட் பண்ணாலும், நான் வந்திருக்க மாட்டேன். நான் வந்ததே டேவிட், மதுக்காகத்தான்” என்றாள்.
அது அவனைக் கோபப்படுத்த, “சரி, அப்ப பார்ட்டிக்கு வந்தோமா… ஃப்ரியா சாப்பிட்டோமோ, போனோமானு இரு!! இப்படி விஷ் பண்ற வேலையெல்லாம் வச்சிக்காத. உன்கிட்ட விஷ் பண்ணுனு நான் கேட்டேனா? முதல இது எங்க ஃபேமிலி ஃபங்க்ஷன், அவங்க விஷ் மட்டும் எனக்குப் போதும்” என்றான்.
“மரியாதையா பேசு, ரொம்ப ரூடா பேசற நீ!!” என்றாள் கோபத்துடன்.
“உனக்கெல்லாம் இது தேவைதான்” என்றான் அலட்சியமாக.
அவன் பேசிய விதம் கோபத்தைக் கூட்டிட, “ச்சே மது எப்படி எல்லார்கிட்டயும் பண்பா, அன்பா பேசறாங்க. அவங்களுக்குப் போய் இப்படியொரு லைஃப் பார்ட்னர்… ரொம்ப பாவம்! டேவிட்டும் பாவம்தான் இப்படியொரு ஃப்ரெண்ட் இருக்கிறதுக்கு, ரெண்டு பேரும் அன்லக்கி!” என்றாள்.
“ஏ, என் ஃப்ரன்ட்ஷிப் அன்ட் லவ் லைஃப் எனக்கு ரொம்ப முக்கியம். அதுபத்தி நீ கமெண்ட் பண்றது எனக்குப் பிடிக்கல. இப்படி நீ பேசறது இதுவே கடைசி தடவையா இருக்கட்டும்!!” என்று ரவி எச்சரித்த நேரம், “என்ன நடக்குது” என்று மது வந்து நின்றாள். உடனே ரவி அமைதியாகிவிட்டான்.
ரவி பேசிய பேச்சினால்… யாருக்காவும் அதன்பின் அங்கே இருக்க கீர்த்திக்கு மனமில்லை. முகத்தைச் சாதாரணமாக மாற்றிவிட்டு, “மது, ஒரு கவுன்சிலிங் கொடுக்க போணும். நான் கிளம்பறேன்” என்று ஏதோ ஒரு காரணம் சொல்லி அங்கிருந்து கிளம்ப நினைத்தாள்.
மெதுவாக மது, “இந்த டைம்ல சென்ட்டர் உண்டா?” என்றாள் சங்கடத்துடன்.
அந்த முகத்தை அப்படிப் பார்க்க கஷ்டமாக இருந்தது. ஆனாலும் இங்கே இருந்திடத் தோன்றவில்லை. ரவி முகத்தை ஒருமுறை பார்த்துவிட்டு, “மது, சென்ட்டர்ல கிடையாது… வேற ஹாஸ்பிட்டலருந்து எனக்கு கால் வந்தது. இது வழக்கம்தான்” என்று சமாளித்தாள்.
ரவி ஏதோ பேசியிருக்கிறான், அதனால்தான் கீர்த்தி கிளம்புகிறாள் என்று மதுவிற்குப் புரிந்தபோதும், “சாப்பிட்டு போங்களேன்” என்று கேட்டுப் பார்க்க, “சாரி, போகணும்” என்று கீர்த்தி அழுத்தமாக மறுத்துவிட, இப்படி மறுக்கும் அளவு ரவி என்ன பேசியிருப்பான் என்று மது யோசித்தாள்.
கீர்த்தி, “ஹேப்பி அனிவெர்ஸரி விஷஸ்” என்று பரிசுப் பொருளைத் தர, அதை வாங்கிக்கொண்டு, “தேங்க்ஸ் ஃபார் கம்மிங், பை” என்று மது முறுவலோடு சொல்ல… கீர்த்தியும் முறுவலித்து, “பை” என்று கிளம்பிவிட்டாள்.
