Kathambari Novels
அத்தியாயம் – 11
அடுத்த நாள்!
விசாலமான வட்டவடிவ அறை! அன்னாந்து பார்க்கும் உயரத்தில் இருந்தது அதன் உட்கூரை! அதில் பாரம்பரிய ஓவியங்கள் வரையப்பட்டிருந்தன! அவை பெரும்பாலும் நீலம், இருளான சிவப்பு, கருப்பு, கபிலம், சாம்பல், வெள்ளை நிறங்களில் வண்ணம் தீட்டப்பட்டிருந்தன!
இதே பாணி ஓவியங்கள் தங்க நிறத்தில் சட்டமிடப்பட்டு, சுவர்களிலும் மாட்டி வைக்கப்பட்டிருந்தன! ஒவ்வொரு ஓவியத்திற்கு இடையேயும் சுவர் விளக்கு ஒளிர்ந்தது. அறைச் சுவர்களில் குறிப்பிட்ட இடைவெளியில் வெண்ணிற மென்பூம்பட்டுத் துணியாலான திரைச்சீலைகள் தொங்க விடப்பட்டிருந்தன.
அறை மையத்தில் கபில நிற மென்பட்டு மேசை விரிப்பு விரிக்கப்பட்ட நீள் செவ்வக மேசை இருந்தது! அதைச் சுற்றி தந்தநிற மெதுஇருக்கை கொண்ட நாற்காலிகள் போடப்பட்டிருந்தன! மேசை, நாற்காலி கால்கள், தாங்கிகள் தங்க நிறத்தில் இருந்தன!
வெள்ளை பீங்கான் தட்டுகள், பளபளக்கும் முள் கரண்டிகள், தேக்கரண்டிகள், கண்ணாடி டம்பளர்கள் என்றிருந்த மேசை நடுவே பெரிய கேக் இருந்தது!
இதுபோக சிறிய வட்டவடிவ மேசைகள், நாற்காலிகள் அங்கங்கே இருந்தன! இவையும் பெரிய மேசை போலவே அலங்கரிக்கப்பட்டிருந்தன! தரைமுழுதும் பூ வேலைப்பாடுகளுடன் கூடிய சிவப்பு கம்பளங்கள் விரிக்கப்பட்டிருந்ன!!
அளவான எண்ணிக்கையில் கொத்து விளக்குகளும், சர விளக்குகளும் அறை முழுதும் மங்களான மஞ்சள் வெளிச்சத்தை வீசிக்கொண்டிருந்தன!
கிட்டத்தட்ட அரண்மனையின் அறை போல இருந்தது. இங்கேதான் ரவி, மது திருமண நாள் கொண்டாட்டம் நடக்கிறது!!
இந்த அமைப்புகளை எல்லாம் ரசித்தபடி கீர்த்தி நின்றாள். அப்போதுதான் வந்திருந்தாள். அக்கணம் அவள் தோளில் ஒரு கை படவும், திரும்பிப் பார்க்க, “ஹாய் கீர்த்தி” என்று மது புன்னகைத்து நின்று கொண்டிருந்தாள்!
அவளின் அலங்காரங்களை, அழகை பார்த்த கீர்த்தி அசந்து போய் நின்றாள். அப்படியே, “மது யூ லுக் ஸோ கார்ஜியஸ்!” என்றாள்.
தலைசாய்த்து சிரித்து, “தேங்க் யூ, எல்லாரும் சொன்னாங்க” என்றாள்.
அது இன்னும் அவளை அழகாய் காட்டிட, “டிரஸ், ஜுவல்ஸ் ரொம்ப அழகா இருக்கு” என்றாள் கீர்த்தி.
“நல்லாருக்குல… என் அப்பா கிஃப்ட் பண்ணாங்க” என்றவள், “அப்புறம் கீர்த்தி, எங்க ஃபேமிலில எல்லார்கிட்டயும் உங்களைப் பத்தி சொன்னேன். எல்லாரும் உங்களைப் பார்க்கணும்னு சொன்னாங்க” என்றாள் சந்தோஷமாக.
