Kathambari Novels
நீதிமன்ற வளாகம்.
வழக்கு நடக்கும் இடமா? இல்லை, வாய்தா வாங்கும் இடமா என்று பிரித்தறிய முடியாத நிலை! இதுதான் நீதிமன்றத்தின் முகம்! முழுதும் உண்மை இல்லை என்றாலும் முக்கால்வாசி உண்மை என்று ஒத்துக்கொள்ளும் நிலையில்தான் உள்ளது இது.
சாரு, அன்று விடுப்பு எடுத்துக் கொண்டு நீதிமன்றம் வந்திருந்தாள். தாத்தா வழியில் வந்த சொத்தைப் பிரிப்பதில் அவளுக்கும், அவளுடைய பெரியப்பா மகள்களுக்கும் இடையே சின்ன பிரச்சனை. அவர்கள் பக்கமிருந்து வழக்கு தொடுத்திருந்தார்கள்.
இன்று அந்த வழக்கின் நீதிமன்ற விசாரணை இருந்தது. பெரியப்பா மகள்கள் வராததால்… வழக்கு இன்னொரு தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. எத்தனை முறை இன்னும் வரவேண்டி இருக்குமோ என்று எரிச்சலடைந்து அங்கேயே நின்று கொண்டிருந்தாள் சாரு.
இப்படி தனித்து நிற்கும்போது எதிர்காலம் பற்றிய, ஒரு சின்ன பயம் மனதில் வந்து போகும். இன்று பயம் வந்ததும், பாபி ஞாபகம் வந்து நின்றது. மனதின் இடத்தில் பாபி வந்ததும், அவன் கேட்ட விடயங்கள் மூளையின் மூலைகளை முட்ட ஆரம்பித்தன.
என்ன முடிவெடுக்க என்று குழம்பிப் போய் மீண்டும் எரிச்சல் வந்தது.
அக்கணம், “சாரு” என்ற குரல் கேட்டது. பாபிதான்! திரும்பினாள். சிரித்துக் கொண்டே நின்றான்.
“ஸ்ட்ரெயிட்டா கோர்ட்டுக்கே வந்துட்ட போல” என்றான்.
விழி அசையாமல் அவனையே பார்த்திருந்தாள்.
“ஹாஸ்பிட்டல் போகலையா”
அசையாமல் அமைதியாக இருந்த அவள் விழிகள் கொஞ்சம் அழுவது போல் தெரிந்தது.
“என்னாச்சு சாரு? நீ இப்படி இருக்க மாட்டியே?”
இன்னும் அமைதிதான். ஆனால், அவளின் அமைதியைப் புரிந்து கொள்ளும் அன்பு பாபியிடம் இருந்தது.
“சரி, எதுக்காக இங்க வந்த?”
அவள் விழிகள் லேசாக அசைந்தன. அந்த அசைவில், விழியின் நீர்ப்படலம் தெரிந்தது.
“வேற எங்கயாவது போய் பேசலாமா?” என்று அவளைப் புரிந்து கேட்டான்.
“பாபிக்கு ஹியரிங் இல்லையா”
“ஜூனியர்ஸ் பார்த்துக்குவாங்க. வா, பக்கத்தில கேஃபே இருக்கு. அங்க போய் பேசலாம்” என்று, அவளை கார் நிற்கும் இடத்திற்கு அழைத்துச் சென்றான்.
“சாரு, நீ கார்ல வந்தியா?”
“ம்ம். பட் இப்போ டிரைவ் பண்ண முடியாது”
“பரவாயில்ல, என்னோட கார்லேயே போகலாம்”
மறுப்பேதும் சொல்லாமல் ஏறிக் கொண்டாள். கார் கிளம்பியது.
பேம்பு கேஃபே!
