Kathambari Novels
நிறுவல் நீக்கம்
சுசீலா, அலுவலகத்திற்கு அவசர அவசரமாக தயாராகிக் கொண்டிருந்தாள். சமைப்பது, ஆறு வயது மகளைப் பள்ளிக்கு கிளப்புவது, முடிந்தவரை வீட்டு வேலைகளைச் செய்து முடிப்பதென பம்பரமாய் சுழன்றாள்.
இதற்கு நேரெதிராய் அவள் கணவன் மனோஜ் சுவற்றைப் வெறித்துப் பார்த்து சோர்வாய், சோகமாய் அமர்ந்திருந்தான்!
மறந்தும் சுசீலாவின் பார்வை கணவன் பக்கம் போகவில்லை!!
மகள் அனுசியாவை… குளிப்பாட்டி, சீருடை அணிவித்து, காலணிகள் போட்டுவிட, அந்தக் குட்டிப்பெண் குடுகுடுவென ஓடி, “பா” என்று மனோஜ் மடியில் ஏறி அமர்ந்து, “ரைம்ஸ் சொல்ட்டுமா?” என்று ஆசையாக கேட்டது.
மனோஜ் பார்வை சுவற்றிலிருந்து மாறி மகளைப் பார்த்தன.
“மய்லே மய்லே ஆடிவா” என்று அனு இடுப்பில் கைவைத்து தலையாட்டி ராகத்தோடு பாட, மகள் விழாமல் இருக்கும்படி பிடித்துக் கொண்டான்.
அடுத்த வரியைப் பாடிவிட்டு, “கோவ பழங்கள் தாறேன்” என்று சைகை செய்து காட்டி, “பச்ச கிளி பந்துவா” என்று பறப்பது போல் கைகளை விரித்தவள், “சிட்டுக்குவ்வி சட்ட போட்டு விடறேன்” என்று முழு பாடலையும் தனது மழலை மொழியில் பாடி முடித்தாள்.
மனோஜ் பார்வை மகள் மீதிருந்தது… எண்ணங்கள் வேறெங்கோ இருந்தன!
அப்பா கழுத்தைக் கட்டிக்கொண்டு, “பா, ஸ்கூல டீச்சரு ரெண்டு முட்டாய் கொத்தாங்க” என்று, ஒன்றை சாப்பிட்டு மற்றொன்றை அப்பாவிடம் நீட்ட, அதை வாங்கிக் கொண்டான்.
ஆனால் சாப்பிடவில்லை!
அந்தக்கணம் சுசீலா வந்து, “அனு வாடா” என்று மகளை அழைக்க, ‘முடியாது’ என்று மறுத்து அப்பா மேல் சாய்ந்து கொண்டு, “பா, பைக் போனும்” என்றாள். மனோஜ் பேசாமல் இருக்க, “பைக்… பைக் போனும்” என்று திரும்ப திரும்ப சொல்லி அனு அடம்பிடித்தாள்.
பள்ளிக்கு அப்பாவுடன் பைக்கில் போகவே ஆசை! முன்பெல்லாம் அவன்தான் அழைத்துச் செல்வான். இப்போது அப்படியில்லை! அதற்கே இந்த அடம்!!
சுசீலா, “அனு நல்ல பொண்ணுதான, அம்மா சொல்றத கேட்கிற செல்லம்தான, ஸ்கூல் வேன் வந்திடும். வாடா வா” என்று கணவன் முகத்தைப் பாராமல் மகளைத் தூக்கி… புத்தக பையை மாட்டிவிட்டு, தெரு முனைக்குச் சென்று அவளை வேனில் ஏற்றிவிட்டு வந்தாள்.
வந்ததுமே வேகமாக இட்லியை எடுத்து வைத்துச் சாப்பிட ஆரம்பித்தாள். ஆனால் அது உள்ளே இறங்குவேனா என்றது. எப்படி இருந்த வாழ்கை இப்படி ஆகிவிட்டதே என்று ஆதங்கம் மனமெங்கும்!
சுசீலா, மனோஜ் திருமண வாழ்வு அழகாக ஆரம்பித்து, நிம்மதியாக சென்று கொண்டிருந்தது! ஒன்றரை வருடம் முன் மனோஜிற்கு ஒரு கெட்ட பழக்கம் ஏற்பட்டது.
அதன்பின் வாழ்க்கை முன்போல் இல்லை!!
அதனால்தான் கணவனிடம் ஒரு ஒதுக்கம் சுசீலாவிற்கு. காலையில் அத்தனை வேலை பார்த்ததில் உண்டான பசியிலும்… இவளால் சரியாக உண்ண முடியாததற்கு காரணமும் அதுவே!
அரையும் குறையுமாய் சாப்பிட்டுவிட்டு மனோஜ் முன் சென்றவள், “சாப்பாடு எடுத்து வச்சிருக்கேன்… சாப்பிட்ருங்க” என்றாள் இயந்திர தன்மையோடு.
“நீ சாப்பிட்டியா?” என்றான் அவள் முகம் பார்த்து.
பதில் சொல்லவில்லை! கோபம்! அப்படியொரு கோபம் அவன்மீது!!
கிளம்பிக் கொண்டே, “என் சாலரி மட்டும் வச்சி… கடன் அடைக்க, வீட்டு வாடகை, அனு ஸ்கூல் பீஸ்… எல்லாம் சமாளிக்க கஷ்டமாதான் இருக்கு, இல்லைனு சொல்லல. ஆனா சமாளிக்க பார்க்கிறேன். நீங்க கண்டதயும் நினைக்க வேண்டாம்” என்றாள் குரல் கரகரக்க.
கடன்? ஆம் கடன்தான்… அதுவும் நிறையவே! எல்லாம் அவனால் ஏற்பட்டதே!
ஒன்றரை வருடத்திற்கு முன்வரை வேலை, சம்பாத்தியம், சேமிப்பு, வீடு, மகள், மனைவி என்று பொறுப்பாய் இருந்தவன்… சுசீலாவை கண்ணுக்குள் வைத்துப் பார்த்துக் கொண்டவன்… அவளுக்கான அக்கறை அவன் கண்களில் தெரிந்து கொண்டே இருக்கும்!
பகிர்ந்து வீட்டு வேலைகள் செய்வது, இருவரும் பொறுப்பெடுத்து மகளைப் பார்ப்பது, ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து வாழ்வது என்று யாராவது பார்த்தால் பொறாமை படும் வண்ணம் அவர்களது வாழ்க்கை இருந்தது!
ஆம் இருந்தது… கடந்தகாலம்! இப்பொழுது அப்படியில்லை!!
கொரோனா காலகட்டத்தில் வேலைப்பளு குறைவாக இருந்தபோது பொழுதைப்போக்க ஆன்லைனில் ரம்மி விளையாட ஆரம்பித்தான். பின்பு பொழுதுகள் எப்படி போகின்றது என்பதே தெரியாமல் விளையாடினான்.
முதலில் அலுவல் வேலை முடித்தபின் விளையாடி, பின் வேலைக்கு இடையே கிடைக்கும் நேரங்களில் விளையாடியவன்… கடைசியில் அதுவே அவனது வேலை என்று ஆகிடும்படி விளையாடினான்!
ஆரம்பத்தில் கிடைத்த வெற்றிகள்… அதற்கான பரிசுத்தொகைகள்… சிலபல ஊக்கதொகைகள்… அவனைக் கைபிடித்து அதற்குள் இழுத்துச் சென்றது.
இச்சிறு வெற்றிகள், பணம், பரிசுத்தொகையினால் தற்காலிக மனமகிழ்ச்சி ஏற்பட்டு, திரும்ப திரும்ப விளையாடினான். ஆனால் விளையாட விளையாட வெற்றி வேண்டுமென பதற்றம் அதிகமாகியது!