இதைச் சொல்லி முடிக்கையில் நடுத்தர வயது பெண்மணி ஒருவர் வர, ‘ரவி பெரியம்மா’ என்றாள் கீர்த்தியிடம். அக்கணம் வெனிஷிய தோற்றத்தில் இரு இளைஞர்கள் வர, ‘இது டேவிட் கசின்ஸ்’ என்று சொன்னாள். அவர்களிடமும் ‘இதுதான் கீர்த்தி, டேவிட் தெரபிஸ்ட்’ என்று அறிமுகம் செய்தாள்.
சில நொடிகள் கீர்த்தியுடன் பேசிவிட்டு அவர்கள் போனதும்… மது, “என்கூட வாங்க” என்று கீர்த்தியை அழைத்துச் சென்று தன் பெற்றோரிடம், “டேவிட் தெரபிஸ்ட்” என்று அவளை அறிமுகம் செய்தாள். அவர்கள் ஓரிரு நிமிடங்கள் கீர்த்தியிடம் பேசிவிட்டுச் சென்றார்கள்.
பின் மது, “பாருங்க நிறைய பேர் சாரீல வந்திருக்காங்க. நீங்களும் சாரீ கட்டி வந்திருக்கலாமே” என்று சொல்ல, “என்கிட்ட இல்ல மது” என்றாள் கீர்த்தி.
“அம்மாவோட சாரீஸ் இருக்குமே”
அடுத்தநொடியே நெஞ்சமெங்கும் சுளீரென வலி பரவி, நெஞ்சை அடைத்தது கீர்த்திக்கு! ஓரிரு நொடிகள் சிறிதும் அசையாமல் நின்றாள்! அதற்கடுத்த நொடி சட்டென்று சுதாரித்துக் கொண்டு, “ஏன் இந்த டிரஸ் நல்லா இல்லயா மது” என்றாள்.
“நல்லா இருக்கு. ஆனா சாரீ இன்னும் நல்லா இருக்கும்ல”
அந்தச் சிறு இடைவெளியிலே வலிக்கும் நெஞ்சை சமாளித்துச் சரி செய்து கொண்டவள், “நல்லாதான் இருக்கும, ஆனா கீர்த்திக்கு சாரீ கட்ட தெரியாதே. சொல்ல வேண்டாம்னு நினைச்சேன். சொல்ல வச்சிட்டிங்க” என்று ஏதோ ஒன்றைச் சொல்லி சிரித்தாள்.
“யாரோங்கிற மாதிரி சொல்றீங்க” என்று மதுவும் சிரிக்க, “சும்மாதான்” என்று கீர்த்தி சொல்ல, அப்போது மதுவை யாரோ அழைக்க, “கூப்பிடறாங்க. இருங்க வர்றேன்” என்றுவிட்டு போனாள்.
போன வேகத்தில் திரும்ப வந்து, “சொல்ல மறந்துட்டேன் கீர்த்தி… ஸ்லைடர், ஃபிரைட் சான்ட்விச்… இன்னும் நிறைய ஸ்னாக்ஸ் வெரைட்டி வெளிய லான்ல இருக்கு. அப்புறம் அங்க…” என்று சொல்லும் போதே, “நான் பார்த்துக்கிறேன் மது. கூப்பிடறாங்க பாருங்க… நீங்க போங்க” என்றாள் கீர்த்தி.
“கண்டிப்பா நீங்க சாப்பிட்டிருக்கனும்” என்றுவிட்டு மது போனாள். கீர்த்திக்கு இப்போது எதுவும் சாப்பிடத் தோன்றவில்லை. அதனால் அங்கேயே அமர்ந்து கொண்டு… இந்திய மற்றும் வெனிஸிய முகங்கள், அவர்களது அணிகலன்கள், ஒப்பனைகள், உடைகள், அவற்றின் வண்ணங்கள், வடிவமைப்புகள்… எல்லாம் பார்த்தபடி இருந்தாள்.
சற்று நேரத்திற்குப் பின், “ஹாய்” என்று டேவிட் அவள் பக்கமிருந்த மெது இருக்கையில் வந்தமர்ந்தான். “ஹாய்” என்றாள் புன்னகையுடன். பின், “என்ன இவ்ளோ டல்லா இருக்கீங்க… ட்ரெஸும் ரொம்ப நார்மலா இருக்கு” என்றாள்.