கீர்த்தி போனதும் மது ரவியை முறைத்துப் பார்த்தாள். அதுவரை பேசாமல் நின்றவன், “அவ போனதுக்கு எதுக்கு என்னை இப்படிப் பார்க்க?” என்றான்.
“நீதான் ஏதோ சொல்லிருக்க. அதான் பாதில போறாங்க”
“தெளிவா கவுன்சிலிங் கொடுக்கப் போறேன்னு சொல்லிட்டுத்தான போறா, ஏன் அப்புறமும் என்னயவே சொல்ற?” என்றான் கோபமாக.
“அது சும்மா… நீ அவங்க கஷ்டப்படுற மாதிரி பேசிருக்க. அதான் போறாங்க”
“அவளும்தான் நான் கஷ்டப்படுற மாதிரி பேசினா” என்றான் எரிச்சலுடன்.
“ஆனா ஸ்டார்ட் பண்ணது நீயாதான் இருக்கும்”
“நான் ஒன்னும் ஸ்டார்ட் பண்ணல. அவதான் வந்து பேசினா. முதல அவளுக்கு சப்போர்ட் பண்றத நிறுத்து! உன் சந்தோசத்துக்காக ஒரு விஷயம் பண்ணா, எனக்குப் பிடிக்காதுனு தெரிஞ்சும், அவளை இன்வைட் பண்ற!
இது பத்தாதுனு இன்னைக்குப் போய், அவளுக்காக என்கிட்ட கோபத்தைக் காட்டி, என் சந்தோசத்தை ஸ்பாயில் பண்ற. நல்லா இருக்கு மது… ரொம்ப நல்லா இருக்கு” என்று கோபமாக பேசிவிட்டு போனான்.
கீர்த்தி போனதில்… ரவி பேசியதில் மது முகம் ஒருமாதிரி மாறிற்று. யாரும் பார்க்காமல் இருக்க நினைத்தவள், அங்கிருந்த மரத்தின் பின் போய் நின்று கொண்டாள். அவள் வந்து முழுதாய் ஒரு வினாடி கூட ஆகியிருக்காது, “சாரி மது” என்று ரவி வந்து நின்றான்.
கண்கள் சுருக்கியவள், “கீர்த்திதான முதல பேசினாங்கனு சொன்ன, என்ன பேசினாங்க” என்று கேட்க, “அத விட்டுடு மது… இன்னைக்கு நாம இப்படிப் பேசிக்க வேண்டாம்” என்றான் கெஞ்சலோடு.
“அப்போ நீதான் ஏதோ பேசிருக்க”
“அவ விஷ் வந்து பண்ணா…” என்றவன், அதற்கு அவன் திரும்பப் பேசியதைச் சொல்லும் போதே, “ப்ச் ஏன் ரவி நீ…” என்று மது கோபமாகத் தொடங்க, “இரு இரு முடிச்சிக்கிறேன், அதுக்கு அவ சொல்றா நீ பாவமாம்… அன்லக்கியாம், நான் உனக்கு லைஃப் பார்ட்னரா வந்ததுக்கு! ஒத்துக்கிறியா நீ அத” என்றான்.
மது பேசாமல் நிற்க, “அதுமட்டுமில்ல, டேவிட்டும் அன்லக்கியாம், என்னய மாதிரி ஒரு ஃப்ரெண்டு கிடைச்சதுக்குனு சொல்லிட்டுப் போறா” என்றான் ரவி கோபமாக.
‘ப்ச் ஏன் கீர்த்தி இப்படிலாம் பேசனும்?’ என்று மதுவிற்கு தோன்றியது. இருவர் பேச்சிலும் அவளுக்கு உடன்பாடில்லை என்பதால், சற்றுநேரம் அமைதியாக இருந்தாள். அதன்பின், “அவ்ளோ சொன்னேனே உன்கிட்ட, அதுக்காகவாது நீ பார்த்துப் பேசியிருக்கலாமே” என்றாள் சலிப்புடன்.