அதனால், ‘என்ன நினைக்கிறேன்… முடிவெடுக்கிறேன்’ என்பதை அறியாமலே ஆட்டத்தில் தவறுகள் செய்ய தொடங்கினான்!!
அதன்பின் அவன் ஆடவில்லை… ஆடவைத்த அது அவனை ஆட்டிவைத்தது!!
கைப்பிடித்து அழைத்துச் சென்ற ஆன்லைன் ரம்மி செயலி, விளையாட்டிற்கு மனோஜ் அடிமையாகிவிட்டான்… திரும்பி செல்ல மாட்டான் என்று தெரியவும், அவன் கையை விட்டுவிட்டது… கைவிட்டுவிட்டது!
அது… அவனுக்குத் தந்த தொகையெல்லாம் திரும்ப வாங்க ஆரம்பித்தது!
கையிலிருந்த சேமிப்பு பணத்தைப் போட்டு விளையாடினான். அது தீர்ந்ததும் வெளியே கடன் வாங்கி விளையாடினான்.
முதலில், ‘இது நல்லதில்ல… வேண்டாம். விட்ருங்க’ என்று அறிவுரை கூறினாள். ‘இதுக்காக இவ்ளோ கடன் வாங்காதீங்க. நம்ளால சமாளிக்க முடியாது’ என்று கெஞ்சினாள். ‘எப்போ பார்த்தாலும் என்ன கேம்?! எங்களோட பேசுங்க?’ என்று சண்டை போட்டாள்.
‘மஷினோட போட்டிப் போட்டு ஜெயிப்பேன்னு சொல்றது முட்டாள்தனம்’ என்று எரிச்சல்பட்டு பேசாமலும் இருந்து பார்த்தாள். கடைசியில், ‘நீங்க இப்படியிருந்தா அனு… என்னோட எதிர்காலம் என்னாகும் மனோ?’ என்று கண்ணீரும் வடித்திருக்கிறாள்.
இருவீட்டாரும்கூட அவனுக்கு எடுத்துச் சொல்லிப் பார்த்தனர்!
ஆனால் சுய கட்டுப்பாடின்றி இருந்த மனோ, பல சமயங்களில் இந்த அறிவுரைகளுக்குச் செவி சாய்க்க மாட்டான். சில சமயங்களின் சுசீலா பேச்சுகள் கேட்டு… இனி விளையாட மாட்டேன் என்று உறுதியாக இருப்பான்!
ஆனால் ஒரு நாள்தான் அப்படி! அடுத்தநாளே அந்த உறுதி எங்கே போனதென தெரியாது. மறுபடியும் விளையாடும் எண்ணம் வந்திருக்கும்! பணமிருக்காது, எனவே மேலும் மேலும் கடன் வாங்கி… விளையாடித் தோற்றான்.
இதனால், இந்த ஆன்லைன் ரம்மி விளையாட்டால்… அவனுக்கு ஏற்பட்டிருக்கும் கடன் எக்கச்சக்கம்!
நாட்கள் போக போக மனைவி பேச்சிலிருந்த உண்மை புரிந்தாலும், ‘இதுல விட்ட பணத்த… இதுலருந்தே திரும்ப எடுத்திடனும் சுசீ’ என்று சொல்லிச் சொல்லியே வாழ்க்கையைத் தொலைத்து விட்டிருந்தான்.
ஒருகட்டத்தில் சுசீலாவிற்கு அவனுக்கு அறிவுரை கூறுவது அலுத்துப் போனது. அவனிடம் கோபப்படுவதை விட்டுவிட்டாள்! அவனுடன் பேசுவதையும்கூட குறைத்துக் கொண்டாள்!
அவனிடம் மட்டுமல்ல. அனைவரிடமும் அப்படியே!!
சமீபமாக இதில் எப்படி மாட்டியிருக்கிறோம் என்று புரிந்ததால், மனோ ரம்மி விளையாடுவதை விட்டுவிடவே நினைக்கின்றான். ஆனால் முடியவில்லை! இதிலிருந்து வெளியே வர இயலவில்லை! இது ஒருபக்கம் என்றால்… வேலை போனதால் கடனை எப்படி அடைக்க என்றும் அவனுக்குத் தெரியவில்லை!!
இந்த மனநிலையில் இருப்பவன் கடந்த ஒருவாரமாக, ‘வாழவே பிடிக்கலை. சூசைடு பண்ணிக்கலாம்னு தோணுதே சுசீ’ என்று சொல்லி வருவதுதான் அவளைச் சாப்பிட விடாமல் செய்கிறது!
அவனுள் தற்கொலை எண்ணம் இருப்பதை நினைத்து… நினைத்து சுசீக்கு மனஉழைச்சல் வந்துவிட்டது! தனியாக அவனை விடவே பயம்!!
இப்போதுகூட ‘கண்டதையும் நினைக்க வேண்டாம்’ என்றவளிடம், “டேலன்ட் இருக்கு. விளையாடி பணம் நிறைய சம்பாதிக்காலம்னு நினைச்சேன். இப்படி ஆகும்னு எதிர்பார்க்கலை. இப்ப என்ன செய்யனு தெரியல சுசீ. ப்ச், பேசாம செத்துப் போயிடலாம்னு தோணுது” என்றான்.
அவன் பேச்சில் கோபம் கட்டுக்கடங்காதளவு எழுந்தது! ஆனால் கோபத்தைக் வெளிப்படுத்த கூட பிடிக்காமல் கிளம்ப போனாள்!!
சட்டென இவன் ஏதாவது செய்து கொள்வானோ என்ற ஓர் பயத்தில், “தப்பான எண்ணம் எதும் வேண்டாம்” என்றவள், “நா…” என்று தொடங்கி, “நீங்க இல்லாம அனு இருந்துக்க மாட்டா… புரிஞ்சிக்கோங்க” என்று ஓய்ந்து போன குரலில் சொல்லி கிளம்பிவிட்டாள்.
தற்கொலை எண்ணங்கள் சுழற்றி அடிக்க, மனோ மீண்டும் வீட்டுச் சுவற்றை வெறித்துப் பார்க்கலானான்!!
**************************************
இரண்டு நாள் கழித்து
மனைவியும் மகளும் கிளம்பியிருக்க, மனோஜ் தனியாக வீட்டில் இருந்தான்.
இனிமேல் விளையாடவே கூடாதென்ற எண்ணம் இருந்தது. இல்லை, மீண்டும் விளையாடி இழந்ததை மீட்டுவிட வேண்டுமென்ற எண்ணமும் இருந்தது. ஆனால் கையில் சுத்தமாக பணமில்லை. என்ன செய்யவென தெரியவில்லை.
கூடவே இந்த எண்ணங்களிலிருந்து மீளவே முடியாதா என்ற வேதனையில், வாழ்வையே வெறுத்துப் போயிருந்தான்! வாழ பிடிக்கவில்லை! விரக்தியில் இந்த வாழ்வை முடித்துக் கொள்ளலாம் என்ற எண்ணமும் வந்து கொண்டே இருந்தது!!
அந்தக்கணம் அவன் விளையாடும் ரம்மி செயலி பெயரிட்டு, ‘டுடேஸ் ஆஃபர்! ஒவ்வொரு நண்பர் பரிந்துரைக்கும் ஐந்நூறு ஊக்கத்தொகை மற்றும் முப்பது சதவீதம் தள்ளுபடி பெறுவீர்கள்! மேலும் விவரங்களுக்கு இந்த இணைப்பைச் சொடுக்குங்கள்!!’ என்ற குறுஞ்செய்தி அலைபேசிக்கு வந்திருந்தது.