இருக்கைகள், மேசைகள், அலங்கார விளக்குகள் என்று யாவும் மூங்கில்கள் கொண்டு வடிவமைக்கப் பட்டிருந்தது. மிகக் குறைவான எண்ணிக்கையில் இருக்கைகள். ஒவ்வொரு இருக்கைக்கும் மேலிருந்து வட்ட வடிவ ஒளியைப் பாய்ச்சி அடிக்கும் விளக்குகள்.
மேசை நடுவே ஒரு போன்சாய். அங்கங்கே சில குரோட்டன்ஸ் செடி வகைகள். பிண்ணனியில் இசைஞானி பாடல்கள் இசைக் கருவிகளின் இசையில் ஓடிக் கொண்டிருந்தது.
ஒரு இருக்கையில் சாரு அமர்ந்தாள். பாபி… அவள் எதிரில் அமரவில்லை.
“இப்போ சொல்லு?” என்றான், அவள் முகம் பார்த்து திரும்பி.
வழக்கு பற்றிச் சொல்லி, “இதுக்கு பாபியால ஹெல்ப் பண்ண முடியுமா” என்று கேட்டாள்.
“கேஸ் ஹிஸ்டரி பார்க்கணும் சாரு. பார்க்காம எப்படிச் சொல்ல”
“ஓ!” என்கின்ற போதே கண்களின் ஓரத்தில் ஒரு துளி நீர் தேங்கியது.
“ப்ச், இப்போ எதுக்கு இப்படி ரியாக்ட் பண்ற?”
“வேற ஒன்னுமில்ல. அவ்வளவுதான். நான் போறேன்” என்று எழுந்தாள்.
“விட்டா லாயர் பீஸ் கொடுப்ப போல” என்று எழ மறுத்து அமர்ந்திருந்தான்.
“ப்ளீஸ் பாபி” என்று அவள் கெஞ்சியும், அவன் சற்றும் வழிவிடாமல், “அப்புறம் போகலாம். முதல உட்காரு” என்றான்.
மீண்டும் அமர்ந்து கொண்டாள். “காஃபி ஆர்டர் பண்ணவா?” என்று கேட்டான்.
‘சரி’ என்று தலையசைத்தாள். சிப்பந்தியை அழைத்து காஃபி சொல்லிவிட்டு மீண்டும் அவள் பக்கம் திரும்பினான். இன்னும் அவள் சரியில்லை என, அவன் சரியாகக் கணித்தான்.
“சாரு, சொல்லு… இந்த ப்ராபெர்ட்டி அமௌன்ட் அவ்வளவு அவசியமா?”
‘ம்ம்ம்’ என்று மேலும் கீழும் தலை ஆட்டினாள்.
“நீ டாக்டர்தான? அப்புறம் என்ன?”
“டாக்டர்தான். பட் ஐ அம் ஜஸ்ட் டிஜிஓ (DGO). என்கிட்ட எம்எஸ், எம்டி-னு எதும் இல்ல. எனக்கு ஆசையா இருக்கு… எம்எஸ் பண்ணனும்னு. சொந்தமா கிளினிக் ஓபன்…” என படபடத்து சொல்லுகையில், “சாரு போதும். இதலாம் நடக்கும். இப்போ என்ன பிரச்சனை? அதைச் சொல்லு” என்றான் பட்டென்று!
அவனின் அந்த குரல், அவள் பேச தடையாக இருந்ததால்… மௌனமானாள்!
“சாரு… சொல்லு? சொன்னாதான தெரியும். வீட்ல ஏதாவது ப்ராப்ளமா?” என்று அவள் மௌனத்தைக் கலைக்கும் மென்மையுடன் கேட்டான்.
“அதெல்லாம் இல்லை”
“அப்புறம் என்ன பிரச்சனை?”