“என்னமோ நான்மட்டும் பேசற மாதிரி பேசாத மது! அவளும்தான் பேசறா! அது புரியாம அவளுக்காகப் பேசிக்கிட்டு இருக்க”
“யாருக்காகவும் பேசல. ஆனா வந்தவங்க, இப்படிச் சாப்பிடாமா பாதியில போனது… அதும் நீ அப்படிப் பேசினதாலதான் போனாங்கனு நினைக்கிறப்ப, கஷ்டமா இருக்கு. அவ்ளோதான்” என்றாள். அவளுடைய குணம் தெரியும் என்பதால், அதன்பின் அவன் எதுவும் பேசவில்லை… அமைதியாக நின்றான்.
மதுதான், “சரி இப்ப டேவிட் வந்து கேட்டா என்ன சொல்ல” என்றாள்.
சட்டென்று ரவி, “நைஸ் பெர்சன்னு சொன்னியே, பாருடா இவ நம்மளைப் பத்தி இப்படிலாம் பேசறானு சொல்லத் தோணுது” என்றதுமே, “ரவி!!” என்று மது பதற, “சொல்ல மாட்டேன், இப்பதான் சரியாகிட்டு வர்றான், இத சொல்லி தெரபி அஃபெக்ட் ஆகிடக் கூடாது, அதனால சொல்ல மாட்டேன்” என்றான்.
“ம்ம்” என்றவள், “சரி டேவிட் கேட்டா…” என்றாள் மீண்டும்.
“கீர்த்தி சொல்லிட்டுப் போனத… சொன்னா போதும்”
அவளும் சரியென்றாள். பின், “தேட போறாங்க” என்று போகப் பார்த்தவளை, “மது… மது நில்லு” என்று பிடித்து நிறுத்தவும், ‘என்ன?’ என்று அவனைப் பார்த்தாள். அவள் பார்வையில் நடந்ததை நினைத்து சிறு சோர்வும், அவன் மீதான சிறு கோபமும் இருந்தது.
சமாதான குரலில், “சாரி மது… உன்கிட்ட கோபப்பட்டிருக்க கூடாது. அப்புறம் நீ சொன்னத கேட்டிருக்கனும் மது… கேட்காததுக்கும் சாரி சொல்லிக்கிறேன். இன்னைக்கு நம்ம வெட்டிங் அனிவெர்சரி மது, இப்படி என்மேல கோபமா இருக்காதயேன். ப்ளீஸ்… ப்ளீஸ்” என்றான்.
“நீ என்கிட்ட கோபமா பேசறப்ப… அது தெரியலயா”
“அது… அது அதுக்குத்தான் இத்தனை சாரி சொல்றேன் மது” என்றதும், “சாரி சொல்லிட்டா” என்று கேட்க, ‘என்ன சொல்ல?’ என்று தெரியாமல் அவளையே பார்த்து நின்றான். அவளும் அவனைத்தான் பார்த்திருந்தாள்.
சமாதானம் செய்ய முடியாமல் நின்றவனைக் கண்டவளுக்கு, இந்தநாளில் அவன்மீது இப்படிக் கோபத்துடன் இருக்க வேண்டாமென்று தோன்றியது.
அதனால் மற்றதைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, “சரி கோபமா இருக்கல” என்று போகப் போனவளை, மீண்டும் அவன் பிடித்து நிறுத்தவும், “என்ன ரவி” என்று அவள் சலிப்பாகக் கேட்க, “அழகா இருக்க மது” என்றான்.
