Kathambari Novels
யோசிப்பார்களா?!
“லேட்டாகுது ண்ணா, கொஞ்சம் வேகமா போங்களேன்” என்று ஆனந்தி ஆட்டோ ஓட்டுனரிடம் அவசரப்பட்டாள்.
அவர்… போக்குவரத்துக்கு நெருக்கடிக்கிடையே கிடைத்த இடங்களில் புகுந்தபடி, “ட்ராபிக் ஜாஸ்தி, எப்படி வேகமா போக?” என்று சொல்ல, வெளியில் இருந்த வாகன நெரிசலைப் பார்த்துவிட்டு, ஆனந்தி ஒன்றும் சொல்லாமல் அலைபேசியை எடுத்துக் கொண்டாள்.
ஆனந்தி, நடிப்பின்மீது ஆர்வமுள்ள பெண். சில தொலைக்காட்சி நெடுந்தொடர்களில் சிறிய வேடங்களில் தோன்றியும் இருக்கிறாள். ஆனால் முக்கிய கதாபாத்திர வாய்ப்பு இதுவரை கிடைக்கவில்லை. அவள் நடித்த கதாபாத்திரங்கள் ஓரிரு காட்சிகளே வரும். இருந்தாலும் அவளுக்கு வரும் எந்தவொரு வாய்ப்பையும் விடமாட்டாள்.
தத்ரூபமாக நடித்து கொடுத்துவிடுவாள்!
அவள் கனவு, ஆசை, லட்சியம் எல்லாமே நெடுந்தொடரில் நாயகியாக நடிக்க வேண்டும் என்பதே. அதற்கான வாய்ப்பைத் தொடர்ந்து தேடி வருகிறாள். இன்று அப்படியொரு வாய்ப்பு வந்திருக்கிறது.
ஒரு பிரபல தொலைக்காட்சி அலைவரிசையில் வரப்போகும் காதல் கதைக்கான நாயகி தேடலுக்காக, நாளிதழில் வந்த விளம்பரத்தைப் பார்த்து, அதில் கலந்து கொள்ள சென்று கொண்டிருக்கிறாள்.
இருபது நிமிடத்திற்குப் பின் புறநகர் பகுதியிலிருந்த திரைப்பட நகர் முன்னே வந்து ஆட்டோ நின்றது. இறங்கி, “தேங்க்ஸ் ண்ணா” என்றவள், பேசியது போல் நூற்றியம்பது ரூபாயை கொடுத்துவிட்டு வேகமாக உள்ளே நடந்தாள்.
எதிரில் தென்பட்ட ஒருவரிடம், “இங்க சீரியல் ஆடிஷன் எங்க நடக்குது?” என்று கேட்டதற்கு, “அந்த பில்டிங் கிரௌன்ட் பிளோர்ல” என்று அவர் ஒரு கட்டிடத்தை கைகாட்டிவிட்டுச் சென்றார்.
அந்தக் கட்டிடம் நோக்கி வேகமாக நடந்து போய், அதன் கண்ணாடி கதவுகளைத் திறக்கையில் கலைந்திருந்த முடிகளைப் பார்த்துவிட்டு, ‘ப்ச், டேக்ஸி பிடிச்சி வந்திருக்கணும்’ என்று குறைபட்டுக் கொண்டே உள்ளே போனாள்.
நான்கு அறைகள் இருந்தன. அனைத்தும் மூடியிருந்தன. அறையின் வெளியே கூட்டமாக நாடகத் தேர்வுக்கு வந்த பெண்கள் நின்றனர். கழுத்தில் அடையாள அட்டை மாட்டிக்கொண்டு சிலர் இருந்தார்கள். அவர்கள் அந்தப் பிரபல தொலைக்காட்சி அலைவரிசையில் வேலை பார்ப்பவர்கள்.
அவர்களிடம் விவரம் கேட்கலாம் என்று நினைத்தவள், அங்கிருந்த ஓய்வறை சென்று பறந்திருந்த தலைமுடிகளை சரிசெய்து வந்தாள்.
