Kathambari Novels
சாய்ந்த மனதை சமாளித்தபடி தேவாவைக் கடந்து வந்த தாரா அறைக்குள் புகுந்தாள். இருக்கையில் வந்து அமர்ந்தாள். அலைபேசியில் சாரு சொன்னது ஞாபகம் வந்தது.
“நீ பண்ணது ரொம்ப தப்பு… அவன்கிட்ட முதலயே நீ கேட்டிருக்கணும். அவன் என்ன நினைக்கிறானே தெரியாம, இவ்ளோ பெரிய ப்ரோபோசல் தேவையா?
உன்னை வேண்டாம்னு சொன்னா, அது வேற. பட் அவன் மனசில வேற ஒரு பொண்ணு இருக்கிதுனா… டிஸ்டென்ஸ் மெயின்டெய்ன் பண்ணு”
இப்படி நிறைய அறிவுரைகள் சாரு வழங்கியிருந்தாள்.
உலகின் நேற்றைய தினத்திலே தாராவின் உள்ளம் உழன்று கொண்டிருந்தது.
அக்கணம், “மேம் பேஷன்ட் அனுப்பவா?” என்று செவிலியர் உள்ளே வந்தார்.
இந்த நொடிக்கு வந்து சம்மதித்தாள். அதன்பின் அவள் அங்கே மருத்துவர். ஒரு அரைமணி நேரத்திற்குப்பின், “நெக்ஸ்ட்” என செவிலியரிடம் சொல்ல, தங்கள் முறையாக தேவா மற்றும் ஹேமா உள்ளே வந்தனர்.
“குட் மார்னிங் டாக்டர்” என்று சொல்லி ஹேமா வந்து அமர்ந்தாள். தேவாவும் அமர்ந்தான்.
“ஹேப்பி மார்னிங்” என்றவளிடம் கோப்புகளைச் செவிலியர் கொடுத்தார். வழக்கமான பரிசோதனைகள் செய்யப்பட்டன.
மறந்தும் மறக்கச் சொன்னவன் புறமாக திரும்பவில்லை. கடைசியில், “இந்த பிளட் டெஸ்ட் எடுத்திடுங்க. டூ டு த்ரீ ஹவர்ஸ்-ல ரிசல்ட் வந்திடும். என்கிட்ட காட்டிட்டுப் போங்க” என்றாள்.
“ஓகே டாக்டர்” என்று ஹேமா தேவாவைக் கூட்டிட்டுக் கொண்டு சென்றாள்.
அதுவரை பிடித்துவைத்திருந்த ஏக்கங்கள் எல்லாம் சேர்ந்து ஒரு பெரு மூச்சாக வெளிவந்தது தாராவிற்கு. அதன்பின் மூச்சு விட முடியாமல் வரிசையாகப் பார்வையாளர்கள்.
எல்லாம் முடிந்து மூன்று மணியளவில் சாப்பிட்ட பின்தான் ஓய்வு கிடைத்தது. பிடிப்பானிலிருந்து கூந்தலை விடுவித்துக் கொண்டு, மேசையில் இலகுவாக சாய்ந்து இணைய கடலில் விழிகளை நீந்த விட்டுக் கொண்டிருந்தாள்.
அந்த நேரம் செவிலியர் வந்து, “மேம்… ஒரு பிளட் டெஸ்ட் ரிப்போர்ட் பார்க்க முடியுமா?” என்று கேட்டார். ‘யாருக்குச் சொன்னோம்?’ என யோசிக்கையில், ஹேமா ஞாபகம் வந்தது.
“சென்ட் தெம் இன்” என்றாள். செவிலியர் சென்றதும், விரித்து விடப்பட்டிருந்த கூந்தலைப் பிடிப்பானுக்குள் அடக்கும் பொழுதே கதவு தட்டப்பட்டது.
“யெஸ் கம் இன்” என்றாள்.
ஆள் உள்ளே நுழைவது தெரிந்ததும் நிமிர்ந்து பார்த்தாள். வந்தது ‘தெம்’ அல்ல ‘ஹிம்’ என தெரிந்தது! இலகுவாக நின்றவள், இறுக்கமாக நின்று கொண்டாள்.