“நீங்க மட்டும்தான் சொல்லாம இருந்தீங்க. இப்ப நீங்களும் சொல்லிட்டீங்க”
“எல்லாரும் கேட்டாங்களா?”
“ம்ம்”
“அப்புறம் கேட்காம என்ன பண்ணுவாங்க” என்று சட்டென சொல்லி, “திடீர்னு என்னாச்சு? நேத்து நல்லாதான பேசினீங்க. இப்ப ஏன் இப்படி டேவிட்?” என்று அமைதியாகக் கேட்டாள்.
“என்னால செலிப்ரேஷன் மூடுக்கு அடாப்ட் ஆக முடியல. லாஸ்ட்டா பார்ட்டி வச்சது மது பர்த்டேக்கு. அப்ப அப்பாவும் இருந்தாங்க. காலையிலருந்து அந்த மெமரி… ம், அப்பா ஞாபகமாவே இருக்கு”
“புரியுது டேவிட். உங்க கவலையை எல்லார்க்கு முன்னவும் காட்டாம, தனியா இருக்கிறப்ப காட்டிக்கோங்க, இல்ல அப்புறமா என்கிட்ட சொல்லிக்கோங்க. க்ளோஸ் ஃப்ரண்ட்ஸ் அனிவர்சரி பார்ட்டில இப்படி இருக்கலாமா? இதனால அவங்க சந்தோசம் குறையும்ல”
“நீங்க சொல்றது சரிதான். ரவியும், மதுவும் ரொம்ப பீல் பண்றாங்க… பட் அத வெளிய காட்டிக்கல. நான் இப்படி இருக்கிறதால வந்திருக்கவங்க கொஞ்சம் டல்லாயிட்டாங்க”
“அப்புறமென்ன, அவங்களுக்காவது… ரொம்ப வேண்டாம், ப்ரசென்ட்டபிளா இருக்கலாம்ல?”
“நெக்ஸ்ட் டைம் நீங்க சொல்ற மாதிரி இருக்கப் பார்க்கிறேன்”
அதற்குமேல் அவனை வற்புறுத்தாமல், “ம்ம் சரி” என்றாள்.
அதன்பின் இருவரும் பேசிக் கொள்ளவில்லை. கீர்த்தி அலைபேசி பார்த்துக் கொண்டே சூழலைப் பார்த்தாள். சற்றுநேரம் அவள் கூறியது பற்றி டேவிட் யோசித்தான். பின் வந்திருப்போரைப் பார்த்தான். கொண்டாட்டத்திற்காக வந்திருந்தாலும், தன்னைப் பார்க்கவென்றும் வந்திருப்பார்கள்! தான் இப்படி இருந்து… அவர்களைக் கஷ்டப்படுத்தலாமா?!
ரவி, மதுவைப் பார்த்தான்! இன்று அவர்களது தினம்! இந்த நாளில் அவர்கள் எப்படி இருக்க வேண்டும்? மனம் நிறைந்த மகிழ்ச்சியுடன் அல்லவா இருக்க வேண்டும்! தன்னை நினைத்து மனவருத்தத்துடன் இருக்கலாமா?!
இரண்டு கேள்விக்கும் பதில் ‘கூடாது’ என்று வந்தது. உடனே, “வீட்டுக்குப் போய் டிரஸ் சேஞ் பண்ணிட்டு வர்றேன்” என்று கீர்த்தியிடம் சொல்லி எழுந்து போனான். சற்றுநேரம் கழித்து வந்தவனைப் பார்த்த மது, “டேவிட்!” என்று ஆச்சரியமாக… ஆனந்தமாக அழைத்து, “இப்பதான் நல்லா இருக்கு” என்றாள்.
அவள் சொல்லி முடிக்கையில், ரவி உறவினர் இருவர் வந்து, ‘இனி இப்படியே இரு’ என்று சந்தோஷமாகச் சொல்லிவிட்டுப் போனார்கள். டேவிட் தந்தை வழி உறவுகள் வந்து, அவன் தோற்றத்தின் மாற்றம் கண்ட மகிழ்வில், அவனை ஆரத்தழுவிச் சென்றார்கள்.
திரும்பவும் மது, “ரொம்ப நாளைக்கப்புறம் உன்னய இப்படிப் பார்க்கிறதுக்கு சந்தோஷமா இருக்கு டேவிட்” என்று சொல்ல, “இனி இப்படியே இருக்க ட்ரை பண்றேன்” என்றவன், “ரவி எங்க?” என்றான்.