அங்கே நின்ற தொலைக்காட்சி அலைவரிசை ஆள் ஒருவனிடம், “சார், சீரியல் ஆடிஷனுக்காக வந்திருக்கேன்” என்று மட்டும் சொன்னாள்.
அவளை ஒருமுறை பார்த்துவிட்டு, “ஃபர்ஸ்ட் பிளோர்ல” என்றான்.
‘அவன் பார்வையின் அர்த்தம் என்ன?’ என்று யோசித்தபடி, “இங்க இத்தனை பொண்ணுங்க நிக்கிறாங்களே… எதுக்கு சார்?” என்றாள்.
“இவங்களும் ஆடிஷனுக்குத்தான் வந்திருக்காங்க” என்றவன், “ரெண்டு சீரியல் ஆடிஷன் இன்னைக்கு நடக்குது. ரெண்டையும் டைரக்ட் பண்றது ஒரே டைரக்டர்தான்” என்றான் கூடுதல் தகவலாக.
“ஓ!” என்று அங்கே நிற்கின்ற பெண்களைப் பார்த்தவள், “இங்க நடக்கப் போறது எந்த சீரியல் ஆடிஷன்?” என்று கேட்டாள்.
“சீரியல் பேரு இன்னும் வைக்கலை. பட் லவ் சப்ஜெக்ட்”
“நான் இதோட விளம்பரம் பார்த்துதான் ஆடிஷன் வந்தேன் சார். நான் இங்கயே வெய்ட் பண்றேன்” என்றாள் ஆவலாக.
மீண்டும் அவளைப் பார்த்துவிட்டு, “இந்த சீரியலுக்காக நாங்க தேடற முகம் வேற. நீங்க மேல போங்க. அந்த சீரியல் உங்களுக்கு கரெக்ட்டா இருக்கும்” என்றான்.
என்ன நினைத்தாளோ அதற்குமேல் எதுவும் கேட்கவில்லை. படியேறி முதல்தளம் போனாள். அங்கேயும் சில பெண்கள் இருந்தார்கள். சிலர் பேசியபடி நின்றார்கள். மற்றவர்கள் நடிப்புத் தேர்விற்காகத் தங்களைத் தயார்படுத்திக் கொண்டிருந்தனர்.
பேசியபடி இருந்த ஒருத்தியிடம் சென்று, “இங்கதான ஆடிஷன்?” என்று கேட்க, “இங்கதான். வெய்ட் பண்ண சொல்லிருக்காங்க” என்றாள்.
“தேங்க்ஸ்” என்று ஆனந்தி முடித்துக் கொண்டாள். அமைதியாக ஒரு இடத்தில் சென்று திரைப்பட நகருக்குள் வாகனங்கள் வந்து போவதை, பல்வேறு பிரிவு ஊழியர்கள் வேலை செய்வதைப் பார்த்தாள்.
கீழே நின்ற பெண்களுக்கும் தனக்கும் உள்ள வேற்றுமையை… இங்கு நிற்கும் பெண்களுக்கும் தனக்கும் உள்ள ஒற்றுமையை… யோசித்தபடி நின்றாள்.
நேரம் கடந்தது!
நாற்பது நிமிடத்திற்குப் பின் மற்றவர்களுக்குத் தேர்வு முடிந்து, இவள் மட்டும் நின்று கொண்டிருந்தாள். ஒருவன் வந்து, ‘அடுத்து வாங்க’ என்று அழைத்ததும் அங்கிருந்த அறைக்குள் சென்றாள்.
உள்ளே போனதும் ஒரு உதவியாளர் பெண் வந்து, “நீங்க அங்க போய் நின்னுக்கோங்க” என்று இரண்டு வெண்குடையின் வழியாக பாய்ச்சி அடிக்கப்பட்ட விளக்கு வெளிச்சத்தை காட்டிட, ஆனந்தி அங்கே சென்று நின்று கொண்டாள்.