கதவைத் திறந்த தேவா முதலில் தயங்கி, பின் மெதுவாக நடந்து வந்து அவள் அருகில் நின்றான். இருவரும் பார்த்துக் கொண்ட பார்வைகள், இதற்கு முன்பு பரிமாறிக் கொள்ளா பார்வைப் பரிமாற்றங்கள்.
தாரா எதுவும் பேசவில்லை. ஆனால் நேற்றைய தினத்தன்று அவன் பேசிய பேச்சுகள் ஞாபகம் வந்தது. திண்டாடிய மனதிற்குத் திடமான ஒரு முகமூடி அணிந்து கொண்டாள்.
இரத்தப் பரிசோதனை முடிவுகளைக் கேட்டு கை நீட்ட, அவனும் கொடுத்தான். ஒவ்வொரு அளவுகளாக வாசித்துப் பார்த்தாள். ‘ம்கும்’ என்று செருமினான்.
தாரா நிமிர்ந்து பார்க்கவில்லை. இன்று அவன் தந்த பரிசோதனை முடிவில் பார்வை நின்றது! நேற்று அவன் தந்த சோதனை முடிவிலயே பாவையும் நின்றாள்!!
“ஸாரி…” என்று மெல்லிய குரலில் ஆரம்பித்தான்.
“டோன்ட் வொரி! எல்லாம் செக் பண்ணியாச்சு. நார்மலாதான் இருக்கு” என்று, அவனிடம் முடிவினை நீட்டினாள்.
வாங்கியவன், “நேத்து, கொஞ்சம் பொறுமையா சொல்லிருக்கலாம். பட்…” என வாக்கியத்தை முடிக்கும் முன்னே, “ஹேமாவை டென்ஷன் இல்லாம இருக்கச் சொல்லுங்க. அது பேபிக்கும் நல்லது, அம்மாக்கும் நல்லது” என்றாள்.
“ப்ச், எனக்கு வேற வழி தெரியல. என்னை வேற என்ன பண்ண சொல்றீங்க?!” என்று நொந்து போய் கூறினான்.
“நெக்ஸ்ட் விசிட் மூனு வாரத்துக்கு அப்புறம். கரெக்டா கூட்டிட்டு வந்திடுங்க”
அதற்கு மேல் பொறுமை இல்லாமல் தேவா, “இதையே என் அக்காகிட்டயும் சொல்லியிருப்பீங்கள?” என்று கேட்டான்.
“அஃப்கோர்ஸ் எஸ்”
“அப்புறம் ஏன் என்கிட்டயும்?”
“ஏன்னா உங்ககிட்ட பேசுறதுக்கு எனக்கு வேற ஒன்னும் இல்லை” என்றாள் அழுத்தமாக!
“இத்தனை நாள் பேசணும்னு சொல்லிக்கிட்டு இருந்தீங்க?”
“எஸ் இருந்தேன்”
“இட் மீன்ஸ்”
“பாஸ்ட் டென்ஸ்”
“இப்போ வேணா பேசுங்களேன்… கேட்கிறேன்” என்று கேட்டுப் பார்த்தான்.
அவளால் ஒத்துக் கொள்ள முடியா நேர ஒதுக்கல்! லேசான நீர்படலம் அவள் விழிகளில்! அடுத்த நொடியே இமைகளை இருமுறை மூடித் திறந்து, அதை உள்ளிழுத்துக் கொண்டாள்.
சட்டென இமைகள் விரிய, அவனைப் பார்த்தாள். “நவ், இட்ஸ் பியாண்ட யுவர் லிமிட்ஸ்” என்றாள். இதைச் சொல்லும் போது, இதயத்தின் வலியை இதழ்களில் வரவிடாமல் பார்த்துக் கொண்டாள்!
அவள் நயனத்தின் நீரைக் கூடத் தாங்கிக் கொள்ளலாம் போல! ஆனால் நனைந்த இமைகள் அவனை என்னவோ செய்தன. “உங்ககிட்ட பேசணும்” என்றான்.
“ரொம்ப இம்பார்டென்ட்டா? ஐ அம் நாட் இன் அ குட் மூட். இன்னொரு நாள் பேசுங்களேன்”
“ஏன் இப்படிப் பேசறீங்க? நீங்க எவ்வளவு மெச்சூர்டு, கேரிங் டாக்டர்”
“இன்னொன்னு மறந்திட்டீங்க. நார்மல் டெலிவெரிக்கே ஒன் லேக் வாங்கற டாக்டர்” என்றாள் நய்யாண்டி குரலில்!