“அப்பவே எல்லாரும் சொல்லிட்டாங்க. நீ ரொம்ப லேட். அதான் கோபம்லாம் இல்லைனு சொல்லிட்டேன்ல… அதுக்காக நீ எதும் சொல்லாத”
“இல்ல நீ கோபமாத்தான் இருக்க”
“ஆமா கோபம்தான் எனக்கு”
“சரி, என்ன செஞ்சா கோபம் போகும்னு சொல்லு செய்றேன்”
“அப்படியா? ஏதோ சர்ப்ரைஸ்னு சொன்னியே, அத என்னென்னு சொல்லு ரவி, போதும், என் கோபம் போயிடும்”
“வெரி சாரி மது… நீ கோபத்தோடே இருந்துக்கோ… நான் சர்ப்ரைஸ் பண்றப்ப, உனக்கே கோபம் போயிடும்” என்று கிளம்ப, “ரவி… ரவி… என்ன சர்ப்ரைஸ்னு சொல்லிட்டுப் போ ரவி” என்று அவன் பின்னே சென்றாள்!
சொந்தங்கள், நண்பர்கள் சூழ்ந்திருந்த நிலையில்… அதற்கடுத்து இருவரும் கொண்டாட்ட மனநிலைக்கு மாறினார்கள்!!
****************************
இரவு நேர வெனிஸ் நகரம்!
ஒருபக்கம் கட்டிடம்! மற்றொரு பக்கம் கால்வாய்! இடையே சாம்பல் நிற செங்கல்கள் பதிக்கப்பட்ட குறுகலான தெரு. கட்டிட சுவரில் பொருத்தப்பட்ட மஞ்சள் விளக்கு எறிந்து கொண்டிருந்தது. அதன் அடியில்… கால்வாய் கம்பித் தடுப்புகளில் சாய்ந்து கீர்த்தி அமர்ந்திருந்தாள்.
எதிரே இருந்த கட்டிடத்தில் அலைபேசியை நிறுத்தி வைத்து… அமைதியாக அதன் திரையைப் பார்த்திருந்தாள். திரையில் காணொளி அழைப்பில் திலீப் இருந்தான்.
கீர்த்தி அங்கிருந்து கிளம்பி வீட்டிற்கு நடந்து சென்றபோது மீண்டும் திலீப் அழைத்திருந்தான். ‘பார்ட்டி எப்படிப் போகுது’ என்று அவன் கேட்க, ‘தெரியல, நான் வீட்டுக்குப் போய்க்கிட்டு இருக்கேன்’ என்று அவள் சொல்ல, ‘சீக்கிரமா கிளம்பிட்டியா, ஏன்?’ என்று அவன் கேட்க, நடந்ததைச் சொல்லியிருந்தாள்.
உடனே காணொளி அழைப்பில் அவளுக்கு அழைத்தான்!
எப்படியும் திட்டுவான் என்று தெரியும். அதுதான் இத்தனை அமைதியாக இருக்கின்றாள். அவள் நினைத்ததுபோல, “நான்தான் சொன்னேன்ல?” என்று ஆரம்பித்தான்.
அமைதியாக தொடுதிரையையே பார்த்திருந்தாள்.
“சொல்லு? வேண்டாம்னு அன்னைக்கே சொன்னேனே… கேட்டியா?”
பேசாமல் இருந்தாள்.
“பேசு… வேண்டாம்னு நான் சொன்னதைக் கேட்டியா நீ? கேட்டிருந்தா, இப்படி அவன்கிட்ட பேச்சு கேட்க வேண்டியதே வந்திருக்காது”
“ம்ம்”
“என்ன ம்? அவனைப் பத்தி தெரியும்ல… அப்புறமும் அவனுக்குப் போய் ஏன் விஷ் பண்ண, தேவையில்லாத வேலை பார்த்திருக்க! முதல… இப்படித்தான் அவன் பேசுவானு தெரிஞ்சும் எதுக்காக பார்ட்டிக்கு போகனும் சொல்லு”
“நான் டேவிட், மதுக்காக பார்த்தேன்”
“யாரு உனக்கு அவங்க… நீயேன் அவங்களுக்காக பார்க்கனும்?”
“அவங்க எவ்ளோ நல்லா வெல்கம் பண்ணாங்கனு தெரியுமா?”