இதைக் கேட்கும் போது, அவன் கண்கள் நண்பனைத் தேடின. ஆம், அவனை இப்படிப் பார்த்தால்… எல்லாரையும் விட, ரவி அதீத சந்தோசம் கொள்வான்! அதனாலே இந்தத் தேடல்… கேள்வி எல்லாம்!
“உன்னை இப்படிப் பார்த்தா சந்தோஷப்படுவான்னுதான கேட்கிற” என்றவள், “லான்ல இருக்கிறான், அவனோட கசின்ஸ்கூட” என்று கூறிவிட்டு, “கீர்த்தி வந்திருக்காங்க, பார்த்தியா?” என்று கேட்டாள்.
“ம், பார்த்துட்டேன்” என்றபோது, ரவி அண்ணன் வந்து நின்றான். ‘பேசிக்கிட்டு இருங்க’ என்று மது வந்திருக்கும் உறவுகளைக் கவனிக்க சென்றுவிட்டாள். ரவி அண்ணன் பேசி முடித்ததும், டேவிட் நண்பனைப் பார்க்கச் சென்றான்.
வட்ட வடிவ விசாலமான புல்வெளி பகுதி! அதன் ஓரங்களில் சிறு செடிகள்! அதன் இடைவெளிகளில் பேரொளி வீச விளக்குகள் வைக்கப்பட்டிருந்தன! ஒருபகுதியில் இருந்த ஆறேழு மரங்களின் குறுக்கேயும், நெடுக்கேயும் குமிழ் வடிவ விளக்குகள் சரமாக கோர்க்கப்பட்டு தொங்கவிடப்பட்டிருந்தன!!
இங்கேதான் ரவி… அவனது ஒன்றுவிட்ட சகோதர, சகோதரிகளுடன் பேசிக் கொண்டிருந்தான். டேவிட் வந்து நின்றதும், அவன் உடை மாற்றம் கண்டு, ரவி உறவின பிள்ளைகள் கூச்சலிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். துடிப்பாக டேவிட்டுடன் பேச ஆரம்பித்தார்கள்.
கேட்ட கேள்விக்கு அவனும் ஓரிரு வார்த்தைகளில் பதில் சொன்னான்!
ரவி பேசாமலே நின்றான்!! பல மாதங்களுக்குப் பின்னர் டேவிட்டை இப்படிப் பார்த்ததில் அவனுக்குப் பேச்சே வரவில்லை!! களிப்பில் கண்கள் கலங்கின!! உடனே, ‘இதோ வர்றேன்’ என்று போக போனவன், ‘இப்படியே இருடா’ என்று டேவிட்டிடம் சொல்லிவிட்டு… மதுவைப் பார்க்கப் போனான்.
வந்தவன்… முகமலர்ந்து யாரிடமோ பேசிக் கொண்டிருந்த மதுவை தனியாக அழைத்து வந்து, “டேவிட்ட பார்த்தியா?” என்றான் மகிழ்ச்சியாக.
முகமெங்கும் சிரித்து இருப்பவனைப் பார்த்து, “ம், நீ பார்த்திட்டியா” என்றாள்.
“எத்தனை மாசமாச்சு மது… இப்படி அவனைப் பார்த்து” என்றவன், “லான்ல இருக்கான். முன்னமாதிரி இல்ல, பதில் பேசறான். கொஞ்சம் சிரிச்சி பேசினா, இன்னும் நல்லா இருக்கும்” என்றான்.
“நீ ஆசைப்படற மாதிரி கண்டிப்பா நடக்கும்! இவ்ளோ சேஞ்சஸ் வந்திருக்கே, அத நினைச்சி சந்தோசப்படு. நீ வேணா பாரு… இன்னும் கொஞ்ச நாள்லயே டேவிட் கம்ப்ளீட்டா முன்னமாதிரி வந்திடுவான்” என்று சொல்லிக் கொண்டே வந்தவள், “அதெல்லாம் கீர்த்தி பார்த்துப்பாங்க” என்றுவிட்டாள்.
சட்டென முகம் மாற, “இப்போ எதுக்கு அவளைப் பத்தி பேசுற” என்றான்.