“பாபி… அத்தை, மாமா பிரைவேட் கம்பெனில வேலை பார்த்தாங்க. இப்ப ரிட்டயர்ட் ஆயாச்சு. பென்சன் கிடையாது. ஆனா சேவிங்ஸ் இருக்கு. ரெண்டு அவங்களுக்கு பொண்ணுங்க”
“அவங்க பொண்ணுங்களுக்கு கல்யாணம் ஆகிடுச்சா”
“ம்ம் ரெண்டு பேருக்குமே ஆகிடுச்சு” என்றவள், “அத்தை, மாமா சேவிங்ஸ் அவங்க பொண்ணுங்களுக்கு, பேரப்பிள்ளைகளுக்குச் செய்யறதுக்கே சரியா இருக்கும்” என்றாள்.
“செய்யட்டுமே! இதுல உனக்கென்ன பிரச்சினை?”
“அவங்க எனக்குத் துணையா இருக்கிறதால, நான்தான் அவங்க மெடிக்கல் செலவெல்லாம் பார்த்துக்கணும்”
“சரி”
“இதுல… வீடு ஈஎம்ஐ-ல கல்யாண் வாங்கினது. அதையும் பார்த்துக்கனும்”
“கல்யாண்?” என்று பாபி கேள்வியாகக் கேட்டதும், “கல்யாண்” என்று அதையே அழுத்திச் சொல்லிப் பதிலாக்கினாள்.
“ஓகே காட் இட். அடுத்து சொல்லு”
“என் சேலரி இதுக்கே சரியா இருக்கும். இந்த ப்ராபெர்ட்டில பாதி வந்தா, பேபி ஃபியூச்சருக்கு சேர்த்து வைக்க நினைச்சேன். அவ்ளோதான். போதுமா?”
“இவ்வளவுதானா? இதெல்லாம் ஒரு விஷயமா? தேவையில்லாத டென்ஷன்”
“தாராவும் இப்படித்தான் சொல்வா. ஆனா என் இடத்தில இருந்து பார்த்தா…” என்று சொல்லும் போதே குரல் உடைந்து விட்டது.
“சாரு…” என்று ஏதோ சொல்ல வருகையில் காஃபி கொண்டு வந்து சிப்பந்தி வைத்தார். “தேங்க்ஸ்” என்று அவரிடம் சொன்னவன், அவளிடம் கோப்பையை நகர்த்தி, “சாரு குடி” என்றான்.
“பாபி… சில நேரம் அத்தை மாமா ஆந்திரா போகணும்னு நினைப்பாங்க”
“ஏன்? அங்க யார் இருக்கா?”
“அவங்க மூத்த பையன். எனக்காக இங்க இருந்து கஷ்டப்படுறாங்களோனு கில்ட்டியா இருக்கு”
“போதும் சாரு. தேவையே இல்லாம யோசிக்கிற. முதல காஃபி குடி”
கோப்பையை எடுத்து காஃபி பருக ஆரம்பித்தாள். இரண்டு மூன்று மிடறு விழுங்கியதும், “சாரு” என்று அழைத்தான்.
“ம்ம்ம்”
“எனக்கு உன்னைப் பிடிச்சிருக்கு சாரு”
மீண்டும் ஒரு மிடறு விழுங்கினாள். அவள் மனம் அலைப்புறுவது, விழிகளில் தெரிந்தது!
“நான் உங்க வீட்ல வந்து பேசட்டுமா?”
மொழிகளைத் தவிர்த்து… விழிகளைச் சுருக்கி மேலும் ஒரு மிடறு!
“மேரேஜ் பண்ணிக்கலாமா?”
வாய்க்கருகே கோப்பையை கொண்டு சென்றவள், அதற்கு மேல் இயலாமல் நிறுத்தி வைத்தாள். விழிகளில் ஒரு வருத்தம்!
அவள் வருத்தம் கண்டு, “சரி விடு. இதெல்லாம் வேண்டாம். எம்எஸ் படிக்க வைக்கிறேன். அப்புறமா கேஸ் டீடெயில்ஸ் கொடு, அதையும் பார்த்துட்டுச் சொல்றேன்” என்றான்.
