Kathambari Novels
அத்தியாயம் – 10
கீர்த்தி நிற்கவில்லை என்றதும்… ஓடி வந்த தீலிப், “என்னம்மா சொன்னீங்க அவளை?” என்று ராதிகாவிடம் கோபப்பட, “அவளை எதுக்குடா நீ இங்க வர சொன்ன?!” என்று அவரும் கோபப்பட்டுப் போய்விட்டார்.
‘கீர்த்தி கீர்த்தி’ என்று ஓடிச் சென்று திலீப் அவள் முன் நிற்கவும், “என்னய ஏன் இங்க வரச் சொன்ன திலீப்?!?” என்று கோபத்துடன் கேட்க, “கீர்த்தி” என்றான் காற்றாகிப் போயிருந்த குரலில்.
“எதுக்கு வரச் சொன்ன, அத சொல்லு” என்று குரல் உயர்த்தினாள்.
“ஒன்னு சொல்லனும்னு நினைச்சேன்”
ராதிகா பேச்சால் வந்த வலியின் வெளிப்பாடாய், “எதுனாலும் ஃபோன்லயே சொல்ல வேண்டியதான… இல்ல நீ என் வீட்டுக்கு வர வேண்டியதான… இங்க ஏன் வரச் சொன்ன?” என்றாள் கோபமாக.
கவலையான குரலில், “அம்மா என்ன சொன்னாங்க கீர்த்தி” என்றான்.
உடனே அவள் அமைதியாகிவிட்டாள்!!
அவள் சொன்னாலும், சொல்லாவிடிலும்… ராதிகாவிடம் சென்று அவளுக்காக திலீப் கேள்வி கேட்பான். என்னவொன்று அவள் எதுவும் சொன்னால், அவன் கேட்கும் கேள்விகள் இரட்டிப்பாகி அம்மா பையனுக்கிடையே கடுமையான பேச்சுகள் வளரும்.
அதைத் தவிர்க்க நினைத்ததால் அமைதியாகவே நின்றாள்.
அவள் அமைதியாக இருந்தாலும், என்ன நடந்திருக்கும் என்று அவன் ஊகிக்க முடியும். தேவியைப் பற்றி ராதிகா பேசியிருப்பார். அவள் அம்மாவைப் பற்றி பேசியதும், இவளும் பேசியிருப்பாள். இவள் எதிர்த்துப் பேசினால், தன் அம்மா திரும்ப எப்படிப் பேசுவார் என்று அவனுக்கு நன்றாகவே தெரியும்.
எப்படி ராதிகா கீர்த்தியிடம் நடந்து கொள்ளும் முறை திலீப்பிற்குப் பிடிக்காதோ, அதேபோல் கீர்த்தி, அவள் அம்மாவிற்காகப் பரிந்து பேசுவதும் பிடிக்காது! அதில் அவனுக்குத் துளியும் உடன்பாடு இல்லை. உண்மையில் அவள் அம்மா மீது அவனுக்கு நல்ல அபிப்பிராயம் கிடையாது. அதை ஒருமுறை… ஒரே ஒருமுறை, ‘உன் அம்மாவுக்காக எதையும் நீ பேசாத’ என்று அவளிடம் வெளிப்படுத்தியும் இருக்கின்றான்.
அதற்கு அவள், ‘என் அம்மா பத்தி பேசினா, நான் எப்படிப் பேசாம இருப்பேன், இப்படி இனி என்கிட்ட சொல்லாத’ என்று அவனிடம் கோபப்பட்டிருந்தாள்! மற்றவர்களுக்கு எப்படியோ, கீர்த்திக்கு அவள் அம்மாவைப் பிடிக்கும்; நிரம்பப் பிடிக்கும்.
தேவி விடயத்தில் கீர்த்திக்கும் திலீப்புக்கும் ஒத்த கருத்துகள் கிடையாது. பெரிய முரண்பாடு இருக்கிறது. ஆனாலும் இருவரும் அந்த ஒருமுறை தவிர, அதன்பின் இதுபற்றி பேசாமல் தவிர்த்து, இந்த முரண்பாட்டைப் சுமூகமாகக் கையாண்டு வருகிறார்கள்.
கீர்த்தியின் அதீத அமைதியால், “அம்மா ரொம்பத் திட்டினாங்களா” என்றான் இறுக்கமான குரலில்.