“தாரா”
“ஃபர்ஸ்ட் டைம்…”
“என்ன?” என்று புரியாமல் கேட்டான்.
“ஒரு விசிட்டர்… டாக்டரைப் பேர் சொல்லிக் கூப்பிடறது”
“இவ்வளவு நாள், அப்படித்தான கூப்பிட்டேன். இப்போ மட்டும் என்ன?”
“நீங்கதான சொன்னீங்க!! டிஸ்டர்ப் பண்ணகூடாதுனு”
“அதுக்கும் இதுக்கும்…”
“நீங்க தாரானு கூப்பிட்டா… எனக்கு நீங்க தேவாதான். அதே, டாக்டர்னு கூப்பிட்டா… நீங்க பாலிசி அனலிஸ்ட். காட் இட்?”
அவள் என்ன சொல்ல வருகிறாள் புரிய முடியாமல், அவனுடைய முகத்தில் முடிச்சுகள் வந்தன. சில நொடிகளில் அவன் மூளைக்குப் புரிந்தது. அதை முகம் காட்டியது.
அவன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தவள், “ஐ திங்க், யூ காட் இட்!” என்றாள்.
“நான் ஃபர்ஸ்ட்டே சொல்லலைனு கோபமா?”
‘ஆமாம்’ என்று தலையாட்டினாள்.
“நான் டீசென்டா அவாய்ட் பண்ண நினைச்சேன். பட், ரியலி ஸாரி”
“எதுக்கு?” என்றாள் எரிச்சலாக!
“நேத்து உங்களைப் பார்க்கவே ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. அதோட… ”
“இது ஓவர் கேரிங். இப்போ ஏன் இதெல்லாம்??”
“உங்களுக்காக…” என்றான்.
இப்படிச் சொன்ன, அடுத்த நொடியில் இருவரின் விழிகளும் ஒருவரை ஒருவர் பார்த்தன. அவளின் ஒரு விழி விருப்பத்தையும், மறு விழி விலகலையும் காட்டின.
இந்த இரு விழியில் எதை அவன் விழிகள் படித்தன? தெரியவில்லை! ஆனால், அன்று அசராமல் அவள் விழிகளைப் பார்த்தவனால், இன்று அரை நொடிக்கு மேல் பார்க்க முடியவில்லை.
சட்டென தன் இமைகளைத் தட்டி, “அப்படிச் சொன்னா நம்புவீங்களா?” என்று கேட்டான்.
இலகுவாக, “உங்களை நம்பி எனக்கு என்ன ஆகப்போகுது” என்று சிரித்தாள். இதயத்திலிருந்து சிரிக்கிறாளா?? தெரியவில்லை! தெரியும் அளவிற்கு அவன் அவளை நெருங்கவுமில்லை. ஆனால் நனைந்த இமைகளுக்கு… நகைக்கும் இதழ்கள் மேலென்று தோன்றியது.
ஆதலால் அவன் இதயம் நிம்மதி கொண்டது.
அந்த நிம்மதியின் நிலையிலே, “நம்புங்க… ஏன்னா உங்களுக்காகத்தான்” என்றான்.
நிச்சயமாக அவன் உதட்டிலிருந்து இல்லை! உள்ளத்திலிருந்தா என்ற கேள்வி எழுப்பினால்… அதற்கும் பதில் இல்லைதான்! அதன்பின், என்ன பேசவென்று தெரியவில்லை. கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்து விட்டான்.
அக்கணம் அங்கே வந்த சாரு, “ஹாய் தேவா, நீங்க என்ன இங்க?” என்றாள் கேள்வியாக!
“ஒரு பொண்ணு நாம பேசினதெல்லாம் ஞாபகம் வச்சி… கேட்கிற கேள்விக்கு, அதையே பதிலா சொன்னா… ஒரு மனுஷனுக்கு எப்படி இருக்கும்?”
“புரியலை தேவா”
“ப்ச் ஒன்னுமில்ல”
“என்னாச்சு? ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க?”