வருந்திய விழிகள் திரும்பி அவனைப் பார்த்தன. அந்தப் பார்வை… ஏதோ ஒரு முடிவை அவள் எடுத்துவிட்டாள் என அவனுக்கு உணர்த்தியது. அவள் மறுத்து விட்டால் கண்டிப்பாக இனிமேல் இப்படிக் கேட்டுக்கொண்டு நிற்க முடியாது என்று பாபிக்குத் தோன்றியது.
‘என்ன முடிவு எடுத்திருக்கிறாளோ?’ என்று நினைக்கையில் பாபியின் மூச்சுக் குழாயில் சுவாசம் தடைபட்டது போன்ற உணர்வு!
“பாபி” என்றபோது, அவளது இடது கண்ணிலிருந்து நீர் வழிந்தது.
“சொல்லு”
“மேரேஜ் பண்ணதுக்கு அப்புறமா எம்எஸ் படிக்கவா?”
பாபி… முதலில் சிரித்து, பின் மறுபுறம் திரும்பி, “உஃப்” என்று நிம்மதியாக மூச்சுவிட்டான்.
அதன்பின் திரும்பியவன், அவள் கண்ணீரைத் துடைக்கச் சென்றான். ஆனால் அதற்குள் அவளே துடைத்துக் கொண்டாள். அவன் புன்னகைத்தான். அவளும் ஒரு புன்னகை தந்தாள்.
“தேங்க்ஸ் சாரு” என்றான் ஆழமாய்!
நடுங்கும் கையால் வாய்மூடி, வேறுபுறம் சாரு திரும்பினாள். சத்தமில்லாமல் அவள் கண்களின் நீர் கன்னங்களில் உருண்டோடியது.
அவனுக்குப் புரிந்தது. மேசை மீதிருந்த அவள் வலக்கரத்தை, லேசாகத் தட்டிக் கொடுத்தான். “பப்ளிக் பிளேஸ் சாரு. அழாத” என்று சொல்லிப் பார்த்தான்.
சட்டென்று தட்டிக் கொடுத்துக் கொண்டிருந்த பாபியின் கரத்தை கெட்டியாக பிடித்துக் கொண்டு… கன்னங்களை துடைத்துவிட்டு, “அத்தை மாமா அக்சப்ட் பண்ணுவாங்களா பாபி?” என்று கரகரத்தக் குரலில் கேட்டாள்.
“தாரா சொன்னாங்க. முதல அவங்களும் ரீமேரேஜ் பண்ண நினைச்சாங்கனு”
“இப்போ வேண்டாம் சொன்னா…”
“நீயும் முதல அதைத்தான சொன்ன”
‘என்ன சொல்ல வருகிறான்?’ எனப் புரியாமல் பார்த்தாள்.
“சாரு, பாபினு ஒருத்தன் வர்றான்னு மட்டும் வீட்ல சொல்லு. போதும். மத்ததை நான் பேசிக்கிறேன். சரியா?”
“ம்ம்” என்று சம்மதித்தாலும், “இது சரியா வருமா” என்று சஞ்சலம் கொண்டாள்.
“சரியா வரலைனாலும் இதான் நடக்கனும்” என்றதும், அவனைக் கேள்வியுடன் பார்த்தாள்.
“ஏன்னா? எனக்கு உன்னைப் பிடிச்சிருக்கு சாரு”
“ஓ”
“உனக்கும் பிடிச்சிருக்குல?” என்று சந்தோஷமாகக் கேட்டான்.
“எனக்கு, உன்னை மாதிரி சொல்ல முடியுமானு தெரியலையே பாபி” என்று சங்கடமாகச் சொன்னாள்.
“சப்போஸ், நான் பிடிச்சிருக்குன்னு சொல்லலைனா… உன்னால புரிஞ்சிக்க முடியுமா?”