அவன் வருந்துகிறான் என்றதும் கோபத்தை மட்டுப்படுத்தி, மனதின் வலியை மறைத்துக் கொண்டு, “விடு” என்றாள் வரவழைத்த சிறு புன்னகையோடு.
அவன் இறுக்கமாகவே இருக்க, “எதுக்கு வர சொன்ன?!” என்றாள்.
பேசாமல் அவன் கலக்கமாக நிற்கவும், “சரி, அப்புறம் கால் பண்ணி சொல்லு. கிளம்பறேன்” என்றாள். அதற்கும் அவன் ஒன்றும் சொல்லாமல் இருக்க, “விடு திலீப், சொல்றேன்ல” என்றவள், “ராதிகா மேம் ஏதோ ட்ரிப்னு சொன்னாங்க, என்ன அது?” என்று பேச்சை மாற்றினாள்.
“அத சொல்லத்தான் கூப்பிட்டேன். மிலன் போறோம். ஃபேமிலி ட்ரிப். பாலு அரேஞ் பண்ணிருக்கான். ஆறேழு நாள் அங்கதான் ஸ்டே” என்று வேகமாகச் சொல்லி வந்தவன், “அப்பா கூப்பிட்டாங்க கீர்த்தி. நானும் போறேன்… ஸோ உன்கூட பார்ட்டிக்கு வர முடியாது” என்றான் மெதுவாக.
திலீப்பிறகு… அவன் அப்பாவை நிரம்ப பிடிக்குமென்று அவளுக்குத் தெரியும். அவரது வார்த்தைக்கு, விருப்பத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பான் என்றும் தெரியும். அதனால், ‘முதல வர்றேன்னு சொல்லிட்டு, இப்ப ஏன் வரல?!’ என்று கீர்த்தி கேட்டுக் கொண்டிருக்கவில்லை.
மாறாக, “பார்ட்டிக்கு நான் போய்ப்பேன். நீ ஃபேமிலியோட ட்ரிப்ப என்ஜாய் பண்ணு. ஆனா இத ஃபோன்லயே சொல்லிருக்கலாம்” என்றாள்.
“சடனா பிளான் பண்ணிருக்காங்க. டைமும் ரொம்ப இல்ல. இன்னும் நான் எதுவும் பேக் பண்ணல. உன்னய வந்து பார்த்துச் சொல்ல நேரமில்ல… அடுத்து பார்க்கிறதுக்கும் ஆறேழு நாளாகும். அதான் இங்க வர சொன்னேன்”
அவள் ஒன்றும் சொல்லவில்லை. “சரி போய் பேக் பண்ணு, பை” என்று மட்டும் சொல்லி, அங்கிருந்து கிளம்பினாள்.
“பார்த்துக்கோ… எதுனாலும் ஃபோன் பண்ணு. நானும் கால் பண்றேன்” என்று சொல்ல, தலையாட்டிக் கொண்டே போனாள். போகின்றவளைப் பார்த்தபடி நின்றான். இனி அவன் வரும்வரை, அவள் இங்கே தனியாக இருப்பாளே என்ற பெருங்கவலை வந்து, அவனை அரித்தது!
அவள் கண்ணிலிருந்து மறையும் வரை அங்கேயே நின்றான். பின் நேராக ராதிகா முன் போய் நின்றவன், “மா, கீர்த்திய எதும் பேசாதீங்கனு உங்ககிட்ட சொல்லிருக்கேன்ல… கேட்க மாட்டிங்களா?” என்று கத்தினான்.
“எல்லாத்தையும் சொல்லி, உன் அம்மாகிட்ட போய் சன்டை போடுன்னு அவ சொன்னாளா” என்று அவரும் கத்தினார்.
“கீர்த்தி அப்படிச் சொல்ல மாட்டானு உங்களுக்கே தெரியும்”
“என்ன திலீப்… அவளுக்காக அம்மாவ எதிர்த்துப் பேசற” என்று ஆச்சரியமாக இஷா கேட்க, “என்னமோ புதுசா பேசற மாதிரி கேட்கிறீங்க… ப்ச் முதல நீங்க ஏன் இதுல தலையிடறீங்க?” என்று திலீப் பேச… பாலு, “எவளோ ஒருத்திக்காக எல்லார்கிட்டயும் ஏன்டா கத்துற” என்றான் கோபமாக.