“விடுங்க சாரு. எனிவே… கன்கிராட்ஸ். பாபி எல்லாம் சொன்னான்” என்று கை நீட்டினான்.
“தேங்க்ஸ் தேவா” என்று கை குலுக்கினாள்.
“ஓகே பை” என்று சாருவிடம் விடைப் பெற்றுக் கொண்டு சென்றான்.
அவன் சென்றதும்… சாரு, தாரா அறைக்குள் வந்தாள். வருவது சாரு என்றதும் ஸ்நேகமாக ஒரு புன்னகை தாராவிடம்.
“தேவா வந்திருந்தானா?”
“ம்ம்ம்”
“எதுக்கு வந்தான்?”
“ஹேமாவோட டெஸ்ட் ரிப்போர்ட் காட்ட”
“அவாய்ட் பண்ற மாதிரி பேசினியா??”
“ஏன் கேட்கிற?”
“ஏதோ புலம்பிட்டுப் போறான். அதான் கேட்டேன்”
தாரா அமைதியாக இருந்தாள்.
“இப்படியே இரு. மாறிடாத”
“அதை விடு… நீ என்ன விஷயமா வந்த?”
“நாளைக்கு… நானும் பாபியும் மேரேஜ் ஷாப்பிங் போறோம். நீயும் வர்றியா?”
“உங்க ப்ரைவேசி டிஸ்டர்ப் ஆகாதா?”
“வர்ற… அவ்வளவுதான்”
“ம்ம்ம் ஓகே”
“பெரியவங்க யாரும் இல்ல தாரா. அதான் கொஞ்சம் கஷ்டமாயிருக்கு” என்று ஆரம்பித்து, சற்று நேரம் பேசிவிட்டே சாரு சென்றாள்.
அவள் சென்றதுமே தேவா வந்து போனதை தாரா நினைத்தாள். மீள முயற்சி செய்யும் மனதை மீண்டும் வந்து மீட்டுகிறானே என்ற வேதனை வந்தது!
எனினும் தேவா பேசி சென்றதை எல்லாம் மறு ஒலிபரப்பு செய்து பார்த்தாள். அவனின், ‘உங்களுக்காக’ என்ற வார்த்தைக் காதிற்குள் கேட்டது.
மறு ஒலிபரப்பிற்கு ஏதோ தடங்கல் வந்து விட்டது போல, மீண்டும் மீண்டும் அந்த ஒரு வார்த்தையே ஒலித்தது. இதயத்தில் இருக்கும் காதலை இதழ்களில் ஒரு மெல்லிய புன்னகை வழியே காட்டி நின்றது… அது!
இன்று சொல்லிக் கொள்கின்ற அளவிற்கு இருவரும் எதுவுமே பேசவில்லை. ஆனாலும், அவனின் உங்களுக்காக-வையும், அதற்கான அவளது மெல்லிய புன்னகையையும் தன்னுள் சேமித்துக் கொண்டது! – லேசான ஏமாற்றத்துடன் காதல் உண்டியல்.
அடுத்த நாள் காலை!
சென்னையில் ஒரு மால். அங்கிருந்த ஒரு நகைக் கடைக்கு… தாரா, சாரு, பாபி மற்றும் கீதாவும் வந்திருந்தார். சாரு, பெரியவர்கள் யாருமே இல்லை என்றது தாராவிற்கு கஷ்டமாக இருந்தது. ஆதலால் அம்மாவிடம் கேட்டுப் பார்த்தாள்.
கீதாவும் உடனடியாக சம்மதித்து விட்டார். எனவே இங்கே இப்படி!
“ஆன்ட்டி நீங்க வருவீங்கன்னு நினைக்கவே இல்லை” – சாரு.
“தாரா சொன்னா. பெரியவங்க யாரும் இல்லைனு சொன்னேன்னு. அதான்…”
“தேங்க்ஸ் ஆன்ட்டி” என்றவள், பாபியை அறிமுகம் செய்து வைக்கவும், “நீங்க பண்றது ரொம்ப நல்ல விஷயம். நான் சாருகூட நிறைய பேசலைனாலும், சில சமயம் அவ தனியா நின்றுவாளோன்னு எனக்கு கஷ்டமா இருக்கும். இப்போ ஒரு நிம்மதி” என்று கீதா புன்னகைத்தார்.