“அவங்கதான தெரபி கொடுக்கிறாங்க, அதான் சொன்னேன்” என்றபின்னும் அவன் முகம் கடுகடுவென இருக்க, “ரவி, நாங்க இன்வைட் பண்ணத மதிச்சி வந்திருக்காங்க. இன்னைக்கு எதுவும் அவங்களைப் பேசிடாத” என்றாள்.
“எனக்கு அவகூடலாம் பேசற ஐடியாவே இல்ல. நீயும் அவ பேச்ச எடுக்காம இரு” என்று எரிச்சலாக சொன்னவன், “என்ன… அவ இங்க வந்தும் டேவிட்டுக்கு கவுன்சலிங் கொடுக்கிறாளா” என்றான்.
“அதெல்லாம் தெரியாது… ஆனா அவங்களை எதும் பேசி வச்சிடாத”
“சும்மா சொன்னதயே சொல்லிக்கிட்டு இருக்காத! என்கிட்ட இத்தனை தடவ சொல்றியே, ஒருதடவையாது நீ அவகிட்ட… என் ஹஸ்பண்ட்கிட்ட கொஞ்சம் மரியாதையா பேசுனு சொல்ல மாட்டியா?” என்று வேகமாக பேசினான்.
அவன் பேசிய தொனியில், “கோபமா ரவி” என்று கேட்டாள். அவள் கேட்ட விதத்தில்… நொடிக்குள் முகத்தை மாற்றிக் கொண்டு, “ச்சே ச்சே கோபம்லாம் இல்லயே” என்றான்.
பட்டுவேஷ்டி, சட்டை என்று திருமண நாளுக்குரிய களையுடன் இருந்தவனை சற்றுநேரம் பார்த்தபடி இருந்தாள். பின், “ரவி” என்றழைத்தாள். “ம்” என்றான். ஆனால் அவள் முகம் பார்க்கவில்லை.
“ரவி என்னய பாரேன்” என்றதும்… அவன் அவள் முகம் பார்த்ததும், “கேக் பக்கத்திலருந்து உன்கூட செல்ஃபீ எடுக்கனும்” என்று ஆசையாகக் கேட்க… பட்டுப்புடவை, பொன்னகைகள் என்று இருப்பவளைப் பார்த்தவன், “அதவிட வேற என்ன வேலை, வா… வா” என்று அழைத்துச் சென்றான்.
அவன்கூட நடந்தவள், “ரவி எனக்கொரு சர்ப்ரைஸ் இருக்குனு சொன்னியே, அதென்ன” என்று கேட்க, “அது கொடுக்கிறப்ப தெரிஞ்சிக்கோ” என்றதும், “ப்ச் எத்தனை தடவை கேட்கிறேன், சொல்றியா நீ… போ” என்றாள் மது.
ஏதோ சலிப்புடன் சொன்ன மாதிரி இருந்தாலும், அவள் முகத்தில் அன்றைய நாளுக்கான… இத்தனை வருடக் காதலுக்கான சந்தோஷம் எக்கச்சக்கமாக நிரம்பித் ததும்பி வழிந்தது.
அதேபோல்… மது விரும்பியபடி சுயபடங்களை, அவள் விரும்பிய விதங்களில் எல்லாம் விருப்பத்துடன் எடுத்துக்கொண்ட ரவி முகத்திலும் அதே சந்தோஷம் கணிசமாக வெளிப்பட்டது.
இதற்கிடையே புல்வெளி பகுதியிலிருந்து அறையினுள் வந்த டேவிட்… கீர்த்தி இருக்குமிடம் வந்து நிற்கவும், “இப்போதான் வர்றீங்களா?” என்று அவனைப் பார்த்து மெலிதாக புன்னகைத்துக் கேட்டாள்.
“அப்போவே வந்துட்டேன். கசின்ஸ் பேசிக்கிட்டு இருந்தாங்க” என்றவன், “ஏன் இங்கயே இருக்கிறீங்க… கொஞ்ச நேரம் லான்ல போய் இருக்கலாமே” என்று கேட்க, “நானும் போலாம்னுதான் நினைச்சேன்” என்று சொல்லியபடி கீர்த்தி எழுந்து கொள்ள, இருவரும் புல்வெளி பகுதிக்கு வந்தனர்.