கீர்த்தியை… தன் அம்மா திட்டியிருக்கிறார் என்பது திலீப் மனதை வாட்டியது. இப்போது இவர்கள் பேச்சும் ஒருவித எரிச்சலை மூட்டியது. இப்படியான மனநிலையில் இருந்தவன், “ட்ரிப் போற மூடே போயிடுச்சி. நான் வரல. நீங்க மட்டும் போங்க” என்று கத்திவிட்டான்.
ராதிகா ஏதோ பேச வரவும்… சுரேஷ், “போதும் நிறுத்துங்க… என் பையன்கூட டைம் ஸ்பென்ட் பண்ண நினைச்சிதான்… நான் வர்றேன். அவனையும் வரச் சொன்னேன். அத கெடுத்திடாதீங்க” என்றார் கடுமையாக.
பின் மகன் பக்கம் திரும்பி, “வரலைனு சொல்லாத திலீப்” என்று மெதுவான குரலில் சொன்னார். அப்பா இருப்பதைப் பார்த்துப் பேசியிருக்க வேண்டும் என்று திலீப்பிற்கு தோன்றவும், “சொல்லல ப்பா” என்றான் உடனே.
“பேக் பண்ணிட்டியா” என்று அவர் கேட்க, “இன்னும் இல்லப்பா” என்று அவன் சொல்ல, “வா, அப்பா ஹெல்ப் பண்றேன்” என்று அங்கிருந்து மகனை அவன் அறைக்கு அழைத்துக்கொண்டு போய்விட்டார்.
அங்கே சுரேஷ் எதுவுமே செய்யவில்லை! அவருடன் பேசியபடியே திலீப்தான் எடுத்து வைத்தான்! ஆனால் அப்பாவுடன் பேசியதால் அவனுடைய மனநிலை சமன்பட்டு சற்றுச் சாந்தமாகியிருந்தது!!
*************************************
ரீசோல் யுவர் லைஃப், சான் மார்க்கோ!
கீர்த்திக்கு இன்று பெரிதாக வேலை இல்லை. ஒருவருக்கு ஆலோசனை தேதி அனுப்ப நாட்காட்டியைப் பார்த்துக் கொண்டிருந்தாள். தேதிகளைப் பார்த்து முடித்ததும், ‘ம், நாளைக்குத்தான பார்ட்டி’ என்று தனக்குள் பேசினாள்.
‘இன்னைக்கே கிஃப்ட் வாங்கிடணும்’ என்றும் பேசிக் கொண்டவளுக்கு, ஒரு கேள்வி வந்தது! அது ஒரு அவசியமான கேள்விதான்! எனினும் அதற்குப் பதில் தெரியாவிட்டாலும் பரவாயில்லைதான்! ஆனாலுமே அதற்குப் பதில் தெரிந்து கொண்டால் நன்றாகத்தான் இருக்கும்!
‘அட! என்ன ஒரு முரண்பாடான கேள்வி!!’ என்றது வெனிஸ் ஆச்சரியமாக!!
அலமாரியிலிருந்து புத்தகங்களை எடுத்து வைத்தபடி, ‘என்ன செய்ய’ என்று சற்றுநேரம் யோசனையிலே அவள் இருந்தாள். பின் பார்த்துக் கொண்டிருந்த வேலையை நிறுத்திவிட்டு… மேசையருகே வந்தவள், அலைபேசியை எடுத்து டேவிட்டிற்கு அழைத்துவிட்டாள்.
அவன், “ஹலோ” என்றதும், “கீர்த்தி பேசறேன்” என்றாள்.
“ம், ஐ னோ, நம்பர் சேவ் பண்ணிருக்கேன். ஆக்ட்டிவிட்டி, தெரபி பத்தி எதும் சொல்லணுமா” என்று அவன் கேட்க, “இல்ல இல்ல… இது வேற. பார்ட்டிக்காக டேவிட்” என்றாள்.
“வர்றீங்கள?”
“ம்ம், ஒன்னு கேட்கணும், அதான் ஃபோன் பண்ணேன். பார்ட்டி… கேஸூவலா? இல்ல பேமிலி பார்ட்டி மாதிரியா?!”