உடனே அந்த இணைப்பைச் சொடுக்கி விவரங்களை வாசித்துவிட்டு, ‘ப்ச், ஏன் இவ்ளோ கன்டிஷனஸ் போடறானுங்க… இது எப்படி முடியும்?’ என்று அலுத்து, அலைபேசியை வைத்தான்.
அதே வெறுமையுடன் அப்படியே அமர்ந்திருந்தான்!!
ஒரு மணி நேரம் கழித்து புலனசெய்தி வந்திருப்பதிற்கான சமிக்கை கேட்டது. அலைபேசியை எடுத்துப் பார்த்தான். ஆடியோ செய்தி வந்திருந்தது. அதைத் திறந்தான், ‘வெல்கம் மிஸ்டர் மனோஜ்… ஒரு கேம் விளையாடலாமா?” என்று ஓர் ஆண் குரல் கேட்டது!
உடனே, ‘யார்?’ என்று பார்த்தான்… எண்களே தெரியவில்லை!!
‘யார் இவன்? என்ற கேள்வி வர, அதைத் தட்டச்சு செய்து அனுப்பினான்.
‘யாரா வேணா இருக்கலாம். கேம் விளையாடுவோமா?’ என்று பதில் வந்தது.
‘ப்ச்’ என்று அலைபேசியைத் தூக்கிப் போட்டு எழுந்த நேரம் மீண்டும் புலன செய்தி வந்த ஒலி. எடுத்துப் பார்த்தான். ‘நீ விளையாடலைனா… மோசமான விளைவுகளைச் சந்திக்க வேண்டியதா இருக்கும்! எப்படி வசதி?’ என்று அனுப்பட்டிருந்தது.
‘விளையாட முடியாது, நம்பரை பிளாக் பண்றேன்’ என்று பதில் அனுப்பினான்.
‘பிளாக் பண்ணா, உன் வீட்டுக்குள்ள பாம் வெடிக்கும்’
‘என்ன மிரட்டிறியா?’
‘ஒழுங்கா உட்கார்ந்து விளையாடு. இல்லனா நிச்சயம் வெடிக்கும்’
‘முடியாது போடா’ என்று மனோஜ் பதில் அனுப்பிய சில நொடிகளில் வீட்டின் இன்னொரு அறையிலிருந்து, ‘டமால்!’ என்ற வெடிச்சத்தம் கேட்டது.
அதிர்ச்சியில்… சட்டென ஒரு திடுக்கிடல் மனோவிடம்!
சற்று தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு, ‘வீட்டுக்குள்ள எப்படி?’ என்ற சந்தேகத்தில் நின்றான். பின் தன்னைத் தைரியப்படுத்திக் கொண்டு அந்த அறைக்குச் சென்று பார்த்தான். லேசாக புகை வந்து கொண்டிருந்தது. சிறு சிறு தாள்கள்… சிவப்பும் நீலமுமாக வயர்கள் அங்கங்கே கிடந்தன.
அதுவரை இருந்த சந்தேகம்… அக்கணத்திலிருந்து பயமாக மாறியது!
அந்தநேரம் புலனசெய்தி வந்திருக்கும் சமிக்கை கேட்டது. அறைக்கு ஓடி வந்து அலைபேசி எடுத்துப் பார்த்தால், ‘இது சாம்பிள்தான். நீ விளையாடலைனா விளைவு இன்னும் மோசமா இருக்கும்’ என்று வந்திருந்தது!!
அதற்குமேல் மனோ அங்கே நிற்கவில்லை!
விரைந்தோடிச் சென்று வாசற் கதவைத் திறந்து வெளியே போக பார்த்தான். அந்தோ பரிதாபம்… கதவு திறக்கவில்லை. இழுத்து இழுத்து பார்த்தான். திறக்கவேயில்லை. வெளிப்புறம் தாழிட்டிருக்கா?! அதெப்படி?! யார் இப்படிச் செய்வது? என்ற கேள்விகள் அவனுக்குள்!
அந்தக் கணத்திலிருந்து… அவன் பயம் ஒருபடி அதிகமானது!!
இருந்தும் சன்னல் வழியே உதவிக்காக யாரையாவது அழைக்க பார்த்தான். அவன் நேரம்… யாருமே தெரியவில்லை! உடனே அறைக்குள் ஓடி வந்து சுசீலாவிற்கு அலைபேசியில் அழைத்தான்!!
அந்தநொடி, ‘யார்கிட்டயும் உதவி கேட்க நினைக்காத. கேட்டா அவங்களும் உன்கூட சேர்ந்து மாட்டுவாங்க! போலீஸ்ல சொல்ல நினைக்காத. அவங்க வர்றதுக்குள்ள நீ போயிடுவ!!’ என்று செய்தி வந்தது.
மனோஜ் அதை படித்த நேரம்… சுசீ அழைப்பை ஏற்று, “என்னாச்சு, ஏன் கால் பண்ணீங்க?” என்று பரிதவிப்புடன் கேட்டாள்.
கணவன் தற்கொலை செய்து விடுவானோ என்ற பயத்திலே மனைவி இருக்கிறாளென்று அந்தப் பரிதவிப்பு காட்டியது! கணவனுக்கும் அது புரிந்தது!!
‘போதும்! இந்த நிலையில் அவளை நிறுத்தியிருப்பதே போதும். இன்னும் கஷ்டப்படுத்த வேண்டாம்’ என்று அழைப்பைத் துண்டித்தான். மறுபடி மறுபடி சுசீயிடமிருந்து அழைப்பு வந்தது. பேசாமல்… அழைப்பைத் துண்டித்ததும் அவளுக்குப் பதற்றத்தைக் கொடுத்திருக்கும் என்று புரிந்தது.
அந்தநேரம் மீண்டும் ஒரு புலனசெய்தி, ‘நீ… உன் வீடு, ஃபோன் இப்போ என் கட்டுப்பாட்டுல. வீணா எதையாது ட்ரை பண்ணி டைம் வேஸ்ட் பண்ணாத. ஒழுங்கா விளையாடு. உனக்கு வேற ஆப்ஷனே இல்ல’ என்று இருந்தது.
அதையடுத்து, “உனக்கு அதிக டைம் கிடையாது. சீக்கிரம் முடிவெடுக்கலனா, இன்னொரு அதிர்ச்சி ஸ்டோர் ரூம்ல காத்திருக்கு’ என்று மிரட்டல் செய்தி வர, அலைபேசியை வைத்துக் கொண்டே சேமிப்பு அறை சென்றான்.
அங்கே சிறு உருளை வடிவ பெட்டி ஒன்று இருந்தது! அதிலிருந்து குபுகுபுவென புகை வந்து கொண்டிருந்தது!!
சரியாக அந்தநேரம், ‘நீ விளையாடலைனு சொன்னா இது வெடிக்கும். அன்ட் அப்ப மாதிரி சாம்பிள்லாம் கிடையாது. வெடிச்சா… நீ அவ்ளோதாங்ற மாதிரி இருக்கும். எப்படி உனக்கு வசதி?’ என்று கேட்டு செய்தி வந்திருந்தது.
வாசித்து முடித்த நொடியிலிருந்து மனோவின் பயம் இரண்டு மடங்காகி, நெற்றிப் பக்கம் எல்லாம் வியர்த்து வழிந்தது!