அந்த இடத்தின் அலங்காரங்களைப் பார்த்தவள், “நைட் ஸ்கை, இங்க இப்படி லைட் டெகரேஷன் பார்க்கவே நல்லா இருக்கு” என்றாள். “ம்ம்” என்று மட்டும் சொன்னவன், “கீர்த்தி… ப்ரீ-டின்னர் ஸ்னாக்?” என்று கேள்வியாகக் கேட்டான். ‘சாப்பிடலாம்’ என்று தோன்றியதால், ‘அது எங்கே’ என்று பார்த்தாள்.
“வாங்க” என்று டேவிட் கூட்டிச் சென்றான். அந்தப் புல்வெளியில் மற்றொரு பக்கம் வந்தார்கள். அங்கே நீளமான மேசையில், சிவப்பு ஒண்பட்டுத்துகில் [satin] விரிக்கப்பட்டு, அலங்கரிக்கப்பட்ட விதவிதமான சிற்றுண்டிகள் இருந்தன. வெள்ளை பீங்கான் தட்டுகள் ஒரு ஓரத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.
அதிலிருந்து ஒன்றை எடுத்து, கார்ன் கேக் மற்றும் கார்லிக் சீஸ் டிப் எடுத்துக் கொண்டு, சற்றுத் தள்ளியிருந்த மரச் சாய்விருக்கையில் சென்று அமர்ந்து கொண்டாள். அவளுடனே அவனும் வந்தமர்ந்தான்.
அவன் எதுவும் எடுக்காமல் வந்திருந்ததால், “நீங்க சாப்பிடலயா” என்று அவள் சாப்பிட்டபடியே கேட்க, “ஐ ஹேவ் ஆல்ரெடி ஹேட் இட்” என்றபோது, ‘டேவிட் வாப்பா, கேக் கட் பண்ண போறாங்க’ என்று ரவி அம்மா அழைத்தார்.
“கூப்பிடறாங்க, இருங்க” என்று எழுந்து இரண்டடி தூரம் போனவன் திரும்ப வந்து நின்று, “கீர்த்தி” என்று அழைக்கவும்… குனிந்து அலைபேசியை பார்க்க ஆரம்பித்தவள், “ம்ன்?” என்று கேள்வியாக நிமிர்ந்து பார்க்க, “இப்ப ஓகேவா, ப்ரசென்ட்டபிளா இருக்கேனா?” என்று கேட்டு நின்றான்.
அவன் கேட்ட கேள்வியை யோசித்தபடி… அவனையே பார்த்தாள். கருப்பு நிற பேன்ட்-ஷர்ட், ஆலிவ் நிறத்தில் ப்ளேசர், வெண்ணிற போட்-ஷு, வெனிஷிய முகம் என்றிருப்பவனை… பதில் சொல்லிட மறந்து பார்த்திருந்தாள்!
அவனும்… என்ன பதில் வரும் என்று அவளையே பார்த்தான். நீல நிற டீ-ஷர்ட் மிடி ஸ்கேட்டர், மஞ்சள் வண்ண பாய்ன்டட் டோ ஹீல்ஸ், விரித்து விடப்பட்ட கூந்தல், இந்திய முகம் என்றிருந்தவளை கேட்ட கேள்வியை மறந்து பார்த்து நின்றிருந்தான்!
இரவின் இருட்டில், குமிழ் விளக்குகள் வெளிச்சத்தில், ஓரிரு நொடிகள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து இருந்தனர். பின் விழியும் விழியும் பார்த்தபடி சில நொடிகள் இருந்தனர். பின் சட்டென மனம் சடசடக்க பார்வையை வேறுபுறம் மாற்றிக் கொண்டனர்!
‘ஏன் இவர்கள் இப்படி’ என்று இரவின் கருமை அமைதியாகக் கேள்வி கேட்க, ‘கண்கள் சந்தித்தே இருந்ததில், இருவரின் உள்ளத்திலும் தோன்றியது ஒருவித உணர்வு! அது… இதுவரை இருவருக்கும் யாரிடமும்… எவரிடத்தும் வந்திடாத புதுவரவு! அதனாலே இப்படி’ என்று வெனிஸ் சத்தமாகப் பதில் சொன்னது!!