‘டைரக்டர்’ என்று ஆங்கிலத்தில் எழுதியிருந்த நாற்காலியில் ஒரு பெண்மணி அமர்ந்திருந்தார். அவர்தான் வளர்ந்து வரும் சின்னத்திரை இயக்குனர் ரவீனா. அவரைச் சுற்றியும் அவரது உதவியாளர்கள் சிலர் நின்று கொண்டிருந்தனர்.
“பாருங்க… இப்போ நாங்க சிச்சுவேஷன் சொல்வோம். அதுக்கு நீங்க ரியாக்ட் பண்ணனும்” என்று ஓர் உதவியாளர் ஆரம்பித்தார்.
“ம்ம்” என்றாள் ஆனந்தி முழுமனதில்லாமல்.
“காலேஜ் கேண்டின்ல ஒரு கேங் உட்கார்ந்து பேசிக்கிட்டு இருக்காங்க. அங்க நீங்க வர்றப்ப, கறுப்பா இருக்கிறதால அவங்க உங்க நிறத்தை வச்சி கிண்டல் பண்ணி பேசறாங்க. அவங்களைத் தைரியமா எதிர்த்து நிக்கிறீங்க” என்றார் உதவியாளர்.
ரவீனா, “சிச்சுவேஷன நல்லா உள்வாங்கிட்டு பர்ஃபார்ம் பண்ணுங்க. டயலாக்ஸ்கூட சொல்ல வேண்டாம். ஆனா முகத்தில ஒரு பவர், கெத்து தெரியணும்” என்றார்.
“ஓகே மேடம்” என்று கண்மூடிய ஆனந்தி கல்லூரி, சிற்றுண்டிச்சாலை, அங்கு அமர்ந்திருந்த கூட்டம் என்று அனைத்தையும் கண்முன் நிறுத்திப் பார்த்தாள்.
அறையிலிருந்த அனைவரும் அவள் முகத்தையே பார்த்திருந்தனர்.
மெல்ல கண் திறந்தவள், “திடீர்னு ரியாக்ஸ்ன வர மாட்டிக்கு. வேற சிச்சுவேஷன் கொடுக்க முடியுமா?” என்றாள்.
உதவியாளர், “ப்ச், என்ன இது” என்று ரவீனாவைப் பார்க்க, ‘இன்னொரு சிச்சுவேஷன் கொடுங்க’ என்பது போல் அவர் தலையசைத்தார்
சற்று யோசித்து, “உங்களைப் பொண்ணு பார்க்க வந்தவங்க, உங்க நிறத்தை காரணம் காட்டி… வேண்டாம்னு சொல்லிட்டுப் போறாங்க. அத தாங்க முடியாம நீங்க அழறீங்க. அந்த உதாசீனத்தை, வருத்தத்தை முகத்தில கொண்டு வரணும்” என்றார்.
“ம்… ஓகே” என்று மீண்டும் கண்கள் மூடி இருந்தவள், ஓரிரு நொடிகளில் கண் திறந்து, “சாரி… சாரி. இதுவும் வரமாட்டிக்கு. வேறெதுவும்?” என்று சொல்ல… அங்கிருந்தவர்கள், ‘இந்தப் பொண்ணுக்கு என்னாச்சு?’ என்று பார்த்திருந்தனர். “ப்ச், சுத்தமா நடிக்க வரலை. அனுப்பிடுங்க” என்று ரவீனா எழுந்துவிட்டார்.
“நடிக்கலாம் வரும் மேம். நீங்க சொன்னதை அக்செப்ட் பண்ணத்தான் முடியல” என்றாள் ஆனந்தி.
“என்ன சொல்ல வர்ற?”
“இந்த சீரியல் ஆடிஷனுக்கு நான் வரலை. கீழ் ஃப்ளோர்ல நடக்கிற ஆடிஷனுக்குத்தான் வந்தேன். ஆனா அங்க இருக்க ஒருத்தர், ‘இது லவ் சப்ஜெக்ட். நீ சரியா இருக்க மாட்ட’னு சொல்லி இங்க அனுப்பிட்டாரு. அவர் ஏன் அப்படிச் சொன்னாரு?”