இருந்தும் தப்பிக்க நினைத்து முன்கதவு நோக்கி ஓடினான். கதவைத் திறந்து பார்த்தான். இப்போது திறந்தது. தப்பித்துவிடலாம் என்ற சிறு நிம்மதியில் மனோ வெளியே ஓட பார்க்க… அவனைத் தடுத்து தள்ளிக்கொண்டு முகமூடி அணிந்த ஒருவன் உள்ளே நுழைந்து… கதவைப் பூட்டினான்.
எக்கச்சமான பயத்துடன், “யார் நீ… வீட்டுக்குள்ள எதுக்கு வர்ற” என்று மனோ நடுநடுங்கும் குரலில் கேட்க… ‘ஃபோன்ல போய் பேசிக்கோ’ என்றான் உள்ளே வந்தவன் சைகையில்!
மனோ, “முடியாது, நான் வெளில…” என்று கதவைத் திறக்க போக… அந்த ஆள் அவனை ஒரே தள்ளாக தள்ளி, ‘மரியாதையா உள்ள போ’ என்று சிறிதும் அலட்டிக் கொள்ளாமல் சைகை செய்தான்!
‘இவன அடிச்சிப் போட்டுத் தப்பிக்கலாமா? என்று மனோ யோசித்து நின்றான். ஆனால் அந்த ஆளுடன்… சண்டை போட முடியுமா என்ற சந்தேகம் இருந்தது.
ஏனெனில் அந்த ஆள் அப்படியொரு முரட்டுத் தோற்றத்துடன் இருந்தான்!
வந்தவனை… சேமிப்பு அறையிலிருந்து வருகின்ற புகையை… பயத்துடன் பார்த்தபடி மனோ ஒரு நிமிடம் நின்றான்! என்ன நடக்க போகிறதோ என்ற பீதியில் அவனுக்கு அதிகமாக வியர்த்துக் கொட்டியது!!
வேறுவழி தெரியாமல் அச்சத்துடன் அறைக்கு வந்து, ‘யார் நீ? வீட்டுக்குள்ள வந்திருக்கிறது யாரு?’ என்று கேட்டு செய்தி அனுப்பினான்.
‘அது உனக்குத் தேவையில்லை. விளையாடலாமா?’
அரண்டு போயிருந்த மனோ… என்ன செய்யவென்று தெரியாமல், ‘சரி நான் விளையாடறேன். முதல அந்தப் புகையை நிறுத்தி அத வெடிச்சிடாம பண்ணு. ப்ளீஸ்… ப்ளீஸ்’ என்று செய்தி அனுப்பினான்.
‘அத என் ஆள் பார்த்துப்பான். விளையாடலாமா?’
‘என்ன கேம்?’ என்று அனுப்பினான்.
‘ரம்மி கேம்! டெய்லி நீ விளையாடறதுதான். இன்னைக்கு என்கூட விளையாடு’
‘என்கிட்ட பணமில்ல… இப்போகூட ஆஃபர்னு வந்த லிங்க கிளிக் பண்ணி கண்டிஷன பார்த்திட்டு சும்மா உட்கார்ந்திருக்கேன். என்னால உனக்கு ஒரு யூஸூம் இருக்காது… ப்ளீஸ் என்னய விட்ரு’ என்று புலம்பலாக செய்தி அனுப்பி… சற்று யோசித்து, ‘நான் ரம்மி விளையாடுவேன்னு உனக்கு எப்படித் தெரியும்?’ என்றும் அனுப்பினான்.
‘சொன்னியே லிங்க் கிளிக் பண்ணேன்னு… அத வச்சி ஸ்பைவேர் இன்ஸ்டால் செஞ்சி உன் ஃபோன வாட்ச் பண்ணேன். ஃபோன் பேக்ரவுன்டுல கேமரா ரன் ஆக வச்சி… உன்னை ரிமோட் மானிட்டரிங் பண்றேன்’
“ச்சே” என்று மனோ நொந்து கொண்டான்.
‘ஓகே ரூல்ஸ் அனுப்புறேன் பாரு! அஸ்யூஸ்வல் யார் முதல வேலிட் சீகுவென்ஸ் அன்ட் செட் சேக்கிறாங்களோ அவங்கதான் வின்னர். பட் இதுல ஒரு சின்ன சேஞ்! நான் ஜெயிச்சிட்டா உன்னைக் கொன்னுடுவேன். அன்ட் நான் சேர்க்கிற ஒவ்வொரு செட்டுக்கும், உன் மரணம் உன்னை நெருங்கிக்கிட்டே வரும்’
இது விளையாட்டல்ல! ஏதோ விபரீதம்!! பதைபதைப்பில் மனோ, ‘எப்படி என் நம்பர் கிடைச்சது?’ என்று வேகமாக தட்டச்சு செய்து அனுப்பினான்.
‘சிம்பிள்… ஸ்பேமர் டேட்டாபேஸ்லருந்து [Spammer Database] எடுத்தேன்! டெய்லி யாராவது என்கிட்ட சிக்குவாங்க. இன்னைக்கு நீ!!’
‘இது எதும் சைக்கோ வேலையா இருக்குமோ?’ என்ற சந்தேகித்த போது… ஒரு இணைப்பு வந்து விழுந்தது. அடுத்து, ‘இத இன்ஸ்டால் பண்ணு. நானும் நீயும் மட்டும்தான் விளையாட போறோம்’ என்ற வாக்கியம் வந்தது.
மனோவிற்கு தொடுதிரையில் தெரிந்த இணைப்பு மேல் கவனம் போவதும் வருவதுமாக இருந்தது. அவன் கவனத்தை கலைக்கும்படி, ‘விளையாடாமலே சாகலாம்னு முடிவு பண்ணிட்டியா?’ என்று கேட்டு செய்தி வந்தது.
ஒருவிதமான வெறுப்புடன் இணைப்பைச் சொடுக்கி, மனோஜ் செயலிக்குள் நுழைந்தான். அவனுக்கு எதிரேயிருந்த மேசையில் ஒரே ஒரு நபர் இருப்பதாக காட்டப்பட்டது.
ஒருசில வினாடிகளில் இருவர் பக்கமும் பதிமூன்று சீட்டுகள் இருந்தன. மாறி மாறி சீட்டு அடுக்கிலிருந்து சீட்டை உருவதும்… கழிப்பதுமாக… பல நொடிகள் போயின!
மனோஜ் கவனமாக விளையாடவில்லை. அவனது சிந்தையெல்லாம் இந்த சிக்கலிலிருந்து எப்படி விடுபட என்றேயிருந்தது! இதற்கிடையே அவனுடன் பேச முயற்சித்து சுசீலா வேறு அழைத்துக் கொண்டும்… ‘கால் அட்டன் பண்ணு மனோ’ என்று செய்திகள் அனுப்பிய வண்ணமும்… இருந்தாள்.
மனோ இப்படி ஒரு நிலையிலிருந்த சமயத்தில், ‘5♥ 6♥ 7♥ 8♥’ என்ற தூய வரிசை எதிரே விளையாடிய நபரால் சேர்க்கப்பட்டிருந்தது. கூடவே புலனச் செய்தி வந்திருந்தது. மனோ திறந்து பார்த்தான். ‘என் ஃபர்ஸ்ட் ப்யூர் சீக்குவன்ஸ் [pure sequence]’ என்று இருந்தது.
அதை வாசித்துவிட்டு, சுசீயின் அழைப்பைப் பார்த்துக் கொண்டிருந்தான்!
‘ரூல்ஸ் படி, இப்போ மரணம் உன்னை நோக்கி ஒரு அடி எடுத்து வச்சிருக்கு. அதை நீ பார்க்க வேண்டாமா? போ… போய் ஹால்ல பாரு’ என்ற செய்தி வந்து குதித்தது.