“ஒன்னு புரிஞ்சிக்கோ கீர்த்தி! அவங்களாலதான் இன்னைக்கு ரவிகிட்ட பேச்சு வாங்கியிருக்க. இது உனக்குத் தேவையா? அவங்ககிட்ட இத சொன்னியா நீ?”
‘இல்லை’ என்ற தலையசைப்புடன், “மது கெஸ் பண்ணிருக்கலாம். ஆனா டேவிட்கிட்ட… அன்னைக்கே சொன்னேன்ல, இதலாம் இப்போ சொல்லிக்கிட்டு இருக்கிறது தப்புனு. விடு… பார்த்துக்கலாம்” என்றாள் சலிப்புடன்.
“விடவா?!” என்று இடைவெளிவிட்டு, “ஆனா ஒன்னு சொல்லிக்கிறேன் கீர்த்தி, உன்னய இப்படி பேசறதுக்கு, என்னைக்காவது அந்த ரவிங்கிறவன் என்கிட்ட அடிவாங்கதான் போறான்” என்றான் கோபமாக.
அவளுக்கும் ரவி மேல் எக்கச்சக்க கோபம் இருப்பதால் திலீப்பின் பேச்சிற்கு ஒன்றும் பேசாமல் இருந்தாள். அந்த அமைதியிலே அவள் கோபத்தின் அளவு புரிந்தது. “சரி, அப்புறமா இத பேசிக்கலாம் கீர்த்தி” என்றுவிட்டு, “நீ டின்னர் சாப்பிட்டியா” என்றான்.
“இன்னும் இல்ல, பசிக்குது. இங்கிருந்து வீட்டுக்குப் போறதுக்குள்ள ரொம்பப் பசிச்சிடும், அதனால் வெளிலதான் சாப்பிட்டுப் போனும்” என்றவள், “ட்ரிப் எப்படி போகுது?” என்று கேட்டாள்.
“நைஸ்… இப்ப கேம்ப் ஃபயர் கேம்ஸ் போய்க்கிட்டு இருக்கு”
“நீ கலந்துக்கலயா?”
“விளையாடிக்கிட்டுதான் இருந்தேன்… இடையில வந்துதான் கால் பண்றேன்”
“போ… போய் ஹன்ட்ரட் பர்ஸன்ட் ட்ரிப்ப என்ஜாய் பண்ணு” என்று, அவனிடம் பேசியபடியே உணவகம் வந்து உணவு வாங்கிவிட்டு, வெளியே வந்து அமர்ந்திருந்தாள்.
“நீ வீட்டுக்குப் போற வரைக்கும் பேசிக்கிட்டு இருக்கேன்” என்று பேச்சைத் தொடர்ந்தான். பயணம் பற்றி, இப்போது அமர்ந்திருக்கும் பொழுதுபோக்கு இடம் பற்றி அவன் சொல்வதைக் கேட்டுக் கொண்டே சாப்பிட்டாள்.
திலீப் பேசும் போதே… இஷா உறவினப் பையன் வந்து அவனை அழைத்தான். ‘பேசிட்டு வர்றேன்’ என்று சொல்லி அந்தப் பையனை அனுப்பிவிட்டான். அதைப் பார்த்த கீர்த்தி, “கால் கட் பண்ணு திலீப், சாப்பிட்டு, நான் வீட்டுக்குப் போய்ப்பேன்” என்று சொன்னாள்.
அதைக் கேட்காமல் அவன் பேசிக் கொண்டிருந்தான். இரண்டு வினாடிக்குப் பின், “திலீப்” என்று சுரேஷ் அழைக்கும் குரல் கேட்டது. உடனே, “கீர்த்தி, அப்பா கூப்பிடறாங்க” என்றான். அவளும் உடனே, “போ, நான் பார்த்துக்கிறேன். பை வைக்கிறேன்” என்றாள். அவனும், “சாப்பிட்டுப் போ, பை குட்நைட், நாளைக்கு கால் பண்றேன்” என்று அழைப்பைத் துண்டித்தான்.