“எதுக்குக் கேட்கிறீங்க?”
இந்தக் கேள்விக்குப் பதில் தெரிந்து கொண்டு, அதற்கேற்ப உடை அணியவே கேட்டிருந்தாள். ஆனால் அவன் கேள்வி, இதைக் கேட்டிருக்க கூடாதோ என்று தோன்ற வைத்தது. இப்படிக் கேட்டது அதிகப்படியோ என்றும் தோன்றியது. ஆதலால் பேசாமல் இருந்தாள்!
அவள் அமைதி… பேச்சில் ஓர் இடைவெளியைக் கொண்டு வந்தது!
அவன் ஒரு கேள்வியைக் கேட்டான். அதற்கு இன்னும் அவளிடமிருந்து பதில் வரவில்லை. எனினும் “கைன்ட் ஆஃப் பேமிலி பார்ட்டி… க்ளோஸ் ஃப்ரண்ட்ஸ் வருவாங்க” என்று அவள் முந்தைய கேள்விக்குப் பதில் சொன்னான்.
அதாவது… விழுந்த இடைவெளியை தன் பதிலால் நிரப்பினான்!!
“தேங்க்ஸ், பை” என்று அவள் முடிக்க, “பை” என்று அவனும் முடிக்கவும், “டிரஸ் கோட்… செலக்ட் பண்ணதான் கேட்டேன்” என்று அவன் எப்போதோ கேட்ட கேள்விக்கு இப்போது பதில் கூற, “ம் ம்” என்று அலைபேசியை வைத்துவிட்டு, செய்து கொண்டிருந்த செயல்திறனை மீண்டும் தொடர்ந்தான்.
இப்படியே இருந்தவன்… திடீரென என்ன நினைத்தானோ, வேலை செய்வதை நிறுத்திவிட்டு சற்று யோசித்தான். பின் அலைபேசியை எடுத்து, ‘உங்களுக்கு எது கம்ஃபர்டபிளோ அதயே வ்வேர்[wear] பண்ணுங்க’ என்று கீர்த்திக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பினான்.
பின் அலைபேசியை வைத்துவிட்டு… வேலையைத் தொடர்ந்தான்!
கீர்த்தி புத்தகங்களை அடுக்கிக் கொண்டிருந்தாள். குறுஞ்செய்தி ஒலியைக் கேட்டதும்… மேசையருகே வந்து அலைபேசியை எடுத்துப் பார்த்தாள். டேவிட் அனுப்பியதை வாசித்தாள். சில நொடிகள் அப்படியே நின்றாள். பின், ‘சரி’ என்று அனுப்பினாள். அதன்பின், ‘நாளை பார்க்கலாம்’ என்றும் அனுப்பினாள்.
பின் திரும்பவும் சென்று… வேலையைத் தொடர்ந்தாள்!
செயல்திறன் செய்து கொண்டிருந்தவன், செய்தி வந்ததின் ஒலி கேட்டதும், அலைபேசி எடுத்தான். கீர்த்தி அனுப்பியதைப் பார்த்தான். ‘சரி’ என்று பதில் அனுப்பினான். அடுத்து அவளுக்கு அனுப்பிட எதுவுமில்லை என்று தெரியும். ஆனாலும் அலைபேசியைக் கையிலே வைத்திருந்தான்!
அதாவது… வேலையைத் தொடர முடியாமல்… இங்கே ஒரு தடை!!
குறுஞ்செய்தி வந்திருப்பதற்கான ஒலி கேட்டதுமே, கீர்த்தி ஓடி மேசையருகே வந்தாள். அலைபேசி எடுத்து… டேவிட் அனுப்பியதைப் பார்த்துவிட்டு, அதை மேசையில் வைத்தாள். அடுத்து அவனிடமிருந்து செய்தி வரப் போவதில்லை என்று தெரியும். ஆனாலும் அங்கேயே நின்றாள்… திரும்பிச் செல்லவில்லை!
அதாவது அவளும் வேலையைத் தொடரவில்லை… இங்கேயும் ஒரு தடை!!
அந்தநொடியில், ‘இது தடையா… இல்லை, இதுதான் தடுமாற்றமோ?’ என்ற அதிமுக்கியமான கேள்வி வெனிஸ் நகரத்திற்கு வந்தது!!