‘என்ன காத்திருக்கோ?’ என்ற நடுக்கத்துடனும், தயக்கத்துடனும் வரவேற்பறை போனான். அங்கே… முதலில் வந்தவன் கதவைத் திறந்துவிட, அவனைப் போல் இன்னொரு ஆள் உள்ளே நுழைந்தான்!
கையில் உருட்டுக்கட்டை வைத்திருந்த அவனும் முகமூடி அணிந்திருந்தான்!!
திகிலுடன் அவர்களைப் பார்த்த மனோ, “யாரு நீங்கெல்லாம்… ஏன் இப்படி பண்றீங்க… என்னய விட்டுருங்க… ப்ளீஸ்” என்று கெஞ்ச, ‘ஷ்!! பேசாத. போய் விளையாடு!’ என்று சைகை செய்துவிட்டு, சோஃபாவை நிறைத்து இருவரும் அமர்ந்து கொண்டார்கள்.
மனோவிற்கு என்ன செய்யவென தெரியவில்லை. ஒருவன் இருந்த போதே எதிர்த்திருக்க வேண்டுமென வருந்தினான். மீண்டும் மீண்டும் சுசீ அழைத்து கொண்டிருந்தாள். கூடவே, ‘ஆபிஸ்லருந்து கிளம்ப பார்க்கிறேன். தப்பா எந்த முடிவும் எடுத்திடாதீங்க’ என்ற புலனச்செய்தியும் அனுப்பியிருந்தாள்.
வாசித்ததும், ‘அவளும் வந்து, இவன்களிடம் மாட்டிக் கொள்வாளோ?’ என்ற பயம் வர… தப்பிக்க முயற்சிக்கலாம் என்று தோன்றியது. உடனே வாசற்கதவு நோக்கி ஓடினான்.
அவனைக் கவனித்துக் கொண்டிருந்தவர்கள் எழுந்தனர். பின், யார் முதலில் கதவை அடைகிறார்கள் என்று ஓர் வேக ஓட்டம்! பின் வீட்டின் பொருட்கள் எல்லாம் கீழே விழுந்து நொறுங்கும் அளவிற்கு ஒரு போராட்டம்!
கடைசியில் அந்த ஆட்கள் கைதான் ஓங்கி இருந்தது!!
அவர்கள் வலுவிற்கு சிறிதும் ஈடு கொடுக்க முடியாமல், சோர்வுடன் திரும்ப அறைக்கே வந்தான்! உடம்பெல்லாம் வலித்தது! மனம் அமைதியில்லாமல் அலைக்கழிந்து வர, ‘இந்த கேம் வேண்டாமே… ப்ளீஸ் என்னை விட்ரு’ என்று கெஞ்சி கேட்டு அனுப்பினான்!!
அதைச் சற்றும் பொருட்படுத்தாமல், ‘தப்பிக்க ட்ரை பண்ணாத. ஒழுங்கா ஆப்குள்ள போ’ என்ற செய்தி வந்து விழுந்தது. நொந்து போய் மனோ செயலிக்குள் சென்றான்.
மீண்டும் மாறி மாறி சீட்டு அடுக்கிலிருந்து சீட்டை உருவதும்… கழிப்பதுமாக சிலபல நொடிகள் போயின!
மனோஜ் எண்ணம் முழுவதும்… தப்பிக்க முடியுமா, யாரிடம் உதவி கேட்கலாம் என்றே இருந்தது… யோசித்தது! இதையெல்லாம் விட, சுசீலா வந்து மாட்டிக் கொள்வாளோ என்ற பயம் அதிகமாக இருந்தது!
துளியும் கவனம் விளையாட்டில் இல்லை!!
இந்த நிலையில், ‘6♦ 7♦ 8♣’ என்ற வரிசையும், ‘A♣ A♦ PJ’ என்ற ஒரு தொகுதியும் எதிரே விளையாடிய நபரால் சேர்க்கப்பட்டிருந்தது!!
உடனே ஒரு புலனச் செய்தி, ‘ஒன் சீக்குவென்ஸ் வைல்ட் ஜோக்கர் [Wild] வச்சி அன்ட் ஒன் செட் பிரின்டட் [Printed Joker] ஜோக்கர் வச்சி!’ என்று வந்திருந்தது. திறந்து பார்த்தபின் மனோ திக்பிரம்மை பிடித்தது போல் இருந்தான்.
அடுத்தநொடி, ‘மரணம் உன்னை நோக்கி வர்றதைப் பார்க்க வேண்டாமா? ஜஸ்ட் திரும்பிப் பாரு’ என்று செய்தி வந்திருக்க, மனோ மெல்ல தலையைத் திருப்பினான்.
அந்த அறையின் வாசலில் மூன்று ஆட்கள் நின்றார்கள்! ஏற்கனவே இருந்த இருவருடன்… இப்போது புதிதாக ஒருவனும் வந்து சேர்ந்திருந்தான்! கையில் கூரான ஆயுதத்துடன் இருந்த அவனும் முகமூடி அணிந்திருந்தான்!!
இவர்களிடமிருந்து இனிமேல் தப்பிக்க முடியும் என்ற நம்பிக்கை சுத்தமாய் போயிருந்தது மனோவிற்கு! அலைபேசியை எடுத்து, ‘ப்ளீஸ் வேண்டாம். என்னை விட்ரு, ப்ளீஸ் ப்ளீஸ்’ என்று கருணை கோரி தட்டச்சு செய்து அனுப்பினான்.
கருணையே இல்லாமல், ‘கேம் ஸ்டார்ட் ஆகிடுச்சி’ என்ற செய்தி வந்தது.
விளையாடாமல், அடுத்து என்ன செய்யவென்று தெரியாமல் விதிர்விதிர்த்து உறைந்திருந்த சமயம், ‘கிளம்பிட்டேன்… சீக்கிரம் வந்திடுவேன் மனோ’ என்று மீண்டும் சுசீயிடமிருந்து புலனச் செய்தி வந்தது.
வாசித்தவன்… அவள் வந்தால் இந்தச் சிக்கலுக்குள், இவர்களிடம் மாட்டிக் கொள்வாளே என்று பயந்து… அவளுக்கு அழைக்க பார்க்க… மூவரில் ஒரு ஆள் அலைபேசியைப் பிடுங்கி, ‘விளையாட மட்டும் செய்’ என்று கோபமாக சைகையில் கட்டளையிட்டான்!
“ப்ளீஸ் ஒரு ஃபோன் பண்ணிக்கிறேன்… அட்லீஸ்ட் மெசேஜ் மட்டுமாவது அனுப்பிக்கிறேனே” என்று கெஞ்ச… அந்த ஆள் மறுத்துவிட்டான்.
கஷ்டமாக இருந்தது மனோவிற்கு! கண்ணீரும் வந்தது!!
வேறு வழியில்லாமல்… அந்த ஆட்களைப் பார்த்தபடி மீண்டும் விளையாட தொடங்கினான். சில நொடிகளில், ‘2♦ 3♦ 4♦’ என்ற வரிசையை எதிரே இருப்பவன் சேர்த்திருந்தான்.
உடனே ஒரு செய்தி, ‘டிக்ளர் பண்றேன். கேம் ஓவர். நான் வின் பண்ணிட்டேன். நீ தோத்திட்ட. ரூல்ஸ் படி உன்னைக் கொலை பண்ணனும். அதை அங்க இருக்க என் ஆளுங்க பார்த்துப்பாங்க. குட் பை’ என்று வந்தது.
படித்ததும்… மனைவி, மகள் முகம் கண் முன்னே வர, “ப்ளீஸ் என்னை ஒன்னும் பண்ணிடாதீங்க… ப்ளீஸ்” என்று திரும்பத் திரும்ப அவர்களிடம் உயிர்பிச்சை கேட்க ஆரம்பித்தான்.
ஆனால் அவர்கள் அதைக் காதில் வாங்கவில்லை. அவர்களுக்கு இடப்பட்ட கட்டளையைச் செயற்படுத்த, அந்த மூன்று ஆட்களும் மனோவைச் சுற்றி நின்று கொண்டனர்!
“ப்ளீஸ்… ப்ளீஸ் விட்ருங்களேன்” என்று மனோ கெஞ்சினான்.
அதைக் கண்டுகொள்ளாமல் இருவர் மனோ கைகளைப் பிடித்துக் கொள்ள, அவர்களைப் பிடித்துத் தள்ளிவிட மனோ போராடிய நேரத்தில், மூன்றாவது ஆள் அவனைப் போராட முடியாமல் இறுக்கிப் பிடித்துக் கொண்டான்.
அதன்பின் மனோவால் அவர்களைத் தடுக்க இயலவில்லை!
சற்று நேரத்தில் துடித்துக் கொண்டிருந்த மனோஜ் கால்கள் முதலில் தளர்ந்து போய்… பின் துவண்டு போய்… கடைசியில் அசைவற்று போனது!!
வந்த வேலை முடிந்தது என்று மூவரும் அறையிலிருந்து வெளியேறினர்.
இரண்டு மணி நேரம் கழித்து…
சுசீலா அலுவலகத்திலிருந்து வந்த நேரம்… பள்ளி முடிந்து மகளும் வேனில் வந்து இறங்க, அவளைத் தூக்கினாள். வழக்கமாக அனுவை வீட்டில் கொண்டு வந்து விடும் பெண்மணி ஏதோ சொல்ல வர, “அப்புறமா பேசலாம்” என்று ஸ்கூட்டியில் ஏறி சுசீலா வீட்டை நோக்கி ஓட்டினாள்.
வீடு திறந்து கிடப்பதைப் பார்த்து பயத்துடன் சுசீலா உள்ளே வந்தாள். வரவேற்பறையில் பொருட்கள் சிதறிக் கிடப்பதைப் பார்த்ததும்… மகளை யோசனையுடன் இறக்கிவிட்டாள். இன்னொரு அறையிலிருந்து பறந்து வந்த தாள்களைக் கேள்வியோடு பார்த்து நின்றாள்.
சேமிப்பு அறையில் புகைப்படலம் இருப்பதையும் பார்த்தாள்!
‘என்ன இது, என்ன நடந்திருக்கும்’ என்று மனம் பதைபதைக்க படுக்கையறை சென்றவள்… அவள் கணவன் இருந்த நிலை கண்டு, “ஐயோ மனோ” என்று பதட்டத்துடன் அலறிச் சென்று அமர்ந்தாள். அம்மாவின் பின்னேயே வந்த அனுவும், “பா” என்று வந்து நின்றாள்.
தலைமுடி களைந்து, சட்டை சுருங்கி, முகம் வியர்த்து, சோர்வுடன் இருந்த கணவனைப் பார்த்த சுசீ, “என்னாச்சு, ஏன் இப்படி இருக்கீங்க மனோ?” என்று பதறினாள்!
அவன் எதுவும் பேசாமல் இருக்கவும், “மனோ வாயைத் திறந்து பேசுங்க! சூசைடுக்கு ட்ரை பண்ணீங்களா?” என்று கோபத்துடனும் சந்தேகத்துடனும் கேட்டாள்.
கண்கலங்க அவளைப் பார்த்த மனோஜ், ‘இல்லை’ என்று தலையாட்டினான். வாய் திறக்க மாட்டிக்கின்றானே என்ற எரிச்சலில், “அப்புறம் எதுக்கு இப்படி உட்கார்ந்திருக்க… ஏன் இப்படி என் உயிர வாங்கிற?” என்று கத்தினாள்.
அதில் பயந்துவிட்ட அனு அப்பா அருகே செல்ல, மனோ மகளை அணைத்துக் கொண்டு, “தண்ணீ வேணும் சுசீ” என்றான்.
‘என்ன நடந்தது?’ என்று தெரியாத குழப்பத்துடன் சமயலறை விரைந்தாள். டம்பளரில் தண்ணீர் எடுத்து வந்து அவனிடம் தந்தாள்.
அதன்பின் சமன்பட்டிருந்த குரலில், “என்னாச்சு சொல்லுங்களேன்?” என்றதும், நீர் குடித்து ஆசுவாசப்படுத்திக் கொண்டு, நடந்ததைச் சொன்னான்.
சுசீலா பயந்துவிட்டாள். கண்கள் கலங்கியது. சமாளித்துக் கொண்டு, “வாங்க ஸ்டேஷன் போய் கம்ப்ளைன்ட் கொடுக்கலாம்” என்று எழப் போக, அவள் கைப்பிடித்து, ‘வேண்டாம்’ என்று தலையசைத்து அமர வைத்தான்.
“என்ன வேண்டாம்… எதுக்கு வேண்டாம்?”
“தப்பு என் மேலதான் சுசீ. அந்த லிங்க் கிளிக் பண்ணிருக்க கூடாது”
“அதுக்காக… போலீஸ்ல சொல்ல வேண்டாமா?”
“வேண்டாம்”
“ஏன்?”
“என்ன சொல்ல? நான் ரம்மி விளையாடுவேன், அதுல இன்னைக்கு இப்படி ஆயிடுச்சினு சொன்னா… எனக்குத்தான் அசிங்கம்”
“ஓ, இத்தனை நாள் விளையாடறப்ப தெரியலயா?” என்றாள் கோபத்துடன்!
வெகுநாட்களுக்குப் பின் அவள் வெளிப்படுத்தும் கோபத்தை, மனோ பார்த்து இருந்தான். தொய்வடைந்து அமர்ந்தவள், “கொல்ற அளவுக்கு வந்திருக்காங்க. இத எப்படி இப்படியே விட முடியும்?” என்றும் கேட்டாள்.
“ஆனா கொல்லலைல…”
தலையைப் பிடித்தபடி, “என்ன பேச்சு இது…?” என்றாள் எரிச்சலுடன்!
அவள் செய்கைகளைப் பார்த்தவன், “சுசீ… இனி… இந்த ரம்மி கேம் விளையாட மாட்டேன். நான் எந்த ஒரு தப்பான முடிவும் எடுக்க மாட்டேன் சுசீ” என்று நிறுத்தி நிதானமாக ஒப்புக் கொடுத்தான்.
அவள் அறிவுரை சொன்ன காலத்தில் இப்படிச் சொல்லியிருக்கிறான்! ஆனால் சமீபகாலமாக இப்படிச் சொன்னதேயில்லை!!
அவள் அவனையே பார்க்க, “இன்னைக்கு யாருன்னே தெரியாத ஒருத்தனோட விளையாடற நிலை வந்தப்போ… அது முட்டாள்தனமா தெரிஞ்சது. ஆனா இத்தனை நாளா நான் அந்த முட்டாள்தனத்தான் பண்ணிருக்கேன்னு நினைக்கிறப்ப… கேவலமா இருக்கு சுசீ.
உயிர எடுக்கிறதெலாம் என்ன விளையாட்டானு, அப்போ எனக்குள்ள கேள்வி வந்திச்சி. ஆனா அந்தக் கேள்வியே… ஒரு விளையாட்டுக்காக உயிர விட நினைச்சது, உயிர விட்டுடலாம்ங்கிற நிலைக்கு தள்ளுன விளையாட்ட விளையாடினது… பெரிய தப்புனு புரிய வச்சிடுச்சி” என்றான்.
அவன் பேச்சைக் கேட்டபடியே இருந்தாள்.
“வர்றேன்னு நீ மெசேஜ் பண்ணதும் அப்படி பயந்தேன் சுசீ. வீட்டுக்குள்ள அவனுங்க இருக்கிறப்ப, நீயும் வந்து மாட்டிட கூடாது… உன்னய அந்தமாதிரி சூழ்நிலையில நிக்க வச்சிட கூடாதுனு மனசு அப்படி அடிச்சிக்கிடுச்சி.
ஆனா நான் சூசைடு பண்ணியிருந்தா, வாங்கின கடன்லாம் உன் தலையில விழுந்திருக்கும். எத்தனை பேரு கடனைத் திருப்பிக் கேட்டு வீட்டு வாசல்ல வந்து நின்ருப்பாங்க… உனக்கு எவ்ளோ கஷ்டம் அது!?
அந்தக் கஷ்டத்தை உனக்கு கொடுக்க பார்த்த நான்லாம் என்ன ஹஸ்பன்ட் சொல்லு?” என்றான்.
எதுவும் பேசாமல் அவனையே பார்த்தாள்.
“அவனுங்க என்னய கொல்ல பார்த்தப்ப… உங்க முகம்தான் கண்ணு முன்னால வந்திச்சி… ஆனா சூசைடு பண்ணிக்க நினைச்சப்ப ஏன் உங்களைப் பத்தி யோசிக்கல… யோசிச்சிருக்கணும்ல சுசீ” என்று மகள் முன்னெற்றி முடிகளை வருடினான்.
“சும்மா சூசைடுனு பேசாத மனோ” என்றாள் எரிச்சலாக.
“சரி இனிமே பேசலை” என்றவன், “ஏன் சுசீ… அன்னைக்கு நா… அப்படினு ஆரம்பிச்சியே, நானும் அனுவும் உன்னய விட்டு இருந்துக்க மாட்டோம்னு சொல்ல வந்தியா?” என்றான்.
அவள் பதில் சொல்லாமல் இருக்க, “என்னமோ உங்க ரெண்டு பேர்கூட முன்ன மாதிரி வாழணும்னு… கவனிச்சிக்கணும்னு ஆசை வந்திருக்கு” என்றான்.
அவன் கண்ணில் தெரிந்த அக்கறையைப் பார்த்தபடி இருந்தாள்!
“என்மேல உனக்கு ரொம்பவே கோபம். அதெல்லாம் காட்டாம இருக்கற. இல்ல காட்டற. முன்ன மாதிரி பேசுறதில்லையே… அதுவே ஒரு கோபம்தான? ப்ச் நான் முன்ன மாதிரி இருந்தா, நீயும் இருந்திருப்ப. சாரி சுசீ. சாரி எல்லாத்துக்கும்” என்றான் உணர்ந்து!!
அவள் இறுக்கமாக இருக்க, “உனக்கு என்னைத் திட்டணும்னு தோணினா, திட்டிக்கோ, அடிக்கணும்னு தோணினா அடிச்சிக்கோ” என்றதும்… அவள் மகளைப் பார்க்கவும், “பரவால்ல தப்பு பண்ணிருக்கேன்ல வாங்கிக்கிறேன் சுசீ” என்றான் இலகுவான முகத்துடன்.
அவள் முகம் எந்த மாற்றத்தையும் காண்பிக்காமல் இருந்தது!
தன்மீது அவளுக்கு இருக்கும் கோபம் ஒரே நாளில் போகாது என்று தெரிந்தது. ஒரே உரையாடலில்… ஒரு சில வார்த்தைகளில் நம்பிக்கை வந்திடாது என்றும் மனோவிற்குப் புரிந்தது.
என்ன பேசுகிறார்கள் என்று புரியாமல் இருந்த மகளைப் பார்த்ததும், பேசினது போதும் என்பது போல் சுசீலா எழுந்து கொண்டாள்.
மகளைத் தூக்கிக்கொண்டு மனோ எழுந்து, “பாப்பாவ கூட்டிட்டு பைக்ல ஒரு ரவுண்ட் போய்ட்டு வரேன்” என்று அவள் வண்டிச் சாவியை எடுத்தான்.
“டயர்டா இல்லையா?” என்று மட்டும் கேட்டாள்.
“இருக்கு… ஆனா…” என்று எதுவும் சொல்லாமல், “என்ன சொல்லனு தெரியலை. இந்தா மொபைல்… ரம்மி ஆப் டெலிட் பண்ணிடு” என்று தந்துவிட்டு, “பைக்ல போலாமா?” என்று மகளிடம் பேசியபடி கிளம்பினான்.
போகையில், “சுசீ, எதும் அதிசயம் நடந்தாதான் இதுலருந்து மீள முடியும்னு நினைச்சேன். அந்த அதிசியம் இதுவா இருந்திட்டுப் போகட்டுமே?” என்றவன், “கம்பளைண்ட் பண்ணணும்னு நீ சொன்னா… அதுவும் செய்யலாம்” என்று போய்விட்டான்.
அப்பாவும் மகளும் போனதும் சோஃபாவில் அமர்ந்தவள், யார் இப்படிச் செய்திருப்பார்கள் என்று யோசித்தாள். கண்மூடி இருந்தவளுக்கு ஏதோ தோன்ற அலைபேசியை எடுத்து ஓர் அழைப்பு விடுத்தாள்.
அழைப்பு ஏற்கப்படுமோ, படாதோ என்ற யோசனையில் இருக்கையில், “ஹலோ” என்ற குரல் கேட்டதும், “ம் ம் ஹலோ… சுசீலா பேசறேன்” என்றாள்.
“இப்பதான் அண்ணன் ஞாபகம் வந்ததா?” என்று குத்தலாக கேள்வி வந்தது.
“அது… அது…” என்றிருந்தாள் தயக்கமாக.
“சரி சொல்லு”
“ஒரு பிரச்சனை… ஸ்டேஷன் வரைக்கும் போகணும்… நீ வர்றியா ணா?”
“என்ன பிரச்சனை?”
“இன்னிக்கு வீட்ல…” என்று ஆரம்பித்து… பதற்றத்தில் அமைதியாகிவிட, அவள் அண்ணன் நடந்ததை அப்படியே சொல்லி முடித்தான்.
பதற்றமாகி, “ண்ணா… உனக்கெப்படி தெரியும்?” என்றாள். பின், “இது உன் வேலையா?” என்றாள் சந்தேகமாக.
“ம்ம்”
“என்ன ம்ம்ம்… ஏன் இப்படிப் பண்ண?” என்றாள் கோபத்துடன்.
“கோபப்படாத… நீ எதுவுமே ஷேர் பண்ணறதில்ல. நான் கேட்டாலும் ஒன்னும் சொல்றதில்ல. போன வாரம் அம்மா வந்தப்ப மனோ, ‘செத்துப் போயிடலாம்னு சொல்லிட்டே இருக்காரு’னு… அழுதிருக்க. அம்மா என்கிட்ட சொன்னாங்க. அதுக்கப்புறமும் எப்படி ஒன்னும் செய்யாம இருப்பேன் சொல்லு?”
சுசீ அண்ணன் பேச்சைக் கேட்டு அமைதியாக இருந்தாள்.
“மனோ சரியானாதான் நீ சந்தோஷமா இருப்ப… அதான் இப்படி”
“அதுக்காக இப்படியா? ‘பாம்’லாம், ப்ச் போண்ணா. மனோக்கு மட்டும் எதும் ஆயிருந்தா?” என்றாள் பயத்துடனும் கோபத்துடனும்.
“அதெப்படி ஆக விடுவேன், சொல்லு. பாதுகாப்பு இல்லாத ஒரு பொருளை நான் எப்படி உன் வீட்டுக்குள்ள கொண்டு வருவேன்? அது பாம் இல்ல. ஜஸ்ட் எலக்ட்ரிக் டெட்டநேட்டர் [Electric Detonator]”
“ஸ்டோர் ரூம்ல ஸ்மோக் ஸ்மெல்…?”
“மேட்ச் பாக்ஸ் வச்சி பண்ண சிம்பிள் ஸ்மோக் கிர்னாடா [smoke grenada]”
“இதெல்லாம் எப்படி வீட்டுக்குள்ள வந்தது?”
“சைஸ் சின்னது. ஜன்னல் வழியா உள்ள போட்டாங்க”
“போட்டாங்கனா… யாருண்ணா…? மூணு பேரு வந்தானுங்களே அது யாரு?”
“ம்ம்ம் நான் செட் பண்ணவங்கதான்”
“ண்ணா ஏன் இப்படி!” என்று அதிர்ந்தவள், “அவனுங்க கைல… கட்ட… மனோ கைய இறுக்கி பிடிச்சி… தண்ணீ மாதிரி முகத்தில எதையோ… அப்புறம் என்ன நடந்தது… தெரியலைனு சொன்னாரு” என்று கோர்வையாக சொல்லாமல் விட்டு விட்டு சொன்னாள்.
“குளோரோஃபார்ம் ஸ்ப்ரே பண்ணாங்க… அதனால மனோ மயங்கிட்டான். ஹாஃம்லெஸ் அது. அவனுக்கு கான்ஷியஸ் வர்ற வரைக்கும் அவங்க ஹால்லதான் இருந்தாங்க.
எதுவும் தப்பா போயிட கூடாதுனுதான், நான் வீட்லருந்து கொஞ்சம் தள்ளி நின்னேன்” என்றான், தங்கை எப்படி இதை எடுத்துக் கொள்வாளோ என்ற யோசனையுடன்.
“இருக்கலாம் ணா. ஆனா நான் வந்து பார்த்தப்போ, அவர் எவ்ளோ டயர்டா இருந்தாரு தெரியுமா?” என்று கணவனுக்காக பார்த்துப் பேசினாள்.
“ஏற்கனவே இருந்த குழப்பம்… இப்போ நடந்ததுல உண்டான பயம்… அவனை அப்படிக் காட்டிருக்கும். நீ டென்ஷன் ஆகாத” என்றான் சமாதானமாக.
“ண்ணா… மனோ கம்பளைன்ட் கொடுக்க நினைச்சா, உன் லைஃப், கேரியர், ஃப்யூச்சர் என்னாகும்னு யோசிச்சியா? ப்ச் பெரிய ரிஸ்க் எடுத்திருக்க” என்று அண்ணனுக்காகவும் பார்த்துப் பேசினாள்.
“எஸ் ரிஸ்க்தான்… உனக்காக… ம்ம் ஏன் மனோக்காகவும்தான்”
சுசீலாவிற்கு நடந்ததை நினைத்து கலக்கம் இருந்தது… அண்ணன் இதைக் கவனத்துடனே கையாண்டிருக்கிறான் என்ற எண்ணமும் இருந்தது. இதனால் அண்ணனுக்கு பிரச்சனை ஏதும் வருமோ என்ற பயம் இருந்தது. கூடவே கணவன் இனிமேல் இந்த விளையாட்டிற்கு அடிமையில்லை என்று நிம்மதியும் இருந்தது.
கலவையான உணர்வுகளுடன் சுசீ இருந்தாள்!!
சிறு யோசனைக்குப் பின், “உன் வாய்ஸ கண்டுபிடிக்கலை… ஏன்? வாட்ஸப்ல உன் நம்பர் தெரியலைனு சொன்னாரு. அது…” என்றாள் கேள்வியாக.
“ஃபர்ஸ்ட் அனுப்பினது ரெக்கார்ட்டு வாய்ஸ். என்னிது இல்ல. அன்ட் அது என் நம்பர் இல்ல. விர்ச்சுவல் நம்பர்! இதுக்கு ஆப் இருக்குது. கன்ட்ரி கோடு [country code] கொடுத்தா… நம்பர் ஜெனெரேட் ஆகும். ஆப் ஓப்பனா இருக்கப்ப நம்பர் ஆக்ட்டிவா இருக்கும்” என்றவன், “ஏன் மனோ டவுட் பண்றானா?” என்றான்.
“இல்லணா, எதும் அதிசியம் நடந்தாதான் இதுலருந்து வெளிய வருவேன்னு நினைச்சேன். அந்த அதிசியம் இதுவா இருக்கட்டும்னு சொன்னாரு”
“விடு, அப்படியே நினைக்கட்டும். அவன்கிட்ட இதெல்லாம் சொல்லிக்கிட்டு இருக்காத”
“அதெப்படிண்ணா…” என்று இழுத்தாள்.
“சொல்லவே வேண்டாம்னு சொல்லல. அப்புறம் சொல்லிக்கலாம். நான் வந்து சொல்றேன். ஆனா இப்போ வேண்டாம். கொஞ்ச நாள் அவன் ஜாப் போய் நார்மலா ஆகட்டும். சரியா?”
“ம்” என்றவள், “மனோ ஃபோன்ல ஏதோ ஸ்பைவேர் இன்ஸ்டால் ஆகியிருக்ல. அத ரிமூவ் பண்ணிடு ண்ணா” என்றாள்.
“ஸ்பைவேர்லாம் இல்ல… அவன் ரம்மி ஆடறது எனக்கு எப்படித் தெரியும்னு கேட்டான்… அவனே ஏதோ லிங்க் க்ளிக் பண்ணேன்னு சொன்னான்… அத வச்சி சும்மா அடிச்சி விட்டேன்” என்றவன், “மனோ இருக்கானா?” என்று கேட்டான்.
“அப்பாவும் பொண்ணும் வெளிய போயிருக்காங்க”
“நீயும் போயிருக்க வேண்டியதுதான… இன்னும் கோபம் குறையலையா?”
“குறையலை. நல்லா திட்ட, அடிக்க தோணிக்கிட்டே இருக்கு. திட்டிக்கோ, அடிச்சிக்கோனு மனோ சொல்லிட்டுப் போனாரு ணா” என்றாலும், அவள் குரலில் கணவன் மீதான கோபம் சற்று குறைந்துதான் தெரிந்தது.
“நல்ல சான்ஸ்! எனக்கும் அவன்மேல கோபம் இருக்கு. என் சார்பில நாலு அடி கூட சேர்த்து அடிச்சிடு” என்று விளையாட்டாக சொன்னாலும், இத்தனை நாட்களாக மனோவால் தங்கைக்கு எவ்வளவு மனஉழைச்சல் என்ற கோபம் அண்ணனது குரலில் இருந்தது.
“ஃபோன என்கிட்ட கொடுத்து ஆப் அன்இன்ஸ்டால் பண்ண சொல்லிட்டாரு ணா” என்றாள் சற்று முகம் மலர்ந்து!
“இதெல்லாம் படிப்படியா குறைக்க வேண்டிய கெட்ட பழக்கமே இல்ல. ஒரே நாள்ல தலையைச் சுத்தி தூக்கி எறிஞ்சிடனும். மனோ சொன்ன மாதிரி ஆப் அன்இன்ஸ்டால் பண்ணிடு” என்று அண்ணன் சொன்னதும், சுசீலா அந்த ரம்மி செயலியை நிறுவல் நீக்கம் [Uninstall] செய்தாள்!!