கீர்த்தி அலைபேசியை ‘குவில்ட் பேக்கில்’ வைத்துவிட்டு, சாப்பிடுவதைத் தொடர நினைத்தாள். ஆனால் முடியவில்லை. அதனால் அதை எடுத்துக் கொண்டு, விளக்குகள் வெளிச்சம் படிந்திருக்கும் தெருக்களின் வழியே எதையெதையோ யோசித்தபடி மெல்ல நடந்து வீட்டிற்கு வந்தவள்… கதவைத் திறக்காமல் சற்றுநேரம் அப்படியே நின்றாள்.
வாஞ்சையாக வரவேற்க, வாசற்கதவு திறந்துவிட யாருமில்லா தன்னுடைய தனிமையை நினைத்தவளுக்கு மனமெங்கும் அப்படியொரு வலி. சட்டென்று தலையை உலுக்கி, கதவைத் திறந்து உள்ளே சென்று, தாழ் போட்டுவிட்டு, இலகு உடைக்கு மாறிக்கொண்டு ‘டியூப்லெஸ்’ அறைக்குச் சென்றாள்.
சன்னலை ஒட்டிப் போட்டிருந்த மெது இருக்கையில் அமர்ந்தாள்! சன்னலுக்கு வெளியே இருக்கும் பூஞ்செடிகளைப் பார்த்தாள்! சன்னல் வழியே எட்டி கீழே ஓடும் கால்வாயைப் பார்த்தாள்! அதன் ஒரு ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட ஒற்றை கோண்டோலாவைப் பார்த்தாள்!
அப்படியே இன்றைய நிகழ்வுகளை அசைபோட்டாள்! மது சொன்ன, ‘அம்மா சாரீஸ் இருக்குமே’ என்பது காதிற்குள் வந்து ஒலித்தது. அப்போது போலவே இப்போதும் வலித்தது. கண்ணைக் கரித்தது. ‘அழக்கூடாது’ என்று அவளுக்கு அவளே சொல்லிக் கொண்டு, அலைபேசியை எடுத்தாள்.
அதில் சேமித்து வைத்திருக்கும் அம்மாவின் புகைப்படங்களைப் பார்த்தாள்! பார்க்கப் பார்க்க அம்மா இல்லாததை நினைத்து கண்களில் கண்ணீர் கட்டி நின்றது. அதைக் கட்டுப்படுத்த மிகப் பிரயத்தனம் செய்தாள். பிரயத்தனம் பிரயோஜன படாமல் போவது போலிருக்க, அலைபேசியை வைத்துவிட்டாள்.
நீண்ட நெடிய மூச்சுகள் அடிக்கடி எடுத்தபடி, ‘அம்மா கூட ஸ்பென்ட் பண்ண சந்தோஷமான நாள நினைச்சிக்கோ’ என்று தன்னைத் தேற்றப் பார்த்தாள். நினைக்க நினைக்க தேற்றுவதற்கு பதிலாக தோற்றுப் போவது போலிருக்க, அடுத்தநொடியே அந்த முயற்சியைக் கைவிட்டாள்.
உடனே அங்கிருந்து கீழேயிறங்கி, மெத்தையில் வந்து அமர்ந்து கொண்டாள். அம்மா இழப்பு மட்டுமல்லாமல், வேறு சிலதும் வந்து நெஞ்சை அழுத்தியது. நெஞ்சம் படும்பாட்டை யாரிடமாவது பகிர்ந்தால் நன்றாக இருக்குமென்று தோன்றியது. ஆனால் யாரிடம் என்றொரு கேள்வியில் நெற்றியைப் பிடித்துக் கொண்டு உழன்று கொண்டிருந்தாள்.