அவனும் புன்னகை செய்தான்.
சற்று நேரம் பொதுவாகப் பேசிக் கொண்டிருந்து விட்டு, “நீங்க ரெண்டு பேரும் பர்ச்சேஸ் பண்ணுங்க. நான் ஒரு ஃபோன் பண்ணிட்டு வந்திடுறேன்” என்றார்.
“ம்ம்ம் ஓகே ஆன்ட்டி”
“வர்றேன் தம்பி” என்று பாபியிடமும் விடைபெற்று வெளியே சென்றார்.
தாரா, அவர்கள் பேச்சில் கலந்து கொள்ளாமல் அமைதியாக இருந்தாள். அவர் சென்றதும், சாருவின் அலைபேசி அதிர்ந்தது. “ஒன் மினிட்” என்று அழைப்பை ஏற்றபடி நகர்ந்தாள்.
அவள் சென்றதும் மாலியைத் தோளில் போட்டுக் கொண்டிருந்த பாபியைத் தாரா பார்த்து, “கன்கிராட்ஸ்” என்றாள்.
“தேங்க்ஸ்”
“ஐ அம் ஹேப்பி ஃபார் போத் ஆஃப் யூ”
சிரித்தான்.
“பாபி ஒரு விஷயம்…”
“ம்ம்ம் சொல்லுங்க”
“ரொம்ப நாள் கழிச்சு சாரு அவளுக்காக ஷாப்பிங் பண்ண வந்திருக்கா. என்ன கேட்டாலும் வாங்கி கொடுங்க” என்று தோழிக்காகக் கோரிக்கை வைத்தாள்.
மீண்டும் சிரித்தான்.
“சொல்ல வேண்டிய அவசியம் இல்லையோ?” என்றாள் கண் சுருக்கி!
‘ம்ம்ம்’ என்பது போல் தலை ஆட்டினான்.
“ஓகே ஸாரி, ரெக்வஸ்ட் வாபஸ்” என்று புன்னகை புரிந்தாள்.
பாபி, அவளையே பார்த்திருந்தான். ‘என்ன?’ என்பது போன்ற பார்வை தாரா பார்த்தாள்.
“நீங்க எப்படி இருக்கீங்க?”
அவன் எதைப் பற்றிக் கேட்கிறான் என்று தெரிந்தது. “எனக்கென்ன… நல்லா இருக்கேன்” என்றவளின் புன்னகை விரிந்தது.
அதற்கு மேல் என்ன கேட்க முடியும்! ஆதலால் புன்னகைத்துக் கொண்டான்.
“பாபிகிட்ட ஒரு ரெக்வஸ்ட்”
“ம்ம்ம் சொல்லுங்க”
“இனிமே எனக்காக தேவாகிட்ட பேச வேண்டாம். தேவா என்ன தோணுதோ அதையே செய்யட்டும்”
“ஓ! நான் சொல்லித்தான் பேச வந்தேன்னு சொன்னானா?”
“ம்ம்ம்”
இருவரிடமும் அமைதி.
“நேத்துதான் என்கிட்டயும் லவ் பண்றதா சொன்னான்”
“யாரை லவ் பண்றாங்கன்னு உங்களுக்குத் தெரியுமா?” என்று தயக்கத்துடன் கேட்டாள்.
“இல்லை. அதைப் பத்தி எதுவும் சொல்லலை”
“நீங்க கேட்கலையா?”
“சொல்லணும்னு நினைச்சா அவனே சொல்லிருப்பான். ஆனா அவன் லவ் பண்றது உண்மை. டேக் இட் சீரியஸ்லி” என்று அறிவுரை வழங்கினான்.
இதழ் விரியா ஒரு புன்னகை தாராவிடம்!
“சொல்ல வேண்டிய அவசியமே இல்லயோ?” என்றான் கண்கள் சுருக்கி!
‘ம்ம்ம்’ என்று தலை ஆட்டினாள். மீண்டும் இருவரிடமும் அமைதி!
“லைட்டா பீவர் பாபி. நான் ஷாப் ஆப்போஸிட்ல உட்கார்ந்திருக்கேன். எதும் வேணும்னா கேளுங்க” என்று சொல்லி, தாரா வெளியே சென்று விட்டாள்.
அதன்பின் பாபி, சாரு இருவரும் சேர்ந்து திருமணத்திற்காகப் பொருட்கள் வாங்க ஆரம்பித்தனர்.
வெளியே வந்த தாரா அம்மாவை தேடினாள். ஒருசில அடிகள் எடுத்து வைத்த பின், கீதா ஒரு கைப்பை கடையில் நிற்பதைக் கண்டாள். அதிபன் பற்றிய கீதாவின் முடிவைத் தாரா கேள்வி கேட்டதற்குப் பின், வெகு சில தருணங்கள் மட்டுமே கீதா வெளியே வருவது உண்டு.
இன்று அம்மா ஆசை ஆசையாக ஒவ்வொன்றையும் பார்ப்பதைப் பார்த்தவள், அவருக்கு தனிமை தர எண்ணினாள்.
எனவே திரும்ப வந்து நகைக்கடை முன்பு இருந்த இருக்கையில் அமர்ந்தாள். தேவா வருவானா என்று தன்னுள் கேள்வி கேட்டாள். வந்தால், நேற்றைய தன் பேச்சிற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என எண்ணிக் கொண்டாள்.
மாறி மாறி மன்னிப்பையே பரிமாறிக் கொண்டால், என்றுதான் மனதைப் புரிந்து கொள்வது?! – கன்னத்தில் கை வைத்துக் காத்திருக்கும் காதல் உண்டியல்.
கீழே பார்க்கிங்கில் பைக்கை நிறுத்திவிட்டு, அலைபேசியில் தேவா பாபியை அழைத்து தளம், கடை விவரங்கள் கேட்டுவிட்டு மேலே வந்தான். யாரிடமோ அலைபேசியில் பேசியபடி வந்தவன், கைப்பை கடையிலிருந்து வெளிவந்த கீதாவின் மேல் மோதினான்.
அவர் கைகளிலிருந்த இரண்டு மூன்று புத்தகங்கள் கீழே விழுந்தன. குனிந்து எடுக்க ஆரம்பித்தார். சட்டென்று அழைப்பைத் துண்டித்து கீதாவிற்கு உதவி செய்ய ஆரம்பித்தான்.
“ஸாரி ஆன்ட்டி…”
“பரவால்ல தம்பி…” என்றவர், அவன் தந்த புத்தகத்தையும் வாங்கிக் கொண்டு எழுந்தார்.
“ஃபோன்ல பேசிக்கிட்டே வந்தேனா, அதான்… ஸாரி”
“விடுங்க” என்றவர், “தேங்க்ஸ்” என்று வேறு கடை நோக்கிச் சென்றார்.
இரண்டு எட்டுகள் வைத்தவன், ‘இவரை எங்கோ பார்த்திருக்கோமே?’ என்று யோசிக்க ஆரம்பித்தான். ‘எங்கே? எங்கே?’ என்று நெற்றியில் முடிச்சு விழும் வண்ணம் யோசித்தான்.
சட்டென, ஞாபகத்தில் வந்தது ஒரு காட்சி. மரத்தின் பின்னால் நின்று பார்த்த ஞாபகம்! ‘ஐயா பொண்டாட்டி பசங்களைத் திட்ட ஆரம்பிடுச்சி’ என்று ஊர்க்காரர் குரல்!
அவர் யாரென ஞாபகம் வந்துவிட்டது! இவர் அதிபன் ஐயா மனைவி! உடனே தோன்றியது இவரிடம் அமுதா பற்றிக் கேட்கலாமே என்ற எண்ணம்தான்!
திரும்பிப் பார்த்தான். அவரைக் காணவில்லை. அவன் விழிகள் ‘அங்கு இங்கு’ என்று அலைந்து தேடின. கடைசியில் கீதா ஒரு கடையிலிருந்த வெளிப்புறப் விற்பனைப் பொருள்களைப் பார்த்துக் கொண்டு நின்றார்.
வேகமான எட்டுகள் வைத்து நடந்தான். ‘காதல் கைகூடும் நாள், கைகெட்டும் தூரத்தில்’ என்ற ஆசையில், கீதா முன் வந்து தேவா நின்றான்.