“ம்ம்ம், முடியும்”
“அப்ப நீ சொல்லலைனாலும் எனக்குப் புரியும்” என்று அழுத்திப் பிடித்திருந்த அவள் கரத்தின் விரல்களை, தன் விரல்களோடு கோர்த்துக் கொண்டான்.
இந்த நேரம் பிண்ணனியில் இசைப்புயலின் பாடல் ஒன்று இசைக்கருவிகளில் இசைக்கப்பட்டது. சற்று நேரம் அந்தப் பாடலிசையை ரசித்துவிட்டு, இருவரும் அங்கிருந்து கிளம்பி, மீண்டும் நீதிமன்ற வளாகத்திற்கு வந்தனர்.
சாருவை, அவள் கார் அருகில் கொண்டு வந்து விட்டான். “எதுவும் யோசிக்காத. நாளைக்கு உங்க வீட்ல வந்து பேசுறேன்” என்றான்.
“ம்ம்ம்” என்று தலையாட்டிக் கொண்டே காரில் ஏறி அமர்ந்ததும், சன்னலின் முன் வந்து குனிந்து நின்றான்.
“என்ன பாபி?”
“டிரைவ் பண்ணிடுவேல?”
“இப்போ நான் ஓகே” என்று வெகுநேரம் கழித்துச் சிரித்தாள்.
“குட்…” என்றவன், “அப்புறம் சாரு… ” என்று தயங்கினான்.
“என்ன பாபி?”
“அது… அது…”
“சொல்லு”
“தாரா சொன்னாங்க… குழந்தை இருக்குன்னு. நீயும் இன்னைக்கு பேபின்னு சொன்ன…” என்று இடைவெளிவிட்டான்.
அவள் சிரித்த முகம் மீண்டும் சிந்திக்க தொடங்கி, “பாபி இத பத்தி…” என்று அவள் ஆரம்பிக்கும் போதே, “ஹே சாரு… எதாவது கேட்டு வச்சிராத. ரெண்டு பேரும் என்ன பேபினு சொல்லல. அதான்… பாய் ஆர் கேர்ள்?” என்று கேட்டான்.
“பொண்ணு. மாலி… மாலினி”
“ஓகே, ஓகே. நாளைக்கு வந்து பார்க்கிறேன்”
“ம்ம்ம்” என்றவளின் விழிகள் அவனுக்கான விருப்பத்தைக் காட்டின.
அதை ரசித்து… அவள் தலையில் மெல்ல தட்டி, “போ, ட்ராபிக் போலீஸ்கிட்ட மாட்டாம வீடு போய் சேரு” என்றான்.
“ஒரு ஃபோன் பண்ணா, நீ வந்து ஃபைன் பே பண்ணிடுவேல?”
“டெய்லி ஐயாயிரம் டிராபிக் போலீஸ்கிட்ட கொடுத்தா… எப்படி எம்எஸ் படிக்கிறது? எப்படி கிளினிக் ஆரம்பிக்கிறது?”
அவன் சொன்ன விதத்தில்… அவளுக்கு மெல்லிய புன்னகை வந்தது.
“இப்படியே சந்தோஷமா போ… நாளைக்குப் பார்க்கலாம்” என்றான்.
“ம்ம்ம் பார்க்கலாம்” என்று விடைபெற்றுக் கொண்டாள். கார் கிளம்பிச் சென்றது. மீண்டும் நீதிமன்றம் சென்று விட்டான்.
************
தேவா அலுவலகம்!
என்ன சிந்திக்கிறானோ? ஆனால் தேவா ஏதோ தீர்க்கமாகச் சிந்தித்துக் கொண்டிருந்தான். சிந்திப்பைக் கலைக்கும் வண்ணம் அலைபேசியின் சிணுங்கல் இருந்தது.
எடுத்துப் பார்த்தான். Dr. Tara என்று திரையில் பெயர் வந்தது. தயக்கங்கள் ஏதுமின்றி அழைப்பை ஏற்றான்.