அனைவரும் அமைதியாக இருந்தனர்.
“ஏன்னா இதுவரைக்கும் அந்த மாதிரி சப்ஜெக்ட்டுக்கு நீங்க செலக்ட் பண்ண ஹீரோயின்ஸ் அப்படி!”
ரவீனா, “இப்போ நீ என்ன சொல்ல வர்ற?” என்றார் எரிச்சலாக.
“என்னை மாதிரி இருக்கிற பொண்ண ஹீரோயினா வச்சி இயல்பான கதையை கொடுக்கவே முடியாதா? அவங்க எப்பவும் சமூகத்தில, வீட்ல ஒதுக்கப்பட்டோ, அசிங்கப்பட்டோதான் சாதிச்சிக் காட்ட முடியுமா? புரட்சியோ, போராட்டமோ செஞ்சாதான் அவங்களுக்கு வாழ்க்கை உண்டா என்ன?”
“இந்த மாதிரி இருக்கவங்களுக்கு சொசைட்டில கலர் டிஸ்க்ரிமினேஷன் பிரச்சனை இருக்குது. சமூகத்தோட பார்வை மாறணும்னுதான் நாங்க எல்லாம் இந்தமாதிரி முயற்சி பண்றோம்”
“அப்படி எதுவும் இல்லை. நான் இங்க ஆடிஷன் வர்றது தெரிஞ்சி… என் காலேஜ் மேட்ஸ், ப்ரண்ட்ஸ் விஸ் பண்ணி அனுப்பினாங்க. வீட்லயும் அப்படித்தான்”
“உன்னைச் சுத்தி உள்ளவங்க உன்னை அக்செப்ட் பண்ணிகிட்டாங்க. ஆனா அது எல்லோருக்கும் அமையாதில்லையா?”
“கரெக்ட் மேம்” என்றவள், “ஆனா திரும்பத் திரும்ப என்னை மாதிரி இருக்கிறவங்களை கேலிக்கு ஆளாகிற மாதிரி, ஒதுக்கப்படற மாதிரி, தாழ்வா நினைக்கிற மாதிரி… காட்டினா என்ன பிரயோஜனம்?” என்று கேட்டாள்.
“அப்புறம் மாற்றம் எப்படி வரும்?”
“வரும்! இப்படி ஒன்னு இருக்குதுன்னு மறுபடி மறுபடி மக்கள் மனசில பதிய வைக்காம, அதை இயல்பா காட்டிறதுனாலயும் மாற்றம் வரும்”
“ப்ச்… என்னதான் சொல்ல வர்ற?”
“மேம்… நீங்க எங்களுக்காக கதை எழுதாம, நீங்க எழுதற கதைக்கு எங்களை செலக்ட் பண்ணினாலே போதும்” என்று கிளம்பினாள்.
போகும் முன், “எனக்கு ஒரு டவுட். கேட்கலாமா?” என்று நிற்க, ‘கேளு’ என்பது போல் ரவீனா முகமொழி இருந்தது.
“ஹீரோ கறுப்பா இருந்ததால சமூகத்தில உதாசீனப்பட்டு, கேலி, கிண்டலுக்கு ஆளாகிற மாதிரி, இல்ல அவங்களையே அவங்க தாழ்வா நினைக்கிற மாதிரி, அதைக் கடந்து சாதிக்கிற மாதிரி எதுவும் கதை, சீரியல் வந்திருக்கா? இல்ல நீங்கதான் எடுக்கறீங்களா? இல்லயே!? ஏன் ஹீரோயினுஸ்க்கு மட்டும் அப்படி?”
பதில் சொல்லாமால் ரவீனா அவளையே பார்க்க, “கொஞ்சம் யோசிங்க மேம். இந்த கலர் டிஸ்கிரிமினிஷேன் எங்க இருக்குதுனு உங்களுக்கே தெரியும்” என்று கிளம்பிவிட்டாள்.
ஆனந்தி சொல்லிச் சென்றதை ரவீனாவும், அங்கிருந்தவர்களும் யோசித்துப் பார்ப்பார்களா?!