நண்பனென்று ஒருவன் இருந்தாலும், ‘யாரிடம்?’ என்ற கேள்வி அவளுக்கு இருக்கத்தான் செய்தது. அம்மாவைப் பற்றி அவனது அபிப்பிராயம் தெரியும் என்பதாலும், அதில் முற்றிலும் அவள் முரண்பட்டு இருப்பதாலும் ‘யாரிடம்?’ என்றொரு கேள்வி இருக்கத்தான் செய்தது!
சட்டென எழுந்து கண்ணாடி முன் சென்று, ‘என்ன இது? ஸ்டே ஸ்ட்ராங்’ என்று சொல்லி மனதைச் சமாதானப்படுத்த பார்த்தாள். ஆனால் மனம் சமாதானம் கொள்ளாமல் சங்கடப்பட்டபடி இருந்தது. எத்தனை பேரின் மனக்காயத்தை என் வார்த்தைகள் ஆற்றியிருக்கின்றன, என் காயத்தை ஆற்ற வார்த்தைகள் இல்லயா என்று கண்ணாடியைப் பார்த்துக் கேட்டுக் கொண்டாள்.
‘என்னை நானே சமாதானம் செய்து கொள்ளும் தனிமை என்னை மிகவும் அழுத்துகிறது’ என்ற வலி, வேதனையில் நின்றவளுக்கு… அழுது விடுவோமோ என்று தோன்றவும் அலம்புத் தொட்டி முன் சென்று, அள்ளி அள்ளி தண்ணீரை முகத்தில் அடித்துக் கொண்டாள்.
‘என்றுமில்லாமல் இன்று ஏன் கீர்த்தி இப்படி?’ என்று புரியாமல் ஒரு கேள்வி எழுப்பினால், ‘அவளது வாழ்வில் இருக்கின்ற வெற்றிடத்தால்… அதன் தாக்கம் இன்று அளவிற்கு அதிகமாக இருப்பதால், அவள் இப்படித் தவிக்கிறாள்’ என்று வெனிஸ் நகரம் பொறுமையாகப் பதில் சொன்னது.
புரிந்ததை வைத்து, ‘அம்மாவின் இழப்புதான் வெற்றிடம், அப்படியென்றால் அப்பா? அவளது மற்ற உறவுகள்?’ என்று வினா தோன்றினால், ‘அம்மாவைச் சார்ந்த எந்த உறவுகளையும் அவள் உறவாக நினைப்பதில்லை’ என்பதுதான் வெனிஸ் தந்த சுருக்கமான விடை!
‘ஏன் அப்படி’ என்றபடி கீர்த்தியைப் பார்த்தால், அவளோ சாற்றிய அறைக்குள் இருந்துகொண்டு சங்கடப்படும் மனதைச் சமாளிக்க முடியாமல், விரைந்து சென்று கதவைத் திறந்து, வாசற்படியில் அமர்ந்தாள். அழுதுவடியும் மஞ்சள் விளக்கொளி காட்டும் ஆளரவமற்ற தெருவைப் பார்த்தபடி இருந்தாள்.
வெகுநேரம் அப்படியே இருந்தவளுக்கு ஏதோ ஒரு நொடியில், கண்ணீரை ஏன் கட்டுப்படுத்த நினைக்கிறேன்… அழுவது பலவீனம் அல்லவே…. வாய்விட்டு அழுதால் பாரம் குறையுமே… என்றெல்லாம் தோன்ற, ஒரு வெற்றுப் புன்னகை அவளிடம் வெளிப்பட்டது.
அடுத்தநொடி, ‘ஒய் இஸ் லைஃப் ஸோ அன்ஃபேர் டு மீ [why is life so unfair to me?]’ என்று வாய்விட்டுச் சொல்லி, வெடித்து அழுதுவிட்டாள்! அடுத்தடுத்த வந்த நொடிகளெல்லாம் தேம்பித் தேம்பி அப்படியொரு அழுகை அழுதாள் கீர்த்தி!!
இரவின் கருமையும், தனிமையும் என்றுமே கொடுமைதான்!!