“ஹலோ தேவா” என்று உரையாடலை ஆரம்பித்தாள்.
“சொல்லுங்க தாரா” என்று இலகுவாகச் சொன்னான்.
‘ஸ்ட்ரேஞ்ஜ், இவ்வளவு கூலா பேசறான். ம்ம்ம்… எப்படி?’ என்று யோசித்தாள்.
அதற்குள், “ஹலோ… இருக்கீங்களா?” என இருமுறை தேவா கேட்டு விட்டான்.
“எஸ்… எஸ்” என்று தன் தலையில் செல்லமாய் மெல்லத் தட்டிக் கொண்டாள்.
“சொல்லுங்க தாரா”
“அது… நீங்க பிஸியா இல்லைல?”
“அன்னைக்கே சொன்னேன்ல, பிஸியா இருந்தா ஃபோன் அட்டென் பண்ண மாட்டேன்னு”
“ம்ம், ஞாபகம் இருக்கு”
“சரி, என்ன விஷயம்?”
“உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்”
“இப்போ ஃப்ரீதான். பேசுங்க”
“இப்பவா?”
“ஏன்… முடியாதா??”
“அது… இதெல்லாம் ஃபோன்ல பேச முடியாது தேவா. எங்கயாவது வெளியே மீட் பண்ணலாமா?”
“ம்ம்… எங்கன்னு சொல்லுங்க?”
‘இவன் இன்னைக்கு வித்தியாசமா பேசறான்’ என்று யோசித்தவள், “பெசன்ட் நகர்ல… ஒரு ரெஸ்டாரன்ட்” என்றாள்.
“ரெஸ்டாரன்ட் நேம் சொல்லுங்க”
“கேக் பக்கெட்”
“ஓகே, வர்றேன்”
“நிச்சயமா வருவீங்களா?”
“வர்றேன்”
“நான் டேபிள் புக் பண்ணவா?”
“ம்ம்ம்”
“அப்போ நாளைக்கு ஈவினிங் செவன் தேர்ட்டி, பெசன்ட் நகர், கேக் பக்கெட், ரூஃப் டாப் ரெஸ்டாரன்ட்… மீட்டிங் ஸ்பாட். இஸ் தேட் ஓகே?” என்று நெடுநாள் ஆசையை நிமிடத்திற்குள் சொல்லி முடித்தாள்.
“ம்ம்ம் ஓகே”
“வேற ஏதாவது?” என்று இழுத்தாள், அவன் இலகுப் பேச்சை, இன்னும் கேட்க வேண்டுமென்ற இஷ்டம் கொண்டு!
“ஒன்னுமில்ல” என்றான்.
“ஓகே தேவா. பை!” என்று முடித்துக் கொண்டாள்.
“ம்ம்ம் பை” என்று அழைப்பைத் துண்டிக்க போனவனை, “ஹலோ ஹலோ தேவா” என்று வேக வேகமாக அழைத்தாள்.
“சொல்லுங்க. வேறென்ன?”
“கண்டிப்பா வருவீங்கள?” என்று கேட்டாள் மீண்டும்.
“வருவேன்”
“ஓகே! பை, நாளைக்குப் பார்க்கலாம்”
“பை” என்று அழைப்பைத் துண்டித்தான். மீண்டும் எண்ணச் சுழலில் சிக்கிக் கொண்டு… சிந்திக்க ஆரம்பித்தான்.
அவனிடம் பேசிவிட்டு தாரா அரை நிமிடம் அப்படியே அமர்ந்திருந்தாள்.
இந்த விழுமிய காதல்… எப்படித் தன்னுள் வந்தது? இந்த உன்மத்த காதல்… எங்கே தன்னுள் உதித்தது? தேவாவை எப்படித் தெரியும்?
தேவா மீதான காதலின் காரணத்தை நினைத்துப் பார்க்க பின்னோக்கிச் செல்ல ஆரம்பித்தாள்.

