பரிதாபப் பழையசோறு
சிலர் தங்களது,
விரக்திகளை வாழை இலையாக,
விரித்துப் போட்டு….
கண்ணீரைத் தண்ணீராய் தெளித்து
ஒதுக்கிவிட்டு…
பரிகாசப் பேச்சுக்களைப் பொரியல்
செய்து…
அலட்சியப் பார்வையை அவியலாக
அவித்து…
வலிகளைத் திரட்டி வறுவலாக
வறுத்தெடுத்து….
அல்லலை அப்பளமாகப் பொரித்து
நொறுக்கி…
சங்கடங்களைச் சுடச்சுடச் சோறு
பொங்கி…
இன்னபிற இன்னல்களைச் சேர்த்து
குழம்பு வைத்து…
இது பத்தாதென்று,
உதாசீனம் என்ற ஊறுகாயைத்
தொட்டுக் கொண்டு…
விருந்து சாப்பாடு சாப்பிடுகிறார்கள்…
பெரிய மனம் இருப்பது போல்
நினைத்து – உங்கள்
பரிதாபப் பழைய சோற்றை,
அவர்கள்
விருந்து இலையில்
வைக்காதீர்